நிழல் - 2
மனம் மொத்தமாய் கனத்திருக்க, சோர்ந்து, தளர்ந்து விழ இருந்த உடலைத் தட்டித் தடுமாறி ஒருவழி செய்து, வெளியில் வந்தாள் மஞ்சரி. வீதியில் இருந்த அத்தனை பேரும் அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர்.
‘போயும் போயும் இந்த வீட்டுக்கு மருமகளா அமைஞ்சியே, அவளேப் பேயி, அவ எப்படி உன்னை வாழ விடுவா, தெரிஞ்சே எப்படி போய் பாழுங்கிணத்துல விழுந்த’ அடுத்த வீட்டு ஆட்களின் ஆதங்கப் பேச்சுக்களும், பரிதாபப் பேச்சுக்களும் தனக்குள் விழுந்து கொதிப்பைக் கொடுத்தாலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல், அவை தன் காதில் விழுந்தாலும் விழாதவாறு காட்டிக்கொன்டு, அந்த வீட்டை கடைசியாக ஒருமுறைத் திரும்பிப் பார்த்தாள் மஞ்சரி.
திருமணம் முடிந்த இந்த பதினொறு வருடங்களில் இன்றுதான் இந்த வீட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறாள். அதுவே இன்று முதலும் கடைசியுமாகிப் போனது அவளது விதியின் விளையாட்டோ.
கால்கள் தன்பாட்டில் நடக்க ஆரம்பிக்க, “மஞ்சு.. மஞ்சு..” என ஓடிவந்து கட்டிக் கொண்டாள் உடன்பிறந்த தமக்கை கலைவாணி.
அதே ஊரில் தான் அவளுக்கும் திருமணம் முடிந்து குடும்பம் குழந்தைகள் என வசித்து வருகிறாள். "நான் அன்னைக்கே சொன்னேன் கேட்டியா, இப்ப நடுத்தெருவுல நாய் மாதிரி நிக்க வச்சிட்டானே, அந்த படுபாவி.." எனக் கதறிய தன் அக்காவின் முகத்தைக் கூடப் பார்க்க முடியவில்லை மஞ்சரியால்.
காதலித்த காலத்தில் அத்தனை அறிவுரைகள் கொடுத்திருப்பாள் கலை. அப்போது அதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கைப் போல உபயோகம் இல்லாமலே போனது. அன்றே கேட்டிருக்க, இன்று நிச்சயம் இந்த நிலை அவளுக்கு வந்திருக்காது.
காதலுக்கு கண் இல்லை என்பது மட்டுமல்ல, மூளையும் இல்லை என்றே சொல்லியிருக்க வேண்டும்.
காதல் என்று தன் பின்னே அலைந்தவனிடம், முதலில் மறுப்பு தெரிவித்தாலும், நாள் போக போக அவன் மீது வந்த ஈர்ப்பை என்ன செய்ய. மறைக்க முயன்று முடியாமல் பின் அவனிடமே காதல் சொல்லி.. ம்ச்.. அழகாக ஆரம்பித்த வாழ்க்கை அலங்கோலமாய் முடிந்தது யார் குற்றம். இதோ வாழ்க்கை முடிந்து விட்டதே. தவறே செய்யாமல் சிலுவை சுமக்க ஆரம்பித்து விட்டாளே!
‘என்னால் முடியாது, அவர் இல்லாமல் வாழவே முடியாது, நாங்கள் இல்லாமல் அவரால் இருக்கவே முடியாது, எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர் திரும்பி வருவார், விவாகாரத்தெல்லாம் கொடுக்க மாட்டேன்’ என எல்லோரிடமும் தைரியமாகச் சொல்லிவிட்டு, இன்று கோழை போல் அந்த விவாகரத்தை, அதுவும் பணத்திற்காகக் கொடுத்துவிட்டு வந்ததை எண்ணி எண்ணி அவள் உடலும் மனமும் கூசிப்போனது.
பணத்திற்காக.. போயும் போயும் பணத்திற்காக அந்த விவாகரத்தைக் கொடுத்ததைத்தான் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. பணத்தைப் பார்த்ததும் மயங்கிவிட்டாள் என்று எல்லோரும் நினைப்பார்கள் என்ற எண்ணமே அவளைக் கொன்றது.
