• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீயாய் சுடும் என் நிலவு 29:

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் மிருதி.

"மிரு முதல்ல நான்... என்னை மன்னிச்சிடு. என்னை பத்தி எல்லாமே நீ தெரிஞ்சுக்கணும். நான் வெளிநாட்டுல இருக்கும் போதே அங்கயே என் ஆஃபீஸ்ல... ஒரு பெண்ணும் நானும் விரும்பினோம். அவ பேரு சோபியா. ரொம்ப நல்ல பொண்ணு. அவளுக்கு அப்பா அம்மா யாரும் இல்ல." என்றான் மிக மெதுவாய்.

விழிகளை இறுக முடியவளை கண்டதும் சுருக்கென்றது தீரனுக்கு.

"மிரு ப்ளீஸ். இப்போ என் மனசுல உன்னை தவிர வேற எந்த பெண்ணுக்கும் இடம் கிடையாது." என்றான் உள்ளத்தில் இருந்து.

அதை உணர்ந்து கொண்டாலும் அமைதி காத்தாள் மிருதி..

"ரெண்டு வருஷம் நாங்க விரும்புனோம். அவளுக்கு யாரும் இல்லை. என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ரொம்ப விரும்பினாள். அந்த லீவ்க்கு வீட்டுக்கு வரும் போது அவளையும் கூட்டிட்டு வரனும்னு பிளான் பண்ணிருந்தேன். நாங்க லிவிங் டூ கெதர் ன்னு " என்று அவன் முடிக்கும் முன் அவனை எரித்து விடுவது போல் முறைத்தாள்.

"இரு இரு... நான் சொல்றேன். ஒரு நாள் திடீர்னு பெட்டி படுக்கையோட என் வீடு வாசல்ல வந்து நின்னா சோபியா. என்னன்னு கேட்டப்ப, வீட்டு வாடகை தராததால தன்னை வீட்டை விட்டு காலி செய்ய சொல்லி விட்டதாகவும் உன்கூட இங்கயே இருந்துட்றேன்னு சொன்னா." என்று நிறுத்தி மிருவை பார்க்க உணர்ச்சிகள் ஓய்ந்த நிலையில் சலனமற்று இருந்தாள் அவள்.

"அந்த நிலையில் அவளை தனியாக விட மனமில்லை. அதனால்..." என்று சற்று தயங்கினான்.

"வீடு தேடும் வரை அவளை இரண்டு நாள் மட்டும் என்னுடன் தங்க வைத்தேன்." என்றதும் மிருவின் விழிகள் தீரணை உரசி செல்ல உயிர் நெருப்பில் உரசுவது போல் உணர்ந்தவன்.

"மிரு நீ என்ன நினைக்கிறேன்னு புரியுது. என்ன தான் வெளிநாட்டில போய் வேலை செஞ்சாலும் நான் பிறந்தது இந்த மண்ணுல மிரு. திருமணத்துக்கு முந்தி எல்லை தாண்டக் கூடாது என்பதில் தெளிவாய் இருந்தேன். அவள் மேலை நாட்டில் வளர்ந்த பெண் என்பதால் சில நேரம் வற்புறுத்திய போதும் மனம் ஒப்பாமல் மறுத்துவிட்டேன்." என்றவனை விழிகளில் லேசான மதிப்போடு பார்த்தாள்.

"சரியான வேலை இல்லாததால் பணத்திற்கு கஷ்டபட்டவளுக்கு நான் தான் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுப்பேன். திடீரென்று ஒரு நாள் அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு தகவல் வந்தவுடனே இங்க அவசரமா வந்துட்டேன்." என்று நிறுத்தினான்.

மெதுவாய் அவளின் கரத்தின் மேல் தன் கரத்தை வைத்தான் தீரன். எதுவும் பேசாமல் உருவிக் கொண்டாள் மிருதி. பெரு மூச்சு விட்டவன்.

"இங்க வந்தப்புறம் தான் அம்மாவுக்கு நான் ஒரு வெள்ளைக்காரிய காதலிக்கிறேன்னு தெரிஞ்சுருக்கு. அதனால தான் பொய் சொல்லி என்னை வர வெச்சுருக்காங்கன்னு தெரிஞ்சு ரொம்ப கோபப்பட்டேன். இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாதுன்னு ஒத்தை கால்ல நின்னேன்." என்றான் தீரன்.

