• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 20

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
அகானா - 20

மீண்டும் ரஞ்சனியை மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். அழுது அழுது மயக்கம் அடைந்திருந்தார்.

‘மகியின் நிலை தெரியாமல் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது’ என கணவனிடமும் மனகனிடமும் அத்தனை சண்டை.

‘என் பொண்ணு காணாம போய் நாலு நாள் ஆச்சு, இதுவரை நீங்க ரெண்டு பேரும் என்ன செஞ்சீங்க? அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும், அப்புறம் நானும் உயிரோடு இருக்க மாட்டேன்.’ என மகியை நினைத்து நினைத்து தன் உடலை வருத்திக் கொண்டார் ரஞ்சனி.

ரஞ்சனியை பார்த்துக் கொள்ள இந்த முறை சரஸ்வதி மட்டுமே மருத்துவமனைக்கு வந்தார். மைதிலியிடம் சொல்லவுமில்லை அழைக்கவுமில்லை.

ஸ்ட்ரெஸ் ஆகக்கூடாது.. தூங்க வேண்டும் என்று அதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டு, தூங்க வைக்கப்பட்டிருந்தார் ரஞ்சனி. மகளின் நிலையை பார்த்து சரஸ்வதிக்கு நெஞ்சில் நீர் வற்றி போனது. வயது பெண் காணவில்லை என்றால் எந்த தாயால் நிம்மதியாக இருக்க முடியும். சரஸ்வதிக்கும் அந்த கவலை இல்லாமல் இல்லை. பேரன் எப்படியும் கண்டுபிடித்துவிடுவான் என்று நம்பியிருந்தார்.

இப்போது ரஞ்சனி கூறிய செய்தியில் அவரின் நம்பிக்கை ஆட்டம் காண ஆரம்பித்தது. மகளுக்கு தன்னால் முடிந்த வரை நம்பிக்கை கொடுத்தார்.

இந்த நேரத்தில் மைதிலியும் வீட்டில் பிரச்சினை செய்வது வேறு அவரை எரிச்சல்படுத்தியது. இன்னும் நித்யாவையும் போய் பார்க்கவில்லை. சம்மந்தி வீட்டில் என்ன பேசுவார்களோ என்று அது வேறு ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தது.

தாயை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு. நேராக வினோத்திடம் வந்தான் ஆகன். நிஜமாகவே அவனுக்கு ஓய்வே இல்லை இந்த நான்கு நாட்களாக. ஒரு மணி நேரத்தில் மகிழினியை கண்டுபிடித்திட அவனால் முடியும். அகானா தான் செய்திருப்பாள் என்று தெரிந்த பிறகு, அவளுக்காக பொறுமை காத்தான். ஆனால் இன்று அவள் செய்த செயலை ஏற்கவோ மன்னிக்கவோ முடியவில்லை.

இது வெளியில் தெரிந்தால் மகிழினியின் எதிர்காலம் என்ன ஆகும் என யோசிக்கவே பயமாக இருந்தது.

அதோடு மகிழினிக்கு அகானாவை பற்றி தெரியாது. விளையாட்டுத்தனம் அதிகம். எதையும் சீரியஸ் ஆக பார்க்க தெரியாது. பொறுமையும் கிடையாது. விளையாட்டாக ஒரு செயலை செய்து, அது விபரீதமாக முடிந்து விடக்கூடாது என மிகவும் பயந்து போனான்.

“என்ன கண்ணா சொல்ற, அம்முவா.?” என வினோத்தும் அதிர்ச்சியாக கேட்க,

“தெரியல மாமா… பட் எனக்கு அவ மேல தான் டவுட்..” என்றவன் “மாமா நீங்களும் அப்பாவும் மகியை காணோம்னு எஸ்பி ஆபிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுங்க..” என்றதும்

“வேண்டாம் கண்ணா… அம்முவோட கேரியரில் பிரச்சனை வரும்.. அவளோட எஃபோர்ட்ஸ் எல்லாம் வீணா போய்டும். அவளும் இப்பதான் போஸ்டிங்க்கு வந்திருக்கா..” என்றார் வினோத்.

