• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அந்தமான் காதலி - 04

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,214
437
113
Tirupur

அந்தமானின் காதலி – 4

சத்தமில்லை

நீயுமில்லை

நித்தமும் கொடுத்து விட்டு செல்கிறேன்

மெளன முத்தம்

மெளனமாய்

மனதுக்குள் உன்னை நினைத்து...!

சுவிதாவின் செயலில் பவன் அதிர்ந்து நின்றது ஒரே ஒரு நொடிதான். அடுத்த நொடி, “அம்மா...” என்று கத்தியவன், சைந்தரியை அவரிடமிருந்து வேகமாக பிரித்து, தன்னில் இழுத்துக் கொண்டான். சுவிதாவும் மகனின் அந்த சத்ததில் தன் பிடியை விட்டுவிட, சைந்தரியும் மிரண்டு போய் பவனின் கையை இறுக பிடித்திருந்தாள். அவளது உடலில் தெரிந்த நடுக்கமே, அவள் உணர்ந்த பயத்தைச் சொல்ல, கண்ணை மூடி தன்னை ஆசுவாசப்படுத்தியவன், தாயை ஏறெடுத்தும் பார்க்காமல் சைந்தரியை அழைத்துக் கொண்டு விடுவிடுவென கிளம்பிவிட்டான்.

பவன் வெளியேறிய சில நிமிடங்கள் வரைக்குமே, சுவிதாவிற்கு தான் செய்த காரியத்தின் வீரியம் தெரியவில்லை. கார் கிளம்பும் சத்தத்தில் நிகழ்வுக்கு வந்தவர், தன் செய்கையை எண்ணி பெரிதாக வருத்தமெல்லாம் படவில்லை. இதோடு பவன் அந்தப் பெண்ணை கொண்டு போய் எங்கேயேனும் விட்டுவிட்டு வந்தால் போதும். தொல்லை ஒழிந்தது என்று நினைத்துக் கொண்டு, தன் மகள்களுக்கு அழைத்து நடந்ததைப் பற்றி கூறி, அடுத்து செய்ய வேண்டியதை சொல்ல ஆரம்பித்தார்.

இங்கு காரில் சென்ற பவனுக்கோ தாயின் செயல் பெரும் கோபத்தை ஏற்படுத்த, அங்கு இருந்தால் மேலும் ஏதேனும் பேசிவிடுவோமோ என்றுதான் கிளம்பியிருந்தான். அதோடு சைந்தரியின் மிரண்ட விழிகள் அவனை வேறெதுவும் பேச விடவில்லை. இதோ இப்போதும் தன் கைகளுக்குள் சுருண்டு கிடக்கும் அவள் உடலில், இன்னுமே நடுக்கம் இருப்பதை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது. இனி தன் வீட்டில் அவளை வைத்துக்கொள்ள முடியாது என்று உறுதியாக தெரிந்துவிட, அடுத்து என்ன செய்வது என யோசனைகள் ஓட, ஒரு கை காரை ஓட்டினாலும் மற்றொரு கை அவளை வருடுவதை நிறுத்தவில்லை.

கார் நேராக சென்றது அவன் பணிபுரியும் மருத்துவமனைக்கு தான். அந்த வளாகத்தைப் பார்த்ததும், சுற்றியும் இருக்கும் பாதுகாப்பு காவலர்களைப் பார்த்ததும் சைந்தரியின் உடல் மேலும் நடுங்க ஆரம்பித்தது. அவளை ஒருவழியாக சமாதானம் செய்து உள்ளே அழைத்து வந்தவன், அப்போதைக்கு அவளுக்கு தேவையான மருத்துவத்தைப் பார்க்க ஆரம்பித்தான். உடலில் ஏற்றப்பட்ட மருந்துகளின் வீரியத்தில் பெண்ணவளும் நித்திரையில் ஆழ, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தவன், தன் சீஃபை பார்க்க கிளம்பினான்.

‘சூரஜ்’ என்ற போர்டு மாட்டியிருந்த அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்து அவருக்கு ஒரு சல்யூட் வைத்தபடியே, “மார்னிங் சீஃப்!” என்றதும், “எஸ் மேன் மார்னிங்! ப்ளீஸ் பீ சீட்டட்…” என்றார் அவரும் பதிலுக்கு.

