• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஆரூர் சரவணா - குரு பார்வை

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
குரு பார்வை

பொதுவாக ஒருவரை அடக்கம் செய்ய ரத்த உறவுகள் இல்லையென்றால் அந்த உடலை அநாதைப்பிணம் என்பார்கள். அப்படி இருந்தாலும் ஒவ்வொரு ஊரிலுமே ஒரு சில உள்ளங்கள் அப்படிப்பட்ட உடல்களை நல்லவிதமாக அடக்கம் செய்து விடுவார்கள்.

ஆனால் பல்லக்கு போன்ற பூ அலங்கார பாடையில் ஊரடங்கு உத்தரவையும் மீறி ஐம்பது பேருக்கும் மேல் முன்னும்பின்னும் புடைசூழ சுடுகாட்டுக்கு சென்ற அந்த உடல் இப்போது அநாதையாக நடு ரோட்டில் இருந்தது.

காவல்துறை உதவி ஆய்வாளர் அழகர்நம்பி, சுடுகாட்டிற்குள் சென்றார். பணியாளர்கள் இரண்டு பேர்தான் இருந்தார்கள். அவர்களில் ஒருவனான கண்ணப்பனிடம் அந்த உடலை நீங்கதான் தகனம் செய்யணும் என்று கேட்டபோது, "அடக்கம் செய்யலைன்னா எங்களை விடவாப் போறீங்க..." என்று அலுத்துக் கொண்டான்.

"ரொம்ப அலுத்துக்காதீங்கய்யா... நாங்க யாரையும் பழிவாங்குறது இல்லை... நீங்களா தப்பு பண்ணி மாட்டிகிட்டா அப்போ கொஞ்சவா முடியும்...?"

"நீங்க சொல்றதும் சரிதான்... தீர்த்தம் உள்ள போனதும் எதாவது சலம்பல் பண்ணிட்டு அப்பப்ப உங்ககிட்ட சிக்குற எங்களை சொல்லணும்... சார்... ரெண்டாயிரம் ரூபாதான் காசு கொடுத்தாங்க... வரட்டி, விறகுக்கே இன்னும் காசு கொடுக்கணும்... இப்போ தூக்கி வெச்சு கொளுத்திட்டா பணத்துக்கு என்ன பண்றது சார்...?"

"கண்ணப்பா... ஓடுனவனுங்க மாட்டாமலா போயிடுவாங்க... அதுவரைக்கும் நடுரோட்டுல பொணத்தை நாற விட முடியுமா?..."

"அதெல்லாம் சரிதான் சார்... பணத்துக்கு வழி சொல்ல மாட்டெங்குறீங்களே..."

"யோவ்... அவனுங்க சிக்கலன்னாலும் அந்த தெருவுல இருந்து நாலஞ்சு பேரை தூக்கிட்டு வந்து விசாரிச்சா போச்சு... உங்களுக்கு எவ்வளவு பணம் வரணுமோ கூடுதலா ரெண்டாயிரம் ரூபா சேர்த்து வாங்கிக் கொடுத்துடுறேன்..."

"ஆக மொத்தத்துல உங்க கையில இருந்து தர மாட்டீங்களே... தெருகாரங்க இருக்குற வெறியில, ஒருத்தணும் வர மாட்டான்... உங்க ஆளுங்க ரெண்டு பேரை வர சொல்லுங்க... நாலு பேரு கண்டிப்பா வேணும்..."

"கிட்டத்தட்ட எல்லா ஏற்பாடும் ஏற்கனவே செஞ்சாச்சு. பக்கமாத்தானே இருக்கு... உன்னை பாடையை அப்படியேவா தூக்க சொன்னேன்... கயிறை அறுத்து விட்டுட்டு, பாடியை தோள்ல தூக்கிட்டு கொண்டு போய் வெச்சு கொளுத்துய்யா..."

காரியத்தை முடித்துக் கொண்டு அழகர்நம்பி வீட்டிற்கு சென்று குளித்தார். வேறு சில விசயங்களை அலைபேசியில் பேசி முடித்து விட்டு காவல்நிலையத்திற்கு சென்றபோது இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது.

