• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 28

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
அகானா - 28

அகானா கூறிய செய்தியில் மனம் கனத்து போய் அமர்ந்திருந்தாள் மகிழினி..

அவளும் ஆரம்பத்தில் அகானாவை வெறுத்தவள் தானே. காரணம் தாயின் சொல்பேச்சு, விபரம் தெரிந்த பிறகு தந்தை கூறிய சில செய்திகளில் அவளுக்கு அகானா மீதிருந்த வெறுப்பு முற்றிலுமாக போயிருந்தது.

அதன் பிறகு அகானா பற்றிய பேச்சே வீட்டில் இல்லை. அவளுக்கும் தனக்கும் கிட்டத்தட்ட இரண்டு வயது வித்தியாசம் இருக்கும். இந்த வயதில் அவளின் முதிர்ச்சியை நினைத்து வியப்பாக இருந்தது.

இன்றும் தன்னால் தனியாக ஒரு கடைக்கு கூட சென்று வர முடியாது. ஆனால் இவளானால்.? என நினைக்க நினைக்க அகானாவின் மீது பிரமிப்பு கூடியது.

“என்ன யோசிக்கிற.?” என்ற ஆரியனிடம்,

“அப்போ நீங்க என்னை காப்பத்தலையா? கடத்தி வச்சிருக்கீங்களா?” என்றாள் யோசனையாக.

“பார்த்தியா அகி இந்த முட்டக்கண்ணிக்கு கொழுப்ப.. பாவம் பார்த்து காப்பத்தினதுக்கு என்ன பேச்சு பேசுது பார்..” என தங்கையின் செயலைக் காட்டாமல் ஆரியன் பேச,

“அப்போ நிஜமாவே என்னை காப்பாத்துனீங்களா? சாரி..” என இளிக்க,

“காப்பாத்திதான் கடத்திருக்கோம்..” என்றான் சீரியசாக,

“எத..” என விருட்டென எழுந்தவள், அது முடியாமல் தலை சுற்ற, மீண்டும் அமர்ந்து “அப்போ இல்லைன்னு சொன்னீங்க.. முட்டக்கண்ணின்னு திட்ட வேற செஞ்சீங்க.” என கோபமாக கேட்க,

“ஏன் உனக்கு முட்டக்கண்ணுதான.. அதை இல்லைன்னு வேற சொல்லுவியா? இங்க பார் நான் சொன்னதை சரியா யோசி..” எனவும், மகிக்கு கோபம் சுர்ரென்று ஏறியது.

“இந்த கிண்டல் எல்லாம் எங்கிட்ட ஆகாது சரியா? தேனிக்கார பொண்ணுங்கள பத்தி இன்னும் தெரியல போல டாக்டருக்கு. வகுந்துட்டு போய்டுவேன்..” என சீரியசாக பேச, அகானாவுக்கும் ஆரியனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

அகானா சிரிப்பை மறைக்க, ஆரியனோ சத்தமாக சிரித்தான்.

“சில்வண்டுக்கு பேச்சை பார்..” என அவள் தலையில் கொட்டிவிட்டு மீண்டும் சிரிக்க, “இங்க பாருங்க அம்மு.. இவர்கிட்ட சொல்லி என்னை டச் பண்ண வேண்டாம் சொல்லுங்க. அதென்ன எப்போ பார்த்தாலும் பொம்பள புள்ளைய தொட்டு தொட்டு பேசுறது..” என கடுப்பாக அகானாவிடம் புகார் சொல்ல,

“அடேங்கப்பா.. நல்ல ஆளுக்கிட்டத்தான் கம்ப்ளைன்ட் பன்ற.. முட்டக்கண்ணி.. வீட்டுக்கு போற ஆசை இருக்கா இல்லையா.?” என மீண்டும் தலையில் கொட்ட போக,

“ஆரி..” என்ற அகானாவின் அதட்டலில் ஆரியன் அமைதியாகிவிட, அவனைப் பார்த்து கிண்டலாக சிரித்தாள் மகிழினி.