ஆனால் குழந்தையின் உயிர். அது இந்தப் பணத்தில் தானே இருக்கிறது. எல்லாம் முடிந்தது, இந்த குழந்தையாவது அவளுக்கு வேண்டுமே என நினைவு வர சுற்றத்தை உணர்ந்தாள்.!
இதில் ‘அப்பா எங்கே’ எனக் கேட்கும் தன் மகளை எப்படி சமாதானம் செய்ய என உள்ளுக்குள் எண்ணங்கள் பரிதவிக்க, தன்னைக் கட்டியனைத்த சகோதரியை விலக்கிவிட்டு வேகமாக நடந்தாள் மஞ்சரி.
யாருடைய பரிதாபத்தையும், ஏளனத்தையும் கண்டுகொள்ளும் நிலையில் அவள் இல்லை. முதலில் குழந்தையைப் பார்க்க வேண்டும், அவளை சரிசெய்ய வேண்டும் என்பது மட்டுமே முதலாவதாகத் தோன்ற ஓடினாள். அதுதான் அந்த ஊரில் உள்ளவர்கள் அவளைக் கடைசியாகப் பார்த்தது.
இதோ மஞ்சரி அங்கிருந்து வந்து முழுதாக மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. குழந்தைக்கான ஆபரேஷன் மற்றும் அது தொடர்ந்த வேலைகள் என ஓடிக்கொண்டே இருந்தாள். முயன்று தன் வலியை மறைக்க கற்றுக் கொண்டாள். இதில் மஞ்சரியின் பெற்றோரும், சகோதரர்களும் வந்து விவாகரத்துக் கொடுத்ததற்காக, ‘பணத்திற்காக வாழ்க்கையைத் தொலைச்சிட்டு வந்து நிக்கிற, இனி புள்ளைய வச்சிக்கிட்டு என்ன பண்ணுவ, யார் பார்த்துப்பா’ என அவளைத் திட்டி, என் வீட்டிற்கு வந்து விடாதே' என மறைமுகமாக சுட்டிக் காட்டி சண்டையிட்டுச் சென்றிருந்தனர்.
‘நானும் என் குழந்தையும் யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது’ என மனதில் உருப் போட்டுக் கொண்டே மற்ற வேலைகளைப் பார்த்தாள்.
தனி மனுஷியாக மகளுக்காக அனைத்தையும் பார்த்தவள் சரஸ்வதியிடம் எழுதிக் கொடுத்தது போல, ஒரு நாள் யாருக்கும் சொல்லாமல் ஊரைவிட்டு கிளம்பியிருந்தாள்.
தன் தோழி விஜயாவின் மூலம் பாண்டிச்சேரி வந்தவள், தனக்கான வேலையையும் தேடிக்கொண்டு, தங்கள் இருவருக்கான உலகத்தை மிகவும் அழகாக சுருக்கிக் கொண்டாள்.
ஓட்டமான ஓட்டம். மகளுக்காக, அவளது படிப்பிற்காக, சொந்த முயற்சியில் இருக்க வேண்டியக் கட்டாயத்தில் ஓய்வே இன்றி ஓட ஆரம்பித்தாள்.
குழந்தையும் முதலில் அப்பாவிற்காக ஏங்கி ஏங்கி அழ, அதை மாற்ற மிகவும் பிரயத்தனப்பட்டாள் மஞ்சரி. எத்தனையோ சமாதானங்களுக்குப் பிறகும் கூட வருவார் என்ற அப்பா வரவே இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அந்த பிஞ்சு குழந்தை அவரைக் கேட்பதை, அழுவதை நிறுத்தி தாய்க்காக தன்னை மாற்றிக் கொண்டாள்.
நாட்கள் அதன் போக்கில் போக, யாரைப் பற்றியும் யோசிக்கவில்லை மஞ்சரி. தன் வாழ்க்கை அது முடிந்தது, இனி மகள் மட்டுமே உலகம். அவளது உலகம் அழகாய் மாறவேண்டும். அதற்காக உழைத்தாள், மகளின் படிப்பு அவளது முன்னேற்றம் அது மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாழ்க்கையை நகர்த்த ஆரம்பித்தாள்.
