• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. -09

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
அ.. ஆ.. - 09

பாண்டிச்சேரியில் இருந்து மஞ்சரி தேனிக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. விஜயாவும் அவர் கணவரும் மஞ்சரியோடே வந்து, அவரை விட்டுவிட்டு இரண்டு நாட்கள் இருந்து, அகானவிற்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டுத்தான் சென்றிருந்தனர்.

அவர்கள் சென்ற பிறகு வீட்டில் சும்மாவே இருப்பது மஞ்சரிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அததற்கு ஆட்கள் இருக்க, மஞ்சரிக்கு ஒரு வேலையும் இல்லை. தனியாக வெளியில் செல்லவும் பயம்.

பல வருடங்கள், கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் கழித்து இந்த ஊருக்கு வந்திருக்கிறாள். இன்னும் தன் வீட்டாட்களிடம் இதுபற்றி தெரிவிக்கவில்லை. அவர்களை எதிர்கொள்வதில் சிறு தயக்கம் வேறு இருந்தது.

அதோடு அந்த வீட்டு ஆட்களைப் பார்த்தால் என்ன செய்வது? எப்படி எதிர்கொள்வது என புதிதாக ஒரு பயமும் வந்துவிட்டது. இப்படியெல்லாம் நாம் யோசிக்கிறோம் என்று தெரிந்தாலே மகள் ஆடித் தீர்த்துவிடுவாள் எனத் தெரியும். அதனால் அதை வெளிக்காட்டாமல் அமைதியாகவே வலம் வந்தார்.

அவர்களை எப்படி எதிர்கொள்வது என மஞ்சரி யோசித்துக் கொண்டிருக்க, அவர்களை அடுத்து என்ன என யோசிக்கக்கூட விடாமல் மகள் விரட்டி விரட்டி அடிக்கிறாள் என தெரிந்தால் மஞ்சரி என்ன செய்வார்.

அன்று மாலை நேரமாகவே வீட்டுக்கு வந்திருந்தாள் அகானா. இரண்டு நாட்களாக அன்னையின் முகத்தில் வந்து போன உணர்வுகளை புரிந்து கொள்ளாதவளா? அதை இன்றே தீர்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு, “ம்மா… நாளைக்கு எனக்கு ஆஃப்டர்நூன் ஆஃபிஸ் போனா போதும். அதனால இன்னைக்கு வெளியே போறோம்..” என சந்தோசமாக கூற, அதுவரை இருந்த பயம், வருத்தம் எல்லாம் எங்கோ போய்விட, மகளின் மகிழ்ச்சி மட்டுமே அவர் முன் வந்து நின்றது.

“அப்பாடி.. இப்போவாச்சும் இந்த கலெக்டருக்கு அம்மா மேல பாசம் வந்து, மனசு இறங்கிச்சே. உன் நல்ல மனச கொண்டாட முதல்ல கோவிலுக்கு போகலாம். அப்புறமா நீ சொல்ற இடத்துக்கு போகலாம்..” என அவரும் மகளின் மகிழ்ச்சியில் பங்கெடுக்க,

“ஓ… சூப்பர்ம்மா.. சூப்பர்.. நான் போய் ரெடியாகிட்டு வந்துடுறேன்..” என சென்றவள், அடுத்த பத்து நிமிடத்தில் பிஸ்தா நிற சுடிதாரில் அழகுப் பதுமையாக வந்து நின்றாள்.

எப்போதும் உயர்த்தி போடும் போனி டெயில் இல்லாமல், கூந்தலை தளர பின்னியிருந்தாள். உடைக்கு ஏற்ப சிறு சிறு நகைகளையும் அணிந்திருக்க, தன் கண்ணே பட்டுவிடும்போல என நினைத்த உடனே, மஞ்சரி மகளுக்கு நெட்டி முறித்தார்.

இருவரும் கிளம்பி முதலில் வீரபாண்டி கோவிலுக்குத்தான் வந்தனர்.

கிளம்பும் போதே கண்ணனிடம் “அங்கிள் எங்களை விட்டுட்டு நீங்க வந்துடுங்க. நாளைக்கு நான் கால் பண்ண பிறகு வந்து பிக்கப் பண்ணிக்கோங்க..” என்று சொல்லிவிட்டாள்.

அதனால் முதலில் வீரபாண்டி கோவிலுக்கு போய்விட்டு, அடுத்து அகானா சொல்லும் இடத்திற்கு செல்ல வேண்டும் என கண்ணன் நினைத்துக்கொண்டார்.

கோவிலில் இறக்கிவிட்டு, அவர்களுக்கு முன்னே ஆட்களை ஒதுக்கி, பாதுகாப்பாக அழைத்து வந்தார். “அங்கிள் இதெல்லாம் ஏன் நீங்க செய்றீங்க. நான் பார்த்துக்க மாட்டேனா.?” என சலித்தபடியே அவருக்கு பின்னால் நடக்க, அந்த இடத்தில் மகளுக்கு கிடைக்கும் மரியாதையைப் பார்த்து பூரித்து போயிருந்தார் மஞ்சரி.

“அம்மா இன்னைக்கு கோவில்ல கூட்டம். இங்கேயே இவ்ளோ கூட்டம் இருக்குதுன்னா, கௌமாரியம்மன் கோவில்ல இதைவிட கூட்டமா இருக்கும். அதனால இங்க மட்டும் கும்பிட்டு கிளம்பலாம். இன்னொரு நாள் நிதானமா ரெண்டு கோவிலுக்கும் போகலாம்..” என அகானா சொல்ல, மகளை முறைத்தாலும், நிதர்சனம் புரிய சரியென்று தலையசைத்துவிட்டார்.

கலெக்டர் என்பதால் அந்த இடமே பரபரப்பாக, “எனக்காக எதையும் மாத்தாதீங்க. நான் வரிசைலையே வரேன்..” என அகானா கூறிவிட, அவளின் இந்த எளிமை மிகவும் பிடித்துப் போனது.

வரிசையில் வந்தாலும் அவள் வந்த பிறகு அவளுக்காக சிறப்பு பூஜைகள் எல்லாம் செய்துதான் விட்டார் பூசாரி. கடவுளை மனமுறுகி வேண்டிவிட்டு கண் திறந்தவர்கள் எதிரே அதிர்ச்சியில் நின்றிருந்த மனிதனை யாரோ ஒருவர் போல் நினைத்து, பிரசாதத்தை வாங்கிக்கொண்டு நகர்ந்துவிட, செருப்பால் அடித்தது போல் உணர்ந்தார் மனிதர்.

“அடடே டாக்டர் ஐயா வாங்கோ வாங்கோ..” என பூசாரி அவரை வரவேற்று ஏதோ பேசுவது அவர்கள் காதில் விழுந்தாலும் அமைதியாக நடந்தனர்.

அதே நேரம் அகனாவிடம் அங்குள்ள ஆற்றைப்பற்றி, நடைபாதை கடைகளைப் பற்றி என பொதுமக்கள் புகார் கொடுக்க, அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள் அகானா.

என்னதான் தனக்கு முன்னே நின்ற மனிதனை யாரோ போல் கடந்து வந்திருந்தாலும், அவருக்குள் பூத்த முதல் காதல் ரவீந்திரன்தானே. அவர் உண்மையாக காதலிக்கவில்லை என்றாலும், மஞ்சரி உயிராகத்தானே நேசித்தார். அந்த நேசம் பொய்யில்லையே.

ஒரு தப்பானவனின் மேல் வைத்த நேசம் அவர் இதயத்தை வாள் கொண்டு அறுத்தது. அதை மகள் முன் காட்டாமல் இருக்க மிகவும் பிரயத்தனப்பட்டார் மஞ்சரி.

அனைவருக்கும் பதில் சொல்லி அகானா காரில் ஏற, மகளைப் பார்த்து புன்னகைத்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தார் மஞ்சரி.

அகானாவுக்கு தாயின் மனநிலை புரிய, அவளும் அமைதியாகவே வந்தாள். மனதில் ஓடிய குழப்பங்களினால் எதையும் கவனிக்கவில்லை மஞ்சரி.

அடுத்த அரை மணி நேரத்தில் கார் ஓர் வீட்டின் முன் நிற்க, அப்போதுதான் சுற்றம் உணர்ந்து வெளியில் பார்த்தவர் அதிர்ந்து மகளைப் பார்த்தார்.

“ம்மா.. வாங்க.. இது உங்களுக்கு மட்டும் இல்ல, அவங்களுக்கும் சர்ப்ரைஸ். வாங்க வாங்க..” என மஞ்சரியை அழைக்க, “அம்மு” என்ற மஞ்சரி, மகளின் கையைப் பிடித்து அழுதே விட்டார்.

தன் வீட்டின் முன் வந்து நின்ற காரை யோசனையாக பார்த்தபடியே வெளியில் வந்தான் நவீன். அவனுக்கு பின்னே பதறியபடி வந்தார் கவிதா.

“யாருடா இது, போலிஸ் வண்டி மாதிரி தெரிது. உங்கப்பனைத் தேடியா வந்துருக்கு? எங்கடா உங்க அப்பா? எங்க போய் தொலைஞ்சான்.?” என மகனிடம் கத்திக்கொண்டிருந்தவர் காரில் இருந்து இறங்கிய மஞ்சரியைப் பார்த்ததும் நெஞ்சில் கைவைத்தபடி அப்படியே நின்றிருந்தார்.

