• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனை மீட்டிடும் இசை 20

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 20

"வாத்தி சொன்னது உண்மையா?" என்று மாரி கேட்கவும் சொல்லிவிடுவாளோ என ஆதி அதிர்ந்து பார்க்க,

கோபமாய் பார்த்த சாரு வண்டியில் இருந்து இறங்கி ஓடியே வந்துவிட்டாள் அவனை அடிக்க.

"சொல்லுவியா? வாத்தினு சொல்லுவியா?" என்று கேட்டு கேட்டு மாறி மாறி அடிக்க, எழுந்துவிட்டான் மாரி.

"என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? பச்ச புள்ளன்னா ஆளாளுக்கு அடிப்பீங்களா?" என்று வீர வசனம் வேறு பேச, சாருவும் கையை ஓங்கியபடி தூரத்த, இறுதியில் ஆதி தான் நடுவராக வேண்டி இருந்தது.

"தொழில் நடக்குற இடத்துல என்ன ஓடி புடிச்சு விளையாட்டு.. டேய்! வாய வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா?" ஆதி மாரியை மட்டுமே கேட்க, என்ன கேட்டோம், என்ன நடந்தது என்றே சில நொடிகள் மறந்திருந்தான் மாரி.

"என்ன தைரியம் இருந்தா என் வாத்தியார வாத்தினு சொல்லுவ நீ?" சாரு கேட்க,

"நீ சொல்லலாம் நான் சொல்ல கூடாதா?" என்றவன், "ஆஹ்! அம்மா" என்று வேறு அலற, இருந்த குழப்பத்தில் கோபமாய் நின்றான் ஆதி.

"கூடாது தான்.. நீ எப்படி டா சொல்லலாம்.. இன்னொரு முறை சொல்லி பாரு.. கண்ண கழுதை தூக்கிட்டு போய்டும்.." என்றாள் கோபம் குறையாமல்.

"க்கோவ்! அடிச்சிட்டல்ல.. இந்த மாரிய அடிச்சு பகைச்சுட்டல்ல.. பாக்கறேன்.. உன் கல்யாணத்துக்கு யாரு பந்தி பரிமாறி வேலைய பாக்குறான்னு பாக்குறேன்.. என்னை போய்" என்றவன் அதிகமாய் அலட்டலைக் கூட்ட,

"டேய்!" என்று ஆதி பல்லைக் கடிக்க,

"நீ போ ண்ணா.. நீ கட்டிக்க போறன்னா.. என்னை என்ன வேணா செய்யலாமா? என்னனு கேட்க மாட்டியா?" என்று வேறு கேட்க, தலையில் அடித்துக் கொள்ளலாம் போல வந்தது அவனுக்கு.

இருக்கும் பிரச்சனையே தீராத பிரச்சனையாய் இருக்க, இப்படி ஒன்றும் இல்லாத விஷயத்துக்கு முட்டி அலப்பறை செய்யும் இருவரை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று தான் தோன்றியது ஆதிக்கு.

அவனை கண்டு கொள்ளாமல் வாய் பேச்சு தொடர்ந்து இருவருக்கும் நடக்க,

"சா... ரு..." என்ற அழுத்தமான அழைப்பில் சட்டென பேச்சை நிறுத்தி அவனைப் பார்த்தாள் சாரு.

முதல் முறையாய் அவளை அவள் பெயரை கூறி அவனே அழைக்கிறான்.. அந்த அதிசயத்தில் அவள் மற்றதை மறந்திருக்க,

"உனக்கு சப்போர்ட் பண்ணி இவ்வளவு நேரமும் காத்திருந்தேன்ல.. போ'க்கா" என்ற மாரி எழுந்து சென்றதை சாரு கவனிக்கவில்லை என்றால் ஆதி கண்டு கொள்ளவில்லை.

"இங்க எவ்வளவு பிரச்சனை நடந்துட்டு இருக்கு.. என்ன விளையாட்டு உனக்கு?" ஆதி சாருவிடம் நேராய் கேட்க, அவன் கோபத்தைக் கூட ரசித்துப் பார்த்து நின்றாள் சாரு.

"ஒருத்தரை சமாளிச்சு வர்றதுக்குள்ள ஒவ்வொருத்தரையும் சமாளிக்க வேண்டியதா இருக்கு" ஆதி அலுப்பாய் சொல்ல,

"சமாளிக்கணும் வாத்தியாரே!" என்றாள் சாதாரணமாய்.