அடக்கி வைத்திருந்த கண்ணீர் முழுவதும் மடை திறந்த வெள்ளமாய் கொட்ட தொடங்கியது மிருதியின் விழிகளில்.

"ப்ளீஸ் மிருதி! நீ அழாம இருந்தா தான் என்னால சொல்ல முடியும்" என்று தயங்கினான்.

விழிகளை வேகமாய் துடைத்து கொண்டு அமைதியாய் தரையை நோக்கினாள்.

"ஆனா, அம்மா நான் என்ன சொன்னாலும் கேட்குற நிலமைல இல்ல. என் அண்ணன் பொண்ணு உன் மேல உயிரையே வச்சிருக்கான்னு சொன்னாங்க. அதோட நீ அவளை கல்யாணம் பண்ணிக்கலைன்னு ஏதாவது தப்பா நடந்தது அப்புறம் சும்மா இருக்க மாட்டேன்னு மிரட்டினாங்க. அன்னைக்கு..." என்று நடந்ததை கூறினான்.

*****

'நீங்க என்ன சொன்னாலும் என்னால உங்க அண்ணன் பெண்ணுக்காக நான் விரும்பின பெண்ணை ஏமாத்த முடியாது. நான் இப்போவே ஊருக்கு போறேன்' என்று தீரன் கிளப்பினான்.

'ஓ அப்படியா? எங்க அண்ணன்பொண்ணு தான் இந்த வீட்டுக்கு மருமகளா வரனும்னு நான் நினைக்கிறேன். ஆனா உன் விருப்பம் தான் நடக்கும்னு இருந்தா யாரு என்ன செய்ய முடியும். சரி நீ கிளம்பு. அதுக்கு முன்னாடி உன் கையாலையே எனக்கு கருமாதி பண்ணிட்டு போ.' என்றவர் வேகமாய் உள்ளே சென்றார்.

"அம்மா" தீரன் அவரின் பின்னே வேகமாய் செல்ல, படாரென சமையல் அறையின் கதவை சாற்றினார்.

உள்ளம் பதற, "அம்மா என்ன பண்றிங்க? கதவை முதல்ல திறங்க." என்று கதவை தட்டினான்.

"உனக்கென்னப்பா என் மேல கவலை. நீ போகணும்னு கிளம்பினியே போ." என்றவர் ஜன்னலில் தன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி கொள்ள, உறைந்து போனான் தீரன்.

"அம்மா! ப்ளீஸ். எதுவும் தப்பா செய்யாதீங்க." என்றான் தீரன் கோபமாய்.

"உனக்கு என்கிட்ட நின்னு பேசுறதுக்கு கூட நேரம் இருக்காப்பா. நீ போய் அந்த வெள்ள காரி கூட குடும்பம் நடத்து." என்று தீப்பெட்டியை தேடினார்.

உடல் முழுவதும் உதற, கதவை உடைக்க முயற்சி செய்தான் தீரன்.

"அம்மா ப்ளீஸ்! நீங்க என்ன சொன்னாலும் செயறேன். எனக்குன்னு இந்த உலகத்துல இருக்கிறது நீங்க மட்டும் தான். உங்களை விட்டா எனக்கு யாரு இருக்கா, இப்போ என்ன உங்க அண்ணன் பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கணும் அவ்ளோ தான? பண்ணிக்கிறேன். ப்ளீஸ் நிறுத்துங்க." என்று கெஞ்சினான்.

"உன்னையெல்லாம் நம்ப முடியாது." என்று தீஃப்பெட்டியை எடுத்தவர் பற்ற வைக்கும் நொடி நேரத்தில் கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தவன் தீஃப்பெட்டியை தட்டிவிட்டு அங்கே இருந்த தண்ணீர் குடத்தை எடுத்து அவரின் மேல் ஊற்றினான்.

எதுவும் பேசாமல் அமைதியாய் சிலை போல் அவரும் நிற்க, "அம்மா! என்ன காரியம் பண்ண பார்த்திங்க?" என்று அவரை அணைத்து கொண்டான்.

அப்பொழுதும் எதுவும் பேசாமல் நிற்க, "அம்மா! நீங்க சொன்ன மாதிரியே கல்யாணம் பண்ணிக்கிறேன். