• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஆரூர் சரவணா - தேவதை வந்தாள்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
தேவதை வந்தாள்

"ஊர்ல யாருக்காவது புள்ளை பிறந்தாலும் சரி... வளைகாப்புன்னாலும் சரி... உன் பொண்டாட்டி அழுது ஒப்பாரி வைக்கிறான்னு சொல்ற... ரொம்ப ரொம்ப நல்லெண்ணம்தான்... இதை வெளில சொல்லிடாத...

நம்ம சொந்தக்காரங்க யாருமே உன் குடும்பத்துகிட்ட நெருங்க மாட்டாங்க..." என்ற ராஜேஸ்வரியின் குரலில் ஏளனத்துடன் எரிச்சலும் தெரிந்தது.

என் மனைவி இப்படி பேசியதைப் பார்த்து எனக்கே ஒரு மாதிரியாகிவிட, ராம்குமாரின் முகத்தைப் பார்த்தேன். கண்களில் நீர் திரண்டு வெளியே சிந்த தயார் நிலையில் இருந்தது.

"உன் வாய் ஓய்வே எடுக்காதா..." என்று என் மனைவியைப் பார்த்து கேட்டேன். பதிலுக்கு ஒரு முறைப்புதான் பதிலாக வந்தது.

சட்டென்று சமாளித்துக் கொண்ட ராம்குமார், "அத்தே... கல்யாணமாகி ஆறு வருசமாகியும் குழந்தை இல்லாம இருக்கோம். உறவுக்காரங்க மட்டுமில்லாம, நண்பர்கள் குடும்ப விசேசத்துல கூட தலை காட்ட முடியலை. குழந்தை இல்லையான்னு ஆளாளுக்கு விசாரித்து ஆலோசனை சொல்றாங்க. அதில் அக்கறையை விட ஏளனம்தான் அதிகமா இருக்கு. அதை என் மனைவியால தாங்கிக்க முடியல.

அதனாலதான் எந்த விழாக்களுக்கும் வர மாட்டேங்குறா... அவளை எப்படி சமாதானப்படுத்துறதுன்னு தெரியலை. இதை யார்கிட்ட சொல்லி அழறதுன்னு கூட புரியாம நான் இருக்கேன். நீங்க கூட இதைப் புரிஞ்சுக்காம எங்களை தப்பா பேசுறீங்களே..." என்றான் ராம்குமார்.

"கோவிச்சுக்காத மருமகனே... உன் கல்யாணத்துக்கு வந்துட்டு போனது. அப்புறம் உங்க வீட்டுப்பக்கமே நான் வரலை... ஏதாவது விசேசத்துக்கு இந்த ஊர்ப்பக்கம் வந்தா முகூர்த்தம் முடிஞ்ச கையோட ஆட்டோவுல ஏறுவோம்... இங்க மண்டபத்தை காலி பண்றதுக்குள்ள நாங்க 200 கிலோ மீட்டர் தாண்டிப் போய்கிட்டு இருப்போம்... காரணம் இவர் வேலை அப்படி..." என்று என்னை வம்புக்கிழுத்து நிறுத்தினாள்.

"இப்போ இவர் வேலையில இருந்து ஓய்வு பெற்று நாலு மாசம் ஆச்சு. இனிமே நாங்க பறந்து பறந்து ஓட வேண்டியதில்லை. உங்க குடும்பத்துல இருக்குற பிரச்சனை என்னன்னு எனக்கு புரிஞ்சுடுச்சு... உன் மனைவியோட மன வருத்தத்தை போக்குறது சுலபமான விசயம். இப்பவே உன் வீட்டுக்கு போவோம்... வா!" என்றாள் என் மனைவி.

***********

தளத்துக்கு 10 வீடுகளுடன் மூன்று தளங்கள் கொண்ட காலனி அது. தரைதளத்தில் நான்காம் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான் ராம்குமார்.

கதவைத் திறந்தவளின் முகத்தில் எங்களைப் பார்த்ததும் கேள்விக்குறி. அவளை மேலே குழம்ப விடாமல் ராம்குமார், "அபிநயா... இவங்க என் அத்தை, மாமா... நம்ம கல்யாணத்துக்கப்புறம் இப்பதான் பார்க்குறேன். சோபனா வளைகாப்புக்கு போயிருந்தேன்ல. அங்க இவங்களும் வந்திருந்தாங்க." என்றான்.

இதைக் கேட்ட அபிநயாவின் முகம் மாறிவிட்டாலும், "வாங்கம்மா... வாங்கப்பா..." என்று உள்ளே அழைத்தாள். நானும் ராஜேஸ்வரியும் உள்ளே நுழைந்ததும் எங்கள் பின்னாலேயே இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று கையில் பொம்மையுடன் ஓடி வந்து வாசலில் நின்று பார்த்தது. அதைப் பார்த்த அபிநயா சட்டென்று கதவை சாத்தி தாழிட்டு விட்டு, "உட்காருங்க... சாப்பிட ஏதாவது கொண்டு வர்றேன்..." என்று உள்ளே செல்ல எத்தனித்தாள்.

அப்போது என் மனைவி, "நான் இருந்து சாப்பிட்டுட்டு போறேன். நீ முதல்ல இங்க வந்து உன் புருஷன் பக்கத்துல உட்காரு... முக்கியமா ஒரு சேதி சொல்லணும்." என்றாள்.

அவள் மறுப்பேதும் சொல்லாமல் கணவன் பக்கத்தில் அமர்ந்தாள்.

"குழந்தை இல்லாதவ என் புள்ளைய கொஞ்சினா கண்ணு பட்டுடும்னு யாராவது எதாவது சொல்லிடுவாங்கன்னுதானே அந்த குழந்தையை உள்ளே விடாம கதவை சாத்தின... முதல்ல இந்த மனநிலையை மாத்தும்மா... எல்லாரும் அந்த மாதிரி பேச மாட்டாங்க. நமக்கு குழந்தை இல்லன்னா என்ன... மற்ற குழந்தைகள் கிட்ட அந்த அன்பை சேர்த்து காண்பிப்போம்... அப்படின்னு நினைக்கணும்.

இப்படி குழந்தையை உன் மனசுக்குள் முதல்ல விடும்மா... பிறகு அக்கம்பக்கத்துல உள்ள குழந்தைகளை உன் வீட்டுக்குள் விடு. இந்த பாசமான மனநிலை இருந்தா ரொம்ப சீக்கிரத்துல உனக்குள்ளேயும் குழந்தை உருவாகுற வாய்ப்பு இருக்கு. குத்திக்காட்டுறதா நினைச்சு கோபப்படாம நான் சொல்றதை யோசிச்சுப் பாரும்மா..." என்றாள்.

அப்போது அபிநயா முகத்தில் ஒருவித மாற்றம். வேகமாக எழுந்து சென்று கதவைத் திறந்தாள். சற்று முன் வந்த அந்த பெண் குழந்தை வெளியே சற்று தள்ளி நின்று இங்கேயே பார்த்துக் கொண்டிருந்தது.

பாப்பா... இங்க வாம்மா..." என்று வாஞ்சையோடு அபிநயா அழைத்ததும் அந்த குழந்தை எதையும் யோசிக்காமல் ராம்குமாரின் வீட்டுக்குள் நுழைந்தது. ‘தேவதை வந்தாள்’ என நான் நினைத்துக் கொண்டேன். என் மனைவியின் முகத்திலும் புன்னகை.

***

நன்றி.