சில நொடிகள் அமைதியாக இருந்தவன், “சீஃப்...” என்று ஆரம்பித்து இன்று வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டு அவர் முகம் பார்க்க,

சூரஜோ, “அம்மாவோட பயம் தப்பு இல்லையே மேன். ஆனா அவங்க நடந்துக்கிட்ட விதம் தப்பு. இப்போ என்ன செய்யப்போற? எனக்குத் தெரிஞ்ச ஒரு சாரிட்டி ஹாஸ்பிடல் இருக்கு, அங்கே விடலாமா?” என்றவரிடம்,

“நோ சீஃப். அவ புதுசா யாரையும் பக்கத்துல விடுறது இல்ல. இப்போ கொண்டு போய் புதுசா ஒரு இடத்துல, அதுவும் ஹாஸ்பிடல்லன்னா ரொம்ப கஷ்டம். அவ அதுல செட் ஆக மாட்டா. வேற என்ன பண்ணலாம்?” என படபடவெனப் பேசியவனை ஆழ்ந்து பார்த்தவர்,

“வேற என்ன பண்ண முடியும்? நீ அவளை மேரேஜ் செய்து பக்கத்துலயே தான் வச்சுக்க முடியும். உன்னால மட்டும் தான் பார்த்துக்க முடியும்னு உனக்கு ஒரு எண்ணம் வந்துருச்சு. வேற யாரா இருந்தாலும் அவளை ஹர்ட் செய்துடுவாங்கன்னு ஒரு பயம் வந்துடுச்சு. சோ...” என்று அவனைப் பார்த்தவர் சில நொடிகளுக்குப் பிறகு, “ஐ திங்க் யு லவ் ஹெர்” என முடித்தார்.

“வாட்!?” என அதிர்ந்தவன், “நோ சீஃப்... இப்ப வரைக்கும் எனக்கு அந்த மாதிரி தாட் வரல. அவ மேல எனக்கு ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு. இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன். பட் அது லவ்வா எல்லாம் தெரியாது. அன்னைக்கு அப்படி ஒரு சூழல்ல சைந்தரியைப் பார்க்கும் போது, ரெண்டு தங்கைகளுக்கு அண்ணனா தான் எனக்கு யோசிக்கத் தோனுச்சு. அதனால தான் அவளை காப்பாத்த முடிவு செய்து, வீட்டுக்கு கொண்டு போனேன்.” அவர் நினைப்பது போல் இல்லை எனப் பதட்டமாகப் பேச,

“பவன், நான் சொல்றது உனக்குப் புரியல. அந்தப் பொண்ணுக்கு உன்கிட்ட மட்டும்தான் பயம் இல்ல. உன் அம்மா வந்தா கூட அவ பயந்துக்குறா. நீயும் அவளை யாருக்கிட்டயும் விட மாட்டேங்குற. இப்போ உனக்கு லவ் இல்லாம இல்ல. நீ இன்னும் அதை உணரல, அவ்வளவு தான். ஆனா என்னால் நூறு சதவீதம் சொல்ல முடியும், யூ லவ் வித் ஹெர். சோ அடுத்து என்ன செய்யலாம்னு சீக்கிரம் முடிவு பண்ணு. உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் சொல்லு, கண்டிப்பா நான் செய்றேன்.” என அவனைக் குழப்பிவிட்டு சென்று விட்டார் சூரஜ்.

சூரஜ் சொல்லி சென்ற செய்தியிலேயே பவனின் மனம் உழன்று கொண்டிருந்தது. அவனுக்கு சைந்தரி மேல் காதல் உண்டா என்று கேட்டால், நிச்சயம் இல்லை தான். ஆனால், அவளை விட்டு விட முடியுமா என்று கேட்டால், அதற்கும் முடியாது என்று அடித்து சொல்வான். தன்னை விட யாரும் அவளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியாது, என்ற எண்ணம் அவன் மனதில் ஆணியாக இறங்கிவிட்டது. சூரஜ் சொன்னதும் இதுவே தான்.

பெரும் குழப்பதின் மத்தியில் வெளியில் வந்தவன், நேராக சென்றது சைந்தரி அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்குத் தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் பெண். உறக்கத்தில் இருந்தாளோ அல்லது மயக்கதில் இருந்தாளோ? அந்த நித்சலமான முகத்தையே பார்த்திருந்தான் பவன்.

பேரழகி என்று சொல்ல முடியாது தான். ஆனால் நிச்சயம் அழகான பெண். மாநிறத்திற்கும் சற்று கூடுதலான நிறம். மெலிந்த தோற்றம், கொடி இடை தான். அதில் மறுப்பு சொல்ல முடியாது. உடை அவளுக்கு வசதியாக பைஜாமா போல் ஒன்றுதான். அடர்ந்த கருங்கூந்தல். அன்று அவன் பார்த்தபோது நீண்டக் கூந்தலாக இருந்தது. பராமரிக்க கஷ்டமாக இருந்தது என, சுவிதா அதை தோள் வரை வெட்டியிருந்தார். இப்போது இன்னும் கொஞ்சமாக வளர்ந்து தோளைத் தாண்டியிருந்தது. அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். மனதில் அமைதியும் ஒரு இதமும் பரவ ஆரம்பித்தது.

