அமுதம் – 3
நயனிகாவின் கையில் மோதிரம் அணிவித்ததோடு அவளை திரும்பியும் பாராமல் மணமேடையில் இருந்து இறங்கிவிட்டான் அபய் ஸ்ரீவத்ஸன்.
"அபய் நலங்கு வைக்கணும் இரு" என்ற தாயின் குரலோ "மச்சான் இன்னும் கொஞ்ச நேரத்துல ரிசெப்ஷன் ஸ்டார்ட் ஆகிடும்டா" என்று அவனை துரத்திய நண்பனின் வார்த்தைகளோ அவன் காதில் விழுந்தது போலவே தெரியவில்லை.
அபய் நடவடிக்கையில் மண்டபத்தில் பெரும் சலசலப்பு எழுந்திட அவனிடம் பணிபுரியும் பேராசிரியர்கள் முதற்கொண்டு மாணவர்கள் வரை அவன் மண்டபத்தில் இருந்து வெளியில் செல்வதை பார்த்திருந்தனர்.
"நத்திங் ஸீரியஸ்! ஒரு எமெர்ஜென்சி சீக்கிரம் வந்துடுவோம் உட்காருங்க" என்று சுதர்ஷன் தான் அவர்களிடம் சமாளித்து விட்டு நண்பனை பின் தொடர்ந்தான்.
அபய் சஞ்சனா காதல் அரசால் புரசலாக கல்லூரியில் பணிபுரிபவர்களுக்கு தெரிந்திருந்தாலும் யாருமே அபய்யிடம் இதுவரை கேட்டதில்லை.. கேட்க துணிவுமில்லை! அத்தனை கடுமையான நிர்வாகி அவன்!
சிறு தவறையும் பொறுத்து கொள்ள மாட்டான். கல்லூரியின் சட்ட திட்டங்களை மதிக்காதவர்களை பாரபட்சமே பார்க்காமல் எச்சரிப்பதோடு அதை தொடரும் பட்சத்தில் அவர்களை நீக்கவும் அவன் தயங்கியதில்ல.
சஞ்சனாவின் தோழியான நயனிக்கு மட்டுமே அவர்கள் காதலின் உன்னதமும் ஆழமும் நன்கு தெரியும். தங்கள் காதல் திருமணத்தில் முடியும் வரை கல்லூரியில் விஷயம் கசியக்கூடாது என்று அபய் திட்டவட்டமாக சொல்லி விட்டதால் அவர்களின் சந்திப்பு பெரும்பாலும் வெளி இடங்களில் தான் நிகழும்.
சஞ்சனா மத்திய தர குடும்பத்தை சேர்ந்தவள். பெற்றோருக்கு ஒரே மகள்! அபய் கல்லூரியில் சேர்ந்த பின்னர் அவளுக்கு அவன் அறிமுகம். அதுவும் முதல் சந்திப்பிலேயே கல்லூரியில் போதை மாத்திரைகளை உட்கொண்டு மாணவிகளை வம்புக்கிழுக்கும் மாணவர்களை பற்றி புகாரளிக்க தான் அவனிடம் சென்றாள்.
"சொன்னா கேளு சஞ்சு, அவசரபடாத பொறுமையா விசாரிச்சுட்டு அப்புறம் கம்ப்ளைன்ட் பண்ணலாம்" என்று நயனி சொன்ன போதும் அவள் பேச்சை கேட்காமல் அராஜகம் செய்யும் மாணவர்களுக்கு எதிராக புகாரளித்து அவர்களின் விரோதத்தை சம்பாதித்து இருந்தாள்.
அதேபோல "கரெஸ்ஸிடம் பேசறப்போ கொஞ்சம் மெல்லமா பேசுடி" என்ற நயனியின் வார்த்தைகளை அலட்சியபடுத்திவிட்டு எவ்வித பதட்டமும், பயமும் இல்லாமல் அபய்யிடம் அவள் பேசிய விதத்தில் அவனே அசந்து போயிருந்தான்.
