36
“இதப்பாரு சந்தியா! நீ எதுக்கும் கவலைப்படாதே! நாளைக்கு காலையில கோட்லே விளாசித்தள்ளிடுறேன்....” கௌதம் தங்கையிடம் கூறிக்கொண்டிருந்தான்.
“என்ன கௌதம் விளாசித்தள்ளிடுறோம்னு சொல்லு....ஒண்ணுக்கு ரெண்டு லாயர் உனக்காக ஆஜர்...” ஹரி ஆர்வத்துடன் சொல்ல,
“நீ பேசாமல் இருந்தாப்போதும் நான் கேட்குற கேள்விகளுக்கு ஆமாம் மட்டும் சொல்லிட்டு வா....” கௌதம் நாளைக்கு நடக்க இருக்கும் விவாகரத்து கேஸ் பற்றி விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தான். சந்தியா அமைதியாக கேட்டபடி இருந்தாள்.
“டேய் என்னடா இது நீங்களே இப்பவே அவளுக்கு டைவோர்ஸ் வாங்கி கொடுத்திடுவீங்க போலிருக்கு.....” ரங்க நாயகி கோபமாக கேட்டார்.
“சும்மா இருங்க பாட்டி..கோட்டுன்னு வந்துட்டா பந்த பாசம் பார்க்க கூடாது! வெட்டு ஒன்று துட்டு ரெண்டா பேசிடணும்...காரியத்தை முடிச்சிடணும்..” கௌதம் கறாராக சொல்ல,
“கரக்ட் கௌதம்...” ஹரி என்றான் குரலில் மகிழ்ச்சியுடன்.
“கடவுளே என்ன நடக்கப்போகுதோ....?” ரங்க நாயகி கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு போனார்.
அன்று இரவு, வரும் பகல் வராமலே இருந்திடக்கூடாதா என்று எண்ணியபடி ஒவ்வொருவரும் அந்த இரவை கழித்தனர். ஹரி சந்தியாவுடன் டூயட் பாடப்போய்விட்டான். சந்தோஷ் எதைப்பற்றியும் கவலை இல்லாமல் அவன் பாட்டுக்கு விட்ட இடத்திலிருந்து நாவலை படிக்கத்தொடங்கிவிட்டிருந்தான்.
விடிந்தது. கலவரமான முகத்துடன் சரியாக தூங்கவில்லை என்று ஒவ்வொருவரின் முகமும் சொன்னது. ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டனர். எவரும் கோர்ட்டுக்கு வரவில்லை என்று சொல்ல,
“என்ன ஆளாளுக்கு இப்படி நின்னுட்டா..எப்படி? ஒரு வேளை சாட்சி சொல்ல வான்னா யாரை கூண்டிலே ஏத்துறது?” கௌதம் சொல்ல,
“நீ போடா..நாங்க வரலை...” மகாலட்சுமி வருத்தத்துடன் கூறினாள்.
“கௌதம்...டைவோர்ஸுக்கு சம்பந்தப்பட்டவங்க நாங்க ரெடி..நீ கிளம்பு..யாரும் வரலைன்னா என்ன எப்படியும் கேஸ் நடக்கப்போகுது..” சந்தோஷ் சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு போக, சாரங்கன் அவனை பின் தொடர்ந்தார். மற்றவர்களும் வீட்டில் இருந்து கொண்டு தவிப்பதை விட போகலாம் என்று கிளம்பினார்கள்.
கோட் வாசலில் வந்து இறங்கிய ஒட்டுமொத்த குடும்பத்துக்கு மனசு ஒரு ஆட்டம் கண்டது. அந்த நீதிமன்றம் ஏதோ தூக்கு மேடை போலிருந்தது. நடுங்கும் பாதத்தை எடுத்து வைத்து படியேறி உள்ளே நுழைந்தார்கள். சந்தோஷ் சந்தியாவின் வழக்கை எடுத்து அழைத்தார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி கூண்டில் ஏறினார்கள்.
