சீமந்தம்
"இந்த ஓரத்துல பூ கொஞ்சம் கம்மியா இருக்கு பாரு கவுசி…" அப்படியும் இப்படியுமாக அவளை சுற்றி வந்து கூறினார் ராஜி அக்கா
"இதோ வைக்குறேன் பாருங்க கா….ஹ்ம்ம் இப்போ சரியா இருக்கா?" மேலே உள்ள கொண்டையில் இன்னும் கொஞ்சம் பூவை சுற்றி விட்டு கேட்டாள் கவுசி அக்கா ...
"இப்போதான் தலை நிறைஞ்சி இருக்கு…"திருப்தியான பார்வையுடன் ராஜி அக்கா
"ப்ளீஸ் போதும் ராஜி கா, கவுசி கா போதும்… இதுக்கு மேல தலை தாங்காது…" தலையை அசைக்க முடியாமல் நான்
"சரி சரி விட்டுட்டோம்… கவுசி அந்த காஜல் கொஞ்சம் போடு… முகம் ரொம்ப டல்லா தெரியுது பாரு.." ராஜி அக்கா என்னை பார்த்து கூறினார்...
"பௌண்டேஷன் இப்போதான் போட்டேன் கா காஞ்சிட்ட பிறகு மத்தது போடலாம் கா…."
"ஹே கவுசி கா இதெல்லாம் இப்போ தேவையா?" தலையை நிமிர்த்தி பார்த்து கேட்டேன்..
"ஹ்ம்ம்...இப்போ செய்யாம நீ புள்ள பெத்த பிறகா செய்றது… குழந்தைக்காக செஞ்சிக்கோ அப்புறம் இதெல்லாம் செய்யாம விட்டுட்டோமென்னு பீல் பண்ண கூடாது ல…"
இவ்வளவு பார்த்து செய்பவரை எதுவும் கூற முடியாமல் "ஹ்ம்ம் சரி கா…" என்றேன்..
என்னையும் என் அலங்காரத்தையும் கண்டு கண் கலங்கிய என் அம்மாவை "உஷா இப்போ எதுக்கு கண்ண கசக்கிக்கிட்டு இருக்க…" என கேட்டார் சந்திரா பெத்தம்மா...
"இந்த சீமந்தம் எவ்ளோ பெருசா செய்ய வேண்டியது… இப்போ இப்டி நமக்குள்ள நடத்தறது ரொம்ப கஷ்டமா இருக்கு சந்திரா…."
"வயித்து புள்ள காரி எதுக்கும் ஏங்கிட கூடாது உஷா… அமைதியா இரு… உன்ன பாத்து அவளும் வருத்த படுவா …"
"ஹ்ம்ம்…" என கண்களை துடைத்துக்கொண்டர் அம்மா
"டேய் மணி போன்ல போட்டோ எல்லாம் சூப்பர் ஹா வரணும்டா…" ராஜி அக்கா தம்பியை மிரட்டினார்..
"ஆண்டி உங்களுக்கு எடுத்த போட்டோ எப்டி இருந்துச்சு சொல்லுங்க…"
"நல்லா தான் டா இருந்துச்சு…"
"அப்புறம் என்ன ஆண்டி?இவ என் அக்கா வேற சூப்பர் ஹா எடுப்பேன் "என எனை பார்த்து அவரிடம் கூறினான்...
"மொதல்ல பூ ல செஞ்ச கம்மல், ஆரம், வளையல், ஒட்டியாணம் எல்லாம் போட்டு போட்டோ எடுத்துட்டு நகை போட்டுக்கலாம் கவுசி…"
"நலங்கு வைப்பாங்களா கா…"
"வைக்கணும்னு தான் டா சொல்லி இருக்கேன்… அவளுக்கும் அவ குழந்தைக்கும் நாலு பேரோட ஆசீர்வாதம் கண்டிப்பா வேணும் டா…"
"சரிதான் கா…"
என அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்...
