• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 89

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
மொழி: இருள் பாணி
பொருட்பால்
நட்பியல் உட்பகை
உஉட்பகை

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின். (௮௱௮௧ - 881)


நிழலும் நீரும் நுகரும் காலத்தில் இன்பமானாலும், பின்னர் நோய் செய்யும்; தழுவவேண்டும் சுற்றத்தாரின் இயல்புகளும் முதலில் இனியவாயினும், பின்னர் இன்னாதனவாகும் (௮௱௮௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும். (௮௱௮௰௧)
-மு. வரதராசன்

நிழலும் நீரும் முதலில் இனியவாக இருந்தாலும், பிறகு துன்பம் தருவனவே. அதபோல, நெருக்கமான உறவும் சொந்தக் கட்சிக்காரரும் கூடப் பழக்கத்தில் இனியவராக இருந்து, செயலில் துன்பம் தந்தால் அது பெருந் துன்பமே. (௮௱௮௰௧)
—சாலமன் பாப்பையா

இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும் அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும் (௮௮௰௧)
-மு. கருணாநிதி

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு. (௮௱௮௨ - 882)


வாழைப் போல வெளிப்பட்டு நிற்கும் பகைவர்க்கு அஞ்ச வேண்டாம்; சுற்றத்தார் போல அன்புகாட்டி உள்ளத்தில் பகைமறைத்து நிற்பவருக்கே, அஞ்ச வேண்டும் (௮௱௮௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வாழைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும். (௮௱௮௰௨)
-மு. வரதராசன்

வாழைப்போல் வெளிப்படையாகத் தெரியும் பகைவர்க்கு அஞ்ச வேண்டா; நண்பரைப்போல் வெளியில் காட்டி மனத்துள் பகைவராக’வே இருப்போரின் தொடர்புக்கு அஞ்சுக. (௮௱௮௰௨)
—சாலமன் பாப்பையா

வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் (௮௱௮௰௨)
-மு. கருணாநிதி

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும். (௮௱௮௰௩ - 883)


உட்பகையாக விளங்குபவருக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; அங்ஙனம் காவாதிருப்பின், தனக்குத் தளர்ச்சி வந்த போது, அவர்கள் கெடுதல் செய்வார்கள் (௮௱௮௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்தால் மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும். (௮௱௮௰௩)
-மு. வரதராசன்

உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்க; காக்காது போனால் நமக்குத் தளர்வு வந்தபோது, மண்கலத்தை அறுக்கும் கைக்கருவிபோல உட்பகையானவர் நம்மை உறுதியாக அழித்து விடுவர். (௮௱௮௰௩)
—சாலமன் பாப்பையா

உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும் (௮௱௮௰௩)
-மு. கருணாநிதி

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும். (௮௱௮௪ - 884)


உள்ளத்தில் திருந்தாத உட்பகை தோன்றினால், அரசன் அதனை அப்போதே ஒழிக்க வேண்டும்; இல்லையானால், அ·து சுற்றம் வசமாகாதபடி குற்றங்களைத் தந்துவிடும் (௮௱௮௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மனம் திறக்காத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிற்படமைக்குக் காரணமான குற்றம் பலவற்றைத் தரும். (௮௱௮௰௪)
-மு. வரதராசன்

புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்தாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும். (௮௱௮௰௪)
—சாலமன் பாப்பையா

மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும் (௮௱௮௰௪)
-மு. கருணாநிதி

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும். (௮௱௮௰௫ - 885)


புறத்தே உறவு முறைத் தன்மையோடு பழகுவாரிடம் உட்பகை தோன்றினால், அ·து, அவனுக்கு இறத்தல் முறைமையோடு கூடிய பல குற்றங்களையும் தரும் (௮௱௮௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும். (௮௱௮௰௫)
-மு. வரதராசன்

உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும். (௮௱௮௰௫)
—சாலமன் பாப்பையா

நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும் (௮௱௮௰௫)
-மு. கருணாநிதி

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றால் அரிது. (௮௱௮௰௬ - 886)


தனக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால், தனக்குச் சாவாதிருப்பது கைகூடுவது என்பது எக்காலத்திலும் அரியதாகும் (௮௱௮௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது. (௮௱௮௰௬)
-மு. வரதராசன்

தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க முடியாது. (௮௱௮௰௬)
—சாலமன் பாப்பையா

ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும் (௮௱௮௰௬)
-மு. கருணாநிதி

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி. (௮௱௮௰௭ - 887)

செப்பின் புணர்ச்சி போல வெளிப்பார்வைக்குப் பொருந்தினவர் ஆயினும், உட்பகை உண்டாகிய குடியிலுள்ளவர்கள் தம் உள்ளத்தினாலே ஒன்று கூட மாட்டார்கள் (௮௱௮௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செப்பின் இணைப்புப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார். (௮௱௮௰௭)
-மு. வரதராசன்

செப்பு, மூடியோடு சேர்ந்து இருப்பதுபோல் உட்பகை கொண்ட குடும்பமும், கட்சியும், அரசும் வெளியே சேர்ந்து இருந்தாலும் உள்ளத்துள் சேரவே மாட்டா. (௮௱௮௰௭)
—சாலமன் பாப்பையா

செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும் அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள் (௮௱௮௰௭)
-மு. கருணாநிதி

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி. (௮௱௮௰௮ - 888)

முன் உயர்ந்து வளர்ந்ததே என்றாலும், உட்பகையுள்ள குடியானது, அரத்தினால் அரவப்பட்ட இரும்பைப் போல் நாளுக்கு நாள் தேய்ந்து அழிந்து போகும் (௮௱௮௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும். (௮௱௮௰௮)
-மு. வரதராசன்

அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடும்பம் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும். (௮௱௮௰௮)
—சாலமன் பாப்பையா

அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும் (௮௱௮௰௮)
-மு. கருணாநிதி

எட்பக வண்ண சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு. (௮௱௮௰௯ - 889)


ஒருவனது உட்பகை, அவன் பெருமையை நோக்க, எள்ளின் பிளவு போன்று சிறிதானது என்றாலும், அதனாலும், அவன் பெருமை எல்லாம் பின் காலத்தில் கெட்டுவிடும் (௮௱௮௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளது. (௮௱௮௰௯)
-மு. வரதராசன்

எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அந்த கேடும் இருக்கிறதாம். (௮௱௮௰௯)
—சாலமன் பாப்பையா

எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும் (௮௱௮௰௯)
-மு. கருணாநிதி

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று. (௮௱௯௰ - 890)


மனம் பொருந்தாதவரோடு கூடியிருந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையுள்ளே பாம்போடு கூடத் தங்கியிருந்து வருந்துவதைப் போன்றதாகும் (௮௱௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது. (௮௱௯௰)
-மு. வரதராசன்

மனப்பொருத்தம் இல்லாதவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும். (௮௱௯௰)
—சாலமன் பாப்பையா

உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும் (௮௱௯௰)
-மு. கருணாநிதி