• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் - 2

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
279
446
63
Madurai
யாரோ நீ! யாரோ நான்!

அத்தியாயம் - 2

- சுழலும் மனங்கள்.

"இன்டஸ்ட்ரியல் பில்டெக்" நிறுவனத்தில் உள்ள தனது தனி அறையில் நிதானமாக நடந்து கொண்டிருந்தான் ரவணன்.

அவன் கண்ணாடிச் சுவற்றின் வழியாக ஊடுருவிய சூரிய ஒளியில், தனது அலைபேசியை உற்று நோக்கினான். சூரிய ஒளி பட்டதும் மலரும் தாமரை போல், அலைபேசியில் மலர்ந்திருந்த அவள் முகத்தை ஆராய்ச்சி செய்தான் . அவளது முகத்தின் ஓரத்தில் சிரிப்பும், விழிகளில் தேங்கியிருந்த அமைதியும் அதீத ஆழமாய் இருந்ததை உணர்ந்தான்.

'நீயா?... இதுவரை என்னை எதிர்த்த எதிரிகளெல்லாம் மிகவும் வலிமை பொருந்தியவர்களாக இருந்தார்கள். நீயோ… மென்மையாக, அதுவும் எனக்கு எதிரியாக?' என்றவன் எண்ணத்தின் சுழல்கள் சுழல ஆரம்பித்தது.


அவனது மேஜை மீது கம்பீரமாய் அமர்ந்திருந்த கோப்புகளில் தாராவின் மனு மற்றும் சமூக நீதிப் புகார் விபரத்தில், தனியுரிமை மீறல், உளவியல் வன்முறை ஆகிய குற்றச்சாட்டுகள் சிகப்பு மையையினால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. அவனுக்கோ அந்த அடிக்கோடுகள் அவளின் இளம் சிகப்பு வண்ண உதட்டின் வரிகளை நினைவு கூர்ந்தது.

'உன்னுடைய இந்த புகார் இந்த ரவணனை நொறுக்குமா? இல்லை உன்னை என்னிடத்தில் நெருக்குமா?' என்று எண்ணியவன் தொடுத்திரையில் தோன்றியவளின் உதட்டினை வருட, எங்கோ தனது மருத்துவமனையில் அமர்ந்திருந்த தாரா மின்சாரம் பாய்ந்தது போல் துடித்த தன் உதட்டினை தனது விரல்கள் கொண்டு அழுத்திக் கொண்டாள்.

" எக்ஸ்கியூஸ் மீ பாஸ்!" என்ற மாயா உத்தரவு கேட்டுக் கொண்டே அலுவலக அறையினுள் நுழைந்தாள் .

“பாஸ், நீங்கள் அந்த மனநல ஆலோசகரை, அதாவது டாக்டர் தாரா மேனனை, நேரில் பார்க்க விரும்புகிறீர்களா? நமது மக்கள் தொடர்பு PR டீம் இதற்கான பின்னணி ஆய்வை, அசுர வேகத்தில் செய்து கொண்டிருக்கிறது" என்றாள் தனது முதலாளியின் நம்பிக்கையை உடனடியாக பெரும் உத்வேக அவசரத்துடன்.

“நோ.. அவள் என் அறைக்கு வரவே கூடாது. ஆனால்... ஒரு இயல்பான சந்திப்பை ஏற்பாடு செய்யுங்கள். அவளும் அங்கே கண்டிப்பாக வரவேண்டும். வந்தே தீர வேண்டும். நான் பேசும் வார்த்தைகளை அவள் நேரடியாகக் கேட்க வேண்டும். என்னோடு பேச வேண்டும். இல்லையெனில்...” என்றவனின் இதழ்களில் வன்மச் சிரிப்பு மெல்ல பூத்தது.

“இமோஷனல் பிரேக்கடவுன் என்னும் விஞ்ஞானத்தை, தத்துவத்தை நம்பும் அவளுக்கு ஆச்சரியம் காத்துக் கொண்டிருக்கும்" என்றான் தீவிரப் பார்வையுடன்.

