• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 41

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
தாமரை - 41

“நாயகி நீ சொல்றதெல்லாம் படத்துலதான் பார்த்துருக்கேன். இது விளையாட்டுல்ல.. மாட்டினா ரெண்டு பேரும் ஜெயிலுக்குத் தான் போகனும்..” என நாயகியின் அண்ணன் பதட்டமாக பேச,

“இங்க பாருங்க ண்ணா.. இந்த சான்ஸ விட்டுட்டா இனி நாம நினைக்கிறது எதுவும் நடக்காது.. அந்த கதிரவன் இங்க இருக்குற வரை மட்டும்தான் நமக்கு கிடைக்கிறது கிடைக்கும். அவன் ஊரோட போயிட்டா பழையபடி நாம தெருவுல தான் நிக்கனும்..” என நாயகி எரிச்சலாக பேச,

“நாயகி.. மாப்பிள்ளையும் ஓரளவுக்கு காசு சேர்த்து வச்சிருக்கார். அதையே தொழில்ல போட்டு எடுத்தா நல்ல வருமானம்தான். அதை வச்சு பொழச்சுக்கலாம். இந்த கொலை எல்லாம் வேண்டாம்.” என்ற நாயகியின் அண்ணனுக்கு அவள் சொன்ன திட்டத்தில் உடன்பாடும் இல்லை. பயமும் வந்துவிட்டது.

“என் புருசனுக்கு பணத்து மேல ஆசை இருக்குதான். ஆனா அது போதும்ன்ற அளவுக்குத்தான். அளவுக்கு மேல ஆசைப்படமாட்டான். எனக்கு அப்படி கிடையாது. அதோட அவன் தங்கச்சி செத்தது, அடுத்தடுத்து நடந்தது எல்லாம் பார்த்து பயந்து போய் இருக்கான். அவன் பயத்துல சம்பாதிச்ச சொத்தை கூட திரும்ப கொடுத்துடுவானோன்னு நானே பயந்து போய் இருக்கேன். நீ வேற எரிச்சல கிளப்பாத..” என்ற தங்கையிடம்,

“சரி அப்படியே செஞ்சாலும், அந்த பொடியனையும் சேர்த்து முடி. ஆக்சிடென்ட் மாதிரி செஞ்சிடலாம். அது பிரச்சினையே இல்லாம போய்டும். அதை விட்டுட்டு எதுக்கு அவனை விட்டு வைக்கிற. அந்த பொடியன் பின்னாடி பிரச்சினை செய்யவா.?” என கேட்க,

“இப்போ நீதான் லூசு மாதிரி பேசுற, அந்த பொடியனையும் சேர்த்து போட்டுத்தள்ளிட்டா சொத்து மொத்தமும் அவங்க வீட்டுக்குத்தான் போகும். அந்த மகேசுக்கு போகும். அதோட இந்த கதிர் நாலைஞ்சு இன்சூரன்ஸ் போட்டுருக்கான். அதுவும் கோடிக் கணக்குல. எல்லாமே அவனோட வாரிசு இல்லன்னா அவன் தங்கச்சிக்கு போய் சேரும். அப்படித்தான் போகனுமா? எதையும் யோசிச்சு பேச மாட்டியா?” என சகோதரனை அதட்டியவள், “உனக்கு பயமா இருந்தா விடு, நானே பார்த்துக்கிறேன். வெளிய இருந்து ஆள் வச்சா, நாளைக்கு அவனால பிரச்சினை வரும்னுதான் உன்னை கேட்கிறேன். இப்போ நீ பேசுறதை கேட்கும் போது நான் வெளியவே ஆள் பிடிச்சிக்கிறேன்..” என கோபமாக நாயகி கூறவும்,

“நாயகி நான் நிதர்சனத்தை எடுத்து சொன்னேன். இப்போ என்ன நீ சொன்னதை செய்யனும் அவ்ளோதான. செஞ்சிடலாம். ஆனா அந்த பொடியனை வச்சு பிரச்சினை வந்தா என்ன செய்வ? அதுக்கு முதல்ல ஒரு ஐடியா பண்ணு. அதுக்கு பிறகு இந்த வேலையை கச்சிதமா முடிக்கலாம்..” எனவும்,

