28
யாரும் இல்லாத வீடு போல வெகு அமைதியாக இருந்தது. சந்தோஷ் பால்கனியில் அமர்ந்து செஸ் ஆடிக்கொண்டிருந்தான். சந்தியா தன்னறையில் அமர்ந்து நாவலை படித்துக்கொண்டிருந்தாள். அறைக்கும் பால்கனிக்கும் ஜன்னல் வழியாக இடைவெளி அதிக தூரம் இல்லை! சுற்றிவந்தால் ஒரு சுற்று. சந்தியாவின் கண்கள் தனியே செஸ் ஆடிக்கொண்டிருந்தவன் மேல் பாய்ந்தது.
‘‘ம்....தனியா செஸ் ஆடுறாராம் நான் ஒருத்தி இருக்கேன் என்னை கூப்பிட்டா என்னவாம்...?’’ முணுமுணுத்தபடி அவனை ஆராய்ந்தாள்.
“சுருளான கேசம்....அளவாக வெட்டியிருக்கு. ம்...என்ன ஷாம்பு போட்டு குளிப்பாரோ? அடுத்து என்ன? புருவங்களா..? கேள்வி கேட்கும் போது முடிச்சுடுமே..! நெத்தியில் தாளம் போடுமே அது எப்படி? ம்..அப்புறம் விழிகள்? யப்பா பார்த்தாலே மனசுக்குள்ளே ஊடுருவும் பார்வை..! பார்வையா அது? எப்பவும் சிரிச்சுகிட்டு..அது எப்படி சாத்தியம் விழிகளாலே சிரிக்க...? கூரான மூக்கு..! எப்ப கோபம் வரும்னு தெரியாது..! அதுக்கு கிழே கம்பீரமா உட்கார்ந்திருக்கும் மீசை...கரு கருவென்று அதை பராமரிப்பது கூட ஒரு நேர்த்திதான்..அப்புறம் என்ன? சிகரெட் தொடாத உதடுகள்....கிரேக்க தேசத்து சிற்பம் போல செதுக்கி வச்சிருக்கடா...! கூரான நாசி...இது என்ன தோள்களா..? வாண்டுங்க இதுக்குத்தானே சண்டை பிடிக்கும்...கை எவ்ளோ நீட்டு..! அட விரலை பாரு.. நகங்கள் கூட படு சுத்தம்! பொம்பளைங்க தோத்தாங்க போ....அட அமர்ந்திருக்கும் தோரணையே ஒரு ஸ்டைலாகத்தான் இருக்கு...எழுந்து நின்னா என்ன ஒரு அஞ்சே முக்காலடி இருக்குமா....? ச்சேச்சே நாமே அந்தளவு உயரம்... என்ன ஒரு ஆறு இருக்கும்....” என தன் பாட்டுக்கு கேள்வி கேட்டு அவனை அளவெடுத்தாள்.
“என்ன அளந்து முடிஞ்சுதா?” அவன் குரல் கேட்க திடுக்கிட்டு நினைவுக்கு வந்தாள்.
“எ..என்ன?” தடுமாற்றத்துடன் அவனை பார்த்தாள்.
“இல்லை தலையிலிருந்து கால் வரை அங்குலம் அங்குலமாக பாத்து கணக்கு போடடுகிட்டு வந்தே..அதான் அளந்து முடிஞ்சுடுத்தான்னு கேட்டேன்..” என்று தலையை மட்டும் திருப்பி அவளை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்தான்.
“ஓ..பாத்திட்டாரா...” வெட்கம் வந்து ஒட்டிகொண்டது.
“என்ன எவ்வளவு மார்க் போட்டிருக்கே...பாசா? பெயிலா? ‘ அவன் விடமால் கேட்க இவள் ‘ஙே’ என்று விழித்தாள்.
“மார்க்கா?” என்று குழப்பத்துடன் கேட்க,
“ஆமா...உங்க காலேஜ் புத்தி எனக்குத் தெரியாது! ஒருத்தனை பாத்தா போதுமே உடனே மார்க் போட ஆரம்பிச்சுடுவீங்க...எனக்கு எவ்வளவு போட்டே...?” என்றான் ஆர்வமாக.
“........”
“ஏன் கேட்குறேன்னா...பாசானா...எவளுக்காவது ரூட் போடலாம்..” அவளை பார்த்து வசீகரமாக புன்னகைத்தான்.
“பெயிலானா...?’ ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள்.
“ம்....பெயில்னா பேசாம இருந்துட வேண்டியதுதான்....என்ன ஒரு தொண்ணூறு..?” பெருமையாக ஒற்றை புருவத்தை தூக்கினான்.
அவள் எதுவும் பேசாது இருக்க,
“சரி..எழுபது...?” என்றான் முகத்தில் கேள்வி குறியோடு.
சந்தியா ஒன்றும் பேசாது அவனையே புன்னகையோடு பார்த்த வண்ணம் இருந்தாள்.
“அதுவும் இல்லையா? சரி... அம்பது...?” ஐந்து விரல்களையும் காட்டியபடி கேட்டான்.
அவள் இல்லையென தலையசைக்க,
“அதுக்கு கீழேன்னா..ஒரு இருபத்தைஞ்சு..?” விரல்களை குவித்தபடி கேட்டான்.
அதற்கும் அவள் இல்லையென தலையசைத்தாள்.
“அப்ப நான் வேஸ்ட்டு....டேய் சந்தோஷ்...இருபத்தைஞ்சு கூட தேறலை நீ..” சந்தோஷ் தனக்கு தானே சத்தமாக முணுமுணுக்க,
“பத்து கூட தேறலை..” அவனை ஒரக்கண்ணால் பார்த்துக்கொண்டு சொன்னாள்.
“பத்து..? ஓ காட்..! விடு நான் உயிரோடு இருக்க கூடாது..! சூசைட் பண்ணிக் கப்போறேன்...” அவன் எழுந்து பால்கனிக்கு மறுபக்கம் காலை வைத்தான்.
“ ம்ஹூம்...இது சூசைட் பண்ற இடம் இல்லை...இங்கேருந்து விழுந்தா கால் கைதான் உடைஞ்சுக்கும்...” சந்தியா சொல்ல,
“கரக்ட்...நாளைக்கு எங்காவது மலை உச்சிக்கு போய் விழுந்துக்குறேன்..இன்னிக்கு ரெஸ்ட் எடுத்துக்குறேன்..” அவன் வந்து அமர்ந்து கொண்டு காலை நீட்டிக்கொள்ள,
“இங்கிருந்த நாலு கிலோ மீட்டர் போனா ஒரு மலை வரும்...” - சந்தியா சீரியசாக சொல்ல,
“அப்படியா? ஒண்ணு பண்ணு விடிஞ்சதும் கையோடு வந்து தள்ளிவிட்டு வந்தேன்னா ரொம்ப நல்லா இருக்கும்..” அவன் முறைத்தபடி சொல்ல சத்தம் இல்லாமல் சிரித்தாள். எட்டி பேப்பரை எடுத்தான். முதற்பக்க செய்தியை கண்ணில் பட வாய்விட்டு படித்தான்.
“மனைவி தொல்லை தாங்கமுடியாமல் கணவன் சூசைட்..! என்னது நம்ம மேட்டர் இவ்ளோ சீக்கிரத்துல பத்திரிகைக்காரனுக்கு போயிடுத்து..?” அவன் யோசிக்க சந்தியா நிஜம் தானா என்பது போல பார்த்தாள்.
(coming)