அறிவியலில் எட்ட சாத்தியமில்லாததாக கருதப்பட்ட உச்சத்தையும் பெண்கள் எட்டியுள்ளனர். நோபல் பரிசு வென்றது முதல் நாசாவிற்கு செல்வது வரையிலும் பெண் விஞ்ஞானிகள் வரலாற்றில் தங்களது பெயர்களை இடம்பெறச் செய்துள்ளனர்.
உலகின் பல்வேறு பகுதிகளைப் போன்றே இந்தியாவிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு ஆணாதிக்கம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பெண்மணிகள், பலசோதனைகளைக் கடந்து சாதனை செய்து பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆனவர்கள். எனக்குத் தெரிந்த சில சாதனைப் பெண்கள்.
இந்திரா காந்தி:
இந்திரா பிரியதர்ஷினி, என்ற இயற்பெயர் கொண்ட ஜவஹர்லால் நேருவின் புதல்வி இந்தியாவின் இரும்புப் பெண்மணி. இந்திய நாட்டின் முதல் பெண் பிரதமராக வந்தவர். நாட்டின் பிரதமராகவும், எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுதும் பல விமர்சனங்கள், பல தடைகள் வந்தாலும், தயங்காது துணிச்சலான பல முடிவுகளை எடுத்து பாரத நாட்டை உயரச் செய்தவர்.
அன்னை தெரசா:
அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார். கருணையின் மறு உருவம் இவர். அமைதிக்கான “நோபல்” பரிசினையும், இந்திய நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருதையும் பெற்றவர். அநாதைகள், ஆதரவற்றவர்கள், நோயாளிகள் என அனைவருக்காகவும் தம் வாழ்வை அர்ப்பணித்த அன்பின் திரு உருவம். அகிலமே “அன்னை” எனக் கொண்டாடிய பெருமைக்குரியவர்.
எம். எஸ். சுப்புலெட்சுமி:
இசைத் துறையில் உலகப்புகழ் பெற்றவர். ஐ.நா மன்றத்தில் இசைக்கச்சேரி நடத்திய முதல் இந்தியப் பெண்மணி. பக்திப் பாடல்கள், கீர்த்தனைகள், திரை இசைப் பாடல்கள் என அனைத்து இசைவடிவிலும் முத்திரைபதித்த கலைமாமணி இவர்.
இந்தியில் வெளியான மீரா பஜன்கள் இந்தி ரசிகர்களிடையே சுப்புலட்சுமிக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது. அதே போல கேதாரி நாத்திலிருந்து கன்னியாகுமரி வரையான பக்தர்களையும் இவரது ஆன்மீகக் குரல் பரவசப்படுத்தியது. 1944 இல் நான்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி இரண்டு கோடி ரூபா வரை நிதி திரட்டினார். மனைவியின் குரலை பொதுநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தின் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது. இந்நிதி மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமயத்தொண்டு ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டது.
"இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்" என எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார்.
பத்மபூஷன், சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலாநிதி, இசைப் பேரறிஞர் விருது, பத்ம விபூஷன், சங்கீத கலாசிகாமணி விருது, காளிதாஸ் சம்மன் விருது, இந்திராகாந்தி விருது, பாரத ரத்னா விருது என்று பல விருதுகளை வாங்கிக் குவித்தவர்.
ராதாமணி:
ராதாமணி அடிக்கடி நிருவனத்திற்குவருவதை வழக்கமாக்கிக் கண்டதன் பயனாக கனரக வாகன்களை இயக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இவர் 1981ல் இலகுரக வாகன உரிமத்தையும்1988ஆம் ஆண்டில் கனரக வாகன உரிமத்தையும் பெற்றார். தற்போது எர்த்மூவர்ஸ், ஃபோர்க்லிஃப்ட், மொபைல் கிரேன் போன்ற அணைத்து வகையான கனரக வாகனக்களையும் இயக்குகிறார்.
டெசிதாமஸ்:
இந்தியாவின் ‘ஏவுகணைப் பெண்’ என்றழைக்கப்படும் டெசி தாமஸ் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வானூர்தி அமைப்புகள் இயக்குநர் ஜெனரல் ஆவார். டிஆர்டிஓ-வின் அக்னி-4 ஏவுகணை திட்டத்தில் திட்ட இயக்குநராக பதவி வகித்தவர். நாட்டின் ஏவுகணைத் திட்டத்திற்கு தலைமை வகித்த முதல் பெண் விஞ்ஞானி என்கிற பெருமைக்குரியவர்.
56 வயதான இவர் ஏவுகணை வழிகாட்டுதல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்தத் துறையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். அக்னி ரக ஏவுகணை வடிவமைப்பில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். பல்வேறு ஃபெலோஷிப்களும் கௌரவ டாக்டர் பட்டங்களும் பெற்றுள்ளார்.
மங்களாமணி:
மங்களா மணி அண்டார்டிகாவின் உறைபனிச் சூழலில் 403 நாட்கள் செலவிட்டு அதிக நாட்கள் தங்கிய முதல் பெண் விஞ்ஞானி என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 56 வயதான இவர் இந்த பணிக்குத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு இத்தகைய பனிச்சூழலுக்கு பரிச்சயமில்லாதவர்.
2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அண்டார்டிகாவில் உள்ள பாரதி ஆராய்ச்சி மையத்திற்கு பயணம் மேற்கொள்ளத் தேர்வான 23 பேர் அடங்கிய குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார். அறிவியல் பிரிவில் உள்ள பெண்கள் குறித்த பிபிசி தொடரில் இவர் இடம்பெறவிருக்கிறார்.
செய்தித்தாள் ஒன்றில் வெளியான ஒரு கட்டுரையில், "பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கால்பதித்து வருகின்றனர். பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை ஏற்கத் தயாராக இருக்கவேண்டும். சிறப்பான அறிவாற்றல் இருக்குமானால் சாதனை படைக்க எல்லைகளே கிடையாது." என இவர் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்பனா சாவ்லா:
கல்பனா மார்ச் 1995 இல், நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார். 1984 இல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற அழியாப் பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கிலோமீற்றர்கள் பயணித்து பூமியைச் சுற்றி 252 முறைகள் வலம் வந்துள்ளார். இதற்காகவே அவர் விண்வெளியில் 372 மணித்தியாலங்கள் இருந்துள்ளார்
STS-87 இன் போது வின்ஸ்டன் ஸ்காட் மற்றும் தகாவோ டோய் விண்வெளியில் பயணித்துக்கொண்டிருந்த ஸ்பார்டன் எனும் செயல் குறைபாடிலிருந்த செயற்கைக்கோளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் காரணமாக இருந்தார். ஐந்து மாத கால முழுமையான விசாரணைகள் மற்றும் சோதனைக்குப் பின்பு, மென்பொருள்களிலும், பறக்கும் குழுவின் செயல் முறைகள் மற்றும் தரைக்கட்டுப்பாடுகளில் உள்ள பிழைகளை நாசா கண்டறிந்தது.
STS-87க்குப் பின்னர் கல்பனா தொழில் நுட்ப வல்லுனராக விண்வெளி அலுவலகத்தில் நாசாவினால் நியமிக்கப்பட்டார். அவரது செயலைப் பாராட்டி அவரது சக வல்லுனர்களே ஒரு விருதையும் வழங்கிக் கௌரவித்தனர்.
2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளாலும் கால அட்டவணையில் ஏற்பட்ட சிக்கல்களினாலும் காலம் கடத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அவர்கள் பயணிக்க இருந்த விண்கலப் பொறியில் இருந்த ப்லோ லயினர்களில் பிளவுகள் ஏற்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர். ஜனவரி 16, 2003 இல் சாவ்லா மீண்டும் பாரிய அனர்த்தத்துக்குள்ளான STS-107 விண்வெளிக்குத் திரும்பியது. இந்தப்பயணத்தில் சாவ்லாவினுடைய பொறுப்புகளாக மைகிரோ கிராவிட்டி (micro gravity) சோதனைகள் அமைந்திருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவற்றுள் விண்வெளி வீரர்களினுடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதுமான விண்வெளி தொழில் நுட்ப மேம்பாடு வளரவுமாகப் பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
1991-1992 இல் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாட தனது கணவருடன் கல்பனா இந்தியா வந்திருந்தார். இதுவே அவரது இறுதி வருகையாக அமைந்தது.
இன்னும் பல பெண்கள் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் சிறு சிறு சாதனைகளைப் படைத்து, தினம் தினம் வாழ்வில் வென்று கொண்டிருக்கின்றனர். மனித பிறப்பின் மகத்தான சிறப்புக் கொண்ட பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்.