முதல் சந்திப்பில் ஸ்ரீவத்ஸன் பேசிய விதத்திலும் அவன் எடுத்த நடவடிக்கையிலும் சஞ்சனா மனதை பறிகொடுக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யப்பட வேண்டும். அதிரடியாக மாணவர்களை நீக்கியவன் கையோடு போலீசுக்கும் தகவல் கொடுத்து கல்லூரியில் அவனையும் மீறி பரவி இருக்கும் கஞ்சா கலாச்சாரத்தின் பின்னணியை கண்டறிய பெரிதும் உதவியிருந்தான்.
இதை அறிந்தவள், "நம்ம கரெஸ் ஜெம் ஆஃப் எ பெர்சன் நயனி" என்று தோழியிடம் அவனை வானளவு புகழ்ந்து அந்த வாரத்திலேயே ஸ்ரீவத்ஸனை விரும்புவதாகவும் சொல்லி விட்டாள். இதை அறிந்த நயனிக்கு பெரும் அதிர்ச்சி.
"சஞ்சு நாம காலேஜ்ல சேர்ந்து ஒரு மாசம் கூட முடியலை, கரெஸ்சை இரண்டு வாட்டி தான் மீட் பண்ணியிருக்கோம். அதுக்குள்ள காதல்னு சொல்ற..."
"ஏன்டி காதல் என்ன நேரம், காலம் பார்த்தா வரும்?! எனக்கு அவரை அவரோட குணத்தை, நேர்மையை, அதிரடியை ரொம்ப பிடிச்சிருக்கு.. கல்யாணம் பண்ணினா இப்படி பட்ட ஒருத்தரை தான் பண்ணனும்" என்றதில் ஸ்தம்பித்து போயிருந்தாள் நயனிகா.
செல்லும் அபய் ஸ்ரீவத்ஸனை பார்த்தபடி நயனிகா அமர்ந்திருக்க, "என்ன ஸார் இதெல்லாம்? மாப்பிள்ளை போற வேகத்தை பார்த்தாள் நாளைக்கு நயனி கழுத்துல தாலி கட்டுவாரான்னு சந்தேகமா இருக்கு" என்றார் சேதுராமன்.
"எதுக்கு இந்த சந்தேகம் சேது? நான் சொன்னா சொன்னது தான்..."
"எல்லாரும் வந்துட்டாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல ரிசெப்ஷன் ஆரம்பிக்கணும். என் பொண்ணு மட்டும் தனியா மேடையில் நின்னா நல்லா இருக்குமா நீங்களே சொல்லுங்க" என்றவருக்கு எங்கே திருமணம் நடக்காமல் போய் அவருக்கு கிடைக்க வேண்டிய இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற கவலை.
"ரிசெப்ஷனுகுள்ள அபய் இங்கே வந்துடுவான் போய் ஆக வேண்டிய காரியத்தை பாருங்க.."
"சொந்த பந்தமெல்லாம் என்னன்னு கேட்கிறாங்க. என்ன பதில் ஸார் சொல்றது..."
"முக்கியமான விஷயமா காலேஜ்க்கு போயிருக்கான் அரை மணி நேரத்துல வந்துடுவான்னு சொல்லுங்க" என்றார்.
இங்கே நயனிகாவிற்கு நலங்கு வைத்து முடிக்க சக்கரவர்த்தி சொன்னது போலவே அடுத்த அரை மணி நேரத்தில் அபய் மண்டபத்திற்கு வந்திருந்தான். நயனிகாவை உடை மாற்றி அழைத்து வர ரிசெப்ஷன் தொடங்கியது..
விருந்தினர்களிடம் இன்முகத்தோடு பேசினாலும் அவன் மனம் உலைக்கலனாக கொதித்து கொண்டிருப்பதை நயனி நன்கு அறிந்திருந்தாள். ஒருவழியாக கூட்டம் குறைந்து மணமக்களை உண்பதற்காக அழைத்து சென்றனர்.