அவன் முறைக்க, "ஆமா! எவ்ளோ பிரச்சனை வந்தாலும் எடுத்த முடிவுல நாம தான் தெளிவா இருக்கனும்.. யார் என்ன பேசினா என்ன? நமக்கு வேண்டியது வேணும் தான?" என்ன பிரச்சனை என்றே கேட்காமல் இப்படி அவள் கூற,

அவள் ஆதியை விரும்ப ஆரம்பித்த இந்த ஒன்றரை இரண்டு வருடங்களில் எவ்வளவு கடந்து வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது நொடியில்.

"வாத்தியாரே! உங்களுக்கு சரினு தோணுறதை செய்யுங்க.. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்" சாரு சொல்ல, மனது செல்லும் திசையை உணர்ந்தான் ஆதி.

"சரி நீ கிளம்பு" அவன் சொல்ல,

"இப்ப தான் நாலு வார்த்தை பேச ஆரம்பிச்சிருக்கோம்.. அதுக்குள்ள விரட்ட பாக்குறீங்களே?" அவள் கிண்டலாய் கேட்க, பதில் சொல்ல முடியவில்லை அவனால்.

அவளின் ஒவ்வொரு பேச்சும், முடிவும், திறனும் என இவனை திணறடிக்க அவளிடம் இருந்து தள்ளி செல்ல முடியாத நிலை தான்.

ஆனாலும் விரட்டப் பார்க்க செல்வேனா என அடம்பிடித்து நின்றாள் அவளும்.

"நீ கேட்க மாட்ட.. இரு உன் அம்மாவை கூப்பிடுறேன்" ஆதி சொல்ல,

"இதுக்கெல்லாம் நான் பயப்படுவேனானு உங்களுக்கே தெரியும்" எளிதாய் அவள் முடித்துக் கொள்ள,

"உன்ன எப்படி தான் அடக்கவோ.." என்றவன் "வாயாடி" என முணுமுணுத்துக் கொண்டான்.

"நடக்கும் போது நடக்கட்டும் வாத்தியாரே.. இப்ப கிளாஸ் இருக்கு.. அப்புறமா பாக்கலாம்" என்று இரண்டு அடிகள் எடுத்து வைத்தவள்,

"நாளைக்கும் வருவீங்களா? ரகசியமா மீட் பண்ணலாம்?" என்று கிசுகிசு குரலில் கேட்க, ஆதியின் கண்கள் விரிந்து கொண்டது அவள் குரலில்.

"டைம் வேணா நான் சொல்லவா?" என்றதும் விரித்த கண்கள் விழித்துக் கொண்டது.

"அடி பிச்சுடுவேன்.. ஓடு" என்று அவன் செய்த பாவனையில் புன்னகை முகமாய் அவள் ஓட, பார்வையால் விரட்டியவன் உதடுகளோடு கண்களும் ரசித்து சிரித்தது.

"எப்படிண்ணா!.. தியாகுண்ணா சொன்னா மாதிரி உனக்கும் அக்காக்கும் ஒரு ப்ரைவேசி குடுத்தேனா?" மாரி சொல்லி வர,

"கடைய பாதில விட்டுட்டு ஓடிட்டு கதையா சொல்றா.. உன்ன..." என்று அடிக்க வந்தவன் பின் அமைதியாகிவிட்டான்.

வந்ததும் மனதை அமைதியாக்கி சென்று விடுகிறாள் என்பது புரிந்தது ஆதிக்கு. மனம் குழப்பத்தில் இருந்து அப்படியே இலகுவாகிவிட சிந்தனை முழுதும் அவளே.

"இப்போ என்ன தான் டா முடிவு பண்ணிருக்க? இன்னும் ஒரு வருஷம் ஒரு வருஷம்னு சொல்லிட்டு இருந்தன்னா கடுப்பாயிருவேன் பாத்துக்கோ.. மூணு மாசம் இல்ல ரெண்டு வருஷம் ஏதாவது ஒன்னை சொல்லு" மீனாட்சி ஆதி சாப்பிட அமரவும் சத்தமாய் கேட்க,

"மூணு மாசம் ஓகே மா" என்று உடனே சொல்லிவிட்டான் ஆதி.

"என்ன சொன்ன?" நம்ப முடியாமல் அன்னை மீண்டும் கேட்க, சிரித்தவன்

"உங்க விருப்பப்படியே பண்ணுங்க.. நான் இனி எதுவும் சொல்ல போறதில்ல.." என்றான்.

