• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 21

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
தாமரை-21

ஊரில் இருந்த செல்வத்திற்கு மொத்தமும் கதிரவனின் யோசனைதான். ஏன் இப்படி தொழில்… தொழில் என்று ஓடிக்கொண்டே இருக்கிறான்.

பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என உறுதியாகத் தெரியும். அவனுடைய சொத்தே ஏழு தலைமுறைக்கு வரும்.

செல்வத்திற்கு கதிரவனின் நகர வாழ்க்கையின் மோகமும் தெரியும். அதனால்தான் இந்த கிராமத்தை விட்டே போனார் என்றும் தெரியும். ஆனாலும் கதிரவனின் செயல் ஏதோ தவறாக பட்டது செல்வத்திற்கு.

தன் தங்கை மனதில் ஆசையை வளர்க்காமல் இருந்திருந்தால் கூட, கதிரை ஒரு பொருட்டாக கூட செல்வம் நினைத்திருக்க மாட்டார்.

ஆனால் சிறு பெண்ணின் மனதில் ஆசையை தூவி விட்டு, அது வளர்ந்த பிறகு நடக்காமல் போனால், அந்த தோல்வியை அவள் எப்படி எதிர்கொள்வாளோ என்ற பயம் அவரை பெரிதளவில் வதைத்தது.

வீட்டிலும் இதைப் பற்றி யாரிடமும் பேச முடியாது. பேசினால் கதிரவனை சந்தேகப்படுவதை போல் ஆகும். அதோடு தங்கம் அத்தை கதிரவனிடம் சண்டையிட்டு இங்கு வரவைத்து விடுவார்.

பின் கதிரவன் தன்னை தவறாக நினைப்பான். அதனால் பொறுமையாகத்தான் இதை கையாள வேண்டும் என நினைத்துக் கொண்டார்.

தங்கமும் லட்சுமியை அழைத்து, தன் வீட்டில் தன்னோடு வைத்துக் கொண்டார்.

“நீ இந்த வீட்டு மருமக, உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கணும்.. என் கூடவே இரு.. எல்லாம் கத்துக்கோ..” என அழைத்து வந்து விட்டார். செல்வத்தால் கூட அதை மறுத்து பேச முடியவில்லை.

இதற்கிடையில் மகேஸ்வரி உண்டாகி விட, இந்த செய்தி செல்வத்திற்கு கதிரவனின் கவலையை தன் மனதின் அடி ஆழத்திற்கு அனுப்பி வைத்தது.


கதிரவனுக்கும் அழைத்து சொல்லி இருக்க, அவருமே வந்து தங்கையை பார்த்து தான் சென்றிருந்தார்.

தங்கம் தன் வீட்டு பொறுப்புகள் அனைத்தையும், லட்சுமியிடம் கொடுத்துவிட்டு, மகளை பார்க்கும் வேலையை மட்டும் எடுத்துக் கொண்டார்.

முன்னமே இரண்டு வீட்டு வேலையையும் செல்வம் தான் பார்ப்பார் என்றாலும், இப்போது உரிமையோடு பார்ப்பதால் வேலை நெட்டித் தள்ளியது.

கருப்பையா வந்தாலும் அவரை ஒரு வேலை செய்ய விடுவதில்லை செல்வம். அனைத்தையும் இரு தந்தைகளும் மேற்பார்வை பார்ப்பதோடு சரி மற்றது முழுவதும் செல்வம் தான். அதனால் நேரம் சென்றே வீடு வர, மனைவியோடு நேரம் செலவழிக்க முடியவில்லை அவரால்.

குழந்தை உண்டான பிறகு மகேஸ்வரி தங்கத்தின் பொறுப்பில் இருக்க, செல்வத்தாலும் மனைவியை நெருங்க முடியவில்லை.

கிடைக்கும் நேரத்தில் கூட இருவருக்கும் குழந்தையை பற்றி பேசவே நேரம் சரியாக இருந்தது. இவர்களின் தனிமையான நேரங்களை லட்சுமி பார்த்துவிட்டால், அவள் முகத்தில் ஒரு வித ஏக்கம் வந்து போகும். அதை இருவருமே கவனிக்கவில்லை.