“அதை யோசிக்காம இருப்பேனா? என் மாமியாக்கரி சொல்றா அந்த மகேசு மகளுக்கு இந்த பொடியனை கட்டி வைக்கனுமாம். எதுக்கு எல்லாமே அவளுக்கே போகனுமா? கொஞ்சமாவாது நமக்கும் ஒரு பேத்தி இருக்கா, அவளுக்கு பண்ணுவோம்னு தோனுச்சா பார்த்தியா? இதுக்காகவே அந்த பொடியனை பிடிச்சு வச்சு நம்ம ப்ரீத்தாவுக்கு முடிக்கனும்னு முடிவு பண்ணிட்டேன். இந்தாளு போய்ட்டான்னா, இந்த கிழவியும் ஒரு மூலையில கிடக்கும். என் புருசனும் ஒடைஞ்சி போயிடுவான். ஊர்ல இருந்து அந்த மகேசு, அவ புருசன்னு யார் வந்தாலும் சமாளிச்சிடலாம். உன் அப்பா அம்மா சாவுக்கு இவங்கதான் காரணம்னு அந்த பொடியன் மண்டையை கழுவினா போதும். அவன் அந்த ஜெயந்தி மாதிரிதான். சொன்னதை அப்படியே கேட்பான். அடுத்து அவனை ஊர்ப்பக்கமே விடாம, அதே நேரம் அவனையும் நம்ம கைக்குள்ள இருக்குற மாதிரியும், அது தெரியாத மாதிரியும் பார்த்துக்கனும்.” என்றதும்,

“இதெல்லாம் கேட்க சரியா இருக்கு நாயகி. கொஞ்சம் லீக் ஆனாலும் பெரிய பிரச்சினையில போய் மாட்டிப்போம். அந்த பொடியன் நம்ம ப்ரீத்தாவை வேண்டாம்னு சொல்லிட்டா, யாரையும் லவ் பண்றேன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவ..” என கேட்கவும்,

“அண்ணா.. நீ பயத்துல ரொம்ப பேசுற, ஆனா நீ சொல்றதையும் யோசிக்கனும். ப்ரீத்தாவை கல்யாண, செய்றது உன் அம்மாவோட கடைசி ஆசை. உனக்கு விருப்பம் இல்லன்னா விட்டுடலாம்னு ஒரு பிட்டை போட்டா, நம்பிட போறான். அதுக்கெல்லாம் அப்பப்ப யோசிச்சு பண்ணிக்கலாம். இப்போ இதை செய்வோம்..” என்றதும், நாயகியின் அண்ணனுக்கு இப்போதுமே பயம்தான். ஆனால் நாயகிக்காக சரி என்று ஒத்துக்கொண்டார்.

அன்று இரவு அவரை வர வைத்துவிட்டார் வீட்டுக்கு. “அண்ணா ரெண்டு பேருக்கும் தூக்க மாத்திரை கொடுத்துட்டேன். கண்டிப்பா அந்த பொடியன் எந்திரிக்க மாட்டான். இந்தாளும் நல்ல தூக்கத்துலதான் இருக்கான். நீ சரியா அந்தாள் முகத்துல தலகாணியை வச்சதும் நான் லைட் ளேம்பை ஆஃப் பண்ணிடுறேன். நீ சோலியை முடிச்சிடு..” என கதிரவனின் அறைக்குள் நுழைந்தனர்.

அடுத்த அரை மணி நேரத்தில் கதிரவனின் உயிரை பறித்துவிட்டு, வந்த தடமே தெரியாமல் வெளியில் சென்றனர்.

“அண்ணா நீ இங்கேயே இரு.. இந்த வாட்ச்மேன் அவங்க ஆளு. கொஞ்சம் சந்தேகம் வந்தாலும், தூண்டி துருவி தெரிஞ்சிக்கிட்டு அந்த மகேசுக்கு சொல்லிடுவான். அதனால போக வேண்டாம்..” என்றுவிட, அவருக்கும் அதுவே சரியெனப்பட, அங்கிருந்த கெஸ்ட் ரூமில் போய் படுத்துவிட்டான்.
ஆனாலும் பயத்தில் உறக்கமே வரவில்லை. ‘அந்த ஜெயந்திக்கு பண்ண மாதிரியே மருந்தை கொடுத்திருந்தா இந்த பிரச்சினையே இல்ல’ என புலம்பினார்.

ஆனால் நாயகி அதையும் யோசித்து, அடுத்தடுத்து ஒரே போல் இறப்பு என்றால் சந்தேகம் வந்துவிடும் என்றுதான் இந்த முடிவை எடுத்தார்.

அடுத்த நாள் வழக்கத்தை தாண்டியும், இளங்கோவும் கதிரவனும் வெளியில் வரவில்லை என நாயகிதான் கணவரிடம் சொல்ல, சீனியும் என்ன என்று பார்க்க, இளங்கோ நல்ல உறக்கத்தில் இருக்க, கதிரவனின் உடல் சில்லிட்டு போயிருந்தது.

உடனே மருத்துவமனைக்கு எடுத்து செல்ல, அங்கு அவர் இறந்து பல மணி நேரம் ஆகிவிட்டது என்று கூற, மொத்த குடும்பமும் உடைந்து போனது.

வசந்தியோ பேரனைப் பிடித்தபடி அதிர்ந்த பார்வையில் ஒடுங்கிவிட்டார்.

அவரால் இந்த செய்தியை நம்பவே முடியவில்லை. ‘நேற்றிரவு பேசியதென்ன? இன்று விடியலில் நடந்ததென்ன? இந்த சின்னஞ்சிறு குழந்தையை, விவரம் தெரியாத சிறுவனை கூட நினைக்காமல், கடவுளே உனக்கு இரக்கமே இல்லையா? ஏன் எங்க குடும்பத்தை இப்படி பழி வாங்குற. இந்த பிஞ்சு முகத்தைப் பார்த்து கூட உனக்கு கருணை இல்லையா? எப்படி இவனை சமாளிப்பேன்..’ என கத்தி கதறினார்.

சீனி செல்வத்திற்கு அழைத்து சொல்ல, அதிர்ச்சியில் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. இன்னும் நான்கு நாட்களில் இங்கு வருவதாக இருந்தானே.

அண்ணன் ஊரோடு வந்துவிடுவான் என மனைவி எத்தனை மகிழ்ச்சியில் இருந்தால். இப்போது அவன் உயிரோடு இல்லை என எப்படி சொல்வது..

‘அய்யோ.. அவன் செய்த தவறுக்கு இவ்வளவு தண்டனையா?’ என அவரே கடவுளிடம் மன்றாடினார்.

“ஹலோ.. ஹலோ ..” என சீனி அங்கு கத்த,

“ஹான்..” என்ற செல்வம் “எல்லாம் முடிச்சு இங்க கொண்டு வந்துடுங்க.. நாங்க இங்க எல்லாம் பார்த்துக்கிறோம். தம்பி.. தம்பி எப்படி இருக்கான்..” என முதன் முறையாக இளங்கோவைப்பற்றி கேட்டார்.

“அழுது அழுது மயங்கிட்டான்..” என்ற சீனிக்குமே குரல் உடைந்து போனது. இவை அனைத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டவரே அவர்தானே..

தாயின் பரிதவித்த கோலம்.. மருமகனின் மயங்கிய கோலம் என அனைத்தையும் பார்த்தவருக்கு, விதியின் மேல் அத்தனை கோபம்.

அதன்பிறகு வீட்டில் சொல்ல, நாயகி ஏதோ பேச வர, அவளின் அண்ணன் தடுத்துவிட்டார்.

அடுத்து பெண்களையும் இளங்கோவையும் காரில் முன்னே அனுப்பிவிட்டு, கதிரவனின் உடலோடு ஆம்புலன்சில் பயணமானார் சீனி.

இங்கு மனைவியிடம் செய்தியை சொன்னதும், ‘அய்யோ’ என மயங்கி விழுந்தவர்தான், அடுத்து மருத்துவர் வந்து பார்த்து ஊசி மருந்துகள் போட்டுதான் கண் விழித்தார்.

அப்போதும் கூட கத்தி அழவில்லை, கதறவில்லை. வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தார்.

