• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சு. இராஜ்குமார் - கட்டவிக்கு கடமைப்பட்ட சேப்பியன்கள்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
கட்டவிக்கு கடமைபட்ட சேப்பியன்கள்





ஆதிநாதத்தின் கலவையான அலைகள் அழுத்த எல்லையற்ற பெருவெளி சக்திக்கடலாய் வெடித்தது. அதில் தோன்றிய கோள்களின் எண்ணற்ற ஜீவராசிகள் யுகங்கள் கடந்து மற்றொன்றாக பரிண மித்து அப்பொது குரங்கு மனிதனாய் அலைந்து திரிந்தன. எதோ ஒரு மெல்லிய ஆற்றலைக் கடத்தியதும் யுகம் யுகமாய் புல் , பூண்டு, மிருகங்களாய் வாழ்ந்த இனம் இதுவரை இல்லாத பேரறிவைப் பெற்று புதிய நிலையைத் தொட காத்திருந்தது.



ஒரு நாள் அந்த இளம் குரங்குப் பெண்ணின் விரல்கள் பேச்சாற்றலும் அறிவும் பெற்றன.



தன்னைவிட உயரமான பெண்கள் மீது எப்போதும் ஆண்களுக்கு ஒரு விதமான ஆர்வம் தான் . அதுவும் கொஞ்சம் வனப்பாக எடுப்பாக அதுவும் மிக அருகாமையில் வாய்த்த செல்வியாக இருந்தால் சொர்க்கம் தான்.



அகம்பாவத்தில் தலைசிறந்தவன்.யாராக இருந்தாலும் அஞ்சாது நிற்பவன். ஆட்காட்டான். உயரத்தில் அத்தையம்மா மோதிராவைப் போல.



மோதிரா மென்மையான குலத்தலைவி. செல்வசெழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவள்.



அவள் கணவன் சுண்டுவீரன் என்ற சுண்டு. தலைவிக்கு துணை, அல்லிராஜ்ஜியத்தில் சுண்டுவின் நிமித்தமும் பணியும் உடல்வாகைப் போல் சிறியதே. தன்மையான இரு பெண்பிள்ளைகளின் தகப்பன்.



பெரிய மகள் கட்டவி. புஷ்டியான கோபக்காரி ஆனால் மிகவும் நல்ல குணவதி. அப்பாவின் செல்லக் குழந்தை , அதிகமாக பேசுவதும் குட்டியப்பாவிடம்தான். உருவத்துக்கும் ஆற்றலுக்கும் சம்பந்தமில்லை என்ற கூற்றுக்கு சீறிய உதாரணம். யாரேனும் உதவி என்றால் முதலில் நிற்பவள். சண்டை என்று வந்தால் எல்லோரையும் காத்து முன்னே வந்து குத்துபவள். சமயங்களில் இவள் ஒருத்தியை எல்லோரும் சேர்ந்து அடக்கியும் கோதாவில் இறங்குவர். குடும்பத்தின் ஹல்க்.



அட்காட்டான்களின் மனைவியர் என்றாலும் தனிமை விரும்பி என்பதால் சிறிது தள்ளியே இருந்தனர்.



குடும்பத்தின் மத்தியில் உடலால் மட்டும் உயர வீற்றிருப்பது தற்போதைய கலகத்திற்கு காரணமாகும் நடுவி . காண்போரை மயக்கும் ஒய்யாரி. எல்லா இல்லங்களைப் போல் மாமன் ஆட்காட்டானிடம் ஆழ்ந்த மையல்.



எப்படியும் ஒருநாள் தனக்கு மாலையிடத்தான் போகிறான் என்ற மமதை. அவனால் கூட அண்ணாந்து பாராமல் பேசவியலாது. அவ்வளவு உயரம், உடலளவில் மட்டும். ஆனால் மற்ற மிருகமனித கைகளில் உள்ள நடுவியை போலன்றி கூடுதலான சமுத்திரிகா லட்சணம் வழியும் இந்த நடுவி தன் அக்காவிற்குத் தெரியாமலே மாமனோடு களவில் சல்லாபிக்க ஆரம்பித்தாள்.