இரண்டு நாட்களில் முதல்வர் வருகை இருப்பதால் காவல் நிலைய ஆய்வாளர் அதற்கான முன்னேற்பாடுகளில் இருக்க, தற்சமயம் அழகர்நம்பியின் பொறுப்பில் காவல் நிலையம் இருந்தது.

காவல்நிலைய வளாகத்திலும் வெளியிலும் நிறைய பேர் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தார்கள்.

"கொரோனா நேரம், அநாவசியமா ஏன் கூட்டம் போடுறீங்க...? கிளம்புங்க... கிளம்புங்க..." என்று சொல்லிக்கொண்டே அழகர்நம்பி உள்ளே செல்ல முற்பட்டார்.

அப்போது கூடியிருந்த மக்களில் பெரும்பாலானோர்...

***

அந்த நகரத்தில் மக்கள் நெரிசல் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதி அது. புதிய பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த குடியிருப்பு என்பதால் நியூ நகர் என்றே எல்லாரும் அழைத்தார்கள். அரசு அலுவலகம் ஒன்றில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வந்த ஒருவர் இன்னும் ஓர் ஆண்டு பணியாற்ற வேண்டிய காலம் மீதம் இருந்த நிலையில் மாரடைப்பால் காலமானார்.

நியூ நகர் குடியிருப்பு பகுதியில் இருந்த இளைஞர்கள், நடுத்தர வயது ஆண்கள் என்று பலரும் ஆங்காங்கே மர நிழலிலும், ஒரு சில வீடுகளின் வாசல் ஓரமாகவும், மாடிப்படிகளிலும் அமர்ந்து மது அருந்தத் தொடங்கினார்கள்.

பலரும் இவர்களை எதிர்த்து கேள்வி கேட்க பயந்து கொண்டு அமைதியாக இருந்தார்கள். ஒரு சிலர் "ஏன் இங்க குடிக்கிறீங்க...? வேற எங்கயாச்சும் போக வேண்டியதுதானே...?" என்று கேட்டு முடிக்கவில்லை.

அந்த 'குடி'மகன்களில் ஒருவர் "யோவ்... சாவு வூடுன்னா இப்படித்தான்... பொத்திகிட்டு உள்ள இருக்கணும்... இல்லன்னா அசிங்கமாயிடும்..." என்று மரியாதையுடன் (?!) பதில் சொன்னார்.

அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ரோந்து வந்த காவலரும், இவர்களின் சத்தத்தைப் பார்த்து எச்சரித்தார்.

இதைக் கேட்டதும் நடுத்தர வயது ஆள் ஒருவன், "சார்... கொரோனா எல்லாம் எங்க கிட்ட சல்யூட் பண்ணிட்டு போய்கிட்டே இருக்கும் சார்... செத்த மனுசன் இனிமே வரப் போறாரா... அதனால இதை எல்லாம் கண்டுக்காதீங்க சார்... இங்கல்லாம் சாவு நடந்த இப்ப மட்டுமில்ல... எப்பவுமே இப்படித்தான்..." என்று துணிச்சலாக பேசினான்.

அப்போது இறப்பு நிகழ்ந்திருந்த வீட்டைச் சுற்றி கூடியிருந்தவர்களில் பலரும் காவலர் அருகே வந்து விட்டார்கள்.

"இன்னும் கொஞ்ச நேரத்துல பொணத்தை தூக்குனதும் அதது வேலைய பார்த்துகிட்டு போகப்போகுது... நீங்க போங்க சார்..." என்று 60 வயதைக் கடந்த சிலரும் பேசினார்கள்.

"வளர்ப்பு சரியில்ல... வளர்ற சூழ்நிலையும் சரியில்லை..." என்று சொல்லிக்கொண்டே அந்த காவலர், இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து கிளம்பியபோது, "ஹோ..." என்று பேரிரைச்சலுடன் கத்தினார்கள்.