“எஸ் மாமா.. அதுக்காக தான் சொல்றேன்.. ப்ராப்பரா நாம கம்ப்ளைன்ட் பண்ணா, அடுத்து அவளே மகியை கொண்டு வந்து விட்டுடுவா… மகி அம்முதான் வச்சிருக்கான்னு தெரிஞ்சா மஞ்சு அத்தையும் அவளை சும்மா விட மாட்டாங்க. அது அம்முவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அதனால நீங்க அப்பாவை கூப்பிட்டு போங்க..” என்றான் தீர்வாக.

“சரி கண்ணா நான் மாமாகிட்ட பேசுறேன்.. அவர் என்ன சொல்றார்ன்னு கேட்டுக்கலாம்.”

“அப்பா யோசிக்கத்தான் செய்வார் மாமா. பட் நமக்கு வேற வழி என்ன இருக்கு.. இப்படியே போனா அம்மா ஹெல்த் மோசமாகிடும். அவங்களை சமாளிக்கவும் முடியல..”

“இல்ல கண்ணா.. கம்ப்ளைன்ட் கொடுக்காம, துரைப்பாண்டி அண்ணா மூலமா மூவ் பண்ணலாமே.. நாமளே பண்ணிட்டா அம்முவுக்கும் பிரச்சனை இருக்காது..”

“இல்ல மாமா.. அது சரியா வராது. நாம அவசரமா மூவ் பண்றோம்னு தெரிஞ்சாலே, மகிய எதுவும் பண்ணிடுவாளோனு பயமாவும் இருக்கு மாமா. அவளோட கோபமும் வெறியும் எதையும் செய்ய வைக்கும்..”

“அப்படி இல்ல கண்ணா… நித்யா பிரச்சனையிலேயே பார்த்த இல்ல.. சும்மா மிரட்டத்தான் எல்லாம் பண்றா.. அவளுக்கு மகியை வச்சு ஏதோ காரியம் நடக்கணும் போல, அதனால தான் இன்னும் விடாம வச்சிருக்கா.”

“என்ன காரியம் ஆகணும் அவளுக்கு.. அம்மாவை மெண்டலி வீக்காக்கணும். எப்பவும் டென்ஷன்லையும், பயத்திலயும் வச்சிருக்கணும்.. அதுதான் அவளுக்கு வேணும்.”

“விடு கண்ணா.. கொஞ்சம் யோசிப்போம். இதுவரைக்கும் எப்படியோ? இனி நான் அம்முக்கு மட்டும் தான் சப்போர்ட் பண்ணுவேன். உன் அத்தை முன்னாடியே சொல்லிட்டா.. இனி மைதிலி அண்ணி பேச்செல்லாம் செல்லாது.”

“உங்க முடிவு சரிதான் மாமா.. நான் கிளம்புறேன்! பேஷன்ட் வெயிட் பண்றாங்க.. ஓபி பார்த்தே ஃபோர் டேய்ஸ் ஆச்சு. அப்பாயிண்ட்மெண்ட் மாத்தி மாத்தி கொடுத்துருக்கு. ஒரு சர்ஜரி அப்பாய்ன்ட்மென்ட் கூட டேட் சேஞ்ச் பண்ணிருக்கேன்..” என சலிப்பாக சொன்னவன் “நான் சொன்னதை நீங்க அப்பாகிட்ட பேசுங்க மாமா…” ஏன ஆகன் கிளம்ப, வினோத்தும் யோசனையானார்.

இங்கு கல்லூரியில் தன் கேபினில் அமர்ந்திருந்த ரவிக்கு, வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை நினைத்து மிகவும் தலைவலித்தது.

பொதுவாக அவருக்கு பிரச்சனை என்றாலே பிடிக்காது. பிடிக்காது என்பதையும் தாண்டி பயம். அதை தீர்த்து அதிலிருந்து வெளியில் வரவேண்டும் என்றெல்லாம் நினைக்க மாட்டார். அந்த பிரச்சனைக்கு பயந்து, யாருக்கு பின்னே ஒழிந்து கொள்ளலாம் என்று தான் நினைப்பார்.

மஞ்சரியுடனான திருமணத்திலும் அப்படித்தான். ஆரம்பத்தில் வெறுத்தாலும் பின் தன் பெற்றோர்கள் தங்களை சேர்த்துக் கொள்வார்கள் என்று நினைத்துதான் திருமணம் செய்தார். மகள் பிறக்கும் வரைக்குமே அப்படித்தான் நினைத்தார்.

அதன் பிறகும் நான்காண்டுகள் வரை அவர்கள் இந்த பேச்சை எடுக்காதது, மகனிடம் மட்டும் பேசுவது, மஞ்சரியையும் மகளையும் ஒரு பொருட்டாக நினைக்காதது, எல்லாம் அவரை யோசிக்க வைத்தது.

அதோடு அவர்களின் குடும்ப பொறுப்பை மொத்தத்தையும் ரவியின் மேல் ஏற்றியதுதான், இங்கு அவரின் வாழ்வை ஆட்டம் காண வைத்தது.

சொற்ப வருமானத்தில் இரண்டு குடும்பத்தையும் நடத்துவது பெரும்பாடாக போக, மஞ்சரியோடு சண்டைகள் வெடிக்க ஆரம்பித்தது.

பணம்.. பணம் அது மட்டுமே பிரச்சனையாக இருக்க, அதைத் தேடும் நோக்கம் அதிகமாக, கடன் வாங்க ஆரம்பித்தார். இதனால் வீட்டில் மஞ்சரியோடு பிளவுகள் அதிகமானது.

சரஸ்வதியும் இதைத்தானே எதிர்பார்த்தார். பணத்தைக் காட்டி பேராசையை அதிகப்படுத்தி மஞ்சரியுடனான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அப்போது அவர் மனநிலை இந்த பிரச்சனைகளில் இருந்து வெளியில் வந்து நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதான்.

மகனைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்ட சரஸ்வதி, மிக சுலபமாக அவரை தன் கைக்குள் வைத்து, மஞ்சரியை அவரிடமிருந்து பிரித்து, மைதிலியை உள்ளே கொண்டு வந்தார்.

மைதிலி வந்த பிறகு அவர் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்தது. மஞ்சரியை பிரிந்ததோ, மகளை விட்டதோ அவருக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை.

மஞ்சரி எப்படியும் பிழைத்து விடுவாள் என்ற எண்ணமாக கூட இருக்கலாம். எல்லாம் முதல் ஐந்து ஆண்டுகள் தான். அதன் பிறகு தான் மைதிலியுடனான வாழ்க்கையில் என்ன இல்லை என்பதை உணர்ந்தார்.

அப்போது இருந்தே மகளை மிகவும் தேடினார் மனிதர். அவள் மாநிலத்திலேயே முதலாவதாக வந்து, பேட்டி கொடுத்த அந்த நாளை இப்போது வரைக்குமே அவரால் மறக்க முடியவில்லை.

இப்போது கையெட்டும் தூரத்தில் இருக்கிறாள். ஆனால் நெருங்க முடியவில்லை. தன்னுடைய தவறுகள் எல்லாம் இப்போதுதான் பூதாகரமாக அவர் முன் வந்து நின்று மிரட்டியது.

மகளை எப்படி நெருங்குவது என தெரியவில்லை. இது மைதிலிக்கு தெரிந்தால் அவள் ஒரு காளியாட்டமே ஆடித் தீர்ந்து விடுவாள் என்று தெரியும். ஆனாலும் அவருக்கு மகளிடம் பேச வேண்டும் என்ற ஆவல் அதிகமாகிக் கொண்டே சென்றது.

அப்படி எழுந்த ஆவலை அடக்க முடியாமல், கிளம்பி நேராக அவளது அலுவலகத்திற்குச் சென்றார்.

ரவீந்திரனை பார்த்ததுமே “வாங்க டாக்டர் சார்.. என்ன இந்த பக்கம்.?” என தெரிந்த நபர் ஒருவர் கேட்க,

“கலெக்டர் மேடமை பார்க்க வந்தேன் நடராஜ்..” என்றார் சிறு புன்னகையுடன்.

“உங்ககிட்டௌம் பிரச்சினையா.? நீங்களும் அதுக்குத்தான் வந்திருக்கீங்களா? உட்காருங்க டாக்டர். உள்ள ஏதோ மீட்டிங் போயிட்டு இருக்குன்னு சொன்னாங்க. நானும் அவங்களுக்காக தான் வெயிட் பண்றேன். துரைப்பாண்டி அண்ணே பாத்துட்டு வரச் சொன்னார்..” என்றார் அவர்.

“துரைப்பாண்டி அண்ணனா.? என்ன? எதுக்கு நடராஜ்.?” என ரவீந்திரன் படபடப்பாக கேட்க,

“நீங்க ஏன் டாக்டர் பதறுரீங்க.. இதுல பதட்டப்பட ஒன்னுமே இல்ல டாக்டர் சார். எப்பவும் பேசுறது தான்..” என்றவர் குரலை தழைத்து, அவருக்கு மட்டும் கேட்கும்படி “கமிஷன் பத்தி பேசிட்டு வர சொன்னார் அண்ணன்.. மேடம் தான் பிடி கொடுக்கிறதே இல்ல.. இள இரத்தம் அதுதான் சீறி பாயுது..” என பேச, ரவிக்கு முகமெல்லாம் வேர்த்து போனது.

துரைப்பாண்டியை பற்றி அவருக்கு நன்றாக தெரியும். அவரை பகைத்துக்கொண்டு இந்த தேனியில் இருக்க முடியாது. அதற்காக அவர் கெட்டவர் என்றும் சொல்ல முடியாது. நல்லவர் என்றும் சொல்ல முடியாது. அவருக்கு எதிரி என்று வந்து விட்டால் இரக்கம் எல்லாம் பார்க்க மாட்டார். திரும்ப எழவே முடியாத அளவிற்கு அடித்தபிறகே ஓய்வார்.

ஆளும் கட்சியில் ஒரு MLAவின் பினாமி. அடிதடி கட்டப்பாஞ்சாயத்து என்று ஆரம்பித்து, இப்போது கல்குவாரி, மணற்கொள்ளை என இப்போது தொழில் முழுவதும் இல்லீகல் என்று தெரியும். அவரிடம் ஏன் வம்பு வளர்க்கிறாள்? என யோசனையோடே நடராஜை பார்த்தார்.

“என்ன பிரச்சனை நடராஜன்? ஏன் இவ்வளவு கோபம்.?” என ரவி கேட்க,

“துரைப்பாண்டி அண்ணனை சீண்டிக்கிட்டே இருக்காங்க இந்த கலெக்டர் மேடம்.. அண்ணனை பத்தி தெரியாம செய்றாங்க போல, அதுதான் அண்ணனை பத்தி எல்லாம் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்..” என்றார் அந்த எல்லாமில் அழுத்தம் கொடுத்து.

ரவிக்கு சர்வமும் ஆட்டம் கண்டது. எதற்கு இந்த வேண்டாத வேலை? ஏன் தேவையில்லாமல் துரைப்பாண்டியிடம் மோதிக் கொண்டிருக்கிறாள் என பயம் வந்தது. அப்போது நடராஜை அழைப்பதாக கூற, அவனும் உள்ளே செல்ல, வெளியில் பதட்டமாகவே அமர்ந்திருந்தார் ரவி.

அவர்கள் வர எடுத்துக்கொண்ட அரை மணி நேரமும், நெருப்பின் மேல் அமர்ந்தது போல் இருந்தது ரவிக்கு.

துரைப்பாண்டியிடம் ரவிக்கு நல்ல பெயர் இருக்கிறது. அதை வைத்து அவரிடம் பேசிப் பார்க்கலாம். தன் மகள் என்றால் சற்று யோசிக்கவும் வாய்ப்பிருக்கிறது.. என நினைத்துக் கொண்டார் ரவீந்திரன்.