"சிந்து"
சிந்தனையில் இருந்து எழுந்து
"ஹான்…. என்ன கா…"என கேட்டேன்..
"போ போய் பாத்ரூம் போய்ட்டு கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வா… புடவை மாத்தி விடறேன்…"
"இதோ போறேன் கா…"
"முகமே சரி இல்ல கா அவளுக்கு…"
"ஹ்ம்ம் என்ன பண்றது அவ விதியா இல்ல கடவுள் சதியா… யார சொல்றது…எங்கயோ இருந்த பொண்ண கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து ப்ச் ச்ச வேண்டாம் கவுசி இப்போ எதுவும் பேச வேணாம்… ரொம்ப கஷ்டமா இருக்கு…."
"சரி கா அவ வர்றா.."
"நீ போய் அம்மாக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணு இவளுக்கு சாரீ கட்டி விட்டுட்டு உன்ன கூப்பிடுறேன் வந்து முகத்துக்கு டச் அப் பண்ணி விடு…"
நான் உள் நுழையும் நேரம் கவுசி வெளியே சென்றாள்...
"வா சிந்து இந்தா இந்த பிளவுஸ் போட்டுக்கோ சாரீ கட்டி விடுறேன்…"
"அக்கா…"
"என்ன டா…"
"அவர் வீட்டுக்கு இது தெரிஞ்சா என்ன பேசுவாங்களோ தெரியல… எதுக்கு இந்த சீமந்தம் இப்போ…"
"எதையும் யோசிக்காத டா… எல்லாத்தையும் சந்திரா பெரியம்மா பாத்துப்பாங்க விடு… குழந்தைக்காக எல்லாத்தையும் மூட்ட கட்டி வச்சிட்டு அமைதியா இரு…"
"ஹ்ம்ம் சரி கா…"
"அவ்ளோதான் கட்டியாச்சு… அழகா தெரியுது வயிறு…"
"எவ்ளோ சீக்கிரம் கட்டிட்டீங்க…"
"புள்ள வந்துட்டா புடவை கட்ட கூட நேரம் இருக்காது...ஆனா உனக்கு உங்க அம்மா எல்லாம் கூட இருப்பாங்க அதனால தப்பிச்சுகிடுவ… எனக்கு ஒருத்தரும் உதவிக்கு இல்லாம ரொம்ப கஷ்டம்…ஹ்ம்ம் "என பெருமூச்சு விட்டார் ராஜி அக்கா… அவர் உறவும் இல்லை சொந்தமும் இல்லை, அக்கம் பக்கம் பழகிய பழக்கம் மட்டுமே ஆனால் வீட்டில் ஒருவர் போல் தான் எங்க எல்லோருக்கும்...
"இரு கவுசி கூப்பிடுறேன் அவ பாத்துப்பா… நா போய் பிள்ளைகளை பாத்துட்டு வர்றேன்…"
"சரி கா…"
'என்ன வயசு எனக்கு 20 முடிஞ்சி 21 தான் நடக்குது… வாழ்க்கைல எல்லாம் பாத்தாச்சு…
நிச்சயம் பண்ணின பிறகு அவர் என் மேல எவ்ளோ ஆசையா இருந்தாரு… கல்யாணம்ன்னு இந்த ஊருக்கு வந்த பிறகு கூட ஏதாவது காரணம் சொல்லிக்கிட்டு வந்து பாத்துட்டு போவாரு…
யாரு கண்ணு படுச்சோ ஹ்ம்ம்…'
"என்ன யோசனை அதுக்குள்ள.."
"ஒன்னும் இல்ல கவுசி கா…"
"சரி சரி இந்த பக்கம் காட்டு… ஹ்ம்ம் ஓகே இப்போ… இந்தா கண்ணாடி பாரு உனக்கு ஓகே வா சொல்லு…"என என் முகத்தில் கண்ணுக்கு மை வைத்து விட்டாள்...
"ஏதோ ஒன்னு கா… எப்டி இருந்தாலும் எனக்கு ஓகே தான்…"
"இப்டிலாம் சொல்ல கூடாது… எல்லாரும் வருத்த பாடுவாங்க…"
"ஹ்ம்ம்…."
"வெளிய ரெடி ஆகிட்டா வந்து கூட்டிட்டு போறேன் அதுவரை ரெஸ்ட் எடு…"
'கல்யாணம்….ஹ்ம்ம்….. கொரானாவால ரொம்ப சிம்பிள் ஹா கோயில்ல தான் பண்ணாங்க…
ஆனாலும் ரொம்ப ரொம்ப சந்தோசமான நாள் அது…
அப்டித்தான் நினைச்சிட்டு இருந்தேன்… அவரு அடுத்தடுத்த நாளையும் சந்தோசமான நாளா ஆக்கிணப்போ என்னை விட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாதுன்னு…
ஹ்ம்ம் இதெல்லாம் கம்மின்னு சொல்ற மாதிரி ரெண்டே மாசத்துல நீ வந்துட்ட…
உன்னை ரொம்ப கொண்டாடினார் அவரு…
ரெண்டு ஹாஸ்பிடல்ல செக் அப் ன்னு அவர் செஞ்ச அலப்பறை பாத்துட்டு எல்லாரும் கிண்டல் செஞ்சாங்க… ஹ்ம்ம் இப்பவும் அதெல்லாம் நினைக்கும் போது ரொம்ப மனசுக்கு நிறைவா இருக்கு…'
"ஹே வா டி"
"இதோ வர்றேன்மா…"
"உட்காரு…."
"யாரு மாலை போடறது…" சந்தரா பெரியம்மா கேட்டார்...
"இதோ ராஜி இருக்கா அவளே போடட்டும்…"
"நானா கா…"
"நீதான் போடு ராஜி … சாமிய வேண்டிக்கோ…"
"சரி கா…"
'நல்லபடியா பிள்ளைய பெத்து எடுத்து வரணும்பா பிள்ளையாரே '…."வா அப்டியே பிள்ளையர கும்பிட்டுக்கோ…"
'இறைவா இன்னும் என்ன வச்சி இருக்கியோ எனக்கு… ஆனா என் பிள்ளையாச்சும் சந்தோசமா வளரனும்…'
"வாங்க சாந்தி கா மொதல்ல நீங்க செய்ங்க…"
"சந்திரா நீ போ…"
"இருக்கறது அஞ்சி பேரு யாரு வச்சா என்ன…"
'என கூற சாந்தி அம்மாவே சந்தனம் பூசி பொட்டு வைத்து வளையல் பூட்டி விட்டார்…
பின்னர் அதுபோல அனைவரும் செய்தனர்….
இந்த நேரத்துல உங்களை தான் மனசு தேடுது… உங்களுக்கு அவ்ளோ அவசரம் என்ன எங்களை எல்லாம் விட்டு போக…'
"இருக்கற திருஷ்டி கழியட்டும் ஆலம் சுத்தி தெருவுல கொட்டுங்க…" சந்திரா சாந்தி இருவரின் மாமியார் கிழவி..
"சரி அவ்வா…"
'சீமந்தம் முடிஞ்சி போச்சு நீங்க இல்லாமலே… இங்க இருக்கற யாருக்கும் அது தெரியலையா?
இல்ல வருத்தத்தை காட்டிக்கிட்டா நானும் கஷ்ட படுவேன்னு அமைதியா செய்றாங்களா?
எதுவோ ஒன்னு நீங்க என்கூட இல்லாமையே எல்லாம் நடக்குது….இப்போல்லாம் அழுக கூட வரமாட்டேங்குது…
தைரியம் ஆகிட்டேனா இல்ல கல்லு மாதிரி ஆகிட்டுதா மனசு… ஹ்ம்ம்…'
"என்ன இன்னும் இப்டியே உட்கார்ந்து கிட்டு இருக்க வா வா போட்டோஸ் எடுக்கலாம்…"
'வேணாம்னு சொன்னாலும் அத கேட்க இங்க யாரும் இல்ல…அடுத்தவர் இழுப்புக்கு ஆடும் நூல் பாவை ஆகி ரொம்ப நாள் ஆகி போச்சு…'
"இப்டி நில்லு சிந்து,"
"இல்ல இல்ல அப்டி நில்லு"
என தம்பிகள் கூற ராஜி அக்கா தான்
"யேய் அவளை போட்டு படுத்தாதீங்க டா… அவ எப்டி நிக்குறாளோ அதுக்கு ஏத்த மாதிரி எடுங்க போதும்…"என காப்பாற்றினார்..
"சரி ஆண்டி…"
'கையை வயிற்றில் வைத்து, இடுப்பில் கை வைத்து, கன்னத்தில் கை வைத்து, கம்மலை தொடு, அத தொடு இத தொடுன்னு போட்டு என்னை படுத்தி எடுத்த பின்னரே விட்டனர் அக்காக்கள் தம்பிகள்…
இன்னும் என்னை விட மூத்த அக்காவினர் இருவருக்கும் கல்யாணம் ஆகவில்லை…
அவர்களின் அப்பா படிப்பு முக்கியம் என அவர்களை நன்றாக படிக்க வைத்து உள்ளார்… வேலைக்கு செல்கின்றனர்…
ஆனால் நான் பனிரெண்டாம் வகுப்பு முடித்ததும் மாடு மேய்க்க விட்டுவிட்டு இருபதில் கல்யாணம்,இருபத்தி ஒன்னில் பிள்ளை….
இதற்கு சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்தால் கூட தெரிந்து இருக்காது…
ஏன் இதெல்லாம் கல்யாணம் ஆகும் போது பெரிய விஷயமாக தெரியவில்லையே…
இப்பொழுது வாழ்க்கை எதை கொண்டு செல்கிறது என தெரியாமல் செல்லவே இதெல்லாம் யோசிக்க வேண்டி உள்ளது..
கட்டாயம் பிள்ளை பேற்றுக்கு பின் வேலைக்கு செல்ல வேண்டும்…
அப்பாவிற்கு பாரம் கொடுக்க கூடாது..
எனக்காக சொந்த கிராமத்தை விட்டு, பிள்ளை போல் வளர்த்த மாடுகளை விற்று விட்டு இந்த ஊருக்கு குடி வந்து என்னுடன் இருக்கின்றனர்…
இதில் தம்பியையும் கஷ்ட படுத்துகிறோம்… அவன் என் கல்யாணத்துக்கு வாங்கிய கடன்கள் கூட இன்னும் அடைக்கபடாமல் இருக்கிறான் … ஹ்ம்ம்…
மாமியார் வீடு… என்ன சொல்ல அவர் சென்றதும் எனக்கும் என் பிள்ளைக்கும் அவர்கள் யாரோ என்பது போல் என்னை ஒதுக்கி வைத்து… அவர் கொடுத்த வலியை விட இவர்கள் செய்தது பெரும் கொடுமை…
பிள்ளை பேரு ஒன்னும் அதிக வலி இருக்காது என தோணுகிறது இப்பொழுதெல்லாம்…
போன வாரம் டாக்டர் வேறு சுகர் பிபி எல்லாம் இருக்கிறது ஜாக்கிரதை என்கிறார்…
இத்தனை சொந்தங்கள் மத்தியில் தனியாய் இருப்பதாய் தோணுவதை தவிர்க்க முடியவில்லையே…'
"கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விட்டா என்ன செய்ற நீ.. கண்ணுல தண்ணி வச்சிக்கிட்டு… எழுந்து வேற டிரஸ் போட்டுக்கோ காலாற இங்கயே நட…"
சரிம்மா…
"ஏதாவது சாப்பிட்டிறியா"?
"வேணாம்மா…"
"இரு இந்த பாலை குடி… எதுவும் சாப்பிடாம இருந்தா புள்ள என்னத்துக்கு ஆகுறது…"
"சரி குடும்மா…!
'அவரை அதிகம் பேச வைக்க வேண்டாம் இதை குடித்து விடுவது மேல்…
நா இதுக்கு முன்னாடி இவ்ளோ யோசிக்கறவ இல்ல..
இப்போதான் உன்கூட பேசி பேசி மனசு அளவுல ஒரு வாயாடி ஆகி போய் இருக்கேன்…
அம்மா ரொம்ப போர் அடிக்குறேனா குட்டி?
ஸ்ஸ் ஆ… அம்மா…. ஆ எதுக்கு குட்டி அம்மாவ உதைக்கறீங்க?
ஓ கதையை பாதில விட்டுட்டேனா?சரி சரி…
நீ வந்ததுக்கு அப்புறம் அவ்ளோ கேர் என்மேல… எல்லாத்தையும் பாத்து பாத்து செய்வாரு…
வாந்தி எடுத்துட்டு ஆஞ்சி ஓஞ்சி போய் படுத்தா விடாம எதையாவது குடுத்து குடிக்க வைப்பாரு…
ஹ்ம்ம் மாசம் கொஞ்சம் ஏறி வயிறு தெரிய ஆரம்பித்து இருந்தது…
அம்மா வீட்ல கூட்டிட்டு போய் பூ முடிச்சி கலவ சாப்பாடு போட்டு கூட்டிட்டு வந்தாங்க…
தினமும் அவரு என்கிட்ட உன்கிட்ட தனி தனியா போய்ட்டு வர்றேன்ன்னு சொல்லிட்டு போவார்…
அன்னைக்கு ரொம்ப முடியலன்னு படுத்தவ தூங்கிட்டேன்…
எதுக்கு எழுப்பி சொல்லணும்னு போனவரு….போனவரு… ஒரேடியா போய்ட்டாரு…
தூங்கி எழுந்து அவருக்கு தான் போன் போட்டேன்…
ரொம்ப நேரம் ரிங் போய் எடுக்கவே இல்ல…
மறுபடியும் மறுபடியும் போட்டு பாத்து எடுக்கவே இல்ல…
வீட்ல சொல்லி எல்லாரும் ரொம்ப கலவரம் ஆகிட்டாங்க… எனக்கு என்ன நடக்குது எல்லாரும் என்ன பேசிக்கறாங்கன்னு கூட தெரியல…
கடைசியா ஒருத்தர் அந்த போனை எடுத்து அவருக்கு அக்சிடேன்ட் ஆகிட்டாதாகவும் அந்த இடத்திலேயே இறந்துட்டதாகவும் சொன்னாங்க…
அவ்ளோதான் உலகம் சூழலுதா இல்லையானு தெரியாத அளவுக்கு ஆகிட்டேன்..
மறுபடியும் கண்ணு முழிச்சு பாக்கும் போது எல்லாரும் தலைல அடிச்சிக்கிட்டு அழுதுகிட்டு இருந்தாங்க…
அப்போதான் எனக்கு மயக்கம் ஆகும் முன்னாடி கேட்டது நினைவுக்கு வந்துச்சு…
அழுதாலும் புரண்டாலும் மாண்டார் திரும்புவதில்லை சொல்வாங்க…
ஆனா உன்னை வயித்துல வச்சிக்கிட்டு நா அழுத அழுகை ஹ்ம்ம் வேண்டாம் ரொம்ப உள்ள போக வேண்டாம்…
என்னால முடியாது… அப்பா அம்மா கஷ்டப்படுவாங்க நா அழுதா…
அழுததெல்லாம் போதும் இனி உனக்காக எல்லாம் உனக்காக செய்வேன்…
அவரு உன்னை எப்படில்லாம் வளர்க்க ஆசை பட்டாரோ அப்டிலாம் வளர்ப்பேன்…
அவர் இறந்த பிறகு என்னவெல்லாம் பேசிட்டாங்க அவர் மக்கள்…
என்னோட ராசிதான் அவருக்கு இப்படி ஆகி போச்சுன்னு என் காது பட பேசினாங்களே…
நீ எனக்குள்ள வராம போய் இருந்தா கூட எனக்கு வேற நல்லது செய்வாங்கலாம்… ஹ்ம்ம்…
என்ன நல்லது செய்வாங்க? இன்னொரு கல்யாணமா? அதான் ஒருமுறை செஞ்சே எல்லாம் முடிஞ்சி போச்சே…
இன்னைக்கு இந்த சீமந்தத்துல ஒவ்வொரு முறை பொட்டு வைக்கும் போதும் எல்லாரும் என்ன நினைச்சி இருப்பாங்க?
