• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 01

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
நிழல் - 1

தனக்கு முன்னே அமர்ந்திருந்த மூவரையும் அழுகையும், வேதனையும், கலக்கமுமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சரி. அவளுக்கு இப்போது என்ன பேசுவது என்றேத் தெரியவில்லை. அவள் உடல் மட்டுமே இங்கிருந்தது, உள்ளம் மகளின் அருகில் சுற்றிக் கொண்டிருந்தது. தன் பத்து வயது மகள் உயிருக்குப் போராடியபடி மருத்துவமனையில் இருக்கிறாள்.

ஐந்து லட்சம் இருந்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற சூழலில் உதவி என்று கேட்டு சென்ற இடத்தில் எல்லாம் கைவிரிக்க, வேறுவழியில்லாமல் இங்கு வந்து நின்றாள்.

“என்ன வந்துட்டு நீ பாட்டுக்கு சும்மா உக்காந்துருக்க, எங்களுக்கு என்ன வேலை வெட்டி இல்லையா..? சீக்கிரம் வந்த விசயத்தைச் சொல்லிட்டு கிளம்பு..” என்ற சரஸ்வதியம்மாளைக் கெஞ்சுதலாகப் பார்த்தாள் மஞ்சரி. அவளால் வேறு என்ன செய்திட முடியும்.

“ப்ளீஸ் அத்த.. ஒருதடவை.. ஒரே ஒரு தடவை மட்டும் அவருக்கிட்ட அம்முவைப் பத்தி சொல்லுங்க, அவர் வந்து பார்த்தாக்கூட போதும், அம்முவைக் குணப்படுத்திடலாம்.. கொஞ்சம் கருணைக் காட்டுங்க. அம்மு அவருக்கும் பிள்ளைதானே..” என்று கரகரக்கப் பேசியவளை நக்கலாகப் பார்த்தது அந்த மூவர் குழு.

“என்ன அத்தையா.. யாருக்கு யாரு அத்த.. தெருவுல போற நாய் உனக்கு நான் அத்தையா.? என் பையன் வாழ்க்கையவே நாசம் பண்ண நாசக்காரிடீ, நீ என்ன அத்தைன்னு உறவு வச்சுக் கூப்பிடுவியா..? இப்போ இந்த நிமிசம் உன்னைக் கழுத்தப் பிடிச்சு வெளியத் தள்ளீனா ஏன்னு கேள்வி கேட்கக்கூட ஆள் இல்லாத அநாத நாயி, உனக்கு என் புள்ளக்கூட வாழற வாழ்க்கைத் தேவைப்படுதா.. அன்னைக்கே உன்னை விரட்டியடிச்சிருக்கனும்டி.. விட்டு வச்சது என் தப்பு.. அதுதான் வளர்ந்து இப்போ என் குடும்பத்தையே நாசம் பண்ணிட்டு இருக்க..” என ஆவேசமாகக் கத்திய சரஸ்வதியை அரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சரி.

“சரசு நீ கொஞ்சம் சும்மா இரு… இப்போ நமக்கு காரியம் தான் பெருசு. நீ பாட்டுக்கு எதையும் பேசிவச்சு, அவபாட்டுக்கு கிளம்பி போயிட்டா நமக்குத்தான் நஷ்டம். நீ சும்மா உட்காரு, நான் பேசிக்கிறேன்..” என மனைவியை அடக்கியவர்,

மஞ்சரியைப் பார்த்து “நீ சொன்னியே அம்மு அவர் பொண்ணுதான்னு, அந்த ஒன்னே ஒன்னால மட்டும் தான் உன்னை இங்க உக்கார வச்சு பேசிட்டு இருக்கோம் புரியுதா..?” என நிதானமானக் குரலில் கூறிவிட்டு, “இந்தப் பணம், சொத்து எல்லாம் என் பையானாலத்தான் வந்தது, எப்படித் தெரியுமா.? அவனுக்கு இப்போ நாங்க பார்த்து கட்டி வச்ச பொண்ணு மூலமா வந்தது. எங்களுக்கு இப்படித்தான் மருமக வேனும்னு அவன் பிறந்ததுல இருந்து முடிவு செஞ்சி வச்சிருந்தோம், அது அவனுக்கும் தெரியும், ஏன் உனக்கும் தெரிஞ்சிருக்கும்.”

