உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -26
மறுநாள் காலையில் சாம்பவியின் அலுவலகத்தில் இருந்து சிற்பிக்கு கைப்பேசியில் அழைப்பு வந்தது.இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் கோவாவிற்கு செல்ல வேண்டி இருந்தது.
அங்கே தான் சங்கீத மேளாவுடைய குழுவினரும் மற்ற வேறு சில போட்டியாளர்களின் நேரடி பாடல் கச்சேரியும் பின்பும் போட்டியும் இருப்பதால் அதற்கான வேலைகள் முன்னேற்பாடுகள் அவர்களோடு மற்ற குழுக்களோடு சேர்ந்து பாட வேண்டிய விவரங்கள் எல்லாம் தயார் செய்ய வேண்டிய பொறுப்பு சிற்பிகாவிற்கு இருந்தது.
அதனால் சபரியுடன் அவள் வெளியே செல்ல வேண்டி இருந்தது.சாம்பவி ஏதோ முக்கியமான வேலைக்காக அவள் வெளிநாட்டிற்கு கிளம்பி இருந்தாள்.அதனால் இவை எல்லாவற்றையும் இப்போது இவர்களின் பொறுப்பாக மாறியது.
அதனால் சிற்பி தன்னுடைய கைப்பேசி, கைப்பை போன்றவற்றை செழியன் மூலமாக வாங்கிக் கொண்டாள்.அவள் வரமாட்டாள் என்ற விவரத்தை நிரஞ்சனை அழைப்பில் அழைத்து பேசி இருந்தார் சபரி.
இன்னும் ஒருவாரம் இருப்பதால் இங்கே நால்வரும் பயிற்சியில் இருந்தனர்.நிரஞ்சன் ஒவ்வொரு இரவும் தன் கையில் கைப்பேசியை வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான்.ஆனால் சிற்பி கைப்பேசியில் அழைக்கவில்லை.மற்ற மூவரும் பொதுவாக அவளிடம் எப்போதும் பேசி நலம் விசாரித்துக் கொண்டனர்.
சிற்பியின் எண்ணமோ ‘மத்தவங்க எல்லாம் போன் போட்டு பேசுறாங்க? இவனுக்கு மட்டும் என்னவாம் போன் போட்டு பேசுறத்து திமிர் பிடிச்ச சிடுமூஞ்சி’என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள். இப்படியே மூன்று நாட்கள் சென்று இருந்தது.
அன்றைய இரவு சிற்பி பாடிய அந்த இரண்டு பாடல்களையும் நிரஞ்சன் தன்னுடைய கைப்பேசியில் பாதுகாத்து வைத்திருந்தவன் தன்னுடைய அறையில் இருந்த ஒலிபெருக்கியில் போட்டு கேட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது ஏதேச்சையாக உள்ளே வந்த பார்த்திபன் அந்த குரலின் இனிமையைக் கேட்டு “நிரஞ்சன் இது யாருடைய குரல் ரொம்ப ப்ரெஷ்ஷா இருக்கு” என்று கேட்டான்.
உடனே நிரஞ்சன் “உனக்கு இந்த வாய்ஸ் பிடிச்சு இருக்கா பார்த்தி” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.
“ஆமாம் நல்லா இருக்கு நிரஞ்சன் யாரு அது?” என்று ஆர்வமாகக் கேட்டான்.
“தெரியலை நானும் அந்த குரலுக்கு சொந்தக்காரியைத் தான் தேடிட்டு இருக்கேன் பார்க்கலாம்”
“அப்போ யாரு உனக்கு இந்த ஆடியோவை அனுப்புனாங்க?”
“நானே கண்டுபிடிச்சேன்”
“எங்கே?”
“ரீல்ஸ்ல சீக்கிரம் ஆளை கொண்டு வந்துடலாம்” என்றான்.
பார்த்தி “சரி இந்த ஆடியோவை எனக்கு அனுப்பி விடு வேற சாங் இருக்கா?”
“இருக்கு ஆனால் உனக்கு எதுக்கு இந்த ஆடியோ?”