தினமும் ஆச்சரியத்தை அள்ளித் தரும், தன்னுடைய முதலாளியை என்றும் போல் இன்றும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே, மாயா அறையை விட்டு நகர்ந்தாள்.


மறுநாள் மாலை 5:30 மணி அளவில் மும்பையில் உள்ள தாஜ் அரோணாவில் உள்ள மிகப்பெரிய கருத்தரங்குக் கூடத்தில், பத்திரிக்கையாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு பத்திரிக்கையாளர்கள் விளக்க உரை கூட்டத்தில் தேசிய ஊடகங்கள், மெடிக்கல் ஜர்னலிஸ்ட்ஸ், சமூக நீதிக்கான அமைப்புகள், YouTube விவாத நிபுணர்கள் கலந்து கொண்டிருந்தனர். வெளிநாடு மற்றும் இந்திய அரசுடன், இன்டஸ்ட்ரியல் பில்டெக் நிறுவனத்தின் பில்லியன் ரூபாய் கண்காணிப்பு ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்ததற்கான அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அனைவரும் பேசிக்கொண்டு சலசலத்துக் கொண்டிருந்த அந்த கருத்தரங்குக் கூடம், கருப்பு நிற கால் சட்டையும் அதற்கு பொருத்தமான பிளேசரும், கருப்புக் கண்ணாடியின் பின்னால் தன் கூர்மையான பார்வையை மறைத்துக் கொண்டு, அச்சத்தையும், அழுத்தத்தையும் தரும் அசுர முகம் கொண்டு, உள்ளே நுழைந்த ஒருவனின் வருகையால், சுட்டெரிக்கும் கதிரால் உறிந்தெடுக்கப்பட்ட வறண்ட நிலம் போல், வெறுமையாய் போனது.
அவன் அறைக்கு வந்ததும், ஒளிகள் சற்று மங்கின. விழிகளுக்கு அறிமுகமில்லாத பயம் என ஒருவிதமான அசௌகரிய அமைதி நிலவியது. ஆனாலும், பலரின் கண்கள் அவனைத் தேடிக்கொண்டே இருந்தன. அவர்கள் எல்லாம் அவனைப் போலவே வாழ விரும்பிய தொழில் நாயகர்கள்.

முன்னிலையில் ரவணன் அமர்ந்திருக்க, பின்னணியில் திரையில் "Future in our Watch" என்ற லோகோ பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

மேடையில் இருந்த ஒற்றை நாற்காலியில் கம்பீரமாக, கால் மீது கால் போட்டு அமர்ந்து கொண்டு, தொடங்கலாம் என்பது போல் வலது கையை அசைத்து சைகை செய்தான் ரவணன்.

"இன்று நாம் இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடுகின்றோம். இன்டஸ்ட்ரியல் பில்டெக் நிறுவனம் தலைமையில், Facial Surveillance ப்ராஜெக்ட், பில்லியன் ரூபாய் மதிப்பில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்திற்கு, இன்டஸ்ட்ரியல் பில்டெக் நிறுவனத்தின் CEO மிஸ்டர்.ரவணன் வர்மன் அவர்களை வரவேற்கின்றோம். உங்கள் கேள்விகளுக்கு நேரடியாக பதில் தர அவர் இங்கே வந்திருக்கிறார். உங்கள் கேள்விகளை நீங்கள் கேட்கலாம் " என்றார் நிகழ்ச்சி தொகுப்பாளர்.

" சிறந்த தலைவராக உருவாக என்ன செய்ய வேண்டும்? பிரமிப்பாய் உங்களைப் பார்க்கும் இந்த சமுதாயத்திற்கு, எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு, நீங்கள் கண்டிப்பாகப் பதில் சொல்ல வேண்டும் " என்றார் ஓர் இளம் பத்திரிக்கையாளர்.

"சிறந்த தலைவராக இருக்க, சில நேரங்களில் மனிதநேயத்தை விட்டுத் தள்ளவேண்டும்" என்றான் ரவணன் தன் தோள்களை அசட்டையாகக் குலுக்கிக் கொண்டு.