இந்த இதமும் அமைதியும் அவனுக்கு கடைசி வரைக்கும் வேண்டுமென்று தோன்றியது. இன்று சுவிதா இதை ஆரம்பித்திருக்கா விட்டால், பவனுக்கு சைந்தரியின் மேல் இப்படியொரு எண்ணம் வந்திருக்குமோ தெரியாது? ஆனால் இந்த நொடி அவனுக்கு அவள் தன் காலம் முழுமைக்கும் வேண்டும் என்ற எண்ணம் மட்டும், ஆழிப்பேரலையாக உருவாகி அவனை இம்சித்தது.

இப்படியான இதமான யோசனைகளில் அவன் மூழ்கியிருக்க, அபஸ்வரமாய் அவனது போன் அடித்தது. எடுத்து யாரென்று பார்க்க, சுவிதா தான் அழைத்திருந்தார். அதுவரை இருந்த இதம் தொலைய, மனமும் உடலும் இறுகிக் கொள்ள, வேண்டா வெறுப்பாய் அதை எடுத்து காதுக்கு கொடுத்தான்.

அவன், ‘ஹலோ’ என்று ஆரம்பிக்கும் முன்னமே, “என்ன பவன், அவளை தொலைச்சு தலை முழுகிட்டு வர்றதுக்கு, உனக்கு இவ்வளவு நேரமா? சீக்கிரம் வா, இங்க உன்னைப் பார்க்க தங்கச்சிங்க, அவங்க வீட்டுல இருந்து எல்லாம் வந்துருக்காங்க.” என படபடவெனப் பேச, பவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இவர்கள் வருவதாக நம்மிடம் யாரும் சொல்லவில்லையே? ஏன், எதற்கு எல்லோரும் வந்திருக்கிறார்கள் என்ற கேள்வி பிறக்க, அதை தன் தாயிடமும் கேட்டுவிட்டான்.

“எல்லாம் நல்ல விஷயம் தான். சனியன் தொலைஞ்சா தான் நல்லது நடக்கணும்னு இருக்கு. நீ சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு வா.” என விசச் சொற்களை சொல்ல, பவனுக்கு இப்போது அனைத்தும் புரிந்தது. தாயின் நோக்கமும் புரிந்தது. அவரை நினைத்து ஒரு கசந்த முறுவல் பிறக்க அவரிடம், “வருகிறேன்” என்ற சொல்லை உதிர்த்துவிட்டு மீண்டும் சூரஜிடம் சென்றான்.

அவரிடம் தான் எடுத்திருக்கும் முடிவைப் பற்றிச் சொன்னவன், “சீஃப், நீங்க எனக்கு கண்டிப்பா ஹெல்ப் செஞ்சே ஆகணும். ஐ நீட் யுவர் ஹெல்ப். நான் இப்போ வீட்டுக்குப் போறேன், பேசிப் பார்க்குறேன். அங்க என்ன வேணும்னாலும் நடக்கலாம். நான் திரும்பி வர வரைக்கும் சைந்தரியைப் பத்திரமா பார்த்துக்கோங்க. முடிஞ்சா எனக்கு எமர்ஜென்சி ட்ரான்ஸ்ஃபர் ரெடி பண்ணுங்க.” என அடுத்து அவன் செய்யப் போவதை வரிசையாகச் சொல்ல,

“நோ மேன்... நெகடிவ் திங்கிங் வேண்டாம். நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும். நீ போய் பொறுமையா உன் எண்ணத்தை எடுத்து சொல்லு. முதல்ல வேண்டாம்னு சொன்னாலும், உனக்காக, உன்னோட ஹேப்பினெஸ்க்காக கண்டிப்பா ஒத்துப்பாங்க. நாமளா ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.” என சூரஜ் அறிவுறுத்த,

“எனக்கு என் அம்மாவைத் தெரியும் சீஃப். அவங்க ஒன்னு நடக்கணும்னு நினைச்சா, அதைக் கண்டிப்பா நடத்தி முடிப்பாங்க. இத்தனை வருசத்துல அவங்களை எனக்கு தெரியாதா என்ன? நான் பார்த்துக்குறேன் சீஃப். நான் வரும் வரைக்கும் சைந்தரியை கேர்ஃபுல்லா பார்த்துக்கோங்க ப்ளீஸ்...” எனக் கிளம்பி விட்டான்.

