• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 17

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
119
113
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
17. எந்தன் ஜீவன் நீயடி..!

கீர்த்திவாசனின் கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்தது அந்த சிறிய கோவில். கார் அந்த கோவிலை நோக்கி சீராக சென்று கொண்டிருந்தது. கணவன் மனைவி இருவரும் தீவிரமான யோசனையில் இருந்தனர். அவர்கள் கோவிலுக்கு கிளம்பும் சமயம்,பிரின்ஸி தனக்கு ஒரு நியாயம் வேண்டும் என்று வந்து நின்றாள்.

"இப்போ நாங்க கோவிலுக்கு போகணும். அம்மா சொல்லை மீற முடியாது. அத்தோடு அங்கே மாமா வேறு காத்திருக்கிறார். அதனால் எதுவானாலும் நாங்க போய் வந்த பிறகு பேசலாம். அதுவரை நீ போய் கொஞ்சம் ஓய்வு எடு. அதற்குள் ஒன்றும் குடிமுழுகிடாது" என்றான் சற்றே எரிச்சலை அடக்கியபடி கீர்த்திவாசன் சொன்னான்.

"நான் என்ன உன் வீட்டில் விருந்தாட வந்திருக்கிறேனா? என்று ஆத்திரமாக கேட்டவள், தொடர்ந்து,"நீ இப்போது கிளம்பி போனால் நான் நேராக உன் அம்மாவிடம் போய் பேசுவேன். அப்புறம் தெரியும் யார் குடிமுழுகும் என்று" என்றாள் மிரட்டலாக

"ஏய்.. என்று கோபமாக அதட்டியவன், சட்டென நிதானித்து, "சரி, வா.. இங்கே நின்று எதுவும் பேச வேண்டாம், நீயும் வா அம்பரி"என்று அலுவலக அறைக்கு அழைத்துப் போனான் கீர்த்தி.

அம்பரிக்கு, இருவரின் கோபம் பார்த்து, உள்ளூர லேசான பதற்றம் உண்டாயிற்று.

அலுவலக அறையினுள் சென்றதும் கதவை தாழிட்டு விட்டு,"இப்ப சொல்லு, என்ன விஷயமாக நீ வந்திருக்கிறே? என்றான் பொறுமையை இழுத்தடித்த குரலில்..

பிரின்ஸி எந்தவித முகவுரையும் இன்றி, நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்."அந்த குழந்தையோட அப்பா நீ தான்..! "

"வாட் நான்சென்ஸ்? என்ன உளறல் இது? அதற்கு வாய்ப்பே கிடையாது," என்றான் கீர்த்திவாசன் கடுமையான குரலில்.

"பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை கேவி" என்று கோபத்தில் கிரீச்சிட்டாள் பிரின்ஸி.

"ஷ் ஷ்... மெல்ல பிரின்சி, என்று அடக்கிவிட்டு, "அப்படி என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக, வரவில்லை? இப்போது நாங்க புதுசா வாழ்க்கையை தொடங்கிற நேரத்தில ஏன் வந்தே? ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக கேட்டுக்கொள், உன்னோட நோக்கம் எதுவானாலும் அது நிறைவேறாது" என்றான் இறுகிய குரலில்

"இப்போது, எனக்கு வேறு வழி இல்லை.. வர வேண்டிய அவசியம் அதனால் வந்திருக்கிறேன் " என்றாள் முகம் இறுக

"இத்தனை காலம் இல்லாத அவசியம் இப்போது மட்டும் ஏன் வந்தது ? அல்லது இப்போதுதான் புதிதாக திட்டம் போட முடிந்ததா? என்றான் நக்கலாக..