ஆனால் அவர் மறந்து போன ஒன்று.. இதே துரைப்பாண்டியன் முன் தான், அவருக்கும் மஞ்சரிக்கும் ஒருமுறை கட்டப்பஞ்சாயத்து நடந்தது என்றும்,

சரஸ்வதியின் நீலிக் கண்ணீரை நம்பி மஞ்சரியையும், அவள் பெற்றோரையும் துரைப்பாண்டி மிரட்டி அனுப்பி இருந்தார் என்றும்.

இப்போது எந்த முகத்தை வைத்து ‘தன் மகள்’ என துரைப்பாண்டியிடம் பேசுவாரோ? அது அவருக்கே வெளிச்சம்.

வெளியே வந்த நடராஜன் கோபமாக கத்திக் கொண்டு செல்ல, அதிலேயே அவர்களின் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்திருப்பது தெரிந்தது.

துரைப்பாண்டியிடம் பேசியே ஆக வேண்டும் என முடிவு செய்துவிட்டார் ரவீந்திரன்.

அடுத்த சில நிமிடங்களில் அவரை உள்ளே செல்லக் கூற, பெரும் படபடப்புடனும், மகளைப் பார்க்கும் ஆர்வத்துடனும் நுழைந்தார் ரவீந்திரன்.

பார்த்துக் கொண்டிருந்த பைலில் இருந்து தன் பார்வையை விளக்கிய அகானா “எஸ் ப்ளீஸ்.. சிட் டவுன்.” என்றாள் நிமிர்வாக.

மகளின் நிமிர்வை ரசித்தபடியே “எப்படி இருக்க அம்மு..?” என்றார்” தன் மொத்த பாசத்தையும் வார்த்தைகளில் தேக்கி.

அகானாவின் புருவம் சுருங்கியது. முகத்தில் யோசனை படர “என்ன சொல்றீங்க? யார் நீங்க.? எதுக்காக என்னை பார்க்க வந்தீங்க..” என்றாள் பேச்சில் அந்நிய தன்மையோடு.

“உனக்கு என் மேல கோபம் இருக்கும், அது நியாயம் தான். ஆனா அதுக்காக என்னை யாருன்னு கேட்டு கஷ்டப்படுத்தாத அம்மு.. என்னால அதை தாங்க முடியாது..” என்றார் பார்வையில் மன்னிப்போடு.

“ஓ..” என்றவள் நொடி நேர தாமதத்திற்கு பிறகு “நீங்க என்னை அஃபிசியலா மீட் பண்ண வந்திருக்கீங்கன்னு தான் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தேன்.. ஆபீஸ்ல நான் பெர்சனலா யாரையும் மீட் பண்றது இல்ல, அண்ட் யாருன்னு தெரியாதவங்களை நான் அஃபிசியலா கூட நான் மீட் பண்ண மாட்டேன். இதுல நீங்க..? ம்ம்ம்ம்… ப்ளீஸ் என் டைம் வேஸ்ட் பண்ணாம கிளம்புங்க..” என முகத்தில் எந்த கோபத்தையும் காட்டாமல் நிதானமாக பேச, அந்த பேச்சில் ரவீந்திரன் முகம் விழுந்துவிட, அவரோ மொத்தமாக செயலிழந்து போனார்.

அப்போதும் விடாமல் “அம்மு..” என அவர் ஏதோ பேச வர,

சட்டென அங்கிருந்த பெல்லை அமர்த்தி, கண்ணனை வர வைத்து “கெட் லாஸ்ட்..” என்றாள் முகத்தில் ரௌத்திரம் பொங்க.

அகானாவின் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தில், ரவீந்திரனுக்கு உடல் எல்லாம் சில்லிட்டது. கைகள் கூட நடுக்கம் கொண்டது. கால்கள் அடுத்த அடியை எடுத்து வைக்க சிரமப்பட்டது.

அதற்குள் உள்ளே வந்த கண்ணனிடம் “கிளியர் பண்ணுங்க கண்ணன் அங்கிள், அண்ட் பர்சனலா யாரையும் அலோ பண்ணாதீங்க..” என்றாள் கட்டளையாக.
 
  • Love
Reactions: Sailajaa sundhar