பாண்டிச்சேரியின் மிகப் புகழ்பெற்ற பள்ளியில் சாதாரண டைப்பிஸ்டாக வேலைக்குச் சேர்ந்து, பின் தன் வேலைத் திறமையிலும், படிப்புத் திறமையிலும் ஆசிரியராக பணிக்கு வந்தாள்.
அந்தப் பள்ளியில் உள்ள க்வார்டசிலேயே வீடும் கிடைக்க, அது ஒரு அப்பார்ட்மென்ட் டைப்பான வீடு. அங்கு பணிபுரியும் அனைவருமே அங்கேயேதான் தங்கியிருந்தனர். தன் மகளும் அதே பள்ளியில் படிக்க, அங்குள்ள அனைவருக்கும் செல்லப்பிள்ளை ஆகிப்போனாள் அகானா.
அதற்கு மஞ்சரியும் ஒரு காரணம். அவளுடைய அமைதியும், ஒழுக்கமும், உழைப்பும் யாரையும் ஒரு வார்த்தை தவறாகப் பேசவிட்டதில்லை. தன் செய்கை தன் குழந்தையை எந்த வகையிலும் பாதித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
காலங்கள் கடுகாய் சுருங்கியது. மாதங்கள் கடந்து வருடங்களும் சென்றது. அன்று காலை மஞ்சரி மிகவு பரபரப்பாக இருந்தாள்.
மகளை எழுப்பி குளிக்க அனுப்பியவள் வீட்டின் முன்னே வந்து நின்ற வண்டிகளை யோசனையாகப் பார்க்க, அதிலிருந்து இறங்கிய பள்ளி தலைமை ஆசிரியையும், மஞ்சரியின் தோழியுமான விஜயா “மஞ்சரி மிஸ், உங்களுக்கு ஒரு குட் நியூஸ். அகானாதான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்துருக்கா. மார்னிங்க் தான் எனக்கு நியூஸ் வந்தது. ப்ரெஸ் எல்லாம் இப்ப வரும். அதான் உங்களுக்கு முன்னாடியே சொல்லி ரெடியா இருக்கச் சொல்லலாம்னு வந்தேன். அகானா எங்க.?” என படபடவெனப் பேசியவரிடம் ஒரு சிறு புன்னகையைக் கொடுத்த மஞ்சரி “உட்காருங்க மேம், அம்மு கிளம்பிட்டு இருக்கா. நான் உங்களுக்கு காஃபி கொண்டு வரேன்..” என நகரப் பார்க்க,
“அட உக்காருங்க மிஸ்.. எவ்வளவு பெரிய நியூஸ் சொல்லிருக்கேன், சந்தோசப்படாம, வழக்கம்போல காஃபி கொண்டுவரேன்னு போறீங்களே, என்ன மிஸ் நீங்க.? பாருங்க வெளிய இப்பவே உள்ளூர் ப்ரெஸ் வந்துடுச்சு..” எனச் சந்தோசமாக சலிக்க, அதற்கும் ஒரு சிறு புன்னகைதான் மஞ்சரியிடம்.
அதற்குள் அகானாவும் ரெடியாகி வர, தனக்குப் பிடித்த விஜயா மிஸ்ஸைப் பார்த்ததும் வணக்கம் வைத்தவள், தாயின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் செய்தியை யூகித்து, தாயிடம் சென்றாள்.
ஆம்.! அந்தக் கல்வியாண்டின் பனிரெண்டாம் வகுப்பில் அனைத்துப் பாடப் பிரிவிலும் முதல் மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலாவதாக வந்திருந்தாள் அகானா.
மகள் அருகில் வரவும் அனைத்துக் கொண்ட மஞ்சரி “வாழ்த்துக்கள் அம்மு.. இன்னும் மேல மேல பல வெற்றிகளை உண்டாக்கி பெரிய அளவுல நீ வரனும்..” என வாழ்த்த, பெற்றவளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்து “எஸ் மா” என்றவள் அருகில் இருந்த விஜயாவின் காலில் விழுந்து வணங்கினாள்.