சூரஜிற்கும் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை, சரியென தலையசைப்பதைத் தவிர.

‘அம்மா ஏதோ ஒரு திட்டத்தோடு தான் எல்லாரையும் வர வைத்திருக்கிறார். இதற்கு தன் உடன்பிறப்புகளும் உடந்தை என்பது வரை புரிகிறது. தங்கைகள் தனியாக வந்திருந்தால் சமாளித்து விடலாம். ஆனால் குடும்பத்தோடு வந்திருப்பதால் சமாளிக்கும் வாய்ப்பு குறைவுதான் என்று நினைத்தான்.

தங்கைகளின் கணவர்கள் சொன்னால் புரிந்து கொள்வார்கள் தான். ஆனால் அந்த வீட்டின் பெரியவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? அதை விட தன் அம்மா.. அவருக்கு எப்படி புரிய வைக்க?’ என பல யோசனைகள் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. ஆனால் எந்தக் காரணத்திற்காகவும் சைந்தரியை விட்டுவிடும் எண்ணம் துளியும் தோன்றவில்லை பவனுக்கு.

யோசனைகளின் மத்தியில் வீடு வந்தவனுக்கு, வீட்டின் அமைப்பே வித்தியாசமாக இருந்தது. அலங்காரத்தில் களை கட்டியிருந்தது. அவன் போகும் போது இருந்த மாதிரி இல்லை. ஒரு மூன்று மணி நேரத்தில் இதெல்லாம் சாத்தியாமா? ஆம், சாத்தியப் படுத்தியிருந்தார் சுவிதா.

அவற்றை எல்லாம் பார்த்தபடியே வர, ஹாலில் இரண்டு தங்கைகளின் மாமானார், மாமியார்கள் அமர்ந்திருக்க, அவர்களின் கணவர்கள், குழந்தைகளை வைத்தபடியே ஹாலின் அலங்காரத்தை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

உடன்பிறப்புகள் இருவரும் அம்மாவிற்கு கிச்சனில் உதவிக் கொண்டிருந்தார்கள். அத்தனையையும் நோட்டமிட்டபடியே வந்தவன் பெரியவர்களிடம், “வாங்க!” என மரியாதையாக அழைத்து அவர்களிடம் குசலம் விசாரித்தான்.

பிறகு தங்கை கணவர்களிடம் பேசி, குழந்தைகளிடம் கொஞ்சி விட்டு, தன்னறைக்குள் நுழைந்தான். மற்ற மூவரிடமும் எதுவும் பேசவில்லை. எல்லோர் முன்னமும் பேசி ஒரு ரசபாசத்தை உருவாக்க அவன் விரும்பவில்லை. பேசாமல் உள்ளே வந்தால் எப்படியும் தன்னைத் தேடி வருவார்கள் என்று, அவர்களைப் பற்றித் தெரிந்ததால் அப்படியே செய்தான்.

பவன் வீட்டுக்குள் நுழைந்தது முதல் கிட்சனில் இருந்து சுவிதா அவனைதான் பார்த்துக் கொண்டிருந்தார். மகன் முகத்தில் இருந்த குழப்பம் நெருடினாலும், அந்தப் பெண் இல்லாமல் தனியாக வந்ததே தனக்கு கிடைத்த முதல் வெற்றி. அதோடு தங்கைகள் கேட்டு முடியாது என்று பவன் சொன்னதே கிடையாது. அது கொடுத்த தைரியம்தான் அவரை அடுத்தடுத்த செயல்களில் இறங்க வைத்தது.

மகனின் மனநிலையை அறிய காஃபியை கொடுத்து தன் முதல் மகளை அனுப்பி விட்டார் சுவிதா.

“அண்ணா...” என்ற சத்தத்தோடு உள்ளே வந்த முதல் தங்கை லாவண்யாவின் பார்வையில் பட்டது, கட்டிலில் சாய்ந்து கண்களை மூடியபடியே அமர்ந்திருந்த பவன்தான்.

