வணக்கம் மக்களே!!
கனா காணும் பேனாக்கள் 2025 போட்டியில் நகைச்சுவை காதல் பிரிவில் வருண் சக்கிரவர்த்தி - பூஜிதாலக்ஷ்மியுடன் வரும் புதன் அன்று உங்களை சந்திக்க வருகிறேன். அதுக்கு முன்னாடி கதையில் இருந்து சிறு முன்னோட்டம்.
"இப்படியே மசமசன்னு பார்த்துட்டு இருந்தா எப்படி புஷ்ப்ஸ்.. சீக்கிரம் இலையை போடு பசிக்குது" என்ற பூஜாவை வாய் மேல் விரல் வைத்து பார்த்துகொண்டிருந்தார் புஷ்பவல்லி.
"புஷ்ப்ஸ் உன்னை தான் சொல்றேன் காது கேட்கலையா?!" என்று அவரை பிடித்து உலுக்கவும் சட்டமாக டைனிங் டேபிளின் முன் அமர்ந்திருந்தவளை கண்டவர்,
"அடியேய்!! சுவர் ஏறி குதிச்சு வந்ததும் இல்லாம நடுவீட்ல உட்கார்ந்துட்டு அழிச்சாட்டியம் பன்றியே உனக்கே நல்லா இருக்காடி?! அந்த மனுஷன் வேற எந்நேரம் ஆனாலும் மதிய சாப்பாட்டுக்கு வருவேன்னு சொல்லிட்டு போயிருக்காரே.." என்று வாயிலை பார்த்தபடி பூஜாவின் கையை பிடித்து தூக்கி நிறுத்தி,
"ராசாத்தி சொன்னா கேளுடி யாராவது வந்துட போறாங்க சீக்கிரம் கிளம்புடி. அதுவும் என் மாமியார் கண்ணுல பட்ட நீ செத்த! வெத்தலைக்கு பாக்குக்கு பதிலா உன்னை இடிச்சு வாயில போட்டுக்குவாங்க கிளம்புடி"
"ப்ச் இப்போ எதுக்கு நீ இப்படி நடுங்குற?! அதுதான் கெழவி தருண் கூட ஹாஸ்பிட்டல் போயிருக்கே அது வர எப்படியும் மூணு மணி நேரமாகும் நீ சாப்பாட்டை போடு.." என்று தானே தட்டை எடுத்து வைத்தவள்,
"என்ன சிக்கன் ஸ்மெல் ஆளை தூக்குது..." என்று பாத்திரங்களை திறந்து பார்க்க,
"சத்தம் போடாம இருடி நானே பரிமாருறேன் சீக்கிரம் சாப்ட்டுட்டு இடத்தை காலி பண்ணுடி உன் மாமா வந்துட போறார்" என்றபடி அவளுக்கு பரிமாற,
"மீசைக்கும் வேற போக்கிடம் ஏது?! இங்கே தானே வந்தாகணும்.. சரி சரி முதல்ல சிக்கனை வை ஒரு பிடி பிடிக்கிறேன்"
"சிக்கனா?! அதை இன்னும் சமைக்கலையேடி.."
"என்னது சமைக்கலையா?!" என்று பூஜா அதிர்வோடு எழுந்துகொள்ள அவளை அப்படியே அமுக்கி பிடித்து நாற்காலியில் அமர்த்தியவர்,
"ஆமா பூஜாகுட்டி அத்தை தான் கோழியை ராத்திரிக்கு சமைக்க சொல்லிட்டாங்க... நீ வருவன்னு தெரிஞ்சிருந்தா செஞ்சிருப்பேன் எனக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திருக்கலாமே?!"
"அதுதான் நான் உனக்கு அத்தனை போன் போட்டேனே ஒன்னாவது எடுத்தியா?!" என்று பூஜா சடைத்துக்கொள்ள,
"சாரி கண்ணு. அந்நேரம் வேலையா இருந்தேன்னு சொன்னேனேன்.. அத்தைக்காக இப்போ சமத்தா சாப்ட்டுட்டு கிளம்பு. நான் இன்னொரு நாள் உனக்கு சமைச்சு எடுத்துட்டு வரேன்" என்று தாஜா செய்ய,
"என்ன புஷ்ப்ஸ் இன்னும் அப்டேட் ஆகாம மாமியாரை கேட்டு சமைக்கிற? ஸோ சேட்!! இரு நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததும் முதல்ல அந்த கெழவிக்கு ஒரு பாயாசத்தை ரெடி பண்றேன்"
"அதெல்லாம் என் மகன் கையாள தாலி வாங்கினப்புறம் பண்ணுடி. இப்போ கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு சாப்பிடேன்!!" என்று புஷ்பா பதைபதைக்க,
"வாயை மூடிட்டு எப்படி புஷ்ப்ஸ் சாப்பிட?! அதுவும் எனக்கு சிக்கன் இல்லாம சோறு இறங்காது நீ என்ன பண்ற கடகடன்னு சிக்கனுக்கு மசாலா போட்டு எண்ணையில் குளிப்பாட்டி துவட்டி தூக்கிட்டு வா ஒரு கை பார்த்துட்டு கிளம்பறேன்.." என்றவளை மறுக்க முடியாத புஷ்பவல்லி மருமகளுக்காக சிக்கனை பொறிக்க சென்றார்.
"என்னதான் எங்கம்மா சிக்கன்ல எட்டு வகை செஞ்சாலும் உன் கையாள பொறிச்ச சிக்கனுக்கு ஈடாகாது புஷ்ப்ஸ்" என்று அவர் கன்னம் கிள்ளி கொஞ்சியபடி சாப்பிட வெளியில் புல்லட் சத்தம் கேட்டது.
"ஐயையோ வருண் வந்துட்டான் போலே.." என்று பதறியவர் கருமமே கண்ணாக சிக்கனை சுவைத்து கொண்டிருந்த பூஜாவை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்த அதேநேரம் வருண் கதவை தட்டினான்.
Last edited: