• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. -12

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
அ .. ஆ.. - 12

“ஏன் அண்ணா? இங்க இருக்கிற பசங்கள பத்தி, எனக்கு நிறைய கம்பிளைன்ட்ஸ் வருதே! அப்படி என்ன நடக்குது இங்க? எல்லாம் மைனர் பசங்களா வேற இருக்காங்க. திடீர்னு ரெய்டு மாதிரி வரவும் வாய்ப்பு இருக்கு..” என்ற அகானாவை குமரன் அதிர்ந்து பார்த்தான்.

உடனே தன் அதிர்ச்சியை மறைத்து “நவீ என்னடா செஞ்சு வச்சிருக்க? உன்கிட்ட நான் எத்தனை தடவை சொன்னேன், இதெல்லாம் தேவையில்லாத வேலைன்னு கேட்டியா.?” என கத்த,

“நீ வாய மூடிட்டு இரு.. உனக்கு என்ன கஷ்டம்? ஆமாம்… நான்தான் பெட்டிஷன் போட்டேன், இப்ப என்ன அதுக்கு? ஸ்கூல்ல வந்து பாருடா, உனக்குத் தெரியும். படிக்கிற பசங்களுக்கு சாராயம், பீர், பிராந்தின்னு குடிக்க சொல்லி கொடுக்குறானுங்க. கஞ்சா போட சொல்லிக் கொடுக்குறாங்க. இதெல்லாம் தெரிஞ்சி எப்படி சும்மா இருக்க முடியும். கூப்பிட்டு கண்டிச்சு சொன்னா, ஆள வச்சு மெரட்டுறாங்க.. அதுக்காக நான் அமைதியா போகணுமா? சின்ன பசங்கடா.. அவர்களுடைய எதிர்காலம் என்ன ஆகிறது..?” என நவீனும் பதிலுக்கு கத்த,

“ஹே ஸ்டாப்.. ஸ்டாப்.. ஸ்டாப்… என்ன? எதுக்கு ரெண்டு பேரும் இப்ப சண்டை போட்டுட்டு இருக்கீங்க? முதல்ல என்ன நடந்ததுன்னு எனக்கு தெளிவா சொல்லுங்க?” என அகானா இருவரிடமும் விசாரணையை ஆரம்பித்தாள்.

“அம்மு! நீ என்னமோ எங்களை பார்க்க வந்த மாதிரி இல்ல, இந்த கேஸ் பத்தி விசாரிக்க வந்த மாதிரி இருக்கு..” என நவீன் யோசனையோடு கேட்க, குமரனும் அதே பார்வையோடு தான் பார்த்தான்.

“இங்க வர வரைக்கும் அப்படி ஒரு ஐடியா இல்ல அண்ணா… ஆனா இந்த சிச்சுவேஷனை யூஸ் பண்ணி, ஓரளவுக்கு இங்க என்ன நிலவரம்ன்னு தெரிந்து கொள்ளலாம் என்று தான் கேட்டேன். களத்துல இறங்கி விசாரிக்கிறது தப்பில்லையே. அதோட இது என்னோட வேலையும் கூட, பெட்டிஷன் போட்டது நீங்களா? நவீ அண்ணா பேர் இல்லையே? வேற பெயர்தான பார்த்தேன்..” என அகானா யோசிக்க, சற்றும் யோசிக்காமல் குமரன், நவீனை போட்டு புரட்டி விட்டான்.

திடீரென நடந்த நிகழ்வில் திணறி, சட்டென சுதாரித்து “என்ன? என்ன பண்றீங்க? ஸ்டாப் ஸ்டாப்..” என கத்தி, இருவரையும் ஒரு வழியாக பிரித்து விடுவதற்குள் மூச்சு வாங்கியது அகானாவிற்கு.

“என்ன அண்ணா இதெல்லாம்? சின்ன புள்ளைங்க மாதிரி சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க?” என அகானா இருவரையும் திட்டிவிட்டு நவீனை பார்க்க, அவனோ தங்கையின் முகத்தை பார்க்காமல் வேறு பக்கம் பார்த்தான்.