டைனிங் ஹாலில் இருந்த ஆட்களை கண்டு தன்னை நிதானித்தவன் பேருக்கு அமர்ந்து கொறித்து விட்டு ஐந்து நிமிடத்திலேயே எழுந்துவிட்டான். தன்னை நீங்கி செல்பவனை நயனிகா ஒரு நொடி பார்த்திருந்தாளே தவிர்த்து உணவை முடித்த பின்னரே தன் அறைக்கு திரும்பினாள்.
"டோர் லாக் பண்ணு நிதி.." என்றவள் உடுத்தியிருந்த புடவையை களைந்துவிட்டு நைட்டியோடு அமர அவள் அலங்காரம் மற்றும் ஆபரணங்களை நீக்கிய நிதிஷா, "அக்கா நீயும் ஏன் இப்படி அடம் பிடிச்சு அத்தான் கிட்ட அடி வாங்குற? இதோ பார்" என்று கண்ணாடியை அவளிடம் கொடுக்க அவளுமே அபய் அறைந்த தன் கன்னத்தை தான் வெறித்து பார்த்திருந்தாள்.
"எப்படி சிவந்திருக்கு பாருக்கா. மேக்கப்ல இதை மறைக்காம போயிருந்தா எல்லார் எதிர்லேயும் எவ்ளோ எம்பாராஸ் ஆகியிருக்கும். நான் சொல்றதை கேளுக்கா, பேசாம இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடு. அப்பா கிட்ட நான் பேசுறேன்" என்றாள் நயனியின் கன்னத்தில் ஐஸ் பேக்கை ஒற்றி எடுத்தபடி.
"நிது அப்பாவுக்காக மட்டும் இந்த கல்யாணம் கிடையாது.."
"நீ பொய் சொல்றக்கா. எனக்கு தெரியும் அப்பா ஊதாரித்தனம்மா செலவு பண்ணி வீட்டை அடமானம் வச்சு குடிச்சுட்டு மத்தவங்களோடு சண்டை போட்டு போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தது வரை எல்லாமே எனக்கும் தெரியும்.. நான் ஒன்னு சின்ன பொண்ணு கிடையாது எனக்கும் 21 வயசு ஆகுது.."
"அபய் அத்தான் கல்யாணத்துக்கு சம்மதிக்காதது தெரிஞ்சும் வீட்டை மீட்கறதுக்காக சக்கரவர்த்தி மாமா கிட்ட உன்னை பேரம் பேசி தானே இந்த கல்யாணத்தை அப்பா நடத்திட்டு இருக்கிறார்?!"
"ப்ச் நிது எனக்கு அவரை பிடித்து தான் கல்யாணம் பண்ணிக்கிறேன் நீ கொஞ்சம் அமைதியா இருடி.. தேவையில்லாம பேசறதை விட்டுட்டு சீக்கிரம் முடி எனக்கு படுக்கணும். ரொம்ப டையார்ட்டா இருக்கு"
"சமாளிக்க பார்க்காதக்கா எனக்கு தெரியும், விருப்பமில்லாத அத்தானை கட்டிக்க கல்யாணத்துக்கு முன்னாடியே சக்கரவர்த்தி மாமா கிட்ட இருந்து அவர் லட்சக்கணக்கில் பணம் வாங்கியிருக்கார். இப்போ கல்யாணம் முடியவும் அப்பா பேரில் சொத்து ரிஜிஸ்டர் ஆகப்போகுது.."
"இருக்கலாம். ஆனா அதுக்கும் நான் அவரை கட்டிக்கிறதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.."
"அப்புறம் ஏன்க்கா சஞ்சு அக்கா காதலிச்சவரை நீ கல்யாணம் பண்ணிக்கிற?! உனக்கு என்ன அழகு இல்லையா? படிப்பில்லையா? உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி உனக்கு ஏற்ப மாப்பிள்ளை கிடைக்கவே மாட்டாங்களா என்ன?!"