அடுத்து மூவரிடமும் சில நொடி அமைதி, அதை உடைக்கவென “எதுக்காக என்னை இங்க வச்சிருக்கீங்க..? மாமாவை பழிவாங்க போறீங்களா?” என பாவம் போல் மகி கேட்க,

“எந்த மாமாவை? யாரை.?” என ஆர்யன் கேட்க,

“ரவி மாமாவை..” என மகியும் கூற,

“ம்ச்.. அவரை எதுக்கு பழி வாங்கனும். அவருக்கும் அகிக்கும் என்ன சம்மந்தம்..?” என ஆரியன் கேட்க,

“அவர்தானே இவங்க அப்பா..” என்றவள் ஆரியனின் முறைப்பில் “அப்போ ஏன் என்னை இங்க வச்சிருக்கீங்க..” என பதட்டமாக கேட்க,

“ஹான் உன் அண்ணனை பழிவாங்க.?” என்றான் ஆரியன் கோபம் போல்.

“என்ன அண்ணனா? ஆகனையா சொல்றீங்க, அவனுக்கும் இவங்களுக்கும் என்ன சம்மந்தம். நீங்க மாமாவை பழி வாங்குங்க.. முக்கியமா அந்த மைதிலி அத்தையை வெச்சு செய்ங்க. எனக்கு ரொம்ப சந்தோசம். ஆனா ஆகனை விட்டுடுங்க. அவன் ரொம்ப பாவம். எனக்கு அவன்தான் பாக்கெட் மணி தருவான். நீங்க பழி வாங்கின கோபத்துல எனக்கு காசு தராம போயிட்டா..” என்று முடிக்கும் முன்னே, நங்கென்று அவள் தலையில் கொட்டியிருந்தான் ஆரியன்.

“லூசு.. லூசு.. எவ்ளோ சீரியசா பேசிட்டு இருக்கோம்.. பாக்கெட் மணி வேணும். அதுக்காக பழி வாங்காதீங்கன்னு சொல்ற..” என மீண்டும் கொட்ட போக,

“ம்ச்.. இங்க பாருங்க..” என மண்டையைத் தேய்த்தவள் “உங்க பேரென்ன.?” என முகத்தைச் சுருக்க,

“ம்ச் அது எதுக்கு உனக்கு..?” என ஆரியனும் கடுப்பாக கேட்க,

“ஹான் பேர் எதுக்கு கேட்பாங்க.. கூப்பிடத்தான். வாங்க போங்கன்னு கூப்பிட பிடிக்கல. எங்க பக்கம் புருசனைத்தான் இப்படி கூப்பிடுவாங்க. உங்களை அப்படி கூப்பிட முடியாது. உங்க பேரென்ன.?” என அதட்டலாக கேட்க,

மகியின் இந்த பேச்சில் கடுப்பாகிவிட்டான் ஆரியன். அதனால் “அதெல்லாம் சொல்ல முடியாது போடி..” என்றுவிட,

“வாடி போடின்னு சொன்ன பல்லைத் தட்டி கையில குடுப்பேன்.. இன்னொரு தடவை இப்படி கூப்பிட்டுப்பார் கண்டிப்பா செய்வேன்..” என்றவள் பற்களைக் கடிப்பது வெளியே வரைக் கேட்டது.

அதுவரை இருவரின் சண்டையையும் சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்த அகானா, மகிக்கு கோபம் வந்துவிட்டதை உணர்ந்து “அவன் சும்மா உன்னை கலாய்க்கிறான். இதுக்காக எல்லாம் டென்சன் ஏத்திப்பியா.?” என அழுத்தமாக கேட்க,

“ம்ச்.. என்னை வீட்டுக்கு அனுப்புங்க.. என்னை எல்லாரும் தேடிட்டு இருப்பாங்க. அப்பா பாவம் நான் இல்லாம கஷ்டப்படுவார்..” என்றதும்,

“ஏன் உன் அம்மா கஷ்டப்பட மாட்டாங்களா.?” என்றான் ஆரியன் சிடுசிடுப்பாக.

“நான் உங்ககிட்ட பேசல..” என பட்டென்று சொன்னவள், அகானாவைப் பார்க்க, அவளுக்குள்ளும் அதே கேள்விதான். அதே பார்வையோடு இருக்க, “அம்மாவும் பயந்திருப்பாங்க. அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சிருப்பாங்க. ஆனா அப்பா ரொம்ப தேடிருப்பார்.” என்றாள் சோகமாக.