“அது தெரிஞ்சும் நீங்க காதலிச்சது, கல்யாணம் செஞ்சது யாரோட தப்பு.. ம்ம் என் பையனுக்கு எது சரியா வரும்னு எங்களை விட உனக்கு நல்லாத் தெரியுமா.? ஹான்.. அவனுக்கு சொகுசா வாழனும், கஷ்டம் தெரியாம வாழனும், உன்கூட அந்த வாழ்க்கை வாழ முடியல.. எந்நேரமும் கஷ்டம், கடன் இதெல்லாம் அவனால சமாளிக்க முடியாதுன்னு எங்களுக்குத் தெரியும். அதனாலதான் எல்லா கடனையும் அவன் மேலத் தினிச்சோம், கடைசில என்னாச்சு. நாங்க நினைச்ச மாதிரியே பிச்சிக்கிட்டு வந்துட்டான். நாங்க இதைத்தான் எதிர்பார்த்தோம். நடந்துடுச்சு.!” என்றவரை அதிர்ச்சியோடு பார்த்தாள் மஞ்சரி.

‘காதலித்தவனை நம்பியது குற்றமா.? பெற்றவர்களை, உடன்பிறந்தவர்களை என எல்லோரையும் பகைத்துக் கொண்டு இவன் மட்டுமே வாழ்க்கை என வந்ததற்கான பலனா இது’ நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது. வலித்த நெஞ்சை தடவியபடியே “இதெல்லாம் அவருக்கும் தெரியுமா..? தெரிஞ்சுமா.” என்றவளால் அடுத்த வார்த்தையை பேச முடியவில்லை.

“தெரியாம என்ன.? அவனுக்கு எல்லாம் தெரியும். உன்னை அவன் வாழ்க்கையில இருந்து அனுப்ப சொன்னதே அவன்தான். அவனால உன்கூட வாழ முடியலையாம்.. என்னை அந்த வாழ்க்கையில இருந்து காப்பாத்துங்கன்னு வந்து எங்க கால்ல விழுந்து கெஞ்சினான். வேறவழி..! உன் வாழ்க்கையில இருந்து அவனைத் தூரமா தூக்கிட்டோம்..” என ஆங்காரமாய் கத்தினாள் சரஸ்வதியின் மகள் ரஞ்சனி.

“ஆனா.. ஆனா அதை அவர் எங்கிட்ட சொல்லிருக்கலாமே, சொல்லியிருக்க நானே விலகியிருப்பேன். எதுக்கு இவ்வளவு கஷ்டம்..” என்றவளால் தாங்க முடியாதளவிற்கு வேதனை நெஞ்சைக் கவ்வி அவளைக் கொன்றுவிடும் போல் இருந்தது.

“எதுக்கு.. ஏன் சொல்லனும்.? நீ தியாகிப்பட்டம் வாங்கி நல்லவளாவே வாழனும், நாங்க கொடுமைக்காரங்களா அவன் கண்ணுக்கு தெரியனுமா.. இது இன்னைக்கு நேத்து நடந்த ப்ளான் இல்ல, என்னைக்கு அவன் நீதான் வேனும்னு வந்தானோ அன்னைக்கு ஆரம்பிச்சது. உன்னை அவன் வாழ்க்கையில் இருந்து மொத்தமா தூக்கனும்னு நினைச்சோம்.”

