• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 16

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
அகானா- 16

“அத்தை! அவளை.. அந்த அகானாவை சும்மா விடக்கூடாது.. எவ்வளவு திமிரா உங்க முன்னாடியே பேசுறா பாத்தீங்களா? அன்னைக்கே அண்ணி சொன்ன மாதிரி இவளை தூக்கிட்டு வந்து நாமளே வளர்த்திருக்கணும்.. வினோத் பேச்சை கேட்டது தப்பா போச்சு.. இப்ப பாருங்க நம்மளை அசிங்கப்படுத்திட்டு போயிட்டா.. இதுல உங்க மகன் வேற, அதுங்களை பார்த்து அழுதாருன்னு சொல்றா.. என்ன அத்தை நடக்குது? என்ன அவளையும், அவ பொண்ணையும் பார்த்ததும் உங்க பையனுக்கு பழசு எல்லாம் ஞாபகம் வருதோ? அப்படி வந்தா, இதையும் ஞாபகம் வச்சுக்க சொல்லுங்க.. என் பணத்தால மட்டும்தான் இவ்வளவு வசதி, வாய்ப்பு.. சமூகத்தில் பெரிய அந்தஸ்து.. இன்னைக்கு பேர் சொல்ற அளவுக்கு ஒரு டாக்டர்… இது எல்லாம் என்னோட பணத்தால மட்டும்தான்..” என மைதிலி ஆங்காரமாக கத்திக் கொண்டிருக்க, சரஸ்வதியும் ரஞ்சனியும் அவளை எரிச்சலாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அகானா பேசி சென்றதில் இருந்து, இதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதோடு ரவியிடமும் ஒரு சண்டை போட்டு முடித்தாகிவிட்டது. ரஞ்சனியையும் அவள் வீட்டில் இருந்து வர வைத்தாகிவிட்டது. ஆனாலும் மைதிலியின் கோபமும் ஆத்திரமும் குறைந்தபாடில்லை.

“அண்ணி கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. அவ இங்க சும்மா வரல.. கலெக்டரா வந்து இருக்கா.. பழைய மாதிரி சுலபமா அவ மேல கை வச்சுட முடியாது.. அதோட நம்ம வீட்லயும் ,இப்ப ஏகப்பட்ட பிரச்சனை ஓடிட்டு இருக்கு.. அங்க நித்யாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.. மகி பத்தியும் ஒன்னும் தெரியல.. இந்த நேரம் அமைதியா இருக்கிறது தான் நல்லது..” என தன் கோபத்தை காட்டாமல் பல்லைக் கடித்து, மிகவும் பொறுமையாகவே பேசினாள் ரஞ்சனி.

“ஓ… இதெல்லாம் உங்களுக்கு பிரச்சனையா தெரியலையா? அதுங்க மறுபடியும் இந்த வீட்டில வந்து ஒட்டிக்கிட்டாலும், உங்களுக்கு சந்தோசம் தான் போல.. அதனாலதான் இப்படி பேசுறீங்களோ? என்ன நினைச்சுட்டு இதெல்லாம் பேசுறீங்க? இனி இவளைக் கேட்க யார் இருக்கா, அந்த மஞ்சரி மாதிரி என்னையும் துரத்தி விட்டுட்டு, அதுங்களை இங்க கொண்டு வந்துடலாம்னு நினைக்கிறீங்களா? அப்படி ஒரு நினைப்பு இருந்தா, அதை உடனே அழிச்சிடுங்க.. மொத்த குடும்பத்தையும் நடுத்தெருவில் நிறுத்திடுவேன்.. உங்க குடும்பத்தோட மொத்த குடுமியும் என்கிட்ட இருக்குங்கிறதை மறந்துடாதீங்க…” என மேலும் மேலும் பேச, ரஞ்சனிக்கும் ஆத்திரம் வந்துவிட்டது.

“என்ன நீங்க பேசிட்டே போறீங்க… உங்க பணம்தான் எல்லாத்துக்கும் காரணம்… இல்லன்னு சொல்லல… ஆனா அதுக்குள்ள நாங்க எவ்வளவு வேலை பார்த்திருக்கோம், என்பதை மறந்துடாதீங்க.. அவனை செண்டிமெண்டலா பிளாக் மெயில் பண்ணி, உயிருக்கு உயிரா இருக்கிறவளை பிரிச்சு கூட்டிட்டு வர்றது என்ன அவ்வளவு ஈஸியா? அதை செஞ்சிருக்கோம். அவங்க நினைப்பே வராத அளவுக்கு, அவனை மாத்தி தான் உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சிருக்கோம்.. என்ன இதெல்லாம் மறந்துட்டீங்களா? இத்தனை வருஷம் கழிச்சு அவங்களை பார்த்து அழறானா, நீங்க எப்படி அவன்கூட குடும்பம் நடத்தி இருக்கீங்கன்னு, கொஞ்சம் யோசிங்க..” என ரஞ்சனியும் கத்த,