“நிரஞ்சா நம்ம இந்த சங்கீத மேளாவுடைய கான்ட்ரெக்ட் முடிஞ்சதும் நம்மளுடைய புது ஆல்பம் ரீலிஸ் பண்ணனும் அப்போ வித்தியாசமா ஒரு பெண்ணோட குரலையும் சேர்த்து பண்ணால் வித்தியாசமா இருக்கும்ல அதுக்கு இந்தக் குரல் ரொம்ப பொருத்தமா இருக்கும் எனக்கு அந்த கேர்ள்ஸ் க்ரூப் பார்த்ததும் இந்த எண்ணம் வந்துட்டே இருந்தது.இப்போ இந்தக் குரல் கேட்கவும் செட் ஆகும்னு முடிவாகிட்டேன்” என்றான்.
பார்த்தி சொன்ன யோசனை நிரஞ்சனுக்கு சரியென்று பட்டது.அதனால் ஆழ்ந்த யோசனையில் மூழ்கிப்போய் இருந்ததான்.அப்போது உள்ளே வந்த சஹா “என்ன பேசிட்டு இருக்கீங்க?” என்று கேட்க பார்த்தி அவர்களுக்குள் நடந்த விஷயத்தை சொன்னான்.
சஹா நிரஞ்சனிடம் அந்த பாடலைக் கேட்க அவனும் போட்டு விட்டான்.சஹாவும் கேட்டு “ம்ம்… நல்லா இருக்கு ஸ்ருதியின் ஏற்ற இறக்கங்கள் பக்காவா இருக்கு கண்டிப்பா இவங்க முறையான பயிற்சி செய்தவங்களாகத் தான் இருக்கும்” என்றான்.
நிரஞ்சனுக்கு தன் நண்பர்கள் மேல் இன்னும் நம்பிக்கை அதிகமானது.அவர்களுக்குள் இருக்கும் திறமை கண்டு வியந்து தான் போனான்.
சஹா யோசனையோடு “இந்தக் குரலை நான் எங்கேயோ கேட்டிருக்கேன் ஆனால் எந்த இடம்னு சரியா நினைவு இல்லை ஏன்னா அந்த குரல் திடீர்னு நின்னுடுச்சு” என்றான்.
நிரஞ்சன் மனதினுள் ‘சிற்பி நீ சஹாகிட்டே பாடிக் காட்டி இருக்கியா? என்கிட்ட என்னன்னா யாருக்கும் தெரியாதுன்னு சொன்னே நேர்ல பார்த்தேன் இருக்கு கச்சேரி’என்று நினைத்தான்.
நான்காவது நாள் காலையில் இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது சிற்பியின் எண்ணிலிருந்து நிரஞ்சனுக்கு ஒரு அழைப்பு வந்தது.தன் கண்களால் நம்ப முடியாமல் ஒருமுறை உற்றுப் பார்த்தவன் ‘என்ன சிற்பி போன் போடுகிறாள் நம்ப முடியலையே’ என்று அவன் யோசனையோடு பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட காந்தன் “முதல்ல போனை எடுத்து பேசு” என்றதும் இவனோ தயக்கத்தோடு “ஹலோ” என்றான்.
மறுமுனையில் “ஹலோ நான் சிற்பி பேசுறேன்”
“தெரியுது சொல்லுங்க” என்று மரியாதையாக சொல்லவும் மூன்று பேரும் இவனை பார்த்தார்கள்.அவனோ தனது பார்வையை மாற்றிக் கொண்டபடி “இன்னைக்கு ஒரு மீட்டிங் இருக்கு நீங்க ஆபிஸ்க்கு வந்துடுங்க”
“நீங்க சொன்னால் நான் உடனே கேட்கணுமா?” கிண்டலாகக் கேட்டான்.
அவளோ “ஆமாம் நான் சொன்னால் நீங்க கேட்டுத் தான் ஆகனும் ஏன்னா சாம்பவி மேம் என்கிட்ட முக்கியமான பொறுப்புக்களை கொடுத்திட்டு போய் இருக்காங்க அதனால ஒழுங்கா வர்ற வழியைப் பாருங்க மீட்டிங் சரியா பன்னிரெண்டு மணிக்கு வந்துடுங்க” என்று கைப்பேசியை வைத்து விட்டாள்.
