• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே - புவனேஸ்வரி கலைசெல்வி -2

BOOMI_AK

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 26, 2021
6
5
3
Singapore
( அனைவருக்கும் வணக்கம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வேலை பளுவினால் எழுதாமல் போய்விட்டேன், மன்னிக்கவும். இனி பதிவுகள் முடிந்த அளவு விரைவாக வரும் என்ற உறுதியுடன், முதல் அத்தியாயத்தை சுருக்கமாக நினைவூட்டி விடுகிறேன்.



தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடரின் இயக்குநரானாக அறிமுகமாகுகிறார் பவானி. தன் வயதிற்கே உரிய சுறுசுறுப்பும் , சிந்தனையும் தனது தொடரிலும் பிரதிபலிக்க வைத்ததினால் ஒரு நேர்காணலில் கௌரவிக்க படுகிறார். அதில், நெடுந்தொடரின் மூலமாக பெரும்பாலானோர் மக்களை முட்டாளாக்க நினைப்பதாக, அவர் பேசிய பேச்சினால் பலவித எதிர்ப்பும், எச்சரிக்கையும் வர , மகளை பாதுகாக்கும் பொருட்டும் , அவளுக்கு தெம்பூட்டும் விதமாகவும், குலதெய்வ கோவிலுக்கு செல்கின்றனர் பெற்றோர் அழகர், கண்மணி. அவர்களுடன் இணைந்து பயணிக்கிறார்கள் , தாத்தா பாட்டியான கரிகாலன் - வைதீஸ்வரி மற்றும் இளைய தங்கை.



பயணத்தில் ஏற்படும் உரையாடல்களுக்கு தகுந்தவாறு பதில் கூறி வரும் பவானி , மனதினுள் வேலன் என்பவனைத் தேடிக்கொண்டிருக்கின்றாள். அதற்கு முக்கிய காரணம், அவளது நெடுந்தொடருக்கு கதை எழுதிக் கொண்டிருந்த பெண்மணி இனி எழுதுவதாக இல்லை என்று கூறியதினால்! தற்பொழுது உள்ள சூழலின் காரணமான எங்கும் பயணிக்க இயலாத பவானி , வேலனின் துணையோடு அந்த பெண்மணியை சரிக்கட்டுவாரா என்று தொடர்ந்து பயணித்து அறிந்து கொள்வோமாக .. இனி... )



(அத்தியாயம் இரண்டு )

டர்ந்த கேசமும், அழுத்தமான கண்களும் , அதில் பிரதிபலிக்கும் உற்சாக ஒளியுடன் சுற்றி இருந்தவர்களுக்கு வேலைகளை ஏவியப்படி இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான் வேலன். காட்டில் அலைந்து திரிந்தாலும், அவற்றவை இருப்பிடம் தான் மிருகங்களுக்கு பலம். மனிதர்களுக்கும் அதுபோலத்தானே? என்னத்தான் வேலைக்காக வெளிநாடுவரை சென்றாலும் , தத்தம் ஊரும், வீடும் மாந்தர்களுக்கு புது தெம்பினை கொடுப்பது வழக்கம் அல்லவா ? அதுபோல தனது பாட்டனார் நிர்வகிக்கும் கோவில் என்ற சிலிர்ப்பும் தெம்பும் வேலனை இன்னும் கம்பிரமாய் காட்டியது. தான் வெட்டி வந்த வாழை இலைகளை ஓடை நீரில் சுத்தம் செய்துவிட்டு ஓரமாய் வைத்தவன், வானத்தை அண்ணார்ந்து பார்த்தான்.



"பொங்கல் வைக்க நேரமாச்சோ?" என்று தனக்கு தானே கேட்டுக்கொண்ட நேரம் அந்த வாகனம் சீறி வந்து கோவில் முன்னே நிறுத்தப்பட்டது. அத்தனை நேரமாக இங்கும் அங்குமாய் அலைப்பாய்ந்து கொண்டிருந்த பவானியின் விழிகள் தனது தமையனைக் கண்டதும், உற்சாகமடைந்தன. துள்ளிக் குதித்து அவன் கைவளைவிற்குள் நின்று கொண்டாள் .



" வேலண்ணா" என்று ஆர்ப்பரிப்புடன் ஆரத்தழுவிக் கொண்டவளின் தலையை ஆதரவாய் வருடிக் கொடுத்தவன், "வாங்க டைரக்ட்டர் மேடம் " என்றான்.



"நீங்களும் என்னை திட்டப்போறீங்களா? ஆரம்பிங்க , நான் எதற்கும் துணிந்தவள்" என்று நாடகபாணியில் பவானி அபிநயம் பிடிக்க ,



"என்ன சீன் போடுறியா ? நான் எதுவும் கேட்டிடக் கூடாதுன்னு நீயே சரணடையுற மாதிரி தெரியுதே" என்று அவன் வினவவும், "அவளை நம்பாதேப்பா .. வரும் வழியில உன்ன வேலா வேலான்னு ஏலம் விட்டுட்டு உன்னைப் பார்த்ததும் அண்ணான்னு மரியாதையா பசப்புறா " என்றார் பாட்டி.