எல்லா விரல்களும் அப்போது நேராக ஒருமுகமாக பார்த்ததால் கட்டவி பொன்னுக்கு இந்த கள்ளத்தனம் தெரியாமலே இருந்தது.



ஏதேச்சையாக ஒரு நாள் ஓரக்கண்ணால் பார்த்து பெரிய ரகளை.

இரவோடு இரவாக நடுவியை மணந்தான் ஆட்காட்டான்.



சுண்டுவும் மோதிராவும் எவ்வளவோ சமாதானம் செய்தாலும் கோவலனைக் கவர்ந்த மாதவியாகவே தன் தங்கையை வெறித்தாள்.



அவர்களது ஆறு வருட காதல் என்பதை முதலிரவு பேச்சில் தெரிந்ததும் தன்னிடம் பொய் சொல்லி ஏமாற்றிய கணவனை எண்ணி கண்ணகியாய் பழித்தாள். ஒரு வார்தை தன்னிடம் கூறியிருந்தால் புன்சிரிப்போடு நடுவியை தானே அவனோடு சேர்த்துவைத்திருப்பேனே என புழுங்கி அழுதாள் கட்டவி.





தடுக்க முடியாத வழமையாயிருந்த பரம்பரை புத்தியென்றாலும் மற்ற லட்சக்கணக்கான உறவினர்களைப் போல் கட்டவியால் தன் தங்கையை கற்பு முறை தவறி தாரைவார்த்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



‘இவள அவர் கட்டிக்கொண்ட பின்பு தான் எல்லாமே தலை கீழாச்சுப்பா’



‘நிலம மாறிடும் கட்டம்மா கொஞ்சம் காலம் பொறு தாயி’ சீற்றம் தணிக்க வேண்டினான் சுண்டுவப்பன்.



‘உங்க எல்லாருக்கும் தெரியும் . அவர் என்னை தவிர்க்கிறார் , சாப்பிடும் போதுகூட, எனக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறார் அப்பா’



‘என்னதான் கண்ணு செய்யறான், நான் கேக்குறன்’ அம்மா இடையில் வந்து செருமினாள்.



‘இவ தலையை அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஜோடியா சொரியும்போது பிடிச்சு கேளு.’

அருகிலிருந்தும் சின்ன பொன்னுக்கு புத்திமதி சொல்லகிறாளா பாரு என்று தாய் மீது எரிந்து விழுந்தாள் கட்டவி.



புதுமணத் தம்பதி என்று மோதிராவும் அது போன்ற அநேக சேட்டைகளை கண்டுகொள்வதில்லை. அதை அவ்வளவு தூரம் விட்டிருக்க கூடாது என்று இப்பொது வெதும்பினாள்.



நாட்கள் சென்றன. அப்பனும் ஆத்தாளும் சக்களத்தி சண்டை தாளாமல் மெலிந்து போயினர்.



சுண்டுவீரன் சோகமே உருவாக ஆசைத்துணைவி மோதிராவைப் பார்த்து “ஒரு நகசுத்தி வந்து என்ன குருடனாக்கி இந்தக் கொடுமய எல்லாம் பாக்காம செய்யக் கூடாதா, இல்ல தொழுநோவாலா ஒரேயடியா மண்ணுல போக வைக்க கூடாதா ஆண்டவா?”



மோதிரா ஓரக்கண்ணால் கலங்கியவாறே ‘ஏங்க அபசகுணமா பேசறீங்க. கட்டப் பொண்ணு குட்டிப் பொண்ணு ஆனாலும் கெட்டிக்காரி. ஊர் மெச்சும் அறிவாளிப் பொன்னு. எப்படியாவது சண்டைக்கு ஒரு முடிவு கட்டுவா.கோவப்பட்டு ஒடம்ப கெடுத்துக்காதீங்க.’



இவர்கள் புலம்பும் போது கூட தன் அழகிய இளம் மனைவி நடுவியிடம் சல்லாபித்த படியே கிறங்கிக்கொண்டிருந்தான் ஆட்காட்டான்.