"நான் திட்டம் போட்டு இங்கே வரவில்லை.. சொல்லப்போனால் நான் இங்கே வருவதாகவே எண்ணம் கிடையாது.. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை .. வர நேர்ந்து விட்டது" என்றவள், தொடர்ந்து,முறை தவறி இந்த குழந்தை உருவான பிறகு, என் நல்ல வேலை போனது.
எத்தனையோ அவமான பேச்சுகளைகூட தாங்கிக் கொண்டேன். எல்லாமும் குழந்தைக்காக தான். ஆனால் ஒரு மாதம் முன்பு,ரோட்டில் நடந்து கொண்டிருந்த நான் திடீரென மயங்கி விழுந்து விட்டேன். யாரோ என்னை கொண்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கே எனக்கு முதலுதவி அளித்துவிட்டு, சில டெஸ்ட்களும் எடுத்தனர், அப்போதுதான்,எனக்கு மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. அறுவை சிகிச்சை செய்தாலும் கூட நான் உயிர் பிழைப்பேன் என்று ஒரு மருத்துவர் கூட உறுதி தரவில்லை. எனக்கு இன்னும் இரண்டோ, மூன்றோ மாதங்கள் தான் அவகாசம் இருக்கின்றது என்று விட்டார்கள். இந்த வயதில் மரணம் என்றால் யாருக்குதான் கஷ்டமாக இருக்காது? ஆனால் எனக்கு அதை தாண்டி குழந்தையின் எதிர்காலமும் பாதுகாப்பும் தான் பயமுறுத்தியது. உடனே உன்னை தேட தொடங்கினேன். துப்பறியும் நிறுவனத்தில் எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். அவன் தான் உன்னைப் பற்றிய முழு தகவலும் தந்தான். குழந்தைக்கு பாஸ்போர்ட் எடுக்க தாமதமாகிவிட்டது. அப்போதுதான் கூடுதல் தகவலாக உன் திருமண செய்தியும் கிடைத்தது. உனக்கு தான் தெரியுமே, அந்த பயணம் எப்படிப்பட்டது என்று.. அதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு வர முடியாது போயிற்று.. ஆனால் எனக்கு உன் திருமணத்தை நிறுத்தும் எண்ணம் இல்லை. குழந்தையை உன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது மட்டும் தான் என் நோக்கம்.. " என்று பேச்சை முடித்தாள்.

அங்கே சிலகணங்கள் கனத்த மௌனம் நிலவியது.

அம்பரிக்கு குழந்தை விஷயம் பின்னுக்கு சென்றுவிட, அவள் சாகப் போகிறாள் என்பதே மனதை பெரிதாக பாதித்தது. இத்தனை சின்ன வயதில் சாவதா? என்ன கொடுமை? என்று மனம் வேதனையில் தவிக்கையில், மற்ற இருவரின் பார்வை பரிமாற்றங்களை கவனிக்க தவறினாள் அவள்.

"க்கும்.. என்று தொண்டையை லேசாக கணைத்து விட்டு," நீ சொல்லும் கதையை எல்லாம் நான் நம்பத் தயாராக இல்லை" என்றான் கீர்த்திவாசன் கறார் குரலில்.

அம்பரி அவனது குரலில் நிகழ்வுக்கு திரும்பினாள். கூடவே அவன் பேச்சு, அவளை திகைக்க வைத்தது. ஏன் இவன் இப்படி பேசுகிறான்? என்று அவனது முகத்தை ஆராய முற்பட்டாள். ஆனால் உணர்ச்சிகளற்ற அவனது முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.. மேலும் அவன் பேசுவதை கவனித்தாள்.

"பிரின்ஸி, உன்னோட தேவை எல்லாம் பணம் ஒன்றுதான் என்று எனக்கு தெரியும். அன்ட் (and) அதற்காக இல்லாத நோயை எல்லாம் சொல்லாதே. நான் முன்பு அப்படி இப்படி இருந்தவன் தான். ஆனால் அதெல்லாம் வேறு மாதிரி பெண்களிடம் மட்டும் தான்.. குடும்ப பெண்களை நான் திரும்பிக்கூட பார்த்தது இல்லை..நமக்குள் அப்படி ஒரு சம்பவமே நடக்காத போது, இது எப்படி சாத்தியம்?குழந்தை பற்றி நீ சொன்னதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறாய்?"