அந்த வாசகத்துக்கு பலரும் கைதட்டினர். ஆனால் ஒரு பெண் மட்டும் மெல்லச் சிரித்தாள்.

அரங்கத்தின் பின் வரிசையில் அமர்ந்திருந்த டாக்டர் தாராவின் சிரிப்பில் சவால் தெரிந்தது.

'உண்மையா? மனிதநேயமில்லாமல் நீ வென்றிருக்க முடியுமா?' என்றவளின் கண்கள் கேட்ட கேள்வியின் பாதையில் ரவணனின் விழிகளும் பயணம் செய்தது. அவள் கண்களில் தெரிந்த குளுமை, அவனை எரித்தது.

“இந்த facial tracking டெக்னாலஜி குறித்து சமூகத்தில் பல எதிர்ப்புகள் வருகின்றன. மிஸ்டர் வர்மன் இதற்கு உங்களது பதில்?” என்றார் மூத்த பத்திரிக்கையாளர்.

“நான் இதுவரை எதையும் கட்டாயமாகத் திணிக்கவில்லை. நாங்கள் தொழில்நுட்பத்தை உருவாக்குகிறோம். அதன் பயன்பாடும் ஒழுங்குமுறை நிர்வாகமும் அரசாங்கத்தின் வேலை. நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது என்னை அல்ல. அரசாங்கத்தை” என்றான் திடமாக.
அரசாங்கத்தை நோக்கி அவன் கைவிரல் சுட்டிக்காட்டியதும் அந்த மூத்த பத்திரிக்கையாளர் அமைதியாய் இருக்கையில் அமர்ந்தார் அவன் அறிவின் பலம் உணர்ந்து.

"இந்த திட்டம் எந்த வயது வரம்பை உள்ளடக்கியது? பொதுமக்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்றார் அடுத்த பத்திரிக்கையாளர்.

"பாதுகாப்பு எந்த வயதிலும் தேவைப்படும் உரிமை. மக்கள் முதலில் எதிர்ப்பார்கள். பின்னர் புரிந்துகொள்வார்கள். கடைசியாக நம்புவார்கள். அந்த நம்பிக்கையே எங்களின் வெற்றி" என்றவனின் வார்த்தைகளில் நெருப்பின் கனல் நிமிடத்தில் சுட்டது.

"அந்த எண்ணற்ற கேமராக்கள் மக்கள் தனிமையைச் சீர் கெடுக்கும் அபாயம் இருக்கிறதே?" என்றார் அந்த பத்திரிக்கையாளர் விடாமல்.

"தனிமை என்பது ஒருவித கற்பனை. நிஜ வாழ்க்கையில் ஒவ்வொரு தவறும் ஒவ்வொரு விளைவை உருவாக்குகிறது. அந்த தவறுகளை ஏற்க நீங்கள் தயாரா? நான் அந்த தவறை தடுக்கும் கருவியாக இருக்கிறேன்" என்றவனின் குரலில் மமதை நிறைந்து வழிந்தது.

"மக்கள் மீது பாதுகாப்பை பலவந்தப்படுத்துகிறீர்களா? இல்லையென்றால் கட்டுப்படுத்துகிறீர்களா ?" என்றார் ஒரு சட்ட வல்லுனர்.

" பாதுகாப்பும், கட்டுப்பாடும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். எந்த பக்கத்தை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதே முக்கியம்" என்றான் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பின் வேகத்துடன்.

“சமீபத்தில் நீங்கள் உளவியல் குழுவின் புகாருக்கு எதிராக பகிரங்கமாக ஊடகத்தில் பதிலளித்தீர்கள். இது மனநலத்துறையை நிராகரிப்பதாக வரையறுக்க முடியுமா?” என்றார் சமூக நீதி அமைப்பைச் சேர்ந்த ஒருவர்.

"மனநலம் ஒரு தனிநபர் பிரச்சனை. நான் சமூகம் குறித்த பாதுகாப்பைப் பற்றி பேசுகின்றேன். இங்கே நான் என்பது மனிதன் மட்டுமல்ல. நான் ஒரு அமைப்பின் முகம்” என்றான் ரவணன் கர்வத்துடன்.