"அவசரப்பட்டு வாயை விடாத சார்..." என்ற குரல் தேய்ந்து அந்த காவலரின் காதில் ஒலித்தது.

அன்று மட்டும் அந்த நகரில் நான்கு இடங்களில் இறப்பு நிகழ்ந்திருந்தது. மற்ற மூன்று இடங்களிலும் அஞ்சலி செலுத்த வந்த மக்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். அங்கேயே இருந்தவர்களும் சமூக இடைவெளியுடன் இருந்தார்கள். அந்த நபர்களிலும் ஒரு சிலர் மது அருந்தி விட்டுத்தான் வந்து நின்றார்கள். அதை அவர்கள் அருகில் நெருங்கிச் சென்று பார்த்தால் வரும் வாடையில் இருந்துதான் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அந்த பகுதியிலும் கனத்த அமைதி நிலவியது.

நியூ நகரில் இருந்து அந்த உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்ற போது, மாலைகளை தூக்கி உயரே வீசினார்கள். அவை ஆங்காங்கே மின் கம்பிகள் மீது விழுந்து சுற்றிக் கொண்டன. அணுகுண்டு, பட்டாசுகளையும் வெடித்துக் கொண்டே சென்றார்கள்.

அதிலும் அணுகுண்டுகள் வெடித்த போது ஏதோ மலையைப் பிளந்து மிகப்பெரிய இடி இடித்ததைப் போன்ற சத்தம், பல நபர்களின் காதுகளை ஓரிரு நிமிடங்கள் அமைதியாக்கி விட்டன.

பல ஆண்டுகளுக்கு முன்பு சுடுகாடு இருந்த பாதையில் ஆள் நடமாட்டமே கிடையாது. ஆனால் தற்போது சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் இருப்பதால் அதை விட்டு விட்டு அதற்குப் பக்கத்தில் வரை வீடு கட்டிக் கொண்டு வசிக்கத் தொடங்கி விட்டார்கள். அவற்றில் பெரும்பாலான வீடுகளில் தென்னங்கீற்றுதான் மேற்கூரையாக இருந்தது.

இன்று, நியூ நகரில் இருந்து இறந்தவர் உடலை இறுதி ஊர்வலமாக எடுத்து வந்தவர்கள் கொளுத்திய அணுகுண்டில் இருந்து புறப்பட்ட தீப்பொறி ஒரு குடிசை வீட்டுக் கூரையை பொசுக்கத் தொடங்கி, மளமளவென அடுத்தடுத்த வீடுகளை பதம் பார்த்தது.

அவ்வளவுதான், பாடையை அப்படியே நடு ரோட்டில் வைத்து விட்டு, இறுதி ஊர்வலக்கூட்டம் முழுவதும் எங்கே காணாமல் போனது என்றே தெரியவில்லை.

அடுத்த ஒரு சில நிமிடங்களில் தீயணைப்புத்துறை வந்து மேலும் சில வீடுகளில் தீ பரவாமல் தடுக்க முடிந்ததே தவிர, முதலில் தீப்பிடித்த 13 வீடுகள் முற்றிலும் தீயில் இரையாகி உருக்குலைந்து நின்றன.

உயிர்ச் சேதம் எதுவும் இல்லை. ஆனால் அந்த மக்களின் மன உறுதி குலையும் வகையில் ஏற்கனவே கொரோனா தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவு முடக்கிப் போட்ட பொருளாதாரத்தை இன்னும் இந்த தீ விபத்து சிதைத்து விட்டது.

பதிமூன்று வீடுகளில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் முற்றிலும் தீயில் கருகியதுடன், ஒருவர் அவரது மகளுக்காக திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த நகைகள், தனியார் நிதிநிறுவனத்தில் கடன் பெற்று வைத்திருந்த பணம் ஆகியவை கருகிவிட்டன.

தற்போது இணையவழி வகுப்புகளுக்காக கடன் பெற்று வாங்கி வைத்திருந்த லேப்டாப், ஆண்ட்ராய்டு மொபைல் என்று இன்னும் என்னென்னவோ தீயில் கருகி, அந்த மக்களின் மன உறுதியை சிதைத்து விட்டன.