இப்போது அகானாவின் பார்வை குமரனிடம் நிலைக்க,

“பாப்பா… இவனை மாதிரியே இங்க ஒருத்தி இருக்கா பாப்பா.. இவனோட ஜெராக்ஸ்.. இவனைத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு மூணு வருஷமா சுத்திட்டு இருக்கா. அவங்க வீட்டுல நம்ம அப்பாவை மனசில வச்சுக்கிட்டு, பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அவ ரெண்டு தடவ நம்ம வீட்டுக்கே வந்துட்டா.. இவனும் எதுக்கும் ஒரு பதில் சொல்லல.. ஆனா சமூக சேவை செய்ய மட்டும் அந்த பிள்ளையை கூட்டு சேர்த்துக்க வேண்டியது.. இவன் என்ன செஞ்சாலும், அவளும் செய்வா. ரெண்டும் நம்மளை பைத்தியமாக்கும்..” என குமரன் டென்ஷனாக கத்த,

“வாவ் இன்ட்ரஸ்டிங்கான கேரக்டரா இருக்கே. ஆமா யாரு அந்த பொண்ணு? சாரி.. சாரி அண்ணி.. நான் அம்மாவை அவங்க வீட்ல பேச சொல்றேன்..” என அகானா உண்மையான மகிழ்வுடன் கேட்க,

“அதெல்லாம் வேண்டாம் பாப்பா..” என்ற நவீனைப் பார்த்து,

“நீ மூடிட்டு இரு.. இப்படியே எத்தனை நாள் சொல்லிட்டு இருப்ப? அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து முடிவு பண்ணிட்டாங்க.. வேணும்னா பாரு, நாளைக்கே மறுபடியும் வந்து வீட்டில் உட்காருவா..” என குமரனும் பதில் கூற,

“அடச்சே ரெண்டு பேரும் சும்மா நிறுத்துங்க.. முதல்ல அந்த இன்ட்ரஸ்டிங் கேரக்டர் யாருன்னு சொல்லுங்க..” என அகானா கத்த,

“மேடம் பேர் தாரணி, அவங்களுக்கு இன்னொரு பேரும் இருக்கு சிங்கப்பெண்.. என் பொண்டாட்டியோட அக்கா..” என்று குமரன் கூறியதும், இப்போது குமரனைப் போட்டு வெளுத்து விட்டான் நவீன்.

“ஆஹான் சிங்கப்பெண்ணா… சூப்பர்! ஆனா ஏன் வேண்டாம்னு சொல்றாங்க? நீங்களும் அந்த வீட்ல தான கல்யாணம் செஞ்சி இருக்கீங்க..” என அகானா குழப்பமாக கேட்க,

“அது.. அது பாப்பா..” என இப்போது திணறுவது குமரன் முறையாகிவிட்டது. இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என யோசிக்கும்போதே,

“இவ்வளவு நேரம் வாய்கிழிய பேசினீங்களே சார், இப்ப பேச வேண்டியது தானடா வெண்ணை.. என் வாழ்க்கையை கெடுத்ததே இவன்தான் பாப்பா. நானும் தாரணியும் லவ் பண்றோம்னு தெரியும். தெரிஞ்சே அவ தங்கச்சியை லவ் பண்ணி, வீட்டுக்கு தெரியாம ஓடிப்போய் கல்யாணம் பண்ணிட்டான் இந்த பரதேசி நாய்.”

“இதனால எவ்வளவு பிரச்சனை தெரியுமா? தாரணியோட அம்மா வீட்டுக்கு வந்து அவ்வளவு பிரச்சனை பண்ணாங்க. போலிஸ் கேஸ் கொடுத்து, எல்லாரையும் ஸ்டேசன்ல உட்கார வச்சாங்க. நம்ம குடும்பத்தை பத்தி கேவலமா பேசி, அசிங்கப்படுத்திட்டு போயிட்டாங்க. அதுவும் அப்பாவை வச்சு அவ்ளோ பேச்சு. அந்த வலியே இன்னும் அம்மாவுக்கு போகல. அதுக்குள்ள அதே வலியை நான் கொடுக்க முடியுமா.? விடு! நடக்கிறதை பார்ப்போம்..” என கோபமாக ஆரம்பித்து, வருத்தமாக முடிக்க, அடுத்து மூவரிடமும் எந்த பேச்சும் இல்லை.

அகானாவிற்குள் பல யோசனைகள். நவீனின் வருத்தம் அவளுக்கும் பெரும் சோகத்தைக் கொடுத்தது. காதலுக்காக போராடும் இந்த இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று உறுதியாக நினைத்தாள்.

அதோடு தாரணியின் வீட்டிலும், என்ன பிரச்சினை என தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தாள்.

“அண்ணா.. அவங்க வேண்டாம் சொல்ல பெரியப்பா மட்டும் காரணமில்லன்னு தோனுது. வேற எதுவும் காரணம் இருக்கா.?” என அகானா யோசனையாக கேட்க,