அப்பொழுது கூட்டத்தில் இருந்து, கடைசி வரிசையில் ஒரு குரல், ஆழ்கடலின் அமைதியை கிழித்துக்கொண்டு வரும் பேரலை போல் எழுந்தது.

" மிஸ்டர் ரவணன்! நீங்கள் உருவாக்கும் கண்காணிப்பு அமைப்புகள், மனிதர்களின் தனிமையையும் மனஅழுத்தத்தையும் பெருக்கக்கூடியது என்பது எங்களது மனோ தத்துவ நம்பிக்கை" என்றாள் டாக்டர் தாராமேனன் ஒரு மனநல மருத்துவராக.
அந்தக் கேள்வியில் அரங்கமே அமைதியில் மூழ்கியது.

"நம்பிக்கை ஒரு உணர்ச்சி. உணர்வுகள் தொழிலில் இடம் பெறக்கூடாது. கண்காணிப்பு பாதுகாப்புக்காக. உணர்ச்சிகள் நமக்கு எச்சரிக்கையையும் தராது.பாதுகாப்பையும் தராது. அதனால் உங்கள் உணர்வுகளைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை" என்றான் அசால்ட்டாக.


“ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கும் பொழுதே, அதன் ஒட்டுமொத்த விளைவுகளையும் புரிந்து கொள்ளும் சமூகப் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது மிஸ்டர் ரவணன். பயம் ஒரு பிசினஸாகும் போது, மனநலம் ஒரு விலைக்கு விற்கப்படுகிறது” என்றாள் தாரா அவனுக்கு சளைக்காத கேலிக் குரலில்.
ரவணன் தன் பார்வையை சற்றும் விலக்காது, பதிலும் அளிக்காது, தாராவை அணு அணுவாக அளவிட்டுக் கொண்டிருந்தான்.

"எனக்குத் தேவை உங்கள் பதில் உங்கள் பார்வை அல்ல" என்றாள் தாரா அமைதியான அதே நேரத்தில் திடமான குரலில்.

வலது கையினால் தனது குறுந்தாடியை நிதானமாக நீவியவன், “உணர்வுகள் ஒரு போர்வை. அவை உண்மையை மறைக்கக் கூடும். உண்மை கண்களுக்குத் தேவையானது. கண்காணிப்பு உண்மையை உரக்கக் கூறும்"

இதழில் மலர்ந்த புன்சிரிப்புடன் தாரா, “உண்மை தெரிந்தும், உண்மையை உணர்ந்து கொள்ளமுடியாத ஒரு உலகம், உங்களது தொழில்களின் விளைவாக வந்தால், நம்முடைய கண்கள் திறந்தே இருளைக் காணும்" என்றாள் தீர்க்கமானக் குரலில்.

அந்த உறுதியான குரலில், அறையில் நிசப்தம் நிலவியது. அனைத்து ஊடகக் கண்களும் அவர்கள் இருவரை மட்டும் அலசி ஆராய்ந்தது.

"நம்மை எப்போதும் யாராவது பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ற எண்ணமே மனித மனத்தில் ஒரு வகையான பதட்டத்தை உருவாக்குகிறது. அந்த பதட்டம் குறைந்தபட்சம் நிஜ வாழ்க்கையில் நம்மை பாசமற்றவர்களாக மாற்றும். பாதுகாப்புக்காக நம்முடைய தனிமையை விற்பதை விட பெரிய வன்மம் வேறு இல்லை. இது உங்கள் வெற்றி இல்லை மிஸ்டர் ரவணன். இது உங்கள் ஒட்டுமொத்த வன்மம்" என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.