“அது அவனால மட்டும் தான் முடியும்னு தெரிஞ்சது. அதான் அவனை வச்சே செஞ்சோம், போதும் இதுக்கு மேல உனக்கு விளக்கம் சொல்ல எங்களுக்கு அவசியம் இல்லை” என மஞ்சரியிடம் கத்தியவள், “ம்மா.. என்ன செய்றீங்க நீங்க, சீக்கிரம் பேச வேண்டியத பேசி, வாங்க வேண்டியத வாங்கி அனுப்பிவிடுங்க.. நமக்கு வேலை இல்லையா..? காலங்காத்தால இவ மூஞ்சில முழிச்சா ஒன்னும் விளங்காது..” என்றாள் ரஞ்சனி எரிச்சலாக.

அதை ஆமோதிப்பது போல, “ஆம சரசு சீக்கிரம் பேசி முடி, வெளியேப் போக வேண்டிய வேலை இருக்கு..” என மூவரில் சரஸ்வதியின் கணவர் கிருஷ்ணனும் கூற, இருவரையும் பார்த்து சரியெனத் தலையசைத்த சரஸ்வதி “வினோத்” எனக் குரல் கொடுக்க, பக்கத்தில் ஒரு அறையில் இருந்து கையில் சில பாண்டு பத்திரங்களோடு வந்தான் அவன். சரஸ்வதியின் இரண்டாவது மகன்.

அதை வாங்கி மஞ்சரிக்கு எதிரே போட்டவர் “இத்தனை நாள் கொடுக்க மாட்டேன், முடியாதுன்னு சொன்ன, இந்த விவாகரத்து பத்திரத்துல கையெழுத்தைப் போட்டுட்டு, இந்தா இந்த பத்து லட்சத்தை எடுத்துட்டு கிளம்பு. புருசனை நம்பி புள்ளைய விட்டுடாத.. அவன் உன்னைத் திரும்பிக் கூட பார்க்கமாட்டான். கடைசி காலத்துல புள்ளையாச்சும் உனக்குத் துணையா இருக்கட்டும்..” எனக் கொஞ்சமும் ஈவு இரக்கம் என்பதே இல்லாமல் பேசிய சரஸ்வதியை வெறித்துப் பார்த்தாள் மஞ்சரி.

“நீ என்னதான் தலைகீழா நின்னாலும் என் புள்ளை உன்னைத் தேடி ஒருநாளும் வரமாட்டான். இத்தனை நாள் அவன் வந்துடுவான்னு நம்பின உன் நம்பிக்கையை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு. அதுக்கு என்ன பண்றது. என் புள்ளயோட வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம், அவன நான் ராஜாவாட்டம் வாழ வைக்கனும். உன் கூட இருந்தா பிச்சைக்கார வாழ்க்கை தான் வாழனும். அது நடக்க நான் கண்டிப்பா விடமாட்டேன்." என்ற சரஸ்வதியின் பேச்சைக் கேட்டு மஞ்சரியின் உயிர் உள்ளுக்குள் செத்துக் கொண்டிருந்தது.

அப்போது ரஞ்சனியின் போன் இசைக்க, அதை எடுத்தவள் மஞ்சரியைப் பார்த்துக் கொண்டே "சொல்லுங்க அண்ணி, இங்க தான் இருக்கா.. கையெழுத்து போடாம எப்படி போவா.. அப்புறம் அவ புள்ளய எப்படி காப்பாத்துவா, பிச்சைக்காரிக்கு வீராப்புக்கும், திமிருக்கும் மட்டும் குறைச்சல் இல்லை. நீங்க கிளம்பிட்டீங்களா, செக்கப் இருக்கு தானே இன்னைக்கு. சரி போயிட்டு வந்துட்டு போன் பண்ணுங்க.. ம்ம் இருங்க அம்மாக்கிட்ட சொல்லிடுறேன்.." என்று சிரித்துக் கொண்டே போனை வைத்தவள், தாயிடம் ஏதோ கிசுகிசுக்க, சரஸ்வதியும் சரியென்பது போல் தலையசைத்தார்.