நிரஞ்சனோ “ஹலோ ஹலோ” என்று கைப்பேசியை பார்க்க அவளோ அழைப்பினை துண்டித்து இருந்தாள்.மூவரும் அவனைப் பார்த்து சிரித்தார்கள்.நிரஞ்சன் “ஏன்டா சிரிக்கிறீங்க?”
“எப்பவும் எங்க எல்லோரையும் நீ கலாய்ப்பே இப்போ உன்னையும் மிரட்ட ஒரு ஆளு சரி பார்ப்போம் எவ்வளவு தூரம் போகுதுன்னு” என்று பார்த்தி சொல்லி சிரிக்க மற்ற இருவரும் அதை ஆமோதித்தனர்.
நிரஞ்சனோ “அவ சொன்னா நான் உடனே போகனுமா? நான் போக மாட்டேன்” என்றான்.
சஹா “இந்த பிடிவாதம் எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்குதுன்னு பார்க்கலாம்” என்று சொன்னான்.நிரஞ்சன் “அதெல்லாம் ஒன்னும் மாற மாட்டேன்” என்று பயிற்சியை ஆரம்பித்தார்கள்.
நேரம் பதினொன்று நெருங்கிக் கொண்டிருந்தது.எழுந்து தண்ணீர் குடிக்கச் சென்றவன் தன் கைப்பேசியில் மணியை பார்த்து விட்டு அமைதியாக உட்கார்ந்தான்.
இன்னும் கொஞ்ச நேரம் சென்று இருந்தது.நிரஞ்சனின் கைப்பேசி திரும்பவும் அழைத்தது.
“ஹலோ யாரு?” புது எண்ணாக இருந்தது.
மறுமுனையில் “நான் சிற்பி பேசுறேன் என் போன்ல சார்ஜ் இல்லை அதான் கிளம்பிட்டீங்கல்ல”
“ம்ம்… வந்துட்டு இருக்கேன்” என்றான்.அவளோ “சீக்கிரம் வாங்க” என்று கைப்பேசியை வைத்து விட்டாள்.மூவரும் அவனையே பார்த்தனர்.
நிரஞ்சனோ “அது முக்கியமான விஷயமாம் நான் வந்தே ஆகனும்னு” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் “அப்படின்னு சிற்பி சொன்னாள்னு நாங்க நம்பனும் அதானே” என்று சஹா கேட்கவும் நிரஞ்சனோ “டேய் பார்த்தி இவன் வாயை மூட சொல்லுடா எப்போ பார்த்தாலும் எதாவது சொல்லிட்டு நீங்க ப்ராக்டீஸ் பண்ணுங்க நான் வந்து ஜாயிண் பண்ணிக்கிறேன்” என்று அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டான்.
நிரஞ்சன் செல்வதையேப் பார்த்துக் கொண்டிருந்த சஹா “காந்தா இந்த நிரஞ்சன் இருக்கிறதைப் பார்த்தால் ஏதோ ஒன்னு சரியில்லைன்னு படுது பார்க்கலாம்” என்றான்.
காந்தனோ “ம்ம்… விடு பார்த்துக்கலாம்” என்றான்.
நிரஞ்சனுக்கு சிற்பியை சந்திப்பதால் மனம் முழுவதும் ஒரு ஆவல் நிறைந்து இருந்தது.அவள் சொன்னது போலவே நேரத்திற்கு சரியாக வந்து இருந்தான்.
சங்கீத மேளாவுடைய நிறுவனத்தின் வாயிலில் வந்து தனது வாகனத்தை நிறுத்தவும் அங்கே சிற்பி நின்றுக் கொண்டிருந்தாள்.
இவன் வண்டியிலிருந்து கீழே இறங்கவும் “வாங்க நிரஞ்சன் நேரமாகுது” என்று அவனை அவசரமாக அழைத்தவள் “இந்த அரையிறுதிப் போட்டியில் கலந்துக்கிற எல்லா போட்டியாளர்களும் சேர்ந்து தான் கோவாவில் நடக்கப் போற நிகழ்ச்சியை நடத்தப் போறீங்க அதனால அன்னைக்கு நாம சந்திச்ச போட்டியாளர்களோடு சேர்ந்து உங்க பெர்பாமன்ஸ் இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க அப்போத் தான் அவங்ளோட ப்ளஸ் மைனஸ் பத்தி தெரிஞ்ச முடியும்னு சாம்பவி மேம் சொன்னாங்க” என்று அவள் பேசிக் கொண்டே வந்தாள்.