“ரஞ்சினி கொஞ்சம் சும்மா இரு..” என அவர் தந்தை சமாதானம் செய்ய,

“என்னப்பா? என்ன ஏன் சமாதானம் செய்யறீங்க? நானே என் பொண்ணை காணோம்னு உயிரை கையில பிடிச்சுட்டு இருக்கேன்.. அதை யோசிக்காமல் என்ன பேச்சு பேசுறாங்க பாருங்க.. நாலு நாள் ஆச்சு ப்பா அவளைப் பத்தி ஒரு தகவலும் இல்ல.. எங்க? எப்படி இருக்காளோ? என் மனசு படுற பாடு வேதனை இவங்களுக்கு புரியவே இல்ல.. பொம்பள புள்ள ப்பா! இன்னைக்கு உலகத்துல பொம்பள புள்ளைங்களுக்கு என்ன என்ன அசம்பாவிதம் நடக்குது.. அதெல்லாம் யோசிக்கும்போது என் நெஞ்சே வெடிச்சிடும் போல வலிக்குது ப்பா.. என் பொண்ணு நல்லபடியா வந்துடனும். அது மட்டும் தான் எனக்கு வேணும்..” என முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாளள் ரஞ்சனி.

“அப்போ அடுத்தவங்க பொண்ணு எப்படி போனாலும் பரவாயில்லை.. உன் பொண்ணு உனக்கு பத்திரமா வந்துரனும், அப்படித்தானே.!” என்ற கேள்வியோடு மனைவியை கடும் கோபத்துடன் பார்த்தார் சங்கர்.

“மாப்பிள்ளை அவளை விடுங்க.. அவளே கஷ்டத்தில் இருக்கா? நீங்களும் அவளை கஷ்டப்படுத்தாதீங்க..?” என்ற சரஸ்வதியை பார்த்து,

“போதும் நிறுத்துங்க… நீங்க அவளுக்கு செஞ்சது எல்லாம் போதும்.. இதோ இவங்க சொன்னாங்களே! எல்லாம் அவங்க பணம்ன்னு, அப்படியா? எல்லாம் அவங்க பணமா? அப்போ நான் வெட்டிப் பயலா? வெட்டி பயலுக்கு தான் உங்க பொண்ண கட்டி வச்சீங்களா? பதில் சொல்லுங்க? என் பொண்ணுக்கு, என் பையனுக்கு, என் குடும்பத்துக்கு எல்லாம் நான் செய்றேன், நான் பாக்குறேன்.. இந்த பொண்ணு பேச என்ன இருக்கு? இதுக்கு தான் இவளை கூடவே வச்சு சுத்துனீங்களா?” என கோபமாக கேட்க,

“மாப்பிள்ளை… மாப்பிள்ளை மைதிலி ஏதோ கோவத்துல, புரியாம பேசுது.. நீங்க அதையெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க.. விடுங்க.. விடுங்க..” என ரஞ்சனியின் அப்பா விஸ்வநாதன் பேச,

“யாரும் எதுவும் பேச வேண்டாம்..” என அப்படியே அந்த பேச்சை நிறுத்திய சங்கர், உன்னை இங்க வரக்கூடாதுன்னு சொல்லியும் வந்திருக்க.. என் பேச்சுக்கு என்ன மரியாதை கொடுக்கிற? நீயே மதிக்கலனா இந்த பொண்ணு எப்படி மதிப்பா? சொல்லு! பேரன் பேத்தி எடுக்கற வயசுல, வாழ வெட்டியா வந்து அம்மா வீட்டுல உட்காரனுமா.?” என மனைவிய பார்த்து நிதானமாக கேட்டார்.

“அது இல்லைங்க… அம்மா தான், இங்க பிரச்சனைன்னு சொன்னாங்க..” என ரஞ்சனியும் இழுக்க

“ம்ம்ம் பிரச்சனை…. பிரச்சனையாகி ஸ்டேஷன் வர போயிட்டு வந்த பொண்ணை பற்றி விசாரிக்காமல், எப்பவோ முடிஞ்சு போனதை பற்றி பேசிட்டு இருக்க… என்ன பொம்பள நீ? அவ ஸ்டேஷன் போனது உன் பையனுக்காக? அதை மறந்துட்டியா?” என கோபமாக கேட்டார்.

“அப்பா விடுங்கப்பா! அவங்களுக்கு அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல! அவங்க பிரச்சனை அகானா தான்..” என ஆகன் வருத்தமாக கூறி, “அப்பா நான் லாயர் ஆபீஸ் போயிட்டு, அப்படியே ஹாஸ்பிடல் போயிடுறேன்.. நீங்க வினோ மாமாவை பார்த்துக்கோங்க.. ரொம்ப அப்செட் ஆகிட்டார்..” என்றவன் யாரையும் பார்க்காமல் கிளம்பி விட, வினோத்தும் அமைதியாகவே அவர்களை கடந்து அறைக்குள் போய் விட்டான்.

“என்ன ஜென்மங்களோ.?” என சத்தமாக முனங்கிய சங்கர் “இனி என்னை கேட்காமல், இந்த வீட்டுக்கு வந்த அப்படியே இங்கே இருந்துக்கோ.. இனி நானும் என் பிள்ளைகளும் உனக்கு இல்ல..” என சங்கர் வெளியில் நடக்க, அதே நேரம் வினோத்தும் ஒரு பையோடு வெளியில் வந்தான்.

“டேய் வினோ.. வினோ என்னடா? எங்க போற? என்னடா இதெல்லாம்.?” என பதற்றமாக சரஸ்வதி கேட்க,

“என்ன கேள்வி இது? என் பொண்டாட்டி புள்ளைங்க எங்க இருக்காங்களோ, அங்க தான் நான் போறேன். முன்னாடியே போயிருக்கணும் பெத்தவங்களை விட்டுட்டு போகக்கூடாது என்று நினைத்தேன்.. ஆனா போயிருக்கணும்..” என்றான் மைதிலியை பார்த்து.

“டேய் நீயும் புதுசா எதுவும் ஆரம்பிக்காத..” என்ற சரஸ்வதி சொல்லி முடிக்கும் முன்னே, தன் கையில் இருந்த பேகை தூக்கி எறிந்தான் வினோத். அவன் செயலில் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

“போதும் இதுக்கு மேல எதுவும் பேசக்கூடாது… என் பொண்டாட்டியை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போறாங்க.. என் இரண்டு பிள்ளைகளும் அரண்டு போய் நிக்கிறாங்க.. அவங்களை கூப்பிட்டு சமாதானம் செய்வோம்னு கொஞ்சம் கூட யோசிக்கல.. இவங்க பிரச்சனை உங்களுக்கு பெருசா போச்சுல்ல.. அவ ஸ்டேஷன் போனது உன் மகனுக்காகவும், உன் பேரனுக்காகவும் தான். அவ பேருல பார்மசி வைக்க வேண்டாம்னு சொல்லியும் கேட்காம ஆரம்பிச்சு, இப்போ எவ்வளவு பெரிய அசிங்கம் எங்களுக்கு? இனி எப்படி வெளியே போய் வருவா? அந்த சங்கடம் உங்களுக்கு கொஞ்சம் கூட இல்ல. என் குடும்பத்தை பற்றி யோசிக்காத, கவலைப்படாத உங்க வீட்ல எனக்கு என்ன வேலை? நான் ஏன் இங்க இருக்கனும்? எனக்கு என்னோட குடும்பம் முக்கியம்.. என் புள்ளைங்க நல்ல சூழல்ல வளரனும்னு நினைக்கிறேன்.. அது இங்க கிடைக்காது.. அதனால இனி நாங்க இங்கே வரமாட்டோம்..” என வெறி கொண்டவன் போல கத்த, அத்தனை பேரும் என்ன பேசுவது என தெரியாமல், அதிர்ச்சியில் நின்று இருந்தனர்.

“விடு வினோ…. எல்லாம் பட்டா தான் திருந்துவாங்க.. இவங்களுக்காக நீ ஏன் டென்ஷன் ஆகுற.. நீ போய் நித்யாவை பாரு.. அவளை தனியா விடாதே! இப்போ உன்னோட சப்போர்ட் ரொம்ப முக்கியம். உன் மாமியார் வேற ஏதோ சொல்லிக்கிட்டே இருக்காங்க.. அவங்களையும் சமாதானம் செய்..” என வினோத் சமாதானம் செய்தார் சங்கர்.

“ஆமாம் மாமா.. நான் கிளம்புறேன்! நாளைக்கு ஆபீஸ் வந்து உங்களைப் பார்க்கிறேன்..” என்றவன் எதுவும் பேசாமல் யாரையும் பார்க்காமல் கிளம்பி விட்டான்.

“டேய் வினோ.. வினோ..” என சரஸ்வதியும், விஸ்வநாதனும் தடுக்க தடுக்கவே போய் விட்டான் வினோத்.