பின் “இந்த மூனு வருசமா எங்களை நிம்மதியில்லாமா ஆக்குனதுக்கு உன்னை இப்படியே விட எனக்கு மனசே இல்ல. அதனால நீ என்ன பன்ற, பணத்தை வாங்கின கையோட உம்புள்ளையைக் கூப்பிட்டுக்கிட்டு இந்த ஊரைவிட்டே போயிடுற, எந்தக் காலத்துலயும் எங்க கண் முன்னாடி நீயோ, உம்புள்ளையோ வந்துடக்கூடாது, அப்படின்னா மட்டும் சொல்லு, இந்தப் பணத்தை உங்கிட்ட கொடுக்குறேன், இல்லைன்னா கிளம்பிட்டே இரு. எங்களுக்கு எந்தக் கஷ்டமும் இல்ல..” என்ற சரஸ்வதியைக் கேள்வியாகப் பார்த்தான் வினோத்.

“உன் அண்ணிக்கு இவ மறுபடியும் உன் அண்ணன் வாழ்க்கையில வந்துடுவாளோன்னு பயம், அதான் இவளை எங்கையாச்சும் அனுப்ப சொல்லி கேட்குறா.. அவக் கேட்டு இல்லைன்னு நம்மாளால் சொல்ல முடியுமா..? இவ இப்போ சரினு சொல்லிட்டு நாளைக்கே புள்ளையோட வீட்டு வாசல்ல வந்து நிப்பா.? அதனால ஒரு பத்திரம் எழுதி, அதுல கையெழுத்து வாங்கி அனுப்பிடு.. அப்போதான் நமக்கு நிம்மதி. உன் அண்ணன் வாழ்க்கையும் நிம்மதியா போகும்…” என்று முடித்துவிட, மற்றவர்களுக்கும் அதுவே சரியெனப்பட, வேகவேகமாக பத்திரத்தில் எழுதி மஞ்சரியின் முன்னே வைத்தான்.

தலையை குனிந்தபடி அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த மஞ்சரிக்கு தான் ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறோம் என்றேத் தோன்றியது. குழந்தை மட்டும் இல்லையென்றால் இந்நேரம் உயிரை விட்டிருப்பாள். துரோகம்.. இதை ஆற்றுவதற்கு சாவைத் தவிர வேறெதுவும் மருந்தில்லை என்று அவளுக்குப் புரிந்தது.

இந்த நிமிடம் இந்த உயிர் தேவையில்லை என்றேத் தோன்றியது மஞ்சரிக்கு. வாழ்க்கையில் மொத்தமாகத் தோற்றுப்போன உணர்வு. இனி என்ன.? என்ற கேள்விக்கு பதிலில்லை. இங்கிருந்து மகளிடம் மொத்தமாகச் சென்றுவிடுவோமா.? இல்லை வழியில் எங்கேனும் இறந்து விடுவோமா.? என்று நொறுங்கிய மனதையும், வலித்த நெஞ்சையும் தடவியபடியே அமர்ந்திருந்தாள்.

சில நொடிகளில் “ம்மா.. ம்மா… தங்கம்மா.. செல்லம்மா..” என்ற மகளின் குரலில் அலைபேசி இசைக்க, அந்த சத்தத்தில் நிகழ்வுக்கு வந்தவள், மகளின் மூச்சுக்கு ஏங்கிய நிமிடங்கள் நினைவுக்கு வர, வேக வேகமாக அங்கிருந்த அத்தனைப் பத்திரத்திலும் கையெழுத்திட்டுவிட்டு, பணத்தையும் எடுத்துக் கொண்டு, அவர்களின் நக்கல் பேச்சையும், வெற்றிச் சிரிப்பையும் கண்டு கொள்ளாமல் வெளியேறி இருந்தாள்.