பார்வையாளர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது டாக்டர் தாராவின் நேரடிக் குற்றச் சாட்டில்.
ரவணனின் அமைதியைக் கண்டு எரிமலை எப்பொழுது வெடிக்கப் போகிறதோ என்று அச்சமும் ஆர்வமும் கலந்து அரங்கத்தில் அனைத்து கண்களும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

அவனின் அமைதியை கண்டு கொள்ளாமல் மேலும் தாரா, " ஒரு குழந்தையின் ஓசையைப் போல, மனித உள்ளத்தின் எண்ணங்களை பிரித்தெடுக்கும் ‘Silent Zones’ ஒவ்வொருவருக்கும் வேண்டும். எல்லாவற்றையும் கண்காணிக்கும்போது, நாம் பசுமை காடுகளை அழிப்பது போல், மனதின் பசுமையான எண்ணங்களை அழிக்கின்றோம்.
மனநலம் ஒரு தொழில்நுட்பப் பிரச்சனை அல்ல, மனித நலனுக்கான விழிப்புணர்வு. உங்கள் கண்காணிப்பு அமைப்புகள் உங்கள் வலிமையைக் காட்டலாம், ஆனால் அந்த கண்காணிக்கும் கேமராக்களின் கண்களில், ஒரு குழந்தை அழும்போது, நீங்கள் அந்த தருணத்தை உணர முடியுமா?. அந்தக் குழந்தையின் வலியை உள்வாங்க முடியுமா? உண்மை இல்லாத உங்கள் நிழலில் ஓர் நாள் நீங்களே விழுந்து விடுவீர்கள்!" என்றாள் எந்த பதட்டமும் இன்றி நிதானமான குரலில்.

" பயங்கரவாதம், பாலியல் குற்றம், குழந்தை கடத்தல் போன்றவை ஒவ்வொரு நிமிடமும் இந்த பூமியில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கட்டுப்பாடு இல்லாத சுதந்திரமான மனநிலை தான் இதற்குக் காரணம். கண்காணிக்கப்படும் போது இந்த தவறுகள் நடக்க வாய்ப்பு மிகவும் குறைவு. அதை உங்களால் நிச்சயம் மறுக்க முடியாது.
என் மௌனங்களை உங்கள் வெற்றியாக எடுத்துக் கொண்டது உங்கள் பிழை! என் ஆழ்ந்த அனுதாபங்கள்! சில மௌனங்கள், போரினை விட ஆபத்தானது. பயம் என்ற ஒன்றே எனக்குக் கிடையாது. என் வெற்றியை நிர்ணயிக்க நீங்கள் யார்? " என்றான் அழுத்தமான பார்வையுடன்.

" யாரோ நான்! அதைப்பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை மிஸ்டர் ரவணன். நீங்கள் ஒரு யுத்தத்தை தொடங்கி இருக்கிறீர்கள். ஆனால் யாரிடமோ தோற்க போகிறீர்கள். அந்த யாரோ நீங்களாகக் கூட இருக்கலாம் என்பதுதான் என் வாதம்" என்றாள் முகத்தில் நிறைந்த சிரிப்புடன் டாக்டர் தாரா.

நிகழ்ச்சியின் பாதை வேறு திசை மாறியதும், " அனைவருக்கும் நன்றி. இது ஒரு புதிய இந்தியா!. பாதுகாப்பான இந்தியா!" என்று தொகுப்பாளர் மிகவும் அவசரமாக நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்.

தாரா வெளியே செல்லும்போது, ரவணன் அவளை எதுவும் சொல்லாமல், பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளது நடையை, கண்ணாடியில் பிரதிபலித்த அவளது கோணத்தை, கண்களில் பதிந்த தைரியத்தை, அவன் கண்கள் கணக்கெடுக்கத் தொடங்கின.

'உன் மௌனத்திலும், உன் வார்த்தைகளிலும் ஒரு வகை கண்காணிப்பு இருக்கிறது, டாக்டர். தாரா மேனன். அது என்னை மட்டுமே குறி வைத்து கண்காணிக்கிறது. என் கண்களில் உன் பதிலைத் தேடிப் பார்க்காதே. இன்னும் நீ என்னை முழுமையாக அறியவில்லை...' என்றவனின் முகத்தில் கர்வம் மீண்டும் குடிகொண்டு அமர்ந்தது.

தொடரும்...