"அத்தானுக்கு உன் மேல விருப்பம் இல்லாம இருக்கிறது தெரிஞ்சும் நீ கல்யாணம் பண்ணிக்க அப்பா மட்டும்தான் காரணம்ன்னு எனக்கு தெரியும். வேண்டாம் க்கா உனக்கு எதுக்கு இந்த கஷ்டமெல்லாம்?" என்று நிதிஷாவும் நயனியும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றாலும் இருவருக்குமே ஒருவரை தந்தை கிடையாது.
ஆம் சேதுராமன் நயனிகாவின் தந்தை கிடையாது அவர் தாயின் இரண்டாம் கணவர். நயனியின் தாய் தனலட்சுமி வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்..
பெற்றோருக்கு ஒரே பெண்ணான தனலட்சுமி பெரிதாக கல்வி அறிவு இல்லாதவர்.. வாய்ப்பு இருந்தும் அவருக்கு படிப்பு ஏறாததால் பள்ளி படிப்போடு நிறுத்திவிட்டு வீட்டிலேயே வைத்திருந்தனர்.
செல்ல மகளுக்கு அனைத்து விதத்திலும் பொருத்தமான மணமகனே பார்ப்பதற்கே 5 வருடங்கள் எடுத்துக் கொண்டவர் ஜாதகம் முதற்கொண்டு அனைத்திலும் தனலட்சுமிக்கு பொருத்தமான மணமகளை தேர்ந்தெடுத்து 23 வயதில் திருமணம் செய்தனர்.
அவர் கணவர் ராஜேந்திரனும் தங்கமான மனிதர். இருவரின் இல் வாழ்க்கையும் எந்த குறையும் இல்லாமல் சிறப்பாக சென்று கொண்டிருந்தது. அவர்கள் அன்பின் அடையாளமாக நயனிகாவும் பிறந்தாள். ஆனால் அடுத்த இரு வருடத்திலேயே தனலட்சுமியின் பெற்றோருடன் வெளியில் சென்ற ராஜேந்திரனின் கார் விபத்திற்கு உள்ளாகி மூவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
எதிர்பாராத விபத்தில் நெருங்கிய உறவுகளை இழந்த தனலக்ஷ்மி இடிந்து போய் விட்டார். இருபத்தி ஏழு வயதில் விதவையாகி போன தனலட்சுமிக்கு உடன் பிறந்தோர் யாரும் கிடையாது.
அன்னை தந்தை வகையில் இருக்கும் சொந்தங்கள் மட்டுமே!!
அனைவரும் அவரை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து சொத்தை அபகரிக்க முயன்றனர். ஆனால் தனலட்சுமி என் தாய் வழி தாத்தா அதற்கு விடவில்லை பேத்திக்கு மறுமணம் செய்து விட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.
ஆனால் அன்றைய காலகட்டத்தில் மறுமணம் என்பது அத்தனை எளிதான விடயம் கிடையாது. அவர்கள் நெருங்கிய உறவிலேயே தனலட்சுமியின் செல்வ வளத்திற்காக அவரை மணக்க மணமகன்கள் தயாராக இருந்தாலும் அவர்களின் பெற்றோர் உடன் பிறந்தோர் அதை எதிர்த்தனர்.
அதுவும் இரண்டு வயது குழந்தையான நயனியோடு தனலட்சுமி ஏற்க யாருமே தயாராக இல்லை.
அவரும் ஒரு கட்டத்தில் 'திருமணம் வேண்டாம் நான் இப்படியே இருக்கிறேன்' என்று சொல்லிவிட்டார் ஆனால் தாத்தா தான் விடாப்பிடியாக தூரத்து உறவினனான ராஜேந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்.
தனலட்சுமியின் தூரத்து உறவினர் தான் சேதுராமன்.
அவருக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும் பின்புலம் கிடையாது. ஆனால் பேத்திக்கு துணை வேண்டும் என்று நினைத்த அவர் தாத்தா தனலட்சுமியை வேண்டாம் என்று ஒதுக்கிய மாப்பிள்ளைகளின் மத்தியில் மணந்து கொள்ள முன்வந்த சேதுராமனை மிகவும் பிடித்துப் போனது.