அவள் கிளம்பவும் வினோத் தன் அண்ணனுக்கு அழைத்து விசயத்தைச் சொல்ல, ஒரு நொடி அமைதியாக இருந்த ரவீந்திரன், அடுத்த நொடி “இட்ஸ் ஓக்கே, ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் பார்த்து முடிச்சிடு. நான் நாளைக்கு வந்து பார்க்குறேன்..” என்று வைத்துவிட, இப்போது வினோத் மற்ற மூவரையும் தீர்க்கமாகப் பார்த்தான்.

அவன் பார்வையை உணர்ந்த ரஞ்சனி “என்னடா.. அண்ணன் என்ன சொன்னாங்க.?” என,

“அவர் என்ன சொல்வார், எல்லாம் பார்த்து முடிச்சிடுன்னு சொன்னார். ஆனா எனக்கு அது தேவையில்லை. நாளைக்கு நானும் இப்படி ஒரு பொண்ணை லவ் பண்ணா, இதேதான் எனக்கும் செய்வீங்களா..?” எனக் கேள்வியைக் கேட்டு நிறுத்தினான்.

“உனக்கு ஏன்டா செய்யப் போறோம். நீ உனக்குப் பிடிச்ச பிள்ளையைப் பாரு, நானே கட்டி வைக்கிறேன்..” என சரஸ்வதி சொல்ல, நம்பாமல் கேள்வியாகப் பார்த்தான் வினோத்.

“பிச்சை மட்டும் தான் எடுக்கல, மத்தபடி எல்லாக் கஷ்டமும் பட்டுத்தான் உன் அண்ணனை டாக்டருக்குப் படிக்க வச்சோம். அவன் காதல்ன்னு வந்து நிக்கும் போதே எல்லாப் பிரச்சினையையும் அவனுக்கு சொல்லி புரிய வச்சோம். ஆனா எங்க கேட்டான். படிச்சு முடிச்சதும் போய் அவளைக் கல்யாணம் செய்துக்கிட்டான். அப்போ அந்தக் கடன், நம்ம வாழ்க்கை, லட்சியம், இவனை நம்பி இருந்த நம்ம வாழ்க்கை எல்லாம் கனவாவே போயிடனும்னு சொல்றீயா.? அதுக்கு நான் விடுவேன்னு நினைக்கிறீயா.? கண்டிப்பா முடியாது.”

“கடன்காரனுங்க ஒவ்வொருத்தனும் எவ்வளவு அசிங்கப்படுத்திருப்பாங்க, எவ்வளவு கேவலப்பட்டிருப்போம். எல்லாம் எப்போ சரியாகும். இவன் ஒரு நல்ல வசதியா ஒரு பொண்ணைக் கட்டி நமக்கு செய்றதுலதான். அதை விட நான் என்ன முட்டாளா.? அவ நல்லவத்தான். ஆனா நம்ம குடும்பத்துக்கு ஏத்தவளோ, உன் அண்ணன் தகுதிக்கு ஏத்தவளோ கிடையாது.”

“கொஞ்ச நாள் கஸ்டப்படுவா. அப்புறம் பிள்ளையைப் பார்த்துட்டு மிச்ச வாழ்க்கையை ஓட்டிடுவா.? இப்போ உன் அண்ணன் வாழ்க்கை எப்படி இருக்குன்னு மட்டும் பாரு. அவன் நிம்மதியா இருக்கான், நாம நினைச்ச வாழ்க்கை நமக்கு கிடைச்சிருக்கு. இதுதான் முக்கியம். இனி அவளைப்பத்தின எந்தப் பேச்சும் இந்த வீட்டுல இருக்கக்கூடாது. போ.. போய் உன் அண்ணன் சொன்ன மாதிரி எல்லாம் ரெடி செஞ்சிடு.. நீயும் குழம்பி, மத்தவங்களையும் குழப்பாத.” என்று பேச்சை முடித்துவிட்டு கூட்டத்தைக் கலைத்தார் சரஸ்வதி.

வினோத்தின் மனதில் ஒரு நிழலை உருவாக்கிச் சென்றதை அப்போது சரஸ்வதி அறியவில்லை.
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
557
122
43
Dindugal
இதெல்லாம் ஒரு குடும்பமா?
முதல் எபிலையே கொலை காண்டாக்குறாங்க..
 