அவனோ அவளையேப் பார்த்துக் கொண்டு வந்திருந்தான்.அவனிடம் இருந்து பதில் வராததால் திரும்பி நிரஞ்சனைப் பார்த்தாள்.அவனோ அவளின் மீதான பார்வையை விலக்காமல் இருந்தான்.
அவனின் பார்வையில் ஒருநொடி அப்படியே நின்றவளுக்கு ஏனோ ஒருவிதமான கூச்சம் வந்தது.அவளைப் பார்த்து “சரி நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
அவனின் பதிலைக் கேட்டவள் எதுவும் சொல்லாமல் நேராக நடக்க ஆரம்பித்தாள்.அவளின் பின்னாலேயே இவனும் சென்றான்.எல்லோரும் அப்பொழுது தான் அறையை நோக்கி வந்துக் கொண்டிருக்க ஒவ்வொருத்தராக தன்னை அறிமுகப்படுத்தியவாறு உள்ளே நுழைந்தான்.
அவனுக்கு அருகினில் சிற்பி நின்றுக் கொண்டிருந்தாள்.
முதலில் ஒவ்வொருவராக தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
எல்லா போட்டியின் இசைக்குழுவின் மேலாளர்கள் வந்து இருந்தார்கள்.ஆனால் சங்கீத மேளாவின் மேலாளராக நிரசஞ்சன் தான் பேச வேண்டியிருந்தது.
அதனால் எல்லோரும் ஒருவிதமான மெத்தனத்தில் இருந்துக் கொண்டனர;
நிரஞ்சன் அவர்கள் கேட்ட எல்லா கேள்விக்கும் தெளிவான பதிலைச் சொன்னா.அதே போல் தனது குழுவினைப் பற்றிய விளக்கங்களையும் சொன்னான்.ஒவ்வொரு குழுவின் இசை நிகழ்ச்சி விவரங்கள் வரவும் சிற்பி சொன்னது போல நிரஞ்சன் பேசி முடித்தான்.
எல்லோருக்கும் மிகுந்த திருப்தியாக இருக்க சந்திப்பு நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்து இருந்தது.சிற்பி மற்றவர்களிடம் நின்று பேசிக் கொண்டிருந்தாள்.
நிரஞ்சன் பார்த்து விட்டு அங்கிருந்து நேராக ஒரு ஓரமாக நின்றுக்
கொண்டிருந்தான்.எல்லோரும்
சென்ற பின் நேராக அறையில் தேவையான கோப்புகளை எல்லாம் சரியாக எடுத்து வைத்து விட்டு வெளியே வந்தாள்.
நிறுவனத்தின் வாசலுக்கு வரவும் அங்கே நிரஞ்சன் தன்னுடைய இருசக்கர வண்டியில் நின்றுக் கொண்டிருந்தான்.சிற்பிக்கு ஒருவிதமான பதற்றமாக இருந்தது.
நிரஞ்சன் “சிற்பி நான் வேணும்னா வீட்டுல டிராப் பண்ணவா?”
அவளோ “வேண்டாம் நானே போய்கிறேன்” என்றாள்.
நிரஞ்சன் “சரி” என்று தன் கிளம்பும் பொழுது சிற்பி “நீங்க எதுக்காக இவ்வளவு நேரமா வெயிட் பண்ணுறீங்க?”
அவனோ சிரித்துக் கொண்டே “உனக்காகத் தான் வெயிட் பண்னேன்” என்றான்.அவளுக்கோ சிரிப்பு வந்தது.அதை வெளியே காட்டிக் கொள்ளாதவளைப் போல “இதெல்லாம் எதுக்கு?”
நீண்ட பெருமூச்சு விட்டவன் “சத்தமா சொல்லனுமா?”
“இதெல்லாம் சரியில்லை”
“சரியில்லை தான் நீ தான் புரிஞ்சுக்கனும்” என்றான் சாதாரணமாக…
அவளோ “இப்போ நீங்க கிளம்புறீங்களா?”