பாட்டிக்காக, ஏதோ அதிர்ந்தது போல நடித்த வேலன் , சிரித்துவிட்டு "இவளை பத்தி எனக்கு நீங்க சொல்லனுமா பாட்டிமா ? அருந்த வாலாச்சே " என்று அவள் செவியைத் திருகினான் . பவானி அப்படித்தான் , குறும்புத்தனம் அதிகம் , ஆனாலும் வேலன் என்றால் பாசத்திற்கு இணையான ஒரு பயமும் அவளுக்கு உண்டு. அவனது வயதா, தோற்றமா, கணீர் குரலா அல்லது எப்போதும் எதையும் நேர்த்தியாக செய்ய வேண்டும் என்று நினைக்கும் குணமா ? எது அவனுக்கு இந்த மரியாதையை பெற்றுத் தந்தது என்று அவனுக்கும் தெரியாது; அவன் தங்கையும் அறிந்ததில்லை! இதோ இப்போதும் பவானியை கைவளைவில் வைத்துக் கொண்டே, மொத்த குடும்பத்தையும் வரவேற்றவன், அவரவருக்கு ஏற்ப பதில் சொல்லி அடுத்த வேலைகளுக்கு அவர்களையும் ஆயுத்தமாக்கிவிட்டு பவானியிடம் திரும்பினான் .



"சொல்லு என்ன விஷயம் ? "



"என்ன அண்ணா ?"



"உனக்கு என்கிட்ட ஏதோ சொல்லணும் , இல்லன்னா ஏதோ கேட்கணும் . அப்படித்தானே ?"



"ஒரு பிரச்சனை வேலண்ணா" என்றவள் தன் நிலைமையை மொத்தமாக அவனிடம் கூறினாள் . அனைத்தையும் இடைப்புகாமல் கேட்டு முடித்தான் வேலன்.



"ஏன்டா செல்லம்மா, நீயே நல்லாத்தானே யோசிக்கிற ? நீயே கதையை எழுதலாம்ல? எதுக்கு இப்படி யாருன்னே சரியான அறிமுகம் ஆகாதவங்களை நம்பி களத்தில் இறங்குற ? தப்பில்லையா ? இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலேயே .. இதுக்கு மேல வரவேண்டிய கதையை நீயே எழுது.. நான் எதுவும் உதவி செய்யட்டுமா ? " என்றான்.



"அண்ணா , என்மேல எனக்கும் நம்பிக்கை இருக்கு .. ஆனா எல்லாருக்கும் தனித்துவமான திறமைன்னு ஒன்னு இருக்கு . அந்த பொண்ணுகிட்ட நுணுக்கமான அணுகுமுறை இருக்கு. அதுதான் வசனமா வெளிப்படுது . அதை கெடுக்க வேணாம்னு நினைக்கிறேன் . உங்களை பத்தியும் எனக்கு தெரியுமே . முதலில் உங்ககிட்ட தானே கதைக்காக உதவி கேட்டேன் ? ஆனா அப்போ சூழ்நிலை சரியா அமையல .. இப்பவும், நிலாவுக்கு நிகரா நீங்க எழுத முடியும்னு நான் நம்புறேன் தான் . ஆனாலும், ஒருதடவை அவளை சமாதானம் பண்ண முடியுமான்னு எனக்கு முயற்சி பண்ணனும்னு தோணுது .. சரி வரலைனா அடுத்து இதைப்பத்தி யோசிப்போமே" என்றாள் .



"என்ன பேரு சொன்ன?"



"நிலா அண்ணா" , மீண்டும் அந்த பெயரைக் கேட்டு ஒரே ஒரு நொடி சிலிர்த்து போனான் வேலன். அதற்குள்,



"மிஸஸ் நிலா" என்று பவானி மீண்டும் அவளின் பெயரை சொல்லவும்,



"ஓஹோ , மேரீட் ஆ " என்றான் சுருதி இறங்கிய குரலுடன். "ச்ச , இந்த பெயர் என்னை இன்னும் எத்தனை வருஷம்தான் ஆட்டி வைக்குமோ?" என்று மனதிற்குள் பொறுமியவன், "சரி உனக்காக அந்த பொண்ணை தேடி நான் போறேன் . எனக்கு அட்ரஸ் அனுப்புவிடு" என்று ஒப்புக் கொண்டான்.

லைகளுக்கு மத்தியில் ஒரு குக்கிராமம். பகலவன் உச்சியில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாலுமே, வெப்பமே உணர முடியாத அளவிற்கு குளிரான இடம். ஒரு வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் தாராளமாக இடைவெளி இருக்க , சாளரம் வழி வழக்கம்போல இயற்கையை அள்ளிப் பருக ஆரம்பித்தாள் வெண்ணிலா. அந்த குளிர் காற்றில் ஈரக்கூந்தல் உலர்வது அசாத்தியம் என்று அறிந்தாலுமே , அவளுக்கு கூந்தலை முன்மார்பில் விட்டு கைகளால் அளந்து உலர்த்த ஒரு உந்துதல் வந்தது.