ஐயோ பாவம் இன்னும் எத்தனை நாளைக்கோ இந்த கோலம்ன்னு பரிதாபப்பட்டு இருப்பாங்க…
குழந்தை பிறந்த பிறகு தான் மத்த சாங்கியம் எல்லாம் செய்வாங்கலாம்.. ஹ்ம்ம்…
நீ என்னை அடையாளம் தெரிஞ்சி பாக்கும் போது அம்மா இந்த சுமங்கலி கோலத்துல இருக்க மாட்டேன் டா…
ஆனா இப்போ பசங்க எடுத்த போட்டோஸ் எல்லாத்தையும் உனக்கு காட்டுவேன்…
என் மேல எத்தனை பேர் எவ்ளோ பாசமா இருகாங்க…
இவங்களுக்காக தைரியமா இருக்க வேண்டாமா நான்..
இதோ கொஞ்ச நேரம் தனியா விடாம ஒவ்வொருத்தரா வர்ராங்க…. ஏன்னா எதையும் யோசிப்பேனோன்னு இருக்கும்…'
"இங்க பாரு போட்டோ எல்லாம் சூப்பர் ஹா இருக்கு…"
"ஆமான்டா மணி…"
"இன்னும் கூட கொஞ்சம் போஸ் குடுத்து இருக்கலாம் நீ…"
"போதும் டா இதுவே…."
"ஸ்ஸ் ஆ…." நீதான் என் வயதுக்குள்ள எட்டி உதச்சி விளையாடிட்டு இருக்க...
"என்ன கா என்ன பண்ணுது அம்மா அம்மா இங்க வாயேன்…"
"டேய் வேண்டாம் டா….அம்மாவ கூப்பிடாத...ம்மாவ கூப்பிடாத...ஒன்னும் இல்ல… அடிக்கடி அப்டித்தான் இருக்கும்…
பாரு எப்டி மூச்சு வாங்குது.. ஒன்னும் இல்ல சொல்றன்ல.. உடனே சரி ஆகிடும்…"
"பாரு எப்டி மூச்சு வாங்குது… ஒன்னும் இல்ல சொல்ற… இதோ அம்மா வந்துட்டாங்க அவங்க கிட்ட சொல்லு…"
"என்னம்மா என்ன பண்ணுது?"
"எப்பவாவது இடுப்புல சுருக்கு சுருக்குனு இழுக்குற மாதிரி இருக்கு மா… இப்போ சரி ஆகிடிச்சி…"
"ஒன்னும் இல்ல சூட்டு வலியா இருக்கும்… சுடு தண்ணி வைக்குறேன் சூடா ஊத்தினா சரி ஆகிடும்…"
"சரிம்மா…"
"பாரு அம்மா கிட்ட சொன்னதும் அதுக்கு ஒரு தீர்வு சொல்லிட்டாங்க… இதுக்கு தான் எதையும் மனசுல வச்சிக்காம வெளிய சொல்லிடனும்…"
"சரிடா பெரிய மனுஷா"
"உன்னை…." என என் தலையில் கொட்ட வந்தான் தம்பி
"டேய் டேய் அவளை அடிக்க கூடாது டா…"
"அம்மா அப்டியா அடிச்சிடுவேன்… சும்மா விளையாட்டுக்குதா…"
"நீ வாடி வந்து குளி…
நீங்களெல்லாம் போய் டீ குடிங்க…"
"அம்மாமாமா… ரொம்ப வலிக்குது மா ஸ்ஸ்ஸ்ஸ்…"
"ஹே பல்ல கடிக்காத டி… வா வேகமா இடுப்புக்கு மட்டும் தண்ணி ஊத்திடுவோம்…"
"அம்மா முடியல ம்மா…."