“என்ன உனக்கு வேற தனியா சொல்லணுமா? சீக்கிரம் கிளம்பு உன்னை விட்டுட்டு, நான் வெளியே போகணும்..” என்றதும், ரஞ்சனியும் அழுதுகொண்டே வேகமாக கிளம்பினார்.

அப்போது சரஸ்வதியையும், மைதிலியையும் கூர்மையாக பார்த்த சங்கர், “பழைய மாதிரி போய் மஞ்சரியை விரட்டலாம்னு, எல்லாம் கனவுல கூட நினைச்சுடாதீங்க. அப்புறம் அக்கானா என்ன செய்வான்னு தெரியாது? பார்த்து இருந்துக்கோங்க..” என்ற சங்கர் மனைவிக்கு பின்னே கிளம்பி விட்டார்.

“ஒரு போர்க்களமே நடந்து முடிந்தது போல் இருந்தது அந்த வீடு.

போலீஸ் ஸ்டேஷனில் என்ன நடந்தது எனக் கூட கேட்கவில்லை.. நித்யா ஏன் வரவில்லை.. ரவியும் வரவில்லை… இவர்கள் பேசுவதை பார்த்தால், பெரிய பிரச்சனையோ? அய்யோ தேவையில்லாமல் இவர்களை பகைத்துவிட்டோமா என மைதிலி யோசிக்க,

“இப்போ உனக்கு நிம்மதியா? சந்தோசமா? உனக்கு நிம்மதியாத்தான் இருக்கும்.. உன் வாழ்க்கைக்காக என் பிள்ளைகளை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டியே? ச்சே என்ன பொம்பள நீ? பொம்பளைன்னா கொஞ்சமாவது அடக்கம் வேணும்.. பஜாரி மாதிரி கத்தினா? நான்தான் சொல்றேன்ல பொறுமையா இரு பேசலாம், பேசலாம்னு.. கேட்டியா..?” என சரஸ்வதி ஆங்காரமாக கத்த,

“என்ன? என்ன பேசுறீங்க? அப்போ நான் எதுவும் பேச கூடாதா.?” என மைதிலி பதிலுக்கு கேட்க,

“நீ கேட்க கூடாதுன்னு நான் எப்ப சொன்னேன்? ஆனா எப்ப கேக்கணும்னு ஒரு நேரம் இருக்கு.. வீட்ல என்ன பிரச்சனை நடந்திருக்கு.. நீ எந்த பிரச்சனையை இழுத்து விட்டுருக்க.. நித்யாவும் இந்த வீட்டுக்கு வாழ வந்தவதான்.. அவளுக்கு ஒரு பிரச்சனைனா நாங்க போகணும் தான்.. ஆனா உன் பேச்சைக் கேட்டு அவளை விட்டுட்டோம். இனி அவ எப்ப வருவாளோ தெரியாது? வருவாளா என்று கூட தெரியாது.? எப்பவும் உன்னையே தூக்கி சுமக்க முடியாது..” என்ற சரஸ்வதி மைதிலியிடம் கத்திவிட்டு அறைக்கு போய்விட, மாமியாரின் இந்த கடுமையான பேச்சில் அதிர்ந்து தான் போய்விட்டாள் மைதிலி.

இதுவரை ஒரு வார்த்தை கோபமாக கூட பேசியிராத மாமியார் திட்டிவிட்டு சென்றதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதெல்லாம் அந்த மஞ்சரியால்தானே..

போனவள் அப்படியே போக வேண்டியதுதானே! மறுபடியும் வந்து இங்கு வந்தாள். இந்த பிரச்சினையை அப்படியே விடமுடியாது. இவள் இங்கேயே இருந்தால், வீட்டில் யாரும் தன்னை மதிக்க மாட்டார்கள். தனக்கு சப்போர்ட் செய்த சரஸ்வதியும், ரஞ்சனியும் கூட நடந்த பிரச்சினைக்குப் பிறகு, இனி தன்னுடந் இருப்பார்களா தெரியாது.. இனி நானேதான் இந்த பிரச்சினையை பார்த்துக் கொள்ள வேண்டும்.

என் வாழ்க்கையை காப்பாற்ற நான் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவேன். அந்த மஞ்சரியையும், அவள் மகளையையும் இந்த ஊரை விட்டு அனுப்பாமல் நான் ஓய மாட்டேன்..’ என மனதுக்குள் சபதமெடுத்துக் கொண்டாள் மைதிலி..

அகானாவைப் பற்றி மைதிலிக்கு இன்னும் தெரியவில்லை. அவளது பழிவாங்கல் திட்டம் தெரியும் போது, இதே அளவிற்கு யோசிப்பாளா.?
 
  • Love
Reactions: Sailajaa sundhar