• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிங்கிள் பேரன்ட் - மகளின் டார்லிங்க் - சுஜின்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
மனக் கசப்புகளாலும், சண்டைகளாலும் கணவனைப் பிரிந்து, தன் மகளுடன் வாழும் கல்யாணியின் வீட்டுக் கடிகார முட்கள் மட்டும் ஜோடியாக இரவு 8 மணியைக் கடந்து சென்று கொண்டிருந்தது.

"ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. லேட்டா தான் வருவேன்" என்று தேவிஸ்ரீ காலையிலேயே கூறியிருந்தாலும், இரவு நேரம் ஓடஓட கல்யாணியின் தாய்மை படபடத்தது.

"நேரம் ஆகிடிச்சே! எதுக்கும் ஃபோன் பண்ணுவோம்" என்று எண்ணியவள், தனது மகளின் எண்ணை அழைத்தாள். அடுத்த சில நொடிகளில், "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" என்ற பாடல் தன் மகளின் அறையிலிருந்து ஒலித்தது.

"ஐயோ, மொபைலை விட்டுட்டு போய்ட்டாளா!!!" - மகளின் அறைக்குச் சென்று கைப்பேசியை எடுத்தவள், செய்வதறியாது சோஃபாவில் வந்து அமர்ந்தாள்.

"சரி, ஒரு அரைமணி நேரம் பாக்கலாம். இருக்குற டிராபிக்ல நேரத்துக்கு வர முடியாது தானே" என்று தனக்கு தானே சமாதானம் கூறியவளின் கண்கள், லாக் செய்யப்படாத தன் மகளின் கைப்பேசியை நோட்டமிட்டது.

மகளின் privacyக்கு மதிப்பளிப்பவன் தான் கல்யாணி. இருந்தாலும், தன் மகளின் செயல்பாடுகள் பற்றி அறியும் ஆர்வத்தில், அவள் கைப்பேசியை ஆராய ஆரம்பித்தாள்.

Galaryயின் தூய்மையையும், அழிக்கப்படாத Chorme Historyயின் சுத்தத்தையும் பார்த்தவளின் மனது, மகளின் ஒழுக்கம் பற்றி பெருமை கொண்டது. ஆனால், அவை யாவும் நொடிப் பொழுதில் சிதைந்தது, Whatsappப்பின் கதவுகள் திறக்கப்பட்ட போது.

"My Darling" என்ற பெயரில் சேமிக்கப்பட்ட எண்ணிலிருந்து சரியாக மாலை 5 மணிக்கு "Waiting outside of ur clg. Come fast" என்றொரு செய்தி அனுப்பப்பட்டிருந்தது.

இடி விழுந்தது போல அவள் அமர்ந்திருக்க, "பாடம் நடத்தியே பசிக்க வச்சிட்டாங்க. பசிக்குது. சாப்பாடு போடுமா" என்று கூறியபடி வீட்டிற்குள் நுழைந்தாள் தேவிஸ்ரீ.

கல்யாணியின் மனது கருகி, எரிமலை போல இதயம் வெடித்துக் கொண்டிருந்த நேரம், எங்கிருந்தோ வந்த மல்லிகையின் மணம் அவள் நாசியில் ஏறியது. திரும்பி தன் மகளைக் கவனித்தாள். கூந்தலில் மல்லிகைப் புதிதாய் பூத்திருந்தது.

"பசிக்குதுன்னுச் சொல்றேன். சோறு போட மாட்டியா கல்யாணி?" என்று மழலைக் கொஞ்சலுடன் தேவிஸ்ரீ கூறிய அடுத்த நொடி, "சசசப்ப்ப்" என்று ஒரு அரை அவள் கன்னத்தில் விழுந்தது.