சம்மந்தப்பட்டவர்கள் எங்களது நஷ்டத்தை ஈடுகட்டாமல் இந்த உடலை எடுக்க விட மாட்டோம் என்று அந்த தெருவில் இருந்த மக்கள் அப்படியே பாதையில் அமர்ந்து விட்டார்கள்.

அப்போது அங்கே வந்த உதவி காவல் ஆய்வாளர் அழகர்நம்பி, அந்த மக்களுக்கு கண்டிப்பாக நியாயம் பெற்றுத் தருகிறேன் என்று சொன்னதும்தான் கலைந்து சென்றார்கள்.

கலைந்து சென்றார்கள் என்றால், ஒருவருமே அங்கே இல்லை. ஆனால் நடுத்தெருவில் பூ அலங்காரத்துடன் கூடிய பாடையில் பிணம். சற்று நேரத்துக்கு முன்னால் வாணவேடிக்கை, தாரை, தப்பட்டை, ஆட்டம் பாட்டம் என்று இருந்த உடல் இப்போது தகனம் செய்ய ஆள் இல்லாமல் அநாதையாக இருந்தது.

பிறகு, அழகர்நம்பி சுடுகாட்டு பணியாளர்களிடம் பேசி தகனம் செய்து விட்டு கிளம்பினார்.

***

காவல்நிலைய வளாகத்தில் கூடி இருந்தவர்கள், "பொய் கேஸ் போட்டு எங்க பிள்ளைங்க வாழ்க்கையை நாசமாக்கிடாதீங்க..." என்று அலறினார்கள்.

"பொய் கேஸ் போடப்போறோம்னு யார் சொன்னா...? சாவு நடந்த இடம்னா அப்படி இப்படித்தான் இருக்கும்னு நீங்களே சொல்லிட்டீங்களாமே...

சட்டப்படி இப்போ இறுதி ஊர்வலத்துல எதெல்லாம் செய்யக்கூடாதோ அதை மட்டும்தான் உங்க ஏரியா பசங்க செஞ்சிருக்காங்க...

குடிசைங்க எரிஞ்ச தெருவுல பாதிக்கப்பட்ட வீட்டுல இருந்த எல்லாரும் ஏதோ வெடிகுண்டு வெடிச்ச மாதிரி சத்தம் கேட்டதாவும், அதுக்கப்புறம்தான் வீடுகள் எல்லாம் தீப்பிடிச்சு எரிஞ்சுட்டதாவும் புகார் கொடுத்து இருக்காங்க.

முறைப்படி இந்த விபரங்களைத்தான் முதல் தகவல் அறிக்கையில பதிவு பண்ணப்போறோம்... விசாரணை முடிஞ்சு முறைப்படி கோர்ட்டுல தாக்கல் பண்ணிடுறோம்...

நீங்க அங்க பார்த்துக்குங்க..." என்று சொன்னபடி நகர்ந்தார்.

கூட்டம் மொத்தமும் ஸ்தம்பித்து, அமைதியாகிவிட, அந்த அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு குரல், "எப்ஐஆர் போடப்போறோம்னு பயமுறுத்துறாருன்னா ஏதோ எதிர்பார்க்குறாருன்னு அர்த்தம்..." என்று கிசுகிசுத்தது அழகர்நம்பியின் காதிலும் நன்றாகவே விழுந்தது.

இப்போது திரும்பி கூட்டத்தைப் பார்த்த அழகர்நம்பி, "யாராவது அஞ்சு பேர் மட்டும் உள்ள வாங்க..." என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

முதலில் சில நிமிடங்கள் ஒருவரும் எதுவும் பேசவில்லை. அழகர்நம்பிதான் அந்த அமைதியை கலைத்தார்.

"இறுதி ஊர்வலம் போன பாதையில சிசி டிவி கேமரா இருக்குற எல்லா இடத்துலயும் பதிவான வீடியோக்களை எடுத்துட்டு வர சொல்லிட்டேன். உங்க பசங்க மேல வழக்கு பதிவு பண்ணி சிறைக்கு அனுப்ப ரொம்ப நேரம் ஆகாது.