மீனாட்சி அவனை நம்பாத பார்வை பார்த்து வைக்க,

"நிஜமா தான் மா.." என்றான் அவர் பார்வை புரிந்து.

"என்னவோ கடமையை கட்டி காப்பாத்த போறேன்னு சொன்ன?" அன்னை கிண்டல் செய்ய,

"ஏன் கல்யாணம் ஆனா என்னால முடியாதா என்ன?" என்று இலகுவாய் அவன் கேட்டுவிட,

"இத தான டா இத்தனை நாளா நானும் சொல்லிட்டு இருந்தேன்!" எனவும் ஆதி அமைதியாய் சாப்பிட,

"எங்கருந்து வந்துச்சு இந்த திடீர் ஞானோதயம்?" என்று கேட்க,

"அதான் உங்க விருப்பப்படி செய்யுங்கனு சொல்லிட்டேனே ம்மா.. வேற என்ன? அடுத்து என்ன பண்ணனும் சொல்லுங்க.." என்று முடித்துக் கொண்டு ஆதி அறைக்கு சென்று கதவடைக்க, மொபைலை கையில் எடுத்துக் கொண்டு ஆதி கூறிய செய்தியை அனைவருக்கும் பகிர தயாரானார் மீனாட்சி.

காலையில் சாருவிடம் பேசியபின் அவள் ஒத்துழைப்பின் பின் அத்தனை தெளிவாய் தான் இருந்தான் இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் என்பது வரை.

இப்போது மீண்டும் சாருவிடம் பேசுவதற்கு முன்பு வரை அன்னை ஏற்படுத்திய அத்தனை குழப்பமும் மண்டைக்குள் வலியை உண்டு பண்ணி இருக்க, அப்போதும் அவனுக்கு தான் ஆதரவு கொடி பிடித்து நின்றாள் சாரு.

அவள் சொன்னதை வைத்து சரி என்றால் ஒரு வருடம் தான் என்று முடிவாய் கண்டிப்பாய் சொல்லி இருக்கலாம் தான்..

ஆனால் ஆதிக்கு முடியவில்லை. ஒரு வருடம் இரண்டாகி போனால் நிச்சயம் தாங்க முடியும் என்று தோன்றவில்லை ஆதிக்கு. அதுவும் சாரு பேசும் ஒவ்வொரு வார்த்தைக்குமே இவன் உருகிக் கொண்டு தான் இருக்கிறான்..

மனம் கொஞ்சம் கொஞ்சமாய் ஆரம்பித்து முழுதாய் அவள் பக்கம் சாய்வதை கண்கூடாய் கண்டு கொண்டிருந்தான் அவன்.

'காலையிலே சாருவை இதை காரணம் வைத்து தானே பார்க்க சென்றாய்' ஆதி மனமே அவனை எள்ளி நகையாட,

"நானா ஜாதகம் பார்க்க கூறினேன்?" என்றும் கேட்டுக் கொண்டான் அதனிடத்தில்.

ஜாதகம் முதல் அனைவரின் கூற்றும் புரிந்தாலும் எதற்காக திருமணம் ஒன்றைப் பற்றி நினைக்காமல் இருந்தானோ அந்த காரணம் அப்படியே இருந்தாலும் சாரு என்ற பெண்ணின் மேலான காதலும் கூடிக் கொண்டே போக,

இதில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் என அவனை அவள்பால் சாய்த்துக் கொண்டே இருக்க, ஒவ்வொருவரும் பேசி பேசியே என ஆதி மனதில் வேரை ஊன்றி ஆசையை வளர்த்து என முடிவாய் சாரு ஒருத்தியே அவன் இந்த முடிவை எடுக்க முழு காரணமாய் நின்றாள்.

முன்பை விடவும் ஒரு நம்பிக்கை அவன் மனதில் முழுதாய் வியாபித்திருந்தது.. சாரு உடன் இருந்தால் தன் எண்ணங்களுக்கும் கனவுகளுக்கும் கை கொடுப்பாள் என்கின்ற நம்பிக்கை.

சாருவுமே அவளளவில் தெளிவாய் ஆதியின் எந்த முடிவையும் ஏற்றுக் கொள்ள தயாராய் தான் இருந்தாள்.