அந்த Whatsapp செய்தியைக் கையில் தூக்கிக் காண்பித்தபடி, "இந்த ஸ்போஷல் கிளாஸ்க்கு தான் போனியா? இந்த வயசுல உனக்கு லவ் கேக்குதா? ஊர் பொறுக்கவாடி உன்ன இவ்வளவு கஷ்டப்பட்டு வளக்குறேன்?" என்று பொங்கியவள், மேலும் ஒரு அரையை தன் மகளுக்குப் பரிசளித்துவிட்டுத் தொடர்ந்தாள்.

"உன்னை மாதிரிதான்டி நானும் படிக்குறப்போ லவ் பண்ணி, உன் அப்பன கல்யாணம் பண்ணினேன். இப்போ டிவோர்ஸ் பண்ணிட்டு அவர் எங்கயோ, நான் எங்கையோன்னு வாழ்றோம். டிவோர்ஸ் வாங்கின இத்தன வர்ஷத்துல உன் அப்பாடயிருந்து ஒத்த பைசா வாங்காம, நான் வேலைக்குப் போய் உன்ன படிக்க வைக்கிறேன்டி. அதைக் கூட மதிக்காம, என்கிட்டயே பொய் சொல்லீட்டு எவன் கூட ஊர் சுத்துற?" - பொரிந்து தள்ளினாள் கல்யாணி.

தேவிஸ்ரீயோ Vibration Modeயில் போட்டது போல, எதுவும் பேசாது கண்ணீர் வடித்தப்படியிருந்தாள்.

"ஏதாவது சொல்லுடி" - கல்யாணி அவளை அரைய கையோங்கிய போது, அவள் கையை தடுத்துப் பிடித்தாள் தேவிஸ்ரீ. கல்யாணிக்கு ஆச்சரியம் தூக்கி வாரிப் போட்டது.

தனது கண்களைத் துடைத்துக் கொண்டவள், கல்யாணி கையிலிருந்த கைப்பேசியைப் பிடுங்கி, "My Darling" எண்ணிற்கு ஃபோன் செய்து, தன் தாயிடம் நீட்டியவாறு, "நான் உன் பொண்ணுமா" என்று கூறிவிட்டு தன் அறை நோக்கி நடந்தாள்.

நடப்பது ஒன்றும் புரியாத கல்யாணி, கைப்பேசியைக் காதுகளுக்கு அருகில் கொண்டு சென்றாள். எதிர்முனையிலிருந்து ஒலித்த குரலைக் கேட்ட நொடியில் கண்ணிலும், மனதிலும் கண்ணீர் வடிந்தோட, தன் மகளின் அறையை நோக்கி ஓடினாள். "சாரிடி. என்ன மன்னிச்சிரு" என்று கதறியவாறு, தன் மகளை இறுக்க அணைத்தாள்.

தாயின் கண்ணீரைத் துடைத்த தேவிஸ்ரீ, "நான் அப்பாகிட்ட பேசுரது உனக்குப் பிடிக்காது, கோவப்படுவன்னு எனக்கு தெரியும்மா. நான் அப்பாவா பாக்க போறேன்னு உனக்கு தெரிஞ்சா, காலைல இருந்தே நீ கோவப்பட்டு டென்சன்ல இருப்ப. ஏற்கனவே உனக்கு BP இருக்கு. உன்னைக் கஷ்டப்படுத்த கூடாதுன்னு தான், உங்கிட்ட பொய் சொல்லிட்டு, அப்பாவ பாக்கப் போனேன். உங்களுக்கு அவர் மோசமான ஹஸ்பண்ட இருந்துருக்கலாம்மா. ஆனா, எனக்கு அவர் எப்பவும் நல்ல அப்பாவா தான் இருக்குறாரு." என்று தன் பக்க நியாயங்களை தேவிஸ்ரீ எடுத்து வைத்த போது, தன் மகளின் தந்தை பாசத்திற்குக் குறுக்கே எவ்விதத்திலும் நிற்பது தவறு என்று கல்யாணிக்கு புரிந்தது.