‘அட என்னாடி இவன் மாமியா பக்கத்தில் இருந்தும் மரியாத இல்லாம இப்டி சின்ன பொன்னு பின்னாடி ...சே . மோதிம்மா தலையில் அடிச்சிக்கனும் , கொஞ்சம் அடியேன் என் மண்டையில.’



கணவன் சிறிது நேரத்திற்கு முன் பேசியதின் வீச்சத்தால் சற்று பலமாகவே அடித்தாள்.



பேச்சோடு சரி. சுண்டு பலவீனமானவன். பேசிப் பேசி ஏக்கம் கொள்ளத்தான் தெரியும் . இப்போதெல்லாம் இந்த ஜந்துக்களிடம் புதிய பழக்கம் வேறு தொற்றியது. சிறுநீர் வந்தால் ஏனைய குடும்பத்தாரை அமர வைத்து சுண்டுவை மட்டும் நிற்க வைத்து புதிய சங்கேத மொழி செய்தனர். மருமகப் பிள்ளை படுத்தமேனிக்கு கெக்கே பிக்கே என்று சிரித்த அந்த கனம் முதல் ஏனையோர் அவனிடம் வைத்திருந்த மரியாதையும் குறையத் தொடங்கியது.



ஆனால் மனைவியோ இரும்புப் பெண். இருதயத்தோடு நேரடி ரத்த பந்தம் உண்டு. மோதிராவின் தாய் மாமன் தான் இதயன்.



கட்டவி வருடக்கணக்கில் பேசாமல் கண்மூடி செயலற்று அமைதியானாள். கட்டைவிரல் செயல்படாததால் அந்த குரங்குப்பெண் மிகுந்த சிரமமுற்றாள். உதவிகரமாக இல்லாததால் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டாள் அந்த அப்ராணி கர்ப்பிணி. உடலும் மனதும் தளர்வுற்று மெலிந்தாள். சாவை நோக்கிச்செல்கிறோமா என்றெண்ணியவள் கலக்கத்தோடு சோர்வும் சேர ஒரு மரத்தடியில் தன்னை மறந்து ஆழ்ந்து உறங்கினாள்.



மழை பெய்யத் தொடங்கியது. கட்டவியின் தவத்தை மெச்சி விரிந்த நிலையிலிருந்த அவள் உள்ளங்கையில் நின்று காட்சியளித்தாள் இயற்கை அன்னை.



விழித்த கட்டவி கண்ணீரும் கம்பளையுமாக நடந்ததைக் கூறினாள். ‘அனைத்தையும் அறிவேன். பழம் வழக்கம் தப்பியது ஒரு காரணத்திற்கு தான் கட்டவி.’



‘ஏன் வளர்ச்சி குன்றி , பருமனான தனிமை விரும்பியாக என்னைப் படைத்தாய் அன்னையே?’



அவளை இடைமறித்து காலில் விழுந்து ஆட்காட்டான் தவறை மன்னிக்குமாறு கெஞ்சினான்.



‘எழுந்திறு ஆட்காட்டி விரல் வீரா’ திரும்பி கட்டவியை வியந்து ‘இந்த பேரண்டத்தில் இதைக் கேள்வியாக கேட்ட முதல்பெண் நீதான். ‘ பெருமிதம் குலையாமல் கூறினாள்.



‘இதற்கு மகிழ்ச்சி கொள்ளவா? ஏனையோருக்கு நான் பாராமுகமாய் படைக்கப்பட்டதால் கட்டினவளையே ஏமாற்றுவதுவதா? இது போல் எந்த கரத்திலும் நடக்கவில்லையே . பதில் சொல் தாயே’



‘காரணம் உண்டு. வேண்டியதைக் கேள் மகளே’



‘தாயே நான் . இல்லை இனி எழும் எல்லா கட்டவிகளுக்கும் அகண்ட கண்கள் வேண்டும் . எல்லோரையும் காணும் வகையில் உருமாற்றி அருள்புரி அன்னையே’



‘நேரம் வருகையில் இயல்பை மாற்றுவதே இயற்கை என்னும் நான். ‘



கட்டவியை வாரி அணைத்தது நேராக இருந்த கட்டை விரலை சற்றே குடும்பத்தைப் பார்க்கும் வகையில் திருத்தி வடித்தாள் .