“நீ போற வரைக்கும் வெயிட் பண்ணுவேன் அப்புறம் வீடு வரைக்கும் பாலோ பண்ணுவேன்”
“என்ன மிரட்டுறீங்களா?”
“ப்ச் நான் செய்றதை சொன்னா மிரட்டலாகத் தான் தெரிஞ்சால் என்னால ஒன்னும் செய்ய முடியாது”
அவளோ பதில் பேசாமல் நடக்க ஆரம்பித்தாள்.தன் வண்டியை ஓட்டாமல் தள்ளிக் கொண்டு வந்தான்.தலையில் தலைக்கவசச் அணிந்துக் கொண்டான்.
அவளுக்கோ என்னசெய்வதென்றே தெரியவில்லை.கொஞ்சம் வேகமெடுக்கவும் அவனும் வேகமாக வந்தான்.
பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றாள்.நிரஞ்சன் “என்ன உன் அத்தான் வரலையா?”
அவளோ அவனைப் பார்த்து முறைத்தாள்.அவனோ “வரலையா?” என்றதும் பேருந்து வேறு வராமல் இருந்தது.பேருந்துக்காக நிற்பவர்கள் சிற்பியையும் அங்கே ஓரமாக வண்டியை வைத்து நிற்கும் நிரஞ்சனையும் மாறி மாறி பார்த்தனர்.
இதற்கு மேல் பொறுக்க முடியாமல் சிற்பி அவனின் கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“கொஞ்சம் தொலைவில் உள்ள காப்பி ஷாப்பிற்கு அருகில் வாங்க” என்று அனுப்பியதும் அதைப் பார்த்தவன் வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக சென்று இருந்தான்.
அவன் சென்று ஐந்து நிமிடம் கழித்து சிற்பியும் அவள் சொன்ன காபி கடைக்குச் சென்றாள்.அங்கே அவன் நின்றுக் கொண்டிருக்க சிற்பி “ஏன் இப்படி பண்ணுறீங்க நிரஞ்சன்?” கொஞ்சம் கோபமாகக் கேட்டாள்.
அவனோ “நீ தான் என்னை இப்படி நடந்துக்க வைக்கிறே நீ வண்டியில் வந்து இருந்தால் இது நடந்தே இருக்காது” என்றான்.
அவளோ “அது எப்படி நான் உங்களோடு வர முடியும்?”
“ஏன் இதுக்கு முன்னாடி வந்தது இல்லையா?”
“வந்து இருக்கேன் அதுவும் கார்ல எல்லோரும் இருக்கும் போதும்” என்றாள்.
அவனோ சிரித்துக் கொண்டே “இப்போ நான் வித்தியாசமாக நினைக்கலை நீ தான் நினைக்கிறே” என்றான்.
இதற்கு மேல் அவனிடம் பேசி ஜெயிக்க முடியாது என்று நினைத்தவள் “வாங்க போகலாம்” என்று சொல்லவும் ‘ஹய்யோ ஜாலி’ என்று மனதில் நினைத்தவன் தன் வண்டியை ஆரம்பிக்கவும் பின்னால் வந்து கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தாள்.
நிரஞ்சன் “இன்னைக்கு மீட்டிங் நல்ல படியா முடிஞ்சுதா?”
“ம்ம்… ரொம்ப தாங்ஸ் நீங்களும் இதுக்காக எனக்கு உதவி செய்து இருக்கீங்க”
“பரவாயில்லை”
அவளோ மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள்.கண்ணாடி வழியே பார்த்தான்.
“பசிக்குதா?”
“இல்லை”
“பொய் சொல்லாதே!”
“இன்னைக்கு உனக்கு சாப்பிட நேரமே இல்லையாமே உன்னோட கோ வொர்க்கர் பேசிட்டு இருந்ததைக் கேட்டேன்.என்கூட வர்றதுனால யோசிக்கிறியா?”
“இல்லை எதுக்கு?” என்று அவள் சொல்ல வரவும் அவனோ “என்னை எப்பவும் போல ப்ரெண்ட்டாகவோ இல்லைன்னா கோ வொர்க்கார நினைச்சுக்கோ எதுவும் பெருசா தெரியாது” என்று அவன் பேசி முடிக்கும் முன்னே “போகலாம்” என்றாள்.
