• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிங்கிள் பேரன்ட் - சிவநேசன்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
சிங்கிள் பேரன்ட்:

"நீங்க சிங்கிள் பேரன்ட்டா இருக்குற கஷ்டத்தை எங்களால நல்லாவே உணர முடியுது மேடம். நீங்க கவலையேபடாதீங்க.. வர்ஷாவ நாங்க நல்லாவே கவனிச்சிக்குவோம்"

அந்த ஹோம்கேர் இல்லத்தின் மேனேஜர் பேசி முடித்து சில விண்ணப்பங்களில் கையெழுத்து வாங்கினார்.

ஐஸ்வர்யாவும் வருணும் பிரிந்தபோது ஆறு வயதே நிரம்பிய வர்ஷா ஐஸ்வர்யாவுடன் இருப்பதாக கோர்ட்டில் முடிவானது. நகரின் பிரபலமான ஐடி நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணியிலிருக்கும் அவளுக்கு பகல் ஷிப்ட் இருந்த வரை பிரச்சினையே இல்லை. ஆனால் நைட் ஷிப்ட் மாறி வரும்போதுதான் வர்ஷாவை பார்த்துக் கொள்வது சிரமமாகிவிட்டது. மேலும் ப்ராஜெக்ட் விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்லவும் நேர்கிறது. அதனால் தான் அக்கம்பக்கம் விசாரித்து இந்த ஹோம்கேரில் விட்டுவிட முடிவு செய்திருக்கிறாள். உள்ளே வர்ஷாவைப் போன்ற ஏராளமான குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க மனதிருப்தியோடு வர்ஷாவிடம் பை சொல்லிவிட்டு கிளம்பத் தொடங்கினாள்.

"அம்மா எனக்கு டாமிய தராமலே போறீங்களே.." என அவள் கேட்டதும் நினைவுக்கு வந்தவளாய் காருக்குப் போய் ஒரு நாய் பொம்மையை கொண்டு வந்து கொடுத்தாள்.

வர்ஷாவுக்கு முகம் சோர்ந்துப்போனது. "அம்மா இது நம்ம டாமி இல்லையே.."

"இதப்பாரு வர்ஷு.. அம்மாவும் வேலைக்குப் போய்டுறேன். உன்னையும் இங்க சேத்தாச்சு. டாமியை யார் பாத்துக்குவா..? அதான் அதை வித்தாச்சு. இதப்பாரு.. இதுவும் டாமியே தான். இதுக்கும் நீ சோறூட்டலாம் முத்தா கொடுக்கலாம்.. இதுக்கூட விளையாடலாம் சரியா?" என்ற அவளது சமாதானத்தை வர்ஷா ஏற்காமல் பொம்மையை தூர எறிந்தாள்.

அழும் குரலில் "ஆனா நான் முத்தா கொடுத்தா டாமியும் பதிலுக்கு முத்தா கொடுக்குமே.. இந்த பொம்மை கொடுக்குமா? இது டாமி மாதிரி தான் ஆனா டாமி இல்லையே" என்றவள் சொன்னதும் ஐஸ்வர்யாவுக்கு சுரீரென்றது.

'உண்மை தான்‌.. இவர்கள் பெற்றோர் மாதிரி தான்.. ஆனால் பெற்றோர் இல்லையே.. ' ஏதோ உணர்ந்தவளாய் மேனேஜரிடம் சென்று அனைத்தையும் ரத்து செய்தாள்.

இனி வர்ஷாவை பார்த்துக் கொள்ள ஏற்றவாறு ஒரு வேலையை தேடிக் கொள்ளலாமென முடிவுக்கு வந்தவள் அவளைத் தூக்கிக் கொஞ்சியபடி "வா..நாம போய் டாமியத் தேடலாம்" எனச் சிரித்தாள்.