“ம்ம்ம்.. என்ன சொல்ல பாப்பா.. அப்பா நல்லா இருக்கும் போது நம்மக்கிட்ட நல்லமுறையில்தான் நடந்துக்கிட்டாங்க. அப்பாவுக்கு ஆக்சிடெண்ட் ஆகி, வேலை போன பிறகுதான் அவங்க சுயரூபமே தெரிஞ்சது, அவங்க மட்டுமில்ல, ஊர்ல இருக்குற முக்கால்வாசி பேரோட உண்மையான குணமே தெரிஞ்சது. அப்புறம் அவங்க, அந்த ரஞ்சனிக்கு சொந்தங்காரங்க. அந்த ரஞ்சனி என்ன சொன்னாலும் தாரணியோட அம்மா அப்படியே கேட்பாங்க. இப்போ கூட மாப்பிள்ளைப் பார்த்திருக்கிறது அந்த பொம்பளதான். ம்ச்..” என நவீன் சலிப்பாக சொல்ல,

“அந்த பொம்பளைக்கு நம்ம வீட்டு ஆளுங்களைப் பார்த்தாலே ஏதோ பிச்சைங்காரங்களைப் பார்த்த மாதிரி முகத்தைச் சுழிப்பா பாரு.. அந்த செகன்டே வெட்டி போடனும் போல கோபம் வரும்.. என்ன பண்றது? பணம் இருக்குற திமிர்ல ஆடுறாங்க. எல்லா ஆட்டமும் ஒரு நாள் முடிவுக்கு வரும் பாரு..” என குமரனும் ஆத்திரமாக கத்தினான்.

“உங்க கல்யாணத்துல அந்த ரஞ்சனி எந்த பிரச்சினையும் பண்ணலையா?” என குமரனைப் பார்த்து அகானா கேட்க,

பிரச்சினை பண்ணலையாவா.? கொஞ்ச நஞ்சம் இல்ல பாப்பா? எங்க மாமியாரை ஏத்திவிட்டு கம்ப்லைன்ட் பண்ண வச்சதே அதுதான். ராகினியை நான் ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டேன்னு போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தது. அதுமட்டுமில்லாம அம்மா அப்பான்னு எல்லாரையும் ஸ்டேஷன்ல உட்கார வச்சது. ராகினி உறுதியா இருந்ததுனாலத்தான் வெளிய வர முடிஞ்சது. தாரணியும் நவீனும்தான் அலைஞ்சாங்க. தெரிஞ்சவங்க மூலமாதான் ஹெல்ப் கிடைச்சு வெளிய வந்தோம். அதோட ராகினியை என் பொண்ணே இல்லன்னு சொல்லி தலை முழுகிட்டாங்க. ராகினியும் நீங்க எனக்கு வேண்டாம்னு வந்துட்டா.. இப்போ ரெண்டு வருசம் ஆகுது..” என குமரன் அன்றைய நாளை சொல்ல, அகானா அமைதியாகவே வந்தாள்.

அகானா அமைதியாகவும், நவீனும், குமரனும் கூட அமைதியாகிவிட்டனர்.

அதற்குள் அவர்கள் வரவேண்டிய சத்திரமும் வந்து விட நவீன் கூறியது போல் அங்கு தான் படுத்திருந்தார் அவளின் பெரியப்பா.

பார்த்ததுமே திகைத்துப் போனவள் “என்ன அண்ணா இப்படி.?” என கேட்டாள்.

ஆம்! பார்க்க அப்படியே பிச்சைக்காரரைப் போல் இருந்தார். குளித்தே பல மாதங்களாகியிருக்கும் போல.

“பல வருஷமா இப்படித்தான் இருக்கார் பாப்பா.. பிச்சைக்காரர் மாதிரி தான் இருப்பார்… குடிக்காக பிச்சையும் எடுப்பார்..” என வருத்தமாக கூறிய நவீன், லாவகமாக தூக்கி தன் தோளில் போட்டுக்கொள்ள, குமரனும் அவர் கீழே விழாமல் பிடித்துக் கொள்ள, மூவரும் வீட்டை நோக்கி நடந்தனர்.

மகன்கள் தூக்கி செல்வதைக் கூட உணர முடியாத அளவிற்கு, நிதானம் இல்லாத போதையில் இருந்தார் மனிதர்.

“அண்ணா ஏதாவது அடிக்ஷன் சென்டரில் விட்டிருக்கலாமே.?” என தன் கேள்வி அபத்தம் என தெரிந்தும் கேட்டாள் அகானா.

“எத்தனை சென்டர் பாப்பா? எங்க போனாலும் ரெண்டு நாள் தான். மூன்றாவது நாள் வீட்டுல இருப்பார். பணம் போனதுதான் மிச்சம். இவர் இப்படி செய்றதை பார்த்து, அம்மாவும் பணம் செலவழிக்க முடியாதுன்னு விட்டுட்டாங்க.” என குமரன் வருத்தமாக கூற, நவீன் அமைதியாகவே வந்தான்.

மூவரும் சென்று வெகு நேரமாகியும் வரவில்லையே என யோசனையோடு, ஜன்னலோரம் நின்று இருந்த ரவி, திரும்பி நால்வராக வருவதைப் பார்த்து எரிச்சல் ஆனார்.