“ம்ம்… இன்னைக்கு நீங்க போய்டலாம்.” என போனை அவளிடம் கொடுத்து, உங்க அப்பாவுக்கு கூப்பிட்டு வரச் சொல்லி கிளம்புங்க. வேற யாருக்கும் போன் பண்ணக்கூடாது..” என கண்டிப்பாக கூறிவிட,

“ஹான்.. சரி.. சரி..” என்றவள் உடனே “நீங்க ஆகனை பழிவாங்கலையா?” என யோசனையாக கேட்க,

“அடிங்க்..” என கடுப்பாகிவிட்டான் ஆரியன்.

“அவளுக்கு என்ன பைத்தியமா? உங்க அண்ணனை பழிவாங்க.. பாவம் பார்த்து உன்னை காப்பாத்தி வச்சதுக்கு, பேச்சை பார்..” என அதட்ட,

“ஓ.. சாரி… சாரி,,” என அகனாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, “என்னங்க நீங்க மாத்தி மாத்தி பேசுறீங்க…” என ஆரியனிடம் எகிறினாள்.

பின் “உங்களுக்கு எங்க வீட்டு ஆளுங்க கோபமில்லையா?” என மெல்ல முணுமுணுப்பாக கேட்க,

“ம்ச் இல்ல..” என்ற அகானா மகிழியின் பார்வையில் இருந்த பாவத்தைப் பார்த்து, “லுக் எனக்கு இப்படியெல்லாம் பார்த்தா பிடிக்காது. உன்னோட பரிதாபமும், அனுதாபமும் எனக்கு சோறு போடப் போகுதா.. இல்ல நாங்க இதுவர அனுபவிச்ச கஸ்டத்தை எல்லாம் போக்க போகுதா.. இல்லதான.. அதனால இப்படி பார்க்குறதை நிறுத்து..” என அதட்டலாக பேச,

“ஹ்ம்ம்.. ஹான் ஆனா நீங்க ஏன் இவ்ளோ கோபப்படுறீங்க. நான் சாதாரணமாத்தான் பார்த்தேன்..” என்றவள், “ஆரம்பத்துல எங்க அம்மா சொல்லி நானும் உங்களை தப்பாதான் நினைச்சிட்டு இருந்தேன். பிறகு ஒரு நாள் அப்பா இதைப்பத்தி பேசி புரிய வச்சார். அப்போ இருந்து எனக்கு உங்க மேல கோபமோ வெறுப்போ வந்ததில்ல.. ஐ ம் சாரி..” என மனதார மன்னிப்புக் கேட்டவள், “உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணனுமா சொல்லுங்க பண்றேன். அந்த மைதிலி அத்தைக்கு பேதி மாத்திரை கொடுக்கட்டா.. ஆகன்கிட்ட சொன்னா கொண்டு வந்து தருவான்..” என முட்டைக்கண்ணை விரித்து பேச,

அதுவரை சீரியசாக பேசிக் கொண்டிருந்தவள் திடீரென்று இப்படி பேசுகிறாளே என கடுப்பாகி அவளைப் பார்க்க, அவள் சீரியசாகத்தான் அந்த விசயத்தைப் பேசிக் கொண்டிருக்கிறாள் என மகியின் முக பாவம் காட்ட, அவளின் குழந்தைத் தனத்தை நினைத்து இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

“ஆமா.. அன்னைக்கு காலேஜ் கட்டடிச்சிட்டு எங்க போன..” என்ற ஆரியனின் கேள்வியை கிடப்பில் போட்டுவிட்டு, “நிஜமா நான் அப்பாவுக்கு சொல்லட்டுமா.?” என அகானாவைப் பார்த்து கேட்க,

“எஸ்..” என தலையாட்டி, “அவரை மட்டும் வரச் சொல்லனும்.. வேற யார் வந்தாலும் நீ வெளிய போக முடியாது..” என தீர்க்கமாக கூற, அந்த குரலில் இருந்த வித்தியாசத்தை யோசித்தபடியே சங்கருக்கு அழைத்தாள்.

“இது எந்த ஏரியான்னு தெரியுமா? தெரியாம எப்படி வர சொல்வ..” என ஆர்யன் கேட்க, தீப்பார்வை பார்த்தாள் மகிழினி.

“முட்டக்கண்ணி.. இது லட்சுமிபுரம். பெரியகுளம் பக்கத்துல இருக்குன்னு சொல்லு. கோர்ட்க்கு ஆப்போசிட்ல இருக்குற தெருவுக்கு வந்துட்டு கால் பண்ண சொல்லு..” என ஆர்யன் கடுப்படிக்க,

“ஹீ ஹீ..” என்றபடியே காதில் வைத்தாள்.