மதியம் அந்த பசங்க அக்கம்பக்கத்து வீட்டு வாசல்ல குடிச்சுட்டு தகராறு பண்ணினப்ப பெத்தவங்க நீங்க கண்டிச்சிருக்கலாம். அதுதான் செய்யலை, கான்ஸ்டபிள் வந்து சொன்னப்பவாச்சும் உங்க புள்ளைங்க கிட்ட அமைதியா இருக்கும்படியா அறிவுறுத்தி இருக்கலாம். அந்த பசங்க செஞ்ச எதுவும் தப்பே இல்லைன்னுங்குற மாதிரி நீங்களே ஆதரவா பேசினீங்க...

உங்க புள்ளைங்களுக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்து உங்க பேச்சைக் கேட்டு நடக்குற மாதிரி உங்க பார்வையில வெச்சிருந்தா இன்னைக்கு என்கிட்ட வந்து இப்படி கெஞ்சிகிட்டு இருக்குற அவசியம் ஏற்பட்டிருக்குமா...?" என்று அழகர்நம்பி கேட்ட கேள்விக்கு அந்த நபர்களிடம் பதில் இல்லை. இப்போதும் அமைதியாகவே இருந்தார்கள்.

"இந்த விவகாரத்துல எங்களுக்கு ஒரு பைசா தேவையில்லை.

அந்த வீடுகள் எரிஞ்சதுல பாதிப்பு ரொம்பவே அதிகம். வீட்டுக்கு இருபத்தஞ்சாயிரம் பணம் கொடுத்தா போதும், தென்னங்கீத்து வாங்கி போட்டுகிட்டு அவங்க வாழ்ந்துடலாம்னு விட்டுட முடியாது.

பதிமூணு வீட்டுலயும் என்ன நஷ்டமோ அதை உங்க பொறுப்புல சரி செஞ்சு கொடுங்க... இனி உங்க பசங்க எந்த விசயத்துலயும் அத்துமீறி நடக்காம பார்த்துக்குங்க..." என்றார் அழகர்நம்பி.

வழக்கு பதிவு செய்யப்பட்டால் அது அந்த இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதை அவர்களது பெற்றோர்கள் நன்கு அறிந்திருந்ததால், எரிந்த வீடுகளுக்கு புதியதாக மேற்கூரை அமைத்து வீட்டின் சுவர்களுக்கு வர்ணம் பூசி கொடுத்தார்கள், ஒரு பெண்ணின் திருமணத்திற்கு அனைத்து செலவுகளையும் செய்தார்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், உடைகள், பாத்திரங்கள், புத்தகங்கள், இணையவழி கல்விக்காக ஆண்ட்ராய்டு போன், லேப்டாப் போன்ற அனைத்தையும் வாங்கிக் கொடுத்தார்கள்.

இது மது அருந்தி விட்டு தகாத செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களின் குடும்ப சேமிப்பை கரைத்ததுடன் கணிசமாக புதிய கடன் வாங்க வைத்து அவர்களை கடனாளியாகவும் ஆக்கியது.

இந்த சம்பவத்திற்கு பிறகு இரண்டு மாதம் கழித்து மீண்டும் நியூ நகரில் ஒரு மரணம். புதிதாக நாலைந்து பதின்ம வயது சிறுவர்கள் சட்டையை கழற்றிவிட்டு இறுதி ஊர்வலத்தில் ஆட முயற்சிக்கிறார்கள். அப்போது எங்கிருந்தோ பாய்ந்து வந்த அவர்களின் பெற்றோர், "எதையாச்சும் பண்ணி நஷ்டத்தை உண்டாக்கினா தாங்குற சக்தி இல்லடா..." என்று அறிவுறுத்தி அந்த சிறுவர்களை அமைதியாக இறுதி ஊர்வலத்தில் செல்ல வைக்கிறார்கள்.

***

நன்றி.