ஆனால் முதலில் கவனித்தது கந்தசாமி தான். அவர் மகளின் ஏக்கமும் ஆசையும் அவருக்கு புரியாமல் இல்லை.

அதோடு புதிதாக திருமணம் முடிந்த மகனிடமும், குழந்தை உண்டான மகிழ்வில் இருக்கும் மருமகளிடமும், இதைப் பற்றி பேசவும் தோன்றவில்லை அந்த பெரியவருக்கு.

தன் மகளுக்காக, மகனிடம் ‘பார்த்து இரு’ என்று அவரால் சொல்ல முடியாது. அவருக்கு மகனும் முக்கியம். மகளும் முக்கியம். அதனால் கருப்பையாவிடம் நாசுக்காக இது பற்றி பேசி, மகளை தன்னோடு வீட்டுக்கு அழைத்துக் கொண்டார்.

முடியவே முடியாது என்று நின்ற தங்கத்திடம், கருப்பையா அனைத்தையும் பேச, அவரும் வேறு வழியில்லாமல் ‘மகேஸ்வரி இங்கே வந்துட்டா, அப்பாவை பார்த்துக்க. ஆள் வேணும் இல்ல கண்ணு, அப்பாவை இங்க இருங்கன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறார். அதனாலதான் உன்னை அங்க அனுப்புறேன்..’ என்ற காரணத்தை கூற லட்சுமியும் கிளம்பி விட்டார்.

மகேஸ்வரியின் வளைகாப்பு ஊரே வியக்கும்படி தான் இருந்தது. இரண்டு வீட்டிற்கும் முதல் வாரிசு அல்லவா.

அதனால் தங்கம் ஊரே திரும்பி பார்க்கும்படி தான், தன் மகளுக்கு சீமந்தம் செய்தார்.

என்ன குறை என்றால் அவர்களின் சீமந்த புத்திரன் கதிரவனால் மட்டும் வர முடியவில்லை.

அப்போது அவர் மும்பையில் இருந்தார். அந்த குறையே தெரியாதபடி லட்சுமியை வைத்து தான் அனைத்தையும் செய்தார் தங்கம்.

இப்படி லட்சுமியை வைத்து அனைத்தையும் தங்கம் செய்ய, லட்சுமி மனதில் கடலின் ஆழம் போல கதிரவனின் மீதான காதலும் பெருகி போனது.

நாட்கள் அதன் பாட்டிற்கு செல்ல, ஒரு நாள் மகேஸ்வரியின் துணைக்கு லட்சுமியை விட்டுவிட்டு. அனைவரும் பக்கத்து ஊரில் ஒரு விசேஷத்திற்கு சென்றுவிட்டனர்.

தளர்வாக கூடாரத்தில் அமர்ந்த இரு பெண்களிடமும் பேச்சு என்பது கதிரவனை பற்றியதாகத்தான் இருந்தது.

இத்தனை நாட்களில் லட்சுமி கதிரவனை பற்றி அனைத்தும் தெரிந்து வைத்திருந்தார்

ஆனாலும் யாரேனும் கதிரவனை பற்றி பேசினால், மீண்டும் முதல் முறை கேட்பது போலவே கேட்டுக் கொண்டிருப்பாள். யார் என்ன கிண்டல் செய்தாலும், அதை கண்டு கொள்வதும் இல்லை. இப்போதும் இருவரும் அதைத்தான் பேசிக் கொண்டிருந்தனர்.

“ஏன் லட்சுமி.. கதிர் அண்ணன உனக்கு அவ்வளவு பிடிக்குமா? நீங்க ரெண்டு பேரும் நல்லா பேசி கூட நான் பார்த்ததே இல்லை. உன் அளவுக்கு அண்ணனுக்கு உன் மேல விருப்பம் இருக்கான்னும் கூட தெரியல. உன்னோட இந்த அன்பு எனக்கு பயமா இருக்கு லட்சுமி..” என கையை பிடித்த பொறுமையாக கேட்க,

“இதுக்கு நான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல மதினி.. அவருக்கு என்னை பிடிக்கும்.. எனக்கு அவரை மட்டும் தான் பிடிக்கும்.. அவர்தான் எல்லாம்னு நான் முடிவு பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. இனி அதை மாற்ற முடியும்னு தோணல, அதோட இதுல என் தப்பு இருக்கிற மாதிரியும் தெரியல மதினி. பெரியவங்க ஒரு முடிவு எடுத்து சொன்னாங்க, நான் அதைக் கேட்டுக்கிட்டேன்.. வேற என்ன சொல்ல.?” என லட்சுமியும் பேச,

“அது இல்ல லட்சுமி.. நான் சொல்ல வர்றது உனக்கு புரியல. உன்னோட பிடித்தம், எனக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் தெரியும். ஆனா அண்ணாவோட பிடித்தம் எது வரன்னு எங்களுக்கு, குறிப்பா எனக்கு புரியல லட்சுமி. அதுதான் என்னோட குழப்பம்..” என்றதும் லட்சுமியின் முகம் குழப்பத்தை காட்ட, “சரி விடு! குட்டி பிறந்ததும் அண்ணன் வருவான்ல, அப்போ அவன்கிட்ட நேரடியா பேசு, தயங்கிகிட்டே இருக்காத..” என ஒரு தீர்வை கூற, லட்சுமியின் முகம் லேசாக தெளிந்தது.

“ஆமா மதினி, மாமா வரவும் நானே பேசிடுறேன்..” என உறுதியாக கூறவும் தான் மகேஸ்வரிக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

தன்னுடைய ஆசையினால் தான் லட்சுமியை, இதில் இழுத்து விட்டார்களோ என்ற பயம், சமீப காலமாக மகேஸ்வரியை வதைத்திருந்தது. அதற்கு காரணம் கணவனின் ‘கதிரவன் பற்றிய புலம்பல்கள்தான்’. ஒருவேளை அவன் கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், லட்சுமியின் நிலை என்னவாக இருக்கும் என யோசித்தாலே உடல் எல்லாம் நடுங்கியது.

அந்த பயம் தான் இப்போது லட்சுமியிடம் பேச வைத்தது. ஆனால் மகேஸ்வரியின் இந்த பயம் நிஜமாகப் போவதை, அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

அன்று காலையில் இருந்தே மகேஸ்வரிக்கு லேசாக வலி வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் அது சூட்டு வலியாக இருக்குமோ என்று யாரிடமும் சொல்லாமல் விட்டுவிட, லட்சுமிமியிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே வலி அதிகமாகி விட்டது.

சிறு பெண்ணை பயமுறுத்த வேண்டாம் என்று நினைத்த மகேஸ்வரி, மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தாள் அவள் நடக்க நடக்கவே பணிக்குடம் உடைந்து விட, அதை பார்த்த லட்சுமி “மதினி” என கத்தி அழைக்க, அதற்கு மேல் வலி பொறுக்க முடியாத மகேஸ்வரி, அந்த பனிக்குட தண்ணீரிலேயே வழுக்கி விழுந்துவிட்டார். சரியாக மகேஸ்வரியின் அடிவயிறு சிமெண்ட் தரையில் மோதியது.

“அய்யோ.. அம்மா.. மதினி..” என்ற அலறலில், வேலை செய்யும் அனைவரும் ஓடி வர, அடுத்து நடந்த அனைத்தும் மின்னல் வேகம் தான்.

மகேஸ்வரியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே, விசேசத்திற்கு சென்ற, வீட்டாட்களுக்கும் சொல்லிவிட்டனர்.

அனைவரும் பதறி பயந்து வர, அவர்கள் பயந்தது போலவே குழந்தை இறந்து தான் பிறந்தது. யாரும்.. யாருமே இப்படி ஒரு செய்தியை எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு மகேஸ்வரியை விட, லட்சுமியை தேற்றுவதுதான் பெரிய விஷயமாக இருந்தது.

தன் கண்முன்னே நடந்த அனைத்தையும் பார்த்து, பித்து பிடித்தவள் போல் மாறிவிட்டாள்.

‘என்னால்தான்… நான்தான் அண்ணியை கவனிக்காமல் விட்டுட்டேன்.. என்னை நம்பி தானே விட்டுட்டு போனீங்க… நான் சரியா அணியை பார்த்துக்கல.. என்னால தான் குழந்தை இறந்திருச்சு..’ என பைத்தியம் போல பேசிக்கொண்டே இருக்க, குழந்தையை பறிகொடுத்த மகேஸ்வரியை சமாளிப்பதா? இல்லை ‘என்னால்தான்’ என பைத்தியம் போல் அழுது கொண்டிருக்கும் லட்சுமியை சமாளிப்பதா? என தெரியாமல் குடும்பத்தினர்தான் தவித்துப் போயினர்.

குழந்தையின் இறுதி காரியங்களை செய்து முடித்த செல்வத்தின் நிலை அதைவிட மோசம். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என தெரியாமல் தவித்த நேரம்தான் கதிரவன் மும்பையில் இருந்து வந்தார்.

செய்தி கேள்விப்பட்ட பிறகு, அவரால் அங்கு இருக்க முடியவில்லை. மற்றவர்களை விட அவர் தங்கை மிக முக்கியம். இந்த நேரம் கூட உடனிருக்கவில்லை என்றால் கடவுள் கூட, தன்னை மன்னிக்க மாட்டார் என உணர்ந்து தான் வந்தார்.

சீனிவாசனையும், வசந்தியையும் மனைவி குழந்தைக்கு துணையாக மும்பைக்கு போக சொல்லிவிட்டுத்தான், இவர் ஊருக்கு வந்திருந்தார்.

மகனைப் பார்த்த பிறகுதான் பெற்றோருக்கு சற்று மூச்சே வந்தது. மகேஸ்வரியை செல்வம் ஓரளவுக்கு தேற்றிருந்தாலும், தங்கையை அவனால் தேற்ற முடியவில்லை.

கந்தசாமியோ மகளை விட்டு இம்மியும் நகரவில்லை. கதிரவன் வந்து அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டார்.

லட்சுமியும் கதிரவனின் ஆறுதலுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தது போல, கதிரவனை பார்த்ததும் தான் சற்று தன்னிலைக்கு வந்தாள்.

இதெல்லாம் கதிரவனின் மூலையில் படிந்து, அவருக்கு குற்றவுணர்ச்சியை கொடுத்தாலும், ‘பேசினால், சொல்லி புரிய வைத்தால் புரிந்து கொள்வாள்’ என தனக்குத்தானே, ஆறுதல் சொல்லி மனதை தேற்றிக்கொண்டார்.

அவர் மீண்டும் மும்பை செல்ல ஒரு மாதம் ஆகியது. இந்த ஒரு மாதத்தில் லட்சுமியை தன் வீட்டில் அனைவரும் எப்படி பார்க்கிறார்கள்? அவளின் முக்கியத்துவம் என அனைத்தும் தெரிய வந்தது.

தன் தாய் இப்படி செய்வார் என கதிரவனும் யோசிக்கவில்லை. லட்சுமியிடம் பேசி புரிய வைக்கலாம் என நினைத்த தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.

அவரால் பேச முடியும்தான். எந்த தடையும் இல்லைதான். ஆனால் மகேஸ்வரி? அவளின் வாழ்க்கை?

செல்வத்தைப் பற்றி தெரியும். மகேஸ்வரியை பிறந்த வீட்டிற்கு அனுப்பி, பழிவாங்கும் அளவிற்கு எல்லாம் செல்ல மாட்டார் என்றும் தெரியும்.

ஆனால் அதன் பிறகு செல்வத்துடனான தன் தங்கையின் வாழ்க்கை எப்படி இருக்கும்? என நினைக்கக்கூட முடியவில்லை. அதனால் தன் குடும்பத்தை பற்றி பேச்சே எடுக்கவில்லை கதிரவன்.

கதிரவன் இதுவரை குடும்பத்திற்காக என்று ஒரு மாதம் வந்து ஊரில் தங்கி சென்றதில்லை. இதுவே முதல் முறை. அது லட்சுமிக்காகத்தான் என குடும்பத்தினர் நினைத்துக் கொண்டனர்.

ஏற்கனவே இவர்களுக்குதான் திருமணம் என ஊர் முழுக்க பரவி இருக்க, இவர்களை ஜோடியாக பார்த்தாலும் ‘என்ன பொண்டாட்டி கூட ஊர்வலமா?’ என்ற கிண்டல் தவிர்த்து வேறு எதுவும் பேசாமல் கடந்து சென்றிருந்தனர்.

ஒரு துக்க காரியம் நடந்திருக்கும் போது, ஒரு வருடத்திற்கு திருமணம் போன்ற நிகழ்வுகள் நடத்தக்கூடாது என்பதால், கதிரவனிடம் திருமணத்தை பற்றி பேசாமல், அவனை மும்பை அனுப்பி வைத்தனர் குடும்பத்தினர்.

கதிரவனுக்கு தான் அங்கிருக்கும் ஒவ்வொரு நாளும், முள்ளின் மேல் நிற்பதை போல் கடந்தது.

எப்போதடா கிளம்பலாம் என நினைத்து வீட்டில் பேசி ஒரு வழியாக கிளம்பி விட்டார்.

மதுரைக்கு ரயிலில் ஏற்றிவிட வந்த செல்வம், “உனக்கு இங்க இருக்க பிடிக்கலைன்னு தெரியும் மச்சான். அதனாலதான் இந்த ஊர் பக்கமே வராமல் இருக்கன்னும் தெரியும். இது உன்னோட விருப்பம். எனக்கு விவசாயம்தான் உயிர். அது மாதிரிதான் உனக்கும் ஒரு தொழில் பிடிக்கும். நான் அதை தப்பு சொல்ல முடியாது. ஆனால் ஒரு அண்ணனா எனக்கு லட்சுமியை நினைச்சு பயமாயிருக்கு மச்சான்.”

“உன் எதிர்பார்ப்பிற்கு அவ இல்லைன்னு எனக்கு தோணுது. குடும்பத்துக்காக நீ ஒத்துக்கிட்டியோனு எனக்கு அடிக்கடி தோணுது. லட்சுமியோட மனசு எங்களுக்கு நல்லா தெரியும். ஆனா உன் மனசு எங்களுக்கு தெளிவா தெரியல. இந்த கிராமத்தை தாண்டாத லட்சுமி எப்படி அங்க வந்து உன் கூட இருக்கும்? இதெல்லாம் யோசிக்கும்போது பயமா இருக்கு மச்சான். உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெளிவுபடுத்தேன்.. அப்போதான் என்னால நிம்மதியா இருக்க முடியும்..” என செல்வம் தயங்கி தயங்கி என்றாலும் தன் மனதில் உள்ளதை கேட்டு விட்டார்.

ஒரு அண்ணனாக செல்வத்தின் நிலை கதிரவனுக்கு புரியாமல் இல்லை. இப்போதும் கூட தன்னிலை எடுத்து சொல்லி புரிய வைத்து விடலாம்தான். ஆனால் அதன் பிறகான மகேஸ்வரியின் நிலை? அதை யோசிக்கவே பயமாக இருக்க, தன் கையை பிடித்திருந்த செல்வத்தின் கையில் அழுத்தம் கொடுத்து கதிரவன், “மாப்பிள்ளை எனக்கு பிடிக்கலன்னா பிடிக்கலைன்னு தைரியமாக சொல்லி இருப்பேன். இப்ப என்னோட சூழ்நிலை தொழில ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகிடுச்சு. போட்ட பணத்தை இன்னும் எடுக்கல. பணம் இங்க பிரச்சினை இல்லை. தொழில்ல ஜெயிக்கனும் அதுதான் எனக்கு முக்கியம். அதுவே என் மூளைக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு. என் தொழில்ல ஜெய்ச்சு, நான் ஒரு நிலைக்கு வந்துடுறேன். அதுவரை இங்கே எல்லாத்தையும் நீ தான் பாத்துக்கணும்.. என்னை நம்பு மாப்பிள்ளை..” என தன் குற்ற உணர்ச்சியை மறைத்து, நிதானமாக பேச, செல்வம் முகம் தெளிய, சரி என்று தலையசைத்து விடை கொடுத்தார்.

அடுத்து அவர் கதிரவனை பார்க்க ஐந்தாண்டுகள் ஆகி இருந்தது. அதிலும் அவர் பார்த்த சூழ்நிலையை இப்போது நினைத்தாலும் கதிரவனை மன்னிக்க முடியவில்லை.