  • Love
Reactions: Vathani

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
105
43
Theni
இப்படியெல்லாம் ஒரு மாமியார் இருக்கவேே தேவையில்லை

ச்சீ என்ன ஜென்மங்கள்
 
  • Love
Reactions: Vathani

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
165
111
43
Dindigul
இதெல்ல்லாம் ஒரு குடும்பமா? இந்த குடும்பத்துல இஉர்ந்து தப்பிச்சதே நல்லது மா மஞ்சரி
 
  • Love
Reactions: Vathani

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
8
18
Ullagaram
அ.. ஆ...
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 1)


ஓ மை காட்...! ஒட்டு மொத்த குடும்பமே இப்படி சுயநல பிசாசா இருக்காங்களே..?
ஒரு காதலியை பிரிக்கலாம், ஒரு மனைவியையும் பிரிக்கலாம்.. ஆனா, ஒரு தாயையும், பத்து வயசு மகளையும் பிரிச்சிருக்காங்களே... அதுவும் ஒரு அப்பாவோட தேவை எப்ப தேவையோ, அந்த வயசுல அவளை பெத்த அப்பன் கிட்ட இருந்து பிரிச்சிருக்காங்களே..
இந்த பாவத்தை எங்கப் போய்
கழூவப் போறாங்கன்னு தெரியலை...? அந்த ரவீந்திரன்
என்னடான்னா உட்கார்ந்த இடத்துல இருந்துக்கிட்டே லைஃப் டைம் செட்டில்மண்ட் குடுத்திட்டிருக்கான்... ஆனா, இவங்க எல்லாருக்கும் மேல இருக்கிற ஒருத்தன் கொடுக்கப்போற செட்டில்மெண்ட்ன்னு ஒண்ணு இருக்குதே... அது பாராப்டசம்
எல்லாம் பார்க்காதுன்னு..
இவங்களுக்கெல்லாம் எப்ப புரியப் போகுதோ...?


போகட்டும் இந்த வினோத் கொஞ்சம் நல்லவனோ...?


😯😯😯
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: Vathani

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
இப்படியெல்லாம் ஒரு மாமியார் இருக்கவேே தேவையில்லை

ச்சீ என்ன ஜென்மங்கள்
Nandri ma
 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
அ.. ஆ...
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 1)


ஓ மை காட்...! ஒட்டு மொத்த குடும்பமே இப்படி சுயநல பிசாசா இருக்காங்களே..?
ஒரு காதலியை பிரிக்கலாம், ஒரு மனைவியையும் பிரிக்கலாம்.. ஆனா, ஒரு தாயையும், பத்து வயசு மகளையும் பிரிச்சிருக்காங்களே... அதுவும் ஒரு அப்பாவோட தேவை எப்ப தேவையோ, அந்த வயசுல அவளை பெத்த அப்பன் கிட்ட இருந்து பிரிச்சிருக்காங்களே..
இந்த பாவத்தை எங்கப் போய்
கழூவப் போறாங்கன்னு தெரியலை...? அந்த ரவீந்திரன்
என்னடான்னா உட்கார்ந்த இடத்துல இருந்துக்கிட்டே லைஃப் டைம் செட்டில்மண்ட் குடுத்திட்டிருக்கான்... ஆனா, இவங்க எல்லாருக்கும் மேல இருக்கிற ஒருத்தன் கொடுக்கப்போற செட்டில்மெண்ட்ன்னு ஒண்ணு இருக்குதே... அது பாராப்டசம்
எல்லாம் பார்க்காதுன்னு..
இவங்களுக்கெல்லாம் எப்ப புரியப் போகுதோ...?


போகட்டும் இந்த வினோத் கொஞ்சம் நல்லவனோ...?


😯😯😯
CRVS (or) CRVS 2797
Thank you so much sis