ஒரு சின்னதாக உள்ள ஒரு கடையில் நிறுத்தினான்.
அவளோ யோசனையாக அவனோடு வந்தவளைப் பார்த்து “இந்த மாதிரி கடைக்கு கூடிட்டு வரேன்னு யோசிக்கிறியா?’’
அவளோ இல்லை என்று தலையசைக்கவும் “இங்கே நல்லா இருக்கும்” என்றான்.
பக்கத்தில் சில தெருவோரக் கடைகள் இருந்தது.அதில் காலணிகள் இருக்கவே “கொஞ்சம் வெயிட் பண்ணுறீங்களா? நிரஞ்சன் இந்தக் கடையில் எதாவது வாங்கிக்கிறேன்” என்று சில காலணிகளை எடுத்துப் பார்த்தாள்.
அவனோ “இரு நான் பார்க்கிறேன்” என்று இரண்டு ஜோடி காலணிகளை எடுத்து “இதை போட்டுப் பாரு நல்லா இருக்கும்” என்று குனிந்து அவளது கால் பக்கத்தில் அவன் எடுத்த காலணியைப் போட்டு “சீக்கிரம் போடு பாரு சரியா இருக்கான்னு பார்க்கலாம்” என்றான்.
அவளோ “நிரஞ்சன் ப்ளீஸ் எந்திரிங்க” என்று சொல்ல அவனோ “நீ இப்போ போட்டு பார்க்கிறியா? இல்லை நானே போட்டு விடட்டுமா?” என்று கேட்டான்.
அவளோ பதறிப்போய் காலணியில் தன் பாதங்களை வைத்து போட்டு பார்த்தாள்.சரியாக இருந்தது.
இரண்டுக்கும் அவனே பணத்தைக் கொடுத்தான்.
அவளோ “எதுக்காக திரும்ப திரும்ப இப்படி என்னை சங்கடப்படுத்துறீங்க நிரஞ்சன்?” என்று கவலையாகக் கேட்டாள்.
“அன்னைக்கு என்னை காப்பாத்தி விட்டியே அதுக்காக நான் கொடுக்கிற சின்ன கிப்ட்”என்று சொல்லவும் அவளால் பதில் பேச முடியவில்லை.
நால்வரும் கோவாவில் பயிற்சி செய்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுடன் அந்த
பெண்களின் அணியும் சேர்ந்து பாட்டு கச்சேரி நடத்துவதால் ஒன்றாக பாடிக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது சிற்பி உள்ளே வரவும் சஹா மெதுவாக கண் அசைவினால் பார்த்தியைப் பார்த்து “நிரஞ்சனோட ஆளு வந்துட்டாங்க” என்று உதட்டை அசைத்தான்.
அதைக் கேட்டு பார்த்தி ஆமாம் என்பது போல் சைகைச் செய்ய நிரஞ்சன் இருவரையும் பார்த்து முறைத்தான்.காந்தன் மூவரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க சிற்பி காந்தனைப் பார்த்து “எதுக்காக சிரிக்கிறீங்க காந்தன்?” என்று கேட்க அவனோ புன்னகையையே பதிலாகத் தந்தான்.
சிற்பியைப் பார்த்து நிரஞ்சன் வரவும் அவள் கையில் கொண்டு வந்திருந்த சில பொருட்களை பார்த்து “நாங்க சொன்னது எல்லாம் வாங்கிட்டு வந்துட்டியா?” என்றதற்கு “ம்ம்… எல்லாம் சரியா வாங்கிட்டேன்” என்று சொல்ல காந்தன் “சரி வந்து உட்காரு நாம எல்லோரும் ஒன்னாகவே சாப்பிடலாம்” என்று அழைக்க ஐந்து பேரும் கொஞ்சம் தள்ளி போனார்கள்.
இதை எல்லாம் பெண்கள் குழுவினரும் பார்த்தனர்.அவர்கள் நால்வரும் சிற்பியை அவர்களில் ஒருவராக நடத்துவது அவர்களுக்கு ஒருவிதமான பொறாமையை தந்தது.