ஒருவேளை கதிரவனின் இறப்பை முன்னமே அவர் ஏற்றுக் கொண்டாரோ என செல்வத்திற்கு தோன்றியது.

“மகி நீ இப்படி இருக்கக்கூடாது. கத்தி அழுதுடு, இந்த பாரத்தோட உன்னால இருக்க முடியாது..” என செல்வம் மகேசிடம் பேச,

“நான் ஏன் அழனும்? எதுக்கு அழனும்? என்னைபத்தி யோசிக்காம, நான் என்ன செய்வேன்னு தெரியாம, என்னை தனியா விட்டுட்டு போன இவங்களுக்காக நான் ஏன் அழனும்..” என்று ஆக்ரோசமாக கத்திய மனைவி புதிது.

“மகேசு..” என்ற செல்வத்திடம்,

“ஏன் எல்லாரும் இப்படி பண்ணிட்டாங்க.. ஏன் எல்லாரும் என்னை விட்டுட்டு போயிட்டாங்க. நான் இவங்களுக்கு முக்கியமே இல்லையா? என்னைப்பத்தி யோசிக்காம எங்க அப்பாரு போனாரு. என்னைய யோசிக்காம மகனைபத்தியே யோசிச்சு எங்கம்மா போச்சு.. இவரு செத்தவங்களையே நினச்சு உசுரோட இருக்குற எங்களை விட்டுட்டு போய்ட்டார். அந்த பிஞ்சு எப்படி கஷ்டப்படும். அவனுக்கு இனி யார் இருக்கா? எப்படி எதையும் யோசிக்காம போனார். ஏன் இவ்ளோ அவசரம்.. அய்யோ அந்த குழந்தை முகத்தை நான் எப்படி பார்ப்பேன்.? ஆயிரம் பேர் இருந்தாலும் பெத்தவங்க போல வருமா? இப்படி அந்த பிஞ்சை அநாதையாக்கிட்டு போய்ட்டானே” என கதறியழ ஆரம்பித்தார்.

அதற்குள் செய்தி கேட்டு பங்காளி ஆட்களும் வந்துவிட, அவர்களும் மகேசைக் கட்டிக் கொண்டு அழ, என நேரம் செல்ல, கார் முன்னே வர, அதற்கு பின் ஆம்புலன்ஸ் வந்தது.

இளங்கோவைப் பார்த்ததும் ‘என் சாமி..’ என ஓடிச் சென்று கட்டிப்பிடித்து அழுத மகேசை பார்த்து ஊரே அழுதது. இளங்கோவும் மகேசைப் பிடித்துக் கொண்டு அழ, வான மகளும் தன் கண்ணீரை மழையாய் தூவ விட்டாள்.

மழை வந்துவிட, அனைவரும் முன்னமே வந்திருக்க, சடலத்தை வாசலிலேயே வைத்து உடனே எடுத்து சடங்குகளை செய்ய ஆரம்பித்தனர்.

இளங்கோவை வைத்தே அனைத்தையும் செய்தனர். வீடே சூனியமாக இருக்க, மகேசை விட்டு இம்மியும் அகலவில்லை இளங்கோ.

வசந்திக்கோ இனி என்ன வாழ்க்கை இது? எனத்தான் தோன்றியது. பேரனை இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இளங்கோ மகேசோடு ஒட்டியிருப்பதைக் கவனித்து, அவர்களே பார்த்துக் கொள்ளட்டும். அதுதான் சரி.. என மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

மனைவியின் மனநிலை புரிய, மகளை கையில் வைத்தபடியே அனைத்து வேலைகளையும் பார்த்தார் செல்வம்.

மூன்றாம் நாள் காரியம் முடிய, அடுத்து இளங்கோ இங்கேயே இருக்கட்டும் என பெரியவர்கள் பேசி முடிவெடுக்க, மகேசின் இடுப்பைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த இளங்கோவோ “இல்ல நான் இங்க இருக்க மாட்டேன்.. நான் எங்க வீட்டுக்கு போகனும். எங்க வீடு இது இல்ல..” என்ற இளங்கோவின் பேச்சில் பதறி போய் மகேசை பார்க்க, அவரோ அழுகையை அடக்கியபடியே மருமகனின் தலையை வருடிக் கொண்டிருந்தார்.