இரண்டாம் திருமணத்தையும் எந்த குறை இல்லாமல் செய்தவர் அப்போதே நகை ரொக்கம் சொத்து என்று கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேலாக வரதட்சனை கொடுத்தார்.
மணமான புதிதில் எல்லாம் நன்றாக செல்வது போல தான் தெரிந்தது. அடுத்த இரண்டு வருடத்தில் சேதுராமனின் தம்பி தங்கைகளுக்கு கோலாகலமாக திருமணமும் முடித்துவிட்டார்.
தனலட்சுமிக்கு மகள் என்றால் உயிர்! எப்போதும் அவளை தனியே விடமாட்டார் தன்னுடனே வைத்துக்கொள்வார். அதிலும் சேதுராமனின் தங்கை ஒருமுறை நயனியை குளிக்க வைக்கிறேன் என்று அவள் மீது சுடு நீரை ஊற்றிவிட்டதில் மகளை எப்போதும் பிரியவே மாட்டார்.
மணமான பிறகும் அதிகமான நேரத்தை நயனியுடனே உடனே அவர் கழிக்க சேதுராமனும் பெருந்தன்மையாக அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் இரண்டாம் வருட முடிவில் தனலட்சுமி கருவுற்ற பிறகு சேதுராமனின் உண்மையான குணம் தெரிய வந்ததில் பெரிதும் அதிர்ந்து போனார் தனலட்சுமி
அவருக்கு சிகரெட், மது, மாது என்று அத்தனை பழக்கமும் உண்டு. ஆனால் பேத்திக்கு திருமணம் செய்து வைக்கும் தீவிரத்தில் அவர் தாத்தா தீர விசாரிக்காமல் பெண்ணை கொடுத்துவிட்டார்.
இரண்டு வருடங்கள் வரை அடக்கி வாசித்தவர் அதன்பின் அனைத்தையும் வெளிப்படையாகவே செய்ய தொடங்கி விட்டார். அதை தட்டி கேட்கும் தனலட்சுமிக்கு தினமும் அடியும் உதையும் மட்டுமே கிடைக்கும். கர்ப்பிணி என்றும் பார்க்க மாட்டார்.
இதை தட்டி கேட்கும் அவர் தாத்தாவிற்கும் வசவுகள் மட்டுமே கிடைக்கும்.
அதனாலேயே அவ்வப்போது மீதமிருக்கும் சொத்துக்களை தன் பெயரில் மாற்றி கொடுக்கும் படி சேதுராமன் கேட்டபோது சத்தமே இல்லாமல் அனைத்தையும் நயனியின் பெயருக்கு மாற்றிவிட்டு தனலட்சுமியை கார்டியனாக நியமித்து விட்டார்.
தன்னை துன்புறுத்தியதை கூட தனலட்சுமி பொறுத்துக்கொண்டார். ஆனால் சேதுராமன் எல்லை மீறி தன் மகளை அடிக்கவும் தான் தாள முடியாமல் அடுத்த சில வருடங்களில் அவளை ஹாஸ்டலில் சேர்க்கும் சூழலுக்கு தள்ளபட்டார்.
சேதுராமன் அதற்கு சம்மதிக்க மாட்டாரோ என்ற பயத்துடனே அனுமதி கேட்க அவரோ, 'விட்டது சனியன்' என்று சம்மதித்துவிட அவரின் தாத்தா உதவியோடு நான்காம் வகுப்பிலேயே ஹாஸ்டலில் சேர்க்கபட்டாள் நயனிகா வர்ஷி.
அவளின் பதினெட்டாவது வயது நிறைவில் மீண்டும் தனலட்சுமிக்கு நெருக்கடி கொடுத்த சேதுராமன் நயனி பெயரில் இருந்த சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக தன் பெயருக்கு மாற்றியதோடு சூதாட்டத்திலேயே பெரும்பான்மையான சொத்துக்களை இழந்திருந்தார்.
Last edited: