ஊனும்நீ… உயிரும் நீ!
எழுத்து :- ப்ரியமுடன் விஜய்
அன்று என் திருமணம். திருமண மேடையில் என் கணவனாகப்போகிறவரின் அருகில், மாலையுடன் அமர்ந்திருந்திருந்தேன். எதிரில் பெற்றோர் எனும் ஸ்தானத்தில், என்னை ஈன்றெடுத்த என் தாய் மட்டுமே நின்றுக்கொண்டிருந்தாள் கண்களில் கண்ணீருடன். அக்கண்ணீரின் அர்த்தத்தை நான் அறிவேன். கண்ணீர் சிந்தும் அக்கண்களைப் பார்த்தேன். அத்தனை வருடம் தான் அனுபவித்த வலிக்குக் கிடைத்த சிறு மருந்தாய் என் வாழ்வில் நடக்கவிருக்கும் இந்நிகழ்வை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் அவள். என் கழுத்தில் மாங்கல்யம் ஏறியது. அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்க நானும் என் கணவனும் அவர் அருகில் சென்றோம்.
“அம்மா!” நான் இவ்வார்த்தையை மொழியக் காத்திருந்திருப்பாள் போலும். அவ்வார்த்தையைக் கூறிமுடிப்பதற்குள்ளேயே என் மார்பில் தலைசாய்ந்து கொண்டாள். அவ்வளவே! என் வாயிலிருந்து வேறு வார்த்தைகள் வரவில்லை. என் சேலை அவள் கண்ணீரால் நனைவதை ஈரமாகிய என் மார்பு கூறியது. இறுக அணைத்துக் கொண்டேன்.
மொழிகள் பேசாத தருணம் அது. என் தாய் சந்தோசத்தில் என்னை அணைத்துக்கொண்டிருந்த அந்த இனிய தருணத்தில் என் நினைவுகளோ ஏழு வருடங்களுக்கு முன் சென்றது.
அப்பொழுது என் வயது 15. பெண் பித்துப் பிடித்த என் அப்பா என்ற மிருகம், வேறு பெண்ணுடன் தவறான உறவிலிருப்பதை உணர்ந்த என் தாய் வலியில் கத்திக்கொண்டிருந்தாள். தான் செய்த அந்த அதி அற்புதமான காரியத்திற்கு ஆரத்தி எடுத்து வரவேற்காமல், அழுது புலம்பியவளைக் கண்டு எரிச்சலுற்றவன், என் கண் முன்னே என் தாயைத் தாறுமாறாக அடித்துப்போட்டான். என் தாயை அடித்ததைப் பொறுக்காத நானோ,
“என் அம்மாவையா அடிக்கிறாய்?” வெகுண்டெழுந்து அவனது சட்டையைப் பிடித்தேன். நான் எதிர்பாராத விதமாய் என் தலையைச் சுவரில் முட்டவைத்தான் அவன். சுவரில் பட்ட வேகத்தில் என் நெற்றியிலிருந்து இரத்தம் லேசாய் எட்டிப்பார்ப்பதைக் கண்ட என் தாய் வீறுகொண்டெழுந்தாள்.
“வீட்டை விட்டு வெளியே போ! தப்பையும் செய்துவிட்டு ‘ஏன் இவ்வாறு செய்தாய்?’ என்று கேட்ட என்னை அடித்தாய். பொறுத்தேன். நான் ஈன்றெடுத்த என் உயிரை எவ்வாறு நீ அடிக்கலாம்? இனியும் பொறுமைக் கொள்ளமாட்டேன். எவளைத் தேடி எங்களை ஏமாற்றினாயோ, அவளிடமே சென்றுவிடு. எனக்கோ என் பிள்ளைக்கோ நீ தேவையில்லை.” என்ற என் தாயின் வார்த்தையில் ரோசம் கொண்டவனாக அவன்,
“என்னையா வேண்டாம் என்கிறாய்? பார்! உன்னைவிட்டுச் செல்லும் நான் சந்தோசமாய் வாழப்போகிறேன். என்னை அனுப்பிய நீயோ, எந்நிலையில் இருக்கப்போகிறாய் என்று பார்க்கிறேன். மறந்துவிடாதே பெண்பிள்ளை வைத்திருக்கிறாய். அனுபவிப்பாய்!” என்னவோ என் தாய் தவறு செய்ததைப் போல் சாபம் வேறு. ஆனால், அப்பொழுது நாங்கள் உணரவில்லை. குடும்பத்தை ஏமாற்றி, வேற பெண்ணிடம் சென்ற அவன் நிம்மதியான வாழ்வை அனுபவிக்கப் போகிறான், நாங்கள் தான் சிரமப்படப்போகிறோம் என்று.
அவன் எங்களைவிட்டுச் சென்றதில் என் தாய்க்கு முதலில் நிம்மதியாய் தான் இருந்தது. பெண் பித்துப் பிடித்தவன் என்று முன்னரே அறிந்திருந்தும் அவனை அவள் அனுப்பவில்லை. காரணம், நான்! பெண்பிள்ளை! வலியுடன் கழித்த வருடங்கள் கடந்து, அன்று அவன் வெளியேறியதில் நிம்மதி தான் ஆனாள்.
நாட்கள் ஓடியது. நானும் என் அம்மாவும் அருகிலிருக்கும் கடைக்குச் சென்றோம். அப்பொழுது,
“ஒரு ஆம்பளையே வீட்டைவிட்டுச் சென்றிருக்கிறான் என்றால், இவள் எப்பேர் பட்டவளாக இருப்பாள்?!” என்று எங்களிருவர் காதுப் படவே ஒருவன் பேச... அதற்கு மற்றொருவனோ,
“இவள் எத்தகைய காரியம் செய்ததை அவன் பார்த்தானோ! பொறுக்க இயலாமல் ஓடிருப்பான்.” என்று கூறவே என் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது. எனது கையை இறுகப்பற்றிய அம்மாவின் பிடி உணர்த்தியது அவளும் அவ்வார்த்தையால் தாக்கப்பட்டாள் என்று. செல்லும் இடமெல்லாம் அனைவரும் என் தாய் தான் தவறு செய்ததைப் போன்று பேசினார்கள்… ஏசினார்கள்…
கல்லூரியில் சேர்ந்தேன். அறுபதுகளிலிருந்த என் ஆசிரியனோ என் தாயைப் படுக்கையறைக்கு அழைத்தான். அதற்குத் திட்டி மறுத்த என் தாயை அவன் பேசிய வார்த்தைகள்…!!!
“அதான் புருசன் இல்லையே! பின் ஏன் இந்த பத்தினி வேடம்?” பல போரட்டங்களுக்குப் பிறகு வேறு கல்லூரியில் சேர்ந்து படித்தேன். படித்துப் பட்டமும் பெற்றேன். என் திருமணத்திற்கு மாப்பிள்ளைத் தேடினாள் என் தாய். என் தாய் வீட்டுச் சொந்தமோ,
“அப்பா இல்லா பெண்ணை எவன் திருமணம் செய்வான்? ஆடு மேய்பவனையோ மாடு மேய்பவனையோ பார்த்துக் கட்டிக்கொடு. இரண்டாம் தாரம் என்றெல்லாம் பாராதே!” நல்ல அறிவுரைகளைக் கொடுத்தனர்.
இவையெல்லாம் கடந்து தான் என்னைப் பெரிய, நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்தாள் தாயவள். ஆணின் துணையின்றி எனக்காக வாழும் என் தாய், எனக்குத் தாய் மட்டுமல்ல… என் ஊன்… என் உயிர்...