அம்பரிக்கு அவன் சொன்னதைக் கேட்டு லேசாக முகம் கன்றியது. முன்தினம் அவன் மேலோட்டமாக சொன்னது தான் என்றாலும், இப்போது அவன் உடைத்து பேசியதை கேட்டதும், சற்று அசூசையாக உணர்ந்தாள்.

"நான் எப்போது, எங்கே, என்றெல்லாம் விளக்கப் போவதில்லை கேவி. அது நம் இருவருக்குமான அந்தரங்கம். அதை மூன்றாம் மனுஷியான இவள் முன்பு, என்றபோது கீர்த்திவாசன் முறைக்கவும்.. ஐம் சாரி கேவி, உனக்கு மனைவியாக இருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை அவள் யாரோ தான். உனக்கு தேவை ஆதாரம் தானே? ஒரே ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் போதும், அது யார் குழந்தை என்று தெரிந்துவிடப் போகிறது" என்றாள் உறுதியான குரலில்..

கீர்த்திவாசன், இப்போது பேச்சற்று சிலகணங்கள் பிரின்ஸியை வெறித்தான். உட்கார மாட்டாமல் சட்டென எழுந்து அந்த அறையை நடந்து அளக்க தொடங்கினான். சில நிமிடங்கள் பலத்த அமைதியே நிலவியது..

அம்பரிக்கும்,அவளது உறுதியான பேச்சை கேட்டு சற்று அதிர்ச்சிதான். இவன் என்னவென்றால் தனக்கு சம்பந்தமே இல்லை என்கிறான். அவளோ வலுவான ஆதாரம் இருக்கிறது என்கிறாள்.. யார் சொல்வது உண்மை? ஏனோ அவளுக்கு கீர்த்திவாசனின் பாவனையில் பொய் இருப்பதாக தெரியவில்லை. தான் இப்படித்தான் என்று சொன்னவனுக்கு, இப்படி ஒரு குழந்தை இருப்பது தெரிந்து ஒத்துக்கொள்ள ஏன் மறுக்க வேண்டும்?சொல்லப்போனால் அவர்களுடைய திருமணமே அத்தை இருக்கும் வரை தான் என்று ஒப்பந்த அடிப்படையில் நடந்தது தானே? அப்படி இருக்கையில் இதை ஒத்துக்கொள்வதில் , பெரிதாக என்ன வந்துவிடப் போகிறது? அவளுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது..

அமைதியை முதலில் கலைத்தது பிரின்ஸி தான்.."என்ன பதிலையே காணோம்? என்று ஒருமாதிரி குரலில் கேட்டவள், சட்டென்று, "எனக்கு, உன் பணம் வேண்டாம் கேவி, நம் குழந்தைக்கு ஒரு அங்கீகாரமும் அதற்கான உரிமையும் தான் வேண்டும். நான் இறப்பதற்கு முன்பாக இவளை உன்னிடம் ஒப்படைக்க நினைத்தேன் அவ்வளவுதான்" என்றாள் சற்று சோர்வுடன்.

கீர்த்திவாசன், ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டுவிட்டு, " ஓகே, பிரின்ஸி, இன்னமும் என்னால் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்த நினைவே எனக்கு இல்லை... என்றவன், சிலகணங்கள் ஜன்னலின் வெளியே பார்வையை நிலைநிறுத்தி ,பின், "ஆனால், பிரின்ஸி, நிஜமாக சொல், அவள் எனக்கு பிறந்தவளா? என்று தீவிரமான குரலில் வினவினான்..