“ஹேய் அகி என்னம்மா நீ.. இதெல்லாம் எதுக்கு.” என்றவருக்கும் மகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை.
“இல்ல மிஸ்.. நீங்க இல்லன்னா இதெல்லாம் சாத்தியமே இல்ல. எங்களுக்கு நீங்க செய்ற இந்த உதவிக்கு, நாங்க திரும்பி என்ன செய்யப் போறோம்னே தெரில..” அகானவின் குரல் தழுதழுத்தது.
“ப்ச் அகி.. சின்னப் பொண்ணு மாதிரி பேசனும். உன் அம்மாக்கூட சேர்ந்து சேர்ந்து நீயும் ரொம்ப யோசிக்கிற, பெரிய மனுஷி போல பேசுற, நான் ஒன்னுமே செய்யல, உன் திறமை நீ வளர்ந்துட்ட அவ்வளவுதான் சரியா.? அதெல்லாம் விடுங்க. இது ஹேப்பி மொமன்ட், இப்போ நீ ஹேப்பியா இருக்கனும். அத விட்டுட்டு, இப்போ போய் ஏன் சென்டிமென்ட் சீன் ஓட்டிட்டு இருக்க, சீக்கிரம் சாப்பிடு, ப்ரஸ் முன்னாடி போயிட்டா அப்புறம் உனக்கு நேரமே இருக்காது” என்று அவள் தலையைத் தட்ட, தாய் மகள் இருவருக்கும் லேசாக புன்னகை பூத்தது. அதே சிரிப்புடன் மூவருக்கும் உணவை வைத்தாள் மஞ்சரி.
அடுத்து நடந்த நிமிடங்கள் அனைத்தும் விஜயா சொன்னது போல, அகானாவிற்கு நிற்க நேரமில்லாமல் ஓடியது. உள்ளூர் செய்தியில் இருந்து உலகச் செய்தி வரை அவளைப் பேட்டியெடுக்க வந்திருந்தனர். அனைத்திற்கும் அடக்கமான பதில்களைச் சொன்னவள் தன்னுடைய அடுத்த இலக்கை அழகாக எடுத்துரைத்தாள். அவள் பதிலைக் கேட்டவர்களுக்கு நிச்சயம் அவள் ஒருநாள் இன்று சொன்னதை செயலில் காட்டுவாள் என்ற எண்ணத்தை திண்ணமாக உருவாக்கியிருந்தது.
அன்றிரவு தாயும் மகளும் மட்டுமாக அந்த வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்தனர். அந்த அபார்ட்மென்டில் மூன்றாவது மாடியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன்புதான் தரை தளத்திற்கு வந்திருந்தனர். பூங்கா போல மிகவும் அழகான பூச்செடி வகைகளுடன் அழகாக, அந்த நிலா வெளிச்சத்தில் ரம்மியமாக இருந்தது அவர்களது முற்றம்.
“ம்மா.. தனியா இருந்துப்பியா உனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையே” என்ற மகளின் பேச்சில் சிரிப்பு வந்தது. அடுத்தடுத்த படிப்புகளுக்காக அவள் வெளியேற வேண்டிய கட்டாயம். பிறந்ததில் இருந்து பிரிவு என்ற ஒன்று ஒருநாள் கூட இருவரிடமும் இருந்ததில்ல. ஆனால் இனி வரும் பிரிவை தடுக்க முடியாது அல்லவா. அதனால் தான் மகளிடம் இந்த கேள்வி வந்துள்ளது என்று புரிந்தது மஞ்சரிக்கு.
“அம்மு.. எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல, நீ சந்தோசமா போயிட்டு வா.. உனக்கு என்னைப் பார்க்கனும் போல இருந்தா உடனே ஒரு போன் பண்ணு, நான் அங்க வந்து நிற்பேன். இல்ல ஆர்யன் வருவான். நீ எதையும் யோசிக்காம ஸ்டடீஸ மட்டும் ஃபோக்கஸ் பண்ணு. அம்மாவுக்கு அதுதான் வேனும் சரியா.” என்ற தாயின் மடியில் படுத்துக் கொண்டாள் அகானா.