“சித்தி..” என நவீன்தான் வேகமாக வந்து மஞ்சரியைக் கட்டிக்கொள்ள, “நவீ நவீ..” என்றவருக்கு அடுத்து பேச்சே வரவில்லை.

“என்ன பெரிம்மா.. உங்க வீடு தேடி வந்தா இப்படித்தான் வாசல்லயே நிக்க வச்சு வேடிக்க பார்ப்பீங்களா.?” என அகானா கவிதாவிடம் சென்று வம்பு வளர்க்க,

“ஆத்தா நான் பெத்த தங்கமே..” என அகானாவைக் கட்டிப்பிடித்து ஒப்பாரியே வைத்துவிட்டார் கவிதா.

ஏற்கனவே அரசு வாகனத்தைப் பார்த்து ஒவ்வொருவராக கூட்டம் சேர, கவிதாவின் ஒப்பாரியில் மொத்த வீதியும் அவர்கள் வீட்டு முன்புதான் வந்து நின்றது.

இதில் கவிதாவின் வீட்டி இருந்து இரண்டு வீடு தள்ளிதான் ரவீந்திரனின் வீடு, அந்த வீட்டில் அப்போது இருந்தது சரஸ்வதியும், நித்யாவும் அவள் குழந்தைகளும்தான்.

சரஸ்வதி பொதுவாக வெளியில் வருவதில்லை. அதனால் நித்யா வந்து எட்டி பார்க்க, இருட்டில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அப்போது நித்யாவின் பெரிய மகன் இப்போதுதான் பத்தாவதில் இருக்கிறான்.

அவன் “ம்மா நான் போய் பார்த்துட்டு வரேன்..” என ஓட, ‘வேண்டாம்’ என தடுக்கும் முன்னே அங்கு சென்றிருந்தான்.

அதற்குள் விவரம் தெரிந்தவர்கள் “அட நம்ம மஞ்சு புள்ளயா.? எங்க இருந்துச்சு, எப்படி இருக்கு? எத்தனை வருசம் ஆகிடுச்சு பார்த்து?” என விசாரிக்க ஆரம்பிக்க, அகனாவை கட்டி அழுதபடியே நின்றிருந்தார் கவிதா.

எத்தனை வருடங்கள் கழித்து பார்க்கிறார். எங்கு எப்படி இருக்கிறார்களோ என்று நினைத்து அவரும் அவர் கணவரும் வருந்தாதே நாளே இல்லையே.

“பெரிம்மா.. உள்ள போலாமா? எல்லாரும் நம்மளையே பார்க்குறாங்க.?” என அகானா கூறியதும்,

“போலாம் கண்ணு போலாம்.” என்ற கவிதா, நவீனிடம் “நவீனு நீ போய் காயத்ரி வீட்டுலயும், குமரன் வீட்டுலயும் சொல்லி உடனே கூப்பிட்டு வா.?” என்று அனுப்பியவர், தன்னிடமிருந்த அகானாவைப் பிரித்து மஞ்சரியோடு நிறுத்திவிட்டு “ஒரு நிமிசம்..” எனக்கூறி, நிமிடத்தில் இருவருக்கும் ஆரத்தி எடுத்துதான் வீட்டுக்குள் அழைத்தார்.

வீட்டுக்குள் வந்த இருவரையும் ஒன்றாக கட்டிக்கொண்டவர் மீண்டும் ஒருபாடு அழுது தீர்த்துதான் விட்டார்.

தெரிந்தவர்கள் அனைவரும் மஞ்சரியிடம் பேசி நலம் விசாரிக்க, தன் தாயையே பார்த்துக் கொண்டிருந்தாள் அகானா.

சாப்பிடும் நேரம் என்பதால் டீ காபி எதுவும் வைக்காமல், தண்ணீர் மட்டும் கொடுத்ட்துவிட்டு, “சாப்பிடுற நேரமாச்சுல்ல பாப்பா, அதனால காபி வைக்கல. கையோட சாப்பிட்டுக்கலாம்..” என நேரடியாக சமைக்கவே ஆரம்பித்துவிட்டார் கவிதா.

அப்போது கவிதா சொன்ன காயத்ரியும் குமரனும் குடும்பமாக வர, அவர்களைப் பார்த்ததும் சந்தோஷத்தில் கண்ணை விரித்தார் மஞ்சரி.

ஆம் வந்தது கவிதாவின் சின்ன மகன் குமரனின் குடும்பமும் கடைசி மகள் காயத்ரியின் குடும்பமும் தான்.

தனக்கு ஒரு குடும்பம் குழந்தை என்று இருப்பதை மறந்து இரு பிள்ளைகளும் ‘சித்தி சித்தி’ என மஞ்சரியின் இரு பக்கமும் அமர்ந்து கொள்ள, அகானா ஆச்சரியமாக பார்த்தாள்.