அந்த பக்கம் சங்கர் எடுத்ததும் “ப்பா.. நான் மகி.. எனக்கு ஒன்னும் இல்ல. நான் நல்லா இருக்கேன். நீங்க பயப்படாம நான் சொன்ன இடத்துக்கு வந்துடுங்க.. நீங்க மட்டும் தான் வரனும். வேற யாரும் வரக்கூடாது. ஆகன்கிட்ட சொல்லாம வாங்க..” என அவர் பதில் சொல்லும் முன்னே படபடவென பேசி அட்ரசை கூறி வைத்துவிட,

என்ன பீஸ்டா இதுன்னு தான் தோன்றியது ஆர்யனுக்கு.

“ஆரி நான் அம்மாவுக்கு பேசிட்டு வரேன்..” என அகானா வெளியேற,

“ரொம்ப பேசுற நீ..?” என முறைத்தான் ஆரியன்.

“நீங்க ஒன்னும் குறைவா பேசல.. என்னை இனி முட்டக்கண்ணி சொல்லாதீங்க..” என பட்டென சொன்னவள், பின் “அது மஞ்சரி அத்தையவா சொல்றாங்க. இங்க வந்துருக்காங்களா? என்னை ஒருநாள் அவங்ககிட்ட கூட்டிட்டு போறீங்களா? அவங்க ரொம்ப அழகா இருப்பாங்க. ஆனா அகானா எங்க அம்மா மாதிரி இருக்காங்க.” எனவும்,

“அதுதான் அவளுக்குப் பிடிக்கல..” என ஆரியன் பட்டென சொல்லவும், மகிழினி யோசனையாக பார்க்க,

“அவளை வேண்டாம்னு வெறுத்து ஒதுக்கி ஓட வச்சதுல முக்கியப்பங்கு உங்க அம்மாதானாம். அப்படி பட்டவங்கள மாதிரி நான் ஏன் பிறந்தேன். எனக்கும் அவங்க குணம் வந்துருமான்னு அடிக்கடி கேட்பா..” என ஆர்யன் வருத்தமாக கேட்க, மகிக்கும் வருத்தமாகிவிட்டது.

“அவங்களை சரி பண்ண முடியாதா?” என மகி அதே வருத்தத்துடன் கேட்க

“நீ என்ன நினைக்கிற.?” என கேள்வியை அவள் பக்கமே திருப்பினான் ஆரியன்.

“நானா இருந்தா சரி செஞ்சிக்க மாட்டேன்.. அவங்களை உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்.” என கோபமாக கூற,

“அகியும் இப்போ அதைத்தான் பண்றா?” என இத்தனை நாட்கள் நடந்த அனைத்தையும் கூறி “அவளைத் தப்பா நினைக்காதே..” எனவும், ‘இல்லை’ எனும் விதமாக தலையாட்டினாள் மகி.

அகானாவை அவளால் தப்பு சொல்ல முடியாது இப்போது மட்டுமல்ல. எப்போதுமே!

அடுத்து என்ன நடக்குமோ என்ற யோசனையோடு அமர்ந்திருந்தவளை ‘யோசிக்கட்டும்’ என ஆரியன் வெளியில் வந்துவிட்டான்.

இங்கு மகி போன் செய்ததுமே சங்கருக்கு பயமும் குழப்பமும் போட்டி போட்டது.

கடத்தியது அம்முவாக இருந்தால் ஆகனுக்குதானே போன் செய்திருக்க வேண்டும்.. எனக்கு ஏன்? அப்படியென்றால் இதை அம்மு செய்யவில்லையோ? வேறு யார்? தனியாக போகலாமா? ஆகன் இல்லை வினோத்தை அழைத்து போகலாமா? என யோசித்து பின் இருவருக்கும் செல்லும் இடத்தை மெசேஜ் செய்து “ஒரு மணி நேரத்தில் நான் திருப்பி அழைக்கவில்லையென்றால், அந்த இடத்திற்கு வந்துவிடுங்கள்..” என்ற செய்தியையும் அனுப்பிவிட்டு மகியைத் தேடி சென்றவருக்கு அதிர்ச்சியை கொடுக்க காத்திருந்தாள் மகிழினி.