மனைவியின் எழிலான செய்கையை இரசித்த வண்ணம் பின்னாலிருந்து அவளை அணைத்துக் கொண்டு நிம்மதியாய் பெருமூச்சு விட்டான் கதிர்.



"ஒய் ..என்னப்பா இன்னும் நேரம் இருக்கே கொஞ்சம் தூங்கலாம்ல?" என்றபடி முதுகைக் காட்டியவண்ணம் நின்றபடியே ஒரு கையால் அவன் கன்னத்தை வருடினாள் வெண்ணிலா.



" உன்னைய யாரு இவ்வளவு சீக்கிரம் எழுந்திரிக்க சொன்னா ? மாமியாரா, நாத்தனாரா ? உனக்கு நான் எனக்கு நீ .. அப்பறம் ஏன்டீ என்னைய விட்டுட்டு சீக்கிரமா தள்ளி போற " என்று காதலோடு செல்லமாய் சீண்டினான் கதிர்.



"அது சரி.. மாமியார் நாத்தனார் இல்லைத்தான், ஆனால் நம்ம ரெண்டு பேருக்கும் வயிறு இருக்குல்ல?" என்று சில நொடி இடைவெளி காத்து " அப்பறம் பசிக்கும்ல எனக்கு " என்று நடித்துக் காட்டினாள் வெண்ணிலா. அவளுடன் இணைந்து சிரித்த கதிர்,



" நீ கூட இருந்தா பசி எப்படி இருக்கும்னு சொல்ல எனக்கும் ஆசைதான்டீ பொண்டாட்டி .. ஆனா வயிறு என் மனசாட்சிக்கு உண்மையா இருக்க சொல்லுது பாரேன்" என்றான்.



"அது வயிறு இல்லை கதிரு..தொப்பை"



"எது, எனக்கு இருக்குறது தொப்பைன்னா , அப்போ உனக்கு இருக்குறது என்ன தலைகாணியா? என்னைவிட நாலு இன்ச் பெருசு பாரு" என்று அவளுக்கு கிச்சு கிச்சு மூட்ட,



"ஹேய், நான் உங்ககூட சந்தோஷமா இருக்கேன் , நல்லா சாப்பிடுறேன் , நல்லா தூங்குறேன் , நல்லா தொப்பை வளருது ..அதுக்கு என்னவாம் இப்போ ? ஏன் அய்யாவுக்கு இலியானா இடுப்புதான் வேணுமோ?"



"ச்ச ச்ச .. இலியானா அந்த காலம் பேபி ..இப்போ நமக்கு லவ் டூடே இவானா தான் "என்று கண்ணடித்தான் கதிர்.



"அடப்பாவி புருஷா...போங்கடா இன்னைக்கு சாப்பாடு கிடையாது"



"பரவால்ல, நீ போதும்" என்றவன், ஓரளவிற்கு தணிக்கை தேவையில்லாத அளவிற்கு அவளை கொஞ்சி விடுவித்தான்.



"நாம எப்பவும் இப்படியே இருக்கணும் கதிரு.. இப்படியே ..தனியா .. நமக்கு நடுவில் யாரும் வரவேக் கூடாது .. எனக்கு இந்த வாழ்க்கையே போதும்.. யாரும் வரமாட்டாங்க தானே?" என்று நெகிழ்வும் தவிப்புமாய் கதிரின் மார்பில் சாய்ந்து செல்லம் கொஞ்சிக்கொண்டே தன் தாபத்தை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.



ரியாய் அதே நேரம் அழைப்பு மணி ஒலிக்க, "வில்லன் வந்துருக்கான் பாரு " என்று நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு அவளைப் பிரியப் பார்த்தான் கதிர். எரிச்சலாக வந்தது வெண்ணிலாவிற்கு.



"எவன்டா அது " என்று வாய்விட்டே அவள் சொல்ல, மனையாளின் அதிருப்தியான முகத்தை பார்த்து கதிருக்கு சிரிப்புதான் வந்தது.



"நான் போயி பாக்கவா?" என்றான் .



"வேண்டாம் , கொஞ்ச நேரம் அங்கேயே நிக்கட்டும்" என்றவள், அவன் தோளில் சாய மீண்டும் அழைப்பு மணி விடாது ஒலித்தது.



"ச்ச ..நானே பாக்குறேன் .." என்று வெண்ணிலா எழவும், "இரு நானும் வரேன் " என்றான் கதிர்.



"அதெல்லாம் வேணாம் ..நீங்க விட்டா பேசிட்டே இருப்பிங்க .. நீங்க போயி குளிங்க ..நான் யாருன்னு பார்த்து தாட்டி விட்டுடுறேன்" என்று வில்லத்தனமாய் சிரித்துவிட்டு போனவளுக்கு தெரிந்திருக்கவில்லை அங்கு நிற்பதே வில்லன் மன்னிக்கவும், வேலன் தான் என்று!
 

Attachments

  • Capture.JPG
    Capture.JPG
    19.9 KB · Views: 19