இருவருக்குள்ளும் இப்போது எரிமலைப் போல கோபமும், வலியும், வேதனையும் கொழுந்து விட்டு எரிவதை இருவருமே அறிவர். ஆனால் அதை எங்கும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
அப்படி வெளிக்காட்டினால் இருவரின் மனமும் வருத்தப்படும், அதை இருவராலும் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் எதையும் வெளிப்படுத்துவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர்.
அதே நேரம் இங்கு ரவீந்திரன் அந்த வீட்டின் தொலைக்காட்சிப் பெட்டியை வெறித்துப் பார்த்திருந்தார். “அகானா ரவீந்திரன்” என்ற பெயரிலேயே மற்றவர்களுக்கும் விஷயம் புரிந்திருந்தது.
“இத்தனை வருஷம் எங்க போனா என்ன ஆனான்னு தெரியாம, செத்துதான் போய்ட்டாளோன்னு நினைச்சேன், பரவால்ல நல்லாத்தான் இருக்கா, புள்ளையையும் நல்லாத்தான் வளர்த்திருக்கா..” என்ற சரஸ்வதியிடம்,
“ம்மா உனக்கு என்ன பைத்தியமா.. போனவ போனவதான். புதுசா எல்லாம் உறவு இழுத்துட்டு இருக்காத, அப்புறம் உனக்கு போடுற சோத்த பாதியா குறைக்கப் போறா உன் மருமக..” எனத் தம்பியின் மனைவி நித்யாவை, ரஞ்சனி குறை சொல்ல, அவளோ அதை காதில் வாங்கியது போல் இல்லை. டிவியில் அகானாவின் பின்னே முகமே தெரியாமல் நின்றிருந்த மஞ்சரியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘எவ்வளவு அழகு இந்தக்கா, இந்த வாய் செத்த மனுசனை காதலிக்காம இருந்திருந்தா இன்னைக்கு எவ்வளவு சந்தோசமா வாழ்ந்திருக்கலாம்’ என வழக்கம்போலத் தோன்றிய உணர்வை, வழக்கம்போலவே மனதுக்குள் புதைத்துக் கொண்டு தன் இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
ரவீந்திரனின் பார்வை மகளை விட்டு அங்கு இங்கு என எங்கும் அசையவில்லை. அவரது கண்கள் சிமிட்டக் கூட மறந்திருந்தது. மகள்..! ஆம் அவரது மகள்! ஆசை ஆசையாக முழுதாக ஏழு வருடங்கள் அவர் மார்பிலும், தோளிலும் போட்டு வளர்த்த மகள்! அதன் பிறகு தனக்குப் பிடித்த பணப் பைத்தியத்தால் தூக்கி எரிந்துவிட்டு வந்த மகள்! அவள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தும் எட்டிக் கூட பார்க்கவில்லை.
அந்த பாவம் தான் இப்போது அவரைத் துரத்துகிறது போல. தன்னுடைய திமிரிலும், பணத்தாசையிலும் தொலைத்த வாழ்க்கையை நினைத்து அவர் ஏங்காத நாட்கள் இல்லை. காலம் கொடுத்த தண்டனையில், தன் தவறை உணர்ந்தவர் இத்தனை நாட்களாக யாருக்கும் தெரியாமல் தேடிக் கொண்டிருந்தார். தொலைந்து போன சொர்க்கம் திரும்ப கிடைத்ததில் அவர் கண்களில் சிறு மலர்ச்சி.
அவர்களை பார்க்க வேண்டும் சீக்கிரம் சீக்கிரம் என துடித்த மனதை சமன் செய்ய முடியாமல் தவித்து போனார்.
ஏழு ஆண்டுகள்.. முழுதாக ஏழு ஆண்டுகள் அவர்கள் அனுபவித்த கஷ்டங்களை நொடியில் மறந்து வா என்றால் வந்து விடுவார்களா?
ரவீந்திரன் மட்டுமே இதை முடிவு செய்திட முடியாதே.
யோசனயில் இருந்தவரிடம், "மாமா நீங்க இன்னும் தூங்கல, டைம் என்னன்னு பாருங்க" என்றபடியே அவருக்கு அருகில் வந்து அமர்ந்தான் ஆகன்.