அப்போது நவீனின் பார்வை சித்தியை விட்டுவிட்டு அகானாவின் மேல் விழுந்தது.

அகானாவின் நிமிர்வும், அமர்ந்திருந்த விதமும், அவனுக்கு யோசனை கொடுக்க, அப்போதுதான் அவன் மூலையில் பல்பு எரிந்தது, அவர்கள் வந்தது அரசு வாகனம் என்று.

அப்போது வரைக்குமே அவள் கலெக்டர் என்றெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. அவளிடம் கேட்டு உறுதிப்படுத்துவதை விட, வெளியில் நிற்கும் மனிதரிடம் கேட்டுக் கொள்ளலாம் என நினைத்து வேகமாக கண்ணனிடம் சென்றான் நவீன்.

அவரிடம் சென்று அவனுக்குத் தேவையான தகவல்களை கேட்டுக் கொண்டவனுக்கு சித்தியின் மேலும், அகானாவின் மேலும் மரியாதை கூடிக் கொண்டே போனது.

தன் சித்தியின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் நினைத்து நினைத்து வியந்து போனான்.

அவன் யோசனையில் நின்று கொண்டிருக்கும்போதே, “தம்பி மேடம்கிட்ட நான் வெயிட் பண்ணனுமா? போகட்டுமான்னு கொஞ்சம் கேட்டு சொல்றீங்களா.?” என்ற கண்ணனுக்கு சரி என்று தலையாட்டியபடியே அகானாவிடம் வந்தான்.

அவளுக்கு எதிரில் வந்து நின்றவன் “பாப்பா அந்த சார் இருக்கட்டுமா? கிளம்பட்டுமானு கேக்குறாரு.?” என்றதும்,

“அவர் கிளம்பட்டும் அண்ணா, நான் கால் பண்ண பிறகு வந்தா போதும்னு மட்டும் சொல்லிடுங்க.? என்று முடிக்கும் முன்னே,

“இரு பாப்பா சாப்பிட்டு போகட்டும். நம்ம வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடாம போகக்கூடாது, தம்பி கொஞ்ச நேரம் இருக்க சொல்லு. சாப்பிட்டு போகட்டும்” என அகானாவிடம் ஆரம்பித்து, மகனிடம் முடித்தார் கவிதா.

சித்தியிடம் செல்லம் கொஞ்சி முடித்த காயத்ரி, அடுத்து அகானாவின் அருகில் வந்து அமர்ந்தாள், “எப்படி இருக்க பாப்பா? எங்களை எல்லாம் ஞாபகம் இருக்கா.?” என அகானாவின் கையைப் பிடித்துக்கொண்டு, கண்ணில் நீருடன் கேட்க, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஆம் என்பது போல் மட்டும் தலையை ஆட்டினாள்.

“சரி பரவாயில்லை விடு. இப்போ நீங்க வந்ததே போதும். இனி எங்கேயும் போகக்கூடாது. என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் நாங்க எல்லாம் இருக்கும்போது எதுக்கு பயப்படனும்.” என நவீன் கூற, குமரனும் ஆமாம் என்பது போல தலையசைத்தான்.

இங்கு வீட்டுக்குள் வந்த நித்தியாவின் மகன் ஹரிஷ் யோசனையாக தாயைப் பார்க்க,

“என்ன ஹரிஷ்? என்ன யோசிச்சிட்டு இருக்க?” என அவனின் தங்கை ஹரிணி கேட்க,

“அங்க நின்னுட்டு இருந்த கார் கலெக்டர் கார். அவங்க வீட்டுக்கு கலெக்டர்தான் வந்திருக்காங்க. அந்த நவீன் அண்ணாவோட சொந்தக்காரர்களாம்..” என மகன், மகளிடம் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டே வந்த நித்யா,

“என்ன சொல்ற ஹரிஷ் தெளிவா சொல்லு அவங்க வீட்டுக்கு எப்படி கலெக்டர் வருவாங்க, அவங்க அப்பாவை தேடி போலீஸ் தானே வரும்..” என யோசனையாக கேட்க,

“அம்மா நெஜமாத்தான் சொல்றேன் அந்த வீட்டுக்கு வந்து இருக்கிறது கலெக்டர் தான். அந்த கலெக்டருடைய பெயர் அகானா. அந்த நவீன் அண்ணாவோட சித்தி மகளாம்.. இப்போ அவங்க தேனி மாவட்ட கலெக்டர், இனி அடிக்கடி இவங்க வீட்டுக்கு வருவாங்களாம்..” என ஹரிஷ் தனக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டே இருக்க, நித்யாவோ கலெக்டர் பெயர் அகானா என்ற வார்த்தையிலேயே திக்பிரமை பிடித்தது போல் நின்றிருந்தார்.
 
  • Love
Reactions: Kalaivani shankar