“என் பொண்ணு இவனை பார்க்க போகணுமா? அவ ஸ்டேட்டஸ் என்ன? இவங்க ஸ்டேட்டஸ் என்ன?” என மெதுவாக வாய்க்குள் முனகிக் கொண்டவர், எப்படி அவர்களைத் தன்னிடம் கொண்டு வருவது என யோசிக்க ஆரம்பித்தார்.

தானாக தேடி செல்லும் தைரியம் இருக்கவில்லை அவருக்கு. ஆனால் பார்த்த நொடியில் இருந்து, என்ன நடந்தாலும் அவர்களை இனி விடக்கூடாது என முடிவெடுத்தார்.

அவருக்கு மகளின் இந்த அவதாரம் தெரியவில்லை. மஞ்சரியின் உணர்வுகளும் புரியவில்லை. இருவரைப் பற்றி தெரியும் போது அதை எப்படி தாங்குவாரோ?

சரியாக அதே நேரம் இந்த நிகழ்வை வினோத்தும், நித்யாவும் அவர்கள் அறையில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.

“எவ்ளோ அழகா இருக்கா பாருங்க? அப்படியே உங்க அக்கா ஜாடை தான். இந்த ஜாடையை பார்த்த பிறகு கூட, எப்படி எல்லாரும் அவளை ஒதுக்குனீங்க?” என்றவள், “அட இப்ப யாரும் பார்க்களைல, இனி பார்த்தா எப்படி நடந்துப்பாங்க.?” என நித்யா கேட்க,

“நாய் வாலை நிமிர்த்த முடியாது நித்தி.. அம்மாவும், அக்காவும் தன் தப்பை உணர்ந்து இறங்கி வர மாட்டாங்க. நீ தேவையில்லாம ஆசையை வளர்த்துக்காத..” என வினோத்தும் கூற,

“ம்ம்ம் எனக்கு என்னமோ மஞ்சரி அக்கா மாதிரி, அகானா அமைதியா போவான்னு தோணல.. கண்டிப்பா எல்லாரையும் ஒரு வழி செய்யாம விடமாட்டான்னு தான் தோணுது..” என யோசனையோடு கூறும் போதே, வினோத்திற்கு லேசாக பயம் வந்துவிட்டது.

அதற்கும் வாய்ப்பிருக்கிறது தானே! அவளது பதவியே போதுமே தங்களை பழிவாங்க!

என்ன செய்வாளோ? என வினோத் யோசிக்க, செய்துவிட்டு தான் இங்கு வந்திருக்கிறாள் என அவர்களுக்கு தெரியவில்லை.

“மஞ்சரி அக்காவைப் பார்த்ததும் உங்க அம்மா என்னவெல்லாம் பிரச்சினை செய்வாங்களோ தெரில. ஏற்கனவே மகியை காணாம தேடிட்டு இருக்கோம். அத்தை அமைதியா இருந்தா பரவாயில்ல..” என நித்யா கூறும் போதே,

“விடு! எப்படியும் சும்மா இருக்க மாட்டாங்க. போய் நல்லா மூக்கறு பட்டு வரட்டும். அண்ணியை போல அம்மு இல்லன்னு தான் எனக்கும் தோனுது. அதோட கவிதா அண்ணி பசங்க ரெண்டு பேரும் இருக்கானுங்க.. பார்த்துக்குவானுங்க. அப்புறம் எப்படியும் அம்முவுக்கு செய்க்கியூரிட்டி போலிசும் இருப்பாங்க. இவங்க போய் பிரச்சனை பண்ணா இவங்கதான் அசிங்கப்பட்டு வரனும்..” என வினோத் கூற,

“உங்க அக்காவுக்கு தெரிஞ்சா இன்னும் பிரச்சினைதான்..?” என ரஞ்சனியை நினைத்து பேச,

“ஆகனுக்கு அம்மு படிக்கும்போதே தெரியும் போல. நேத்து பேசும் போது மாமா சொன்னார். அண்ணாவும் ரெண்டு நாள் முன்னாடியே அம்முவை பார்த்திருக்கார். ரெண்டு பேரும் இதைப்பத்தி வாயைத் திறக்கலன்னா, ஏதோ காரணம் இருக்கும்னு நினைக்கிறேன். ரஞ்சி பிரச்சினை செஞ்சா மாமா சும்மா விடமாட்டார். அதுக்காகவே வாயை திறக்க மாட்டானு நினைக்கிறேன்.. சரி வா டைமாச்சு.. நாளைக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு..” என உள்ளே செல்ல, ஒரு பெருமூச்சோடு நித்யாவும் பின்னே சென்றாள்.

அடுத்த நாள் விடியலுக்காக அந்த வீட்டில் அனைவருமே காந்திருந்தனர்.