அருகில் சென்று அவன் தோளைத் தொட்டு மெதுவாக உலுக்கி, “அண்ணா என்னாச்சு? இவ்ளோ டல்லாகிட்டீங்க... அவங்க ரொம்ப பிரச்சனை பண்ணிட்டாங்களா? முதல்ல காஃபி குடிங்க, பிறகு மத்ததெல்லாம் யோசிக்கலாம்.” என பரிவாக பேச,

தங்கைக்கு ஒரு சிரிப்பைக் கொடுத்தவன் காஃபியை வாங்கியபடியே, “எப்போ வந்தீங்க? அதுவும் ரெண்டு பேரும் சேர்ந்து. நான் கூப்பிட்டா கூட வரமுடியாததுக்கு ஆயிரம் காரணம் சொல்லுவீங்க. இன்னைக்கு என்ன? அப்புறம் வர்றீங்கன்னு சொல்லவே இல்லை. அலங்காரம் எல்லாம் நடந்துருக்கு நம்ம வீட்டுல, என்ன விசேஷமா?” என மெதுவாக கொக்கி போட,

என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் முதலில் விழித்தவள் பிறகு, “அது... அது... வந்து... ண்ணா... அம்மாதான் ரகுபதி மாமா வீட்டுல பேசி, உனக்கும் ராகவிக்கும் நிச்சயம் பண்ணலாம்னு எங்களை வரச் சொல்லியிருக்காங்க.” என ஒருவழியாக முடிக்க,

“ஏன் மாமா பொண்ணு ராஆஆஆகவி? உங்க ரெண்டு பேரோட நாத்தனாருங்க என்ன ஆனாங்க?” என ராகமிழுத்து, காஃபியை உறிஞ்சியவாறே அடுத்த கொக்கியைப் போட,

“அது... அது கலையோட அத்தைதான் ரெண்டு வீட்டுல எந்த வீட்டுல பொண்ணு எடுத்தாலும், அடுத்தவங்களுக்கு கஷ்டம். அதனால எங்க ரெண்டு வீட்டுலயும் வேண்டாம், வெளியே பாருங்கன்னு சொல்லிட்டாங்க. அதுதான் அம்மா ரகு மாமா வீட்ல போய் பேசினாங்க.” என லாவண்யா கூறினாள்.

“எந்த மாமா லாவண்? அப்பா இறந்து, அவர் இல்லாம, நாம கஷ்டப்படும் போது என்ன ஏதுன்னு கூட கேட்காம, எந்த உதவியும் செய்யாம ஒதுங்கியிருந்த ரகுபதி மாமாவா? இப்போ மட்டும் எப்படி வந்து ஒட்டிக்கிட்டாராம் உங்க மாமா? கேட்டாங்களா உங்க அம்மா?” என நக்கல் குரலில் கேட்டாலும், அந்தக் குரலில் கோபம் பன்மடங்கு குடியிருந்ததை லாவண்யாவால் உணர முடிந்தது.

பவன் சொல்வது உண்மை. கஷ்டப்படும் போது வராமல், இன்று வசதி, வாய்ப்புகள் வந்து சமுதாயத்தில் ஒரு பெயரும் எடுத்தபிறகு, பழையதை மறந்து இப்போது ஒட்டிக் கொண்டால், யாராக இருந்தாலும் இப்படித்தான் பேசுவார்கள்.

இந்த அம்மாவிற்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. எதுக்கு இப்போ இவ்வளவு அவசரமா இந்த வேலை? ராகவியைப் பற்றியும் பெரிதாக நல்ல அபிப்ராயமும் இல்லை அவர்களுக்கு. அப்படி இருக்க, அம்மா ஏன் இப்படி பிடிவாதம் செய்து நிச்சயம் வரை கொண்டு வந்திருக்கிறார்கள். அதிலும் அண்ணனின் சம்மதத்தைக் கேட்காமலே.

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நின்றிருக்கும் தங்கையின் முகத்தின் முன்னே சொடக்கிட்டவன், “என்ன லாவண், உனக்கு ராகவியை ரொம்ப பிடிச்சிருக்கா என்ன? உன் அப்பாவி அண்ணனுக்கு கட்டி வச்சே ஆகணும்னு மும்முரமாக இறங்கியிருக்க?” என தங்கையைப் பரிகாசம் செய்தவன், பின் அவளை நேராகப் பார்த்து,

“உங்கக்கிட்ட நான் இதை எதிர்பார்க்கவே இல்லை லாவண். அம்மா தான் புரிஞ்சிக்கல, நீங்க கூட...” என மிகவும் வருத்தமாக சொல்லிவிட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

பவனின் இந்த பேச்சில் லாவண்யா அதிர்ச்சியில் பேச்சிழந்து சிலையாக நின்று விட்டாள்.

***
 
  • Like
  • Love
Reactions: saru and Joss uby

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
557
122
43
Dindugal
சுவிதாவோட எண்ணம் ஒரு அம்மாவா சரிதான்.
ஆனா அதுக்காக அவங்க நடந்துக்கிட்ட முறை ரொம்பவும் தப்பு
பவன் என்ன முடிவு எடுப்பானோ
 

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
329
26
28
Hosur
Nice vani