• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 88

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
மொழி: இருள் பாணி
பொருட்பால்
நட்பியல்

பகைத்திறந் தெரிதல்

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று. (௮௭௧ - 871)


'பகை' என்று கூறப்படும் தீமை தருவதனை, ஒருவன், விளையாட்டில் இருந்தாலும் விரும்புவது நன்மையாகாது; இதுவே நீதி நூல்களில் முடிந்த முடிவடையும் (௮௱௭௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது. (௮௱௭௰௧)
-மு. வரதராசன்

பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட விரும்பத்தக்கது அன்று. (௮௱௭௰௧)
—சாலமன் பாப்பையா

பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது (௮௱௭௰௧)
-மு. கருணாநிதி

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை. (௮௱௭௨ - 872)


வில்லை ஏராகவுடைய உழவரான மறவரோடு பகை கொண்டாலும், சொல்லை ஏராகவுடைய உழவரான நுண்ணறிவை உடையவரோடு பகை கொள்ளக் கூடாது (௮௱௭௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிவுடன் பகை கொள்ளக் கூடாது. (௮௱௭௨)
-மு. வரதராசன்

விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா. (௮௱௭௨)
—சாலமன் பாப்பையா

படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம் ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது (௮௱௭௰௨)
-மு. கருணாநிதி

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன். (௮௱௭௰௩ - 873)


தான் துணைவலிமை இல்லாமல் தனியனாய் இருப்பதறிந்தும், பலருடன் பகைகொண்டு வாழும் அறிவற்றவன், பித்துற்ற மக்களிலும் அறிவிழந்தவன் ஆவான் (௮௱௭௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான். (௮௱௭௰௩)
-மு. வரதராசன்

தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன். (௮௱௭௰௩)
—சாலமன் பாப்பையா

தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக்கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும் (௮௱௭௰௩)
-மு. கருணாநிதி

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு. (௮௱௭௪ - 874)


தான் வேண்டும் போது, தன் பகைவருள் சிலரைப் பிரித்து நண்பராக்கிக் கொள்ளும் சூழ்ச்சித்திறனுடைய அரசனது பெருமையினுள்ளே, இவ்வுலகமே அடைங்கிவிடும் (௮௱௭௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும். (௮௱௭௪)
-மு. வரதராசன்

பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும். (௮௱௭௪)
—சாலமன் பாப்பையா

பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும் (௮௱௭௰௪)
-மு. கருணாநிதி

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இந்தணையாக் கொள்கவற்றின் ஒன்று. (௮௱௭௫ - 875)


'தனக்கு ஒரு துணை இல்லை; பகையோ எனில் இரண்டு' என்னும் போது, அதனுள் ஒன்றை அப்போதைக்குத் தனக்கு இனிய துணையாகச் செய்து கொள்ள வேண்டும் (௮௱௭௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும். (௮௱௭௫)
-மு. வரதராசன்

தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க. (௮௱௭௫)
—சாலமன் பாப்பையா

தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களிடம் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும் (௮௱௭௰௫)
-மு. கருணாநிதி

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல். (௮௱௭௬ - 876)


பகைவனை முன்பே தெளிந்தாலும் தெளியாவிட்டாலும், தனக்கு மற்றொரு செயலினாலே தாழ்வு வந்தவிடத்து, அவரைக் கூடாது நீக்காது, விட்டு வைக்க வேண்டும் (௮௱௭௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாழவிட வேண்டும். (௮௱௭௰௬)
-மு. வரதராசன்

ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ, நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக. (௮௱௭௰௬)
—சாலமன் பாப்பையா

பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டு இருப்பதே நலமாகும் (௮௱௭௬௬)
-மு. கருணாநிதி

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து. (௮௱௭௰௭ - 877)


தான் நொந்ததைத் தாமாகவே அறியாத நண்பருக்குச் சொல்ல வேண்டாம்; வலியிழந்த நேரத்தை எதிர்பார்க்கும் பகைவரிடம் தன் மெலிவையும் புலப்படுத்த வேண்டாம் (௮௱௭௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது. (௮௱௭௰௭)
-மு. வரதராசன்

நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா. (௮௱௭௰௭)
—சாலமன் பாப்பையா

தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்தக் கூடாது (௮௱௭௰௭)
-மு. கருணாநிதி

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு. (௮௱௭௰௮ - 878)


தான் செய்யும் செயலின் வகையை அறிந்து, அது முடிவதற்கு ஏற்றபடி தன்னைப் பெருக்கிச் சோம்பல் புகாமல் காக்கவே, பகைவரிடம் உள்ள செருக்குத் தானே தேய்ந்துவிடும் (௮௱௭௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டாள், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும். (௮௱௭௰௮)
-மு. வரதராசன்

ஒரு செயலைச் செய்ய வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன் ரகசியங்களையும் நாம் காத்துக் கொண்டால், பகைவர் தங்கள் மனத்துள் நம்மை எதிர்க்க எண்ணிய செருக்கு அழியும். (௮௱௭௰௮)
—சாலமன் பாப்பையா

வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும் (௮௱௭௰௮)
-மு. கருணாநிதி

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. (௮௱௭௯ - 879)


களைய வேண்டிய முள்மரத்தை அது இளைதான பொழுதே களைந்து விடுக; முதிர்ந்த பின் அதைக் களைதலைச் செய்தால், அது களைபவர் கையினைத் தான் களைந்துவிடும் (௮௱௭௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும். (௮௱௭௰௯)
-மு. வரதராசன்

நம்மை அழிக்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழித்து விடுக; வளர்ந்து விட்டால் எண்ணுபவரின் கையை அழிக்கும். (௮௱௭௰௯)
—சாலமன் பாப்பையா

முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும் (௮௱௭௰௯)
-மு. கருணாநிதி

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். (௮௱௮௰ - 880)


பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்தால் போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர், பின்னர், உயிரோடு இருப்பதற்கு உரியவர் ஆகார் (௮௱௮௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பகைத்தவருடைய தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கு உயிரோடு வாழ்கின்றவர் அல்லர். (௮௱௮௰)
-மு. வரதராசன்

நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிப்பவர். (௮௱௮௰)
—சாலமன் பாப்பையா

பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கின்ற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது (௮௱௮௰)
-மு. கருணாநிதி