"ஸ்டாப் இட் கேவி, திரும்ப, திரும்ப இதென்ன ? அதுதான் சொல்லிவிட்டேனே. உனக்கு அவ்வளவு சந்தேகம் என்றால் இப்போவே என்கூட கிளம்பு, உடனடியாக அந்த பரிசோதனைகள் செய்து பார்த்துடலாம்".

"பிரின்ஸி, உனக்கு ஏன் இவ்வளவு கோபம்? தவறு செய்திருந்தால் அதை ஒத்துக்கொள்ள நான் ஒருபோதும் தயங்கியதே இல்லை. அப்படி இருக்கும்போது நீ திடுமென வந்து இது உன் குழந்தை என்கிறாய்..எனக்கு , சுத்தமாக எதுவுமே ஞாபகத்தில இல்லை.. நீயானால் விளக்கவும் மாட்டேன் என்று சொல்கிறாய்..என் மனது ஒப்ப மறுக்கிறது.. அதனால தான் நான் திரும்ப திரும்ப கேட்கிறேன்.. என்று எரிச்சலாக மொழிந்தவன், "சரி, அந்த ஒரு பரிசோதனையை செய்து பார்த்து விடலாம்.. அதில் என் பிள்ளை தான் என்று உறுதியாகிவிட்டால் அதன் பிறகு நான் எந்த கேள்வியும் கேட்க மாட்டேன். போதுமா?" என்று படபடத்தான் கீர்த்தி.

"வாசன், ப்ளீஸ், நாம் முதலில் அத்தை சொன்னது போல கோவிலுக்கு கிளம்பலாம்.. போய் வந்த பிறகு ஆற அமர மேற்கொண்டு என்ன செய்வது என்று பார்க்கலாம்", என்று அம்பரி.. அவனது நிதானப்படுத்த முயன்றாள். முன்இரவில் அவனை அழைப்பது பற்றி சிந்தித்ததில் இந்த வாசன் தான் அவளுக்கு கொஞ்சம் பரவாயில்லாமல் தோன்றியது. அடுத்த முறை அவன் இந்த பேச்சை எடுத்து பேச இடம் தரக்கூடாது என்று எண்ணி,அதை மனதோடு சொல்லிப் பார்த்திருந்தாள். இப்போது அதுவே ஒரு வேகத்தில் வாயில் வந்துவிட்டது.. அந்த நிலையிலும் கீர்த்திவாசன் அதை கவனிக்க தவறவில்லை.. கூடவே உள்ளூர மனது வலித்தது.. தன்னையே நொந்து கொள்ளவதைத் தவிர அவனுக்கு வேறு மார்க்கமும் புலப்படவில்லை..

"போகலாம் அம்பரி, அப்படியே இந்த பிரச்சனைக்கும் இன்றைக்கே ஒரு தீர்வையும் பார்த்தாகணும்" என்று அவன் தன் கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைக்க..

அந்த நேரத்தில் .. அறைக் கதவை தட்டி,"அம்பரி, அந்த குழந்தை அம்மா, அம்மானு அழுகுது, என்ன சொன்னாலும் சமாதானம் ஆகமாட்டேங்குது மா" என்றாள் ராமாயி..

உடனே பிரின்ஸி அங்கிருந்து ஓடினாள். அம்பரிக்கு ஒரு சின்ன நப்பாசை, இந்த பரிசோனையில் கீர்த்திவாசன் குற்றமற்றவன் என்று தெரிந்துவிடாதா என்று..! தீவிரமாக அவள் மனம் கடவுளிடம் அதையே பிரார்த்தனையாக வைத்தது..!

குழந்தை யாருடையது? கீர்த்தி அதன் தந்தை என்றால் அவன் மேற்கொண்டு என்ன செய்வான்? ஆனந்தவள்ளிக்கு தெரிய வரும் போது அவரது நடவடிக்கை என்னவாக இருக்கும்.. ?

@ஜீவராகம் தொடரும்...!
 

Attachments

  • eiGUWMP51467.jpg
    eiGUWMP51467.jpg
    49.8 KB · Views: 46