"அப்டித்தான் டி இருக்கும் பொறுத்துக்கோ…இந்த வலிலாம் பத்தாது…"
"ஸ்ஸ்ஸ் என்னம்மா சொல்ற…"
"ஒன்னும் பேசாத வேற புடவை கட்டு…நா வண்டிக்கு ஏற்பாடு பண்ண சொல்றேன்…
"என்ன உஷா அதுக்குள்ள வலி வந்துடுச்சா?"
"ஆமா கா.. அப்டித்தான் தெரியுது…"
"இரு அவரை வண்டி எடுக்க சொல்றேன்…"
'செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அடுத்த நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு நீ பிறந்த …'
"அம்மா பாப்பா அழகா இருக்கு மா… மூக்கு பாரேன் அப்டியே அவரு போல இருக்கு…"
"ஆமா டா… பேசாம கண்ண மூடி படு… பாப்பா எழுந்தா உன்னை எழுப்பறேன்…"
"இல்லம்மா ரொம்ப சந்தோசமா இருக்கு மா… தூக்கம்லாம் வரல… உனக்கும் இப்டி தான் இருந்துச்சா மா…"
"அதெல்லாம் நியாபகம் இல்ல… ஆனா உன்னை பெத்து எடுக்க செத்து புழைச்சேன்…"
"ஐயோ அப்புறம் கூட என்மேல இவ்ளோ பாசமா இருக்க…"
"குழந்தை முகத்தை பாத்தா எல்லாம் மறந்து போய்டும்… அவ்ளோ கஷ்டபட்டு பெத்து பாசமா வளக்காம எப்டி இருக்க முடியும்…
ரொம்ப வாய் பேசாத குழந்தை அழுகுது என்னை பிடிச்சிகிட்டு எழுந்து உட்காரு… எப்படி பால் குடுக்கணும் எப்படி பாப்பாவ வச்சுக்கணும் எல்லாம் சொல்றேன்…"
"சரிம்மா…
ஸ்ஸ்ஸ் மா… வலிக்குது…" பிள்ளை காம்பை பற்றி இழுத்ததும் ஒரு வலி வந்தது..
"ஒன்னும் இல்ல சரியாகிடும்….
கொழந்த பசி ஆறுது அத மட்டும் தான் கவனத்துல வச்சுக்கணும்… ரொம்ப முடியலன்னா சொல்லு அம்மா ஏதாவது செய்றேன்…
ஹ்ம்ம் முடிஞ்சது… பாப்பா தூங்கிட்டா… நீயும் படுத்துக்கோ… அடுத்த ரெண்டு மணி நேரத்துல மறுபடியும் பால் குடுக்கணும்…"
"அவ்ளோ சீக்கிரமா?"
"ஆமா பாப்பா வயிறு என்ன வண்ணான் சாலா? அது ரொம்ப குட்டியா இருக்கும்… சீக்கிரமா பசி எடுத்துக்கும்…"
"சரிம்மா எல்லாருக்கும் சொல்லிட்டீங்களா?"
"சொல்லியாச்சு… கொரானா பயத்துல யாரும் வரல… நாமளே ரெண்டு நாள்ல வீட்டுக்கு போயிடுவோம்…"
"பாப்பா நாம நம்ம வீட்டுக்கு போலாமா… நா உன்ன நல்லா பாத்துப்பேன்… என் அம்மா என்னை பாத்துக்கிட்டது மாதிரி… என் செல்லம்….
என தூங்கும் குழந்தையின் நெற்றியில் முதல் முத்தம் இட்டு உடல் அயற்சியில் கண் மூடினேன்… நான் சிந்து… சிந்து வீரவேல்...
***
நன்றி.