அவனுக்கும் தன்பால் நேசம் உருவாவதை சில நாட்களாக சாரு உணர்ந்திருக்க, அவன் சம்மதம் தொடர்ந்து அவன் அவளுக்கான வருகை என மனதின் உற்சாகம் பல மடங்கு கூடிய உணர்வில் மிதந்து கொண்டிருந்தாள் பெண்.

கால நேரம் எல்லாம் அதில் சாருவிற்கு பெரிதாய் தெரியவில்லை. இத்தனை நாட்கள் காத்திருந்தவளுக்கு அது பெரிய விஷயமும் இல்லை.

ஆதியின் இந்த சில நாட்களில் ஆன சாருவின் மீதான பார்வையும் இப்பொழுதான புன்னகையும் அவன் முகத்தில் இவளிடம் பேசும் பொழுது வந்து செல்லும் மின்னல் ஒளிகளும் என ஒவ்வொன்றும் புதிதாய் அழகாய் தெரிந்து மிளிர்ந்து கொண்டிருந்தது.

ஆதி தன் வாழ்வில் வந்தது முதல் சாருவிற்கு அனைத்தும் அழகாகி இருக்க, இப்பொழுது இன்னும் அழகாகி இருந்தது இந்த உலகம்.

இதெல்லாம் நடக்குமா நடக்காதா என தெரியாமலே அவன்பால் ஈர்க்கப்பட்டு அவனிடம் பேசி, அவனையே எண்ணி என அவள் உலகத்தில் அவன் மட்டுமாய் இருந்த நாட்களை பசுமையாய் நினைத்துக் கொண்டாள் சாரு.

அடுத்த நாள் காலை எழுந்து வழக்கம் போல வெளியே வந்தவன் அப்போது தான் நினைவு வந்தவனாக அன்னையை அழைத்தான் ஆதி.

"சொல்லு டா" அன்னை கேட்க,

கடை சாவியை எடுத்துக் கொண்டவன், "அன்னைக்கு மாதிரி யார்கிட்டயும் நைட்டே சொல்லிடலையே?" ஒரு முறை அனைவர் முன்பும் கூச்சப்பட்டு நின்றிருக்க, மீண்டும் அப்படி எல்லாம் நிற்க முடியாது என்றே உஷாராய் இருந்தான்.

"ச்ச! ச்ச! நான் யார்கிட்ட டா சொல்ல போறேன்? எனக்கு தெரிஞ்சதே நாலு பேர் தான்" என்று கூறவுமே, ஆதி கலவரமாய் பார்க்க,

"நம்ம சுமதி கால் பண்ணிச்சு.. அதான் சொன்னேன்.. அப்புறம் தியாகு அம்மா மொட்டைமாடில நின்னாங்க.. அவங்ககிட்ட சொல்ல வேண்டியதா போச்சு.." அவரும் லிஸ்டை ஆரம்பிக்க,

"அப்புறம் மாரி வீட்ல விட்டுட்டீங்களே?" ஆதி கேட்க,

"அவன் தான் ராத்திரி சீக்கிரம் போய்ட்டானே! விடிஞ்சும் இன்னும் வர்ல.." என்று கூற,

"ஓஹ்! அப்ப சாரு வீட்ல?" என்று கேட்க,

"ஆஹ்ன்.. அவங்க நமக்கு சம்மந்தி ஆக போறவங்க.. உடனே சொல்ல வேண்டாம்? அதான் நானே ராத்திரி போன போட்டுட்டேன்.." என்று கூறி முடித்து தான் ஆதி முகத்தையும் அவன் முறைத்த பார்வையையும் பார்த்து திருட்டு முழியாய் விழித்தார்.

சூரியன் வந்து
வா எனும் போது...
என்ன செய்யும்
பனியின் துளி!.....

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
190
63
Coimbatore
மறந்து போன புன்னகை
மறுபடியும் வர செய்தவள் நீ.....
மனதிலே வருத்தி கொண்டாலும்
மகிழ்ச்சியாக இருக்கிறது உன்
முகம் கண்ட நொடி.....
மறுக்க முடியவில்லை உன் காதலை.....
💐💐💐💐💐
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
மறந்து போன புன்னகை
மறுபடியும் வர செய்தவள் நீ.....
மனதிலே வருத்தி கொண்டாலும்
மகிழ்ச்சியாக இருக்கிறது உன்
முகம் கண்ட நொடி.....
மறுக்க முடியவில்லை உன் காதலை.....
💐💐💐💐💐
Nice