அதுவரை ஓரக்கண்ணால் மட்டுமே மிகுந்த சிரமத்தோடு தன் குடும்பத்தார் உட்பட அனைத்தையும் கண்டவள் முதன்முறையாக பெரிதான இருகண்கள் கொண்டு பார்த்தாள்.



அப்பாவின் வெகுளித்தனம் , அம்மாவின் மிடுக்கு, காலில் ஜொலிக்கும் உலோக மெட்டி, மிக உயரமான அழகான தங்கை, கடைசியாக தன் வீர மணாளன்.



இவ்வளவு தைரியமான பேசியதால் கட்டவியின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தாராளமாக வரங்களை அள்ளித் தந்தாள்.



‘இனி ஆயுதம் கையாள , உணவருந்த , கிறுக்க, ஏன் வெற்றித் திலகமிடக்கூட உன் முழுமையான துணையேயின்றி ஏதும் நடக்காது. பிற்காலத்தில் நீதான் இந்த பரிணமிக்கும் மிருகத்தின் அடையாளமாக ஆதாரமாக தனித்தன்மையோடு விளங்குவாய். நீயில்லா கரம் கல்லான மரத்துக்குச் சமமாகும்.’



ஆட்காட்டானை எச்சரித்த அன்னை , பாசமான முதலாமவளை என்றும் கைவிடக்கூடாதென்று எச்சரித்தாள்.



‘இனி கட்டவி – ஆட்காட்டான் தம்பதியின் தாம்பத்திய வாழ்வும் அன்னியோன்யமும் புதிய உச்சங்களைத் தொடும்.



புருஷன் பொஞ்சாதி இருவரும் காதலோடு பக்கவாட்டில் தலைசேர்த்து கண்கள் மூடி தரையில் வீழ்ந்து வணங்கினர் .



‘மண்ணில் அரம்பிக்கும் வாழ்வு மண்ணில் முடிவது முடிவில்லா நியதி.

தன்னை தொட்ட அனைத்தையும் அரவணைத்து , தன்னுடனே கலப்பதுதான் மண். மண்ணின்றி செடி கொடி மரம் மழை என்று ஒன்றுமே கிடையாது. கானகமின்றி உயிர்சுழற்ச்சி ஏது.’

ஆட்காட்டானைக் காட்டிலும் , கட்டவிக்கு எல்லாம் புரிந்தது .



‘விதை மரமாகும் மண் தரையாகும் என்றால், உயிர்களை சிருஷ்டிக்கும் பெண்ணும் அதன் கர்த்தாவாகிய ஆணும் தரைதான்.

இரண்டும் தரைகளும் அன்போடு முத்தமிட்டு சேர்ந்து மண் தரையை தொட்டகணம்’ தெய்வப் புன்னகையோடு சொன்னாள் ‘இக்கணம் முதல் இந்த பிணைப்பு மூன்று தரை என்னும் முத்திரை என அழைக்கப்பெற்று உரிய காலத்தில் அங்கீகரிக்கப்படும் .’



‘இத்தருணத்தில் நிகழ்ந்த இந்த அற்புத நிகழ்வால் நிகழ்விற்கும் வருங்காலத்திற்கும் தலைமை உயிரினமான பரிணமிக்கத் தேவையான அனைத்தையும் உணரவும் சிந்திக்கவும் தொடங்குவார்கள்.’ அருள்பொழிந்து மறைந்தாள் இயற்கையன்னை.



குரங்கு மனிதியின் வாயானது உயிரும் மெய்யுமாக ஏதும் உளராது முதன் முதலான தண்டுவடத்தை நேராக்கி கண் மூடி மெளமாகி உள்நோக்கிப் பாய்ந்தது.



குரங்கு மனிதனாக மாறிக்கொண்டிருந்தது.



***