“கனம் கோட்டார் அவர்களே ! இங்கு தங்கள் முன்னால் வந்திருப்பது ஒரு விவாகரத்து வழக்கு. என் கட்சிக்காரரும் பாதிக்கப்பட்டவருமான மிஸ்ஸஸ் சந்தியா அவர்களுக்காக பிரச்சனைகளை நேரில் பார்த்தவன் என்ற முறையில் நானே வாதாட வந்திருக்குறேன். எதிர்தரப்பில் இருந்து எந்தவிதமான அப்ஜெக்சனும் இல்லை எனும் பட்சத்தில் நான் வாதாட போகிறேன் தங்களுக்கு அப்ஜெக்சன் ஏதும் இருந்தால்… என் பிரண்டு மிஸ்ட்டர் ஹரி வாதாடுவதாக இருக்கிறார்’ என்றான் கௌதம்.
“நோ அப்ஜெக்சன்… மிஸ்டர் சந்தோஷ் உங்களுக்கு என்று யாராவது வக்கீல் ஆஜராகின்றாரா?” நீதிபதி கேட்க,
“இல்லை யுவர் ஆனர். நானே எனக்காக வாதாடுறதாக இருக்குறேன்...” என்றான் சந்தோஷ் அமைதியாக,
“ம்...ஓகே...சொல்லுங்க எதுக்காக உங்க மனைவியை விவாகரத்து செய்ய விரும்புறீங்க..?.” கௌதம் தன் வாதத்தை தொடங்கினான்.
“எனக்கு அவங்க கூட வாழ புடிக்கலை....” அவன் பார்வை சந்தியா மேல் படிந்தது.
“அதைத்தான் ஏன் என்று கேட்குறோம்....?” கௌதம்
“புடிக்காததுக்கு ஆயிரம் காரணம் இருக்கும்....”
‘அந்த ஆயிரத்துல ஒன்றை சொல்லுங்க...”
“எனக்கு அவ பொருத்தமான மனைவி இல்லை...” அவன் சொல்ல சந்தியாவின் பார்வை அவன் மேல் விழுந்தது.
“எதை வைத்து சொல்றீங்க...?.”
“அ....அ..அது பர்சனல் விசயம்..”
‘‘மிஸ்டர் சந்தோஷ்! கோர்ட்டுக்கு வந்துட்டாலே பர்சனல் எல்லாம் பப்பளிக்காகணும்... கமான் சொல்லுங்க...எதை வச்சு சொல்றீங்க...?” கௌதம் விடமால் கேட்க,
‘‘எனக்கு பொருத்தமானவளை நான் காதலிச்சுகிட்டிருக்கேன்....’
‘‘அப்படின்னா எதுக்கு என் கட்சிக்காரர் சந்தியாவை கல்யாணம் செய்தீங்க?”
சந்தோஷ் பதில் பேசாமல் சந்தியாவையே பார்த்தபடி நிற்க,
‘‘சொத்துக்காகத்தானே....” கௌதம் கேள்விக்குரிய பதிலையும் கேள்வியாக தொடுத்தான்.
“அப்படியே வச்சுக்கோங்க..” அவன் விட்டேற்றியாக சொன்னான்.
“ம்...நீங்க நினைச்சது போல சொத்து உங்க பேரில உங்க மாமனார் எழுதியதும் நீங்க உங்க சுயரூபத்தை காட்டத்தொடங்கிட்டீங்க..’’
சந்தோஷ் மௌனமாக சந்தியாவையும் கௌதமையும் பார்த்தபடி நின்றிருந்தான்.
“யுவர் ஆனர்...என் கட்சிக்காரர் வாக்கு மூலத்தை கேளுங்க...சந்தியா உங்க சொத்துக்காகவும் அழகுக்காவும்தானே மிஸ்டர் சந்தோஷ் கல்யாணம் செய்து கொண்டார்.?” கௌதம் சந்தியாவை பார்த்து கேட்டான்.
அவள் மௌனமாக தலை குனிந்தபடி இருந்தாள்.
“அவருக்கு பல பெண்களோடு தொடர்பு. இதை நீங்க தெரிந்துகொண்டதும் உங்களை பலவாறான சித்திரவதை செய்யத்தொடங்கினார். உதாரணத்துக்கு உங்க கையை கத்தியால் கிழிச்சது...”
“இல்லேப்பா அவதான் வெட்டிகிட்டா” ரங்கநாயகி கத்த,
“ஸ்சூ..சைலன்ஸ்....” கௌதம் சொல்லிவிட்டு தொடர்ந்தான்.
“அடுத்த கட்டமாக யாரும் இல்லாத சமயம் கொட்டும் மழையில் தள்ளிவிட்டு ஒரு இரவு முழுக்க உங்களை தண்டிச்சிருக்கார்.” கௌதம் எல்லா சம்பவத்தையும் சந்தோஷ் மேல் குற்றம் சாட்டும் விதமாக மாற்றி சொல்ல சந்தோஷ் எதற்கும் மறுப்பு சொல்லாமல் அமைதியாக கேட்டுக்கொண்டு நின்றான்.
“யுவர் ஆனர்...அந்த மழையில நனைஞ்சதால கடும் ஜுரம் வந்து அத்தோடு எக்சாம் எழுதினதுக்கான பிரின்சிபாலின் சர்டிஃபிகேட் இது. அடுத்து மிஸ்டர் சந்தோஷின் ஆடம்பர ஆட்டத்துக்கு பணம் வேணும் அது சந்தியா மூலம் கிடைத்தது. அதன் பின் அவரது கொட்டத்துக்கு அளவு இல்லாமல் போக சந்தியாவால் பொறுக்கமுடியவில்லை. பல தடவை தட்டிக்கேட்டிருக்காங்க ஆனா பதில் அடியும், உதையும், சித்திரவதையும் தான் கிடைச்சது. இதையெல்லாம் தாங்கிக்கிட்டாங்க...ஆனா அடுத்து தெரிய வந்த விசயத்தை கேட்டீங்கன்னா மிஸ்டர் சந்தோஷ் டைவோர்ஸ் கேட்கவேண்டிய தேவை இல்லை! என் கட்சிக்காரர்தான் கேட்கணும் என்று புரியும்...” கௌதம் ஒவ்வொரு குற்றமாக அடுக்கிக்கொண்டே வந்தான்.
“என்ன அது?’’ நீதிபதி கௌதமை கேட்க,
“யுவர் ஆனர். ஒரு பெண்ணுக்கு முழுமை எல்லாம் தாய்மை தான். அந்த தாய்மை தரும் தகுதி இந்த சந்தோஷுக்கு இல்லை....” அவன் சொல்ல சந்தோஷின் முகம் சிவந்தது. சந்தியா அதுவரை குனிந்திருந்த தலையை நிமிர்த்தி அதிர்வுடன் தமையனை நோக்கினாள்.
“கௌதம்..! வேண்டாம் இப்படி அபாண்டாமா பழி போடாதே!” சாரதா கோர்ட்டு என்றும் பாராமல் அலறினாள்.
“இது கோர்ட்டு சத்தம் போடாதீங்க...!” அவன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.
“யுவர் ஆனர் இதோ டாக்டர் தந்த சர்டிஃபிகேட்...எங்கே தன் குறை தெரிந்ததும் சந்தியா டைவோர்ஸ் கேட்டுவிடுவாங்களோ என்று பயந்து இவர் முந்திவிட்டார். தான் டைவோர்ஸ் செய்வதாக...என் கட்சிக்காரர் இன்று வரை கைபடாத ரோஜா...அவருக்காக சந்தோசமான வளமான வாழ்க்கை காத்திட்டிருக்குது. தயவு செய்து இதை கருத்தில் கொண்டு என் கட்சிக்காரர் சார்பில் விவாகரத்து வாங்கித்தருமாறு தாழ்மையுடன் கேட்கிறேன்.” அவன் சொல்லி முடிக்க கோர்ட் அமைதியில் ஆழ்ந்தது.
“மிஸ்டர் சந்தோஷ் இதுக்கு என்ன பதில்?” நீதிபதி அவனை பார்த்து கேட்டார்.
“என்ன சொல்றது? அதான் அவரே எல்லாம் சொல்லிவிட்டாரே..எனக்கு தேவை விவாகரத்து. ப்ளீஸ் யுவர் ஆனர் இன்னிக்கே தந்துடுங்க...” என்று உணர்ச்சியற்ற குரலில் முடித்தான். குடும்பமே ஆடிப்போனது.
“இரு தரப்பு வாதங்களையும் கேட்டபின்பு அவர்களது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு இருவருக்கும் இந்த கோர்ட் விவகாரத்து..” ஜட்ஜ் தன் தீர்ப்பை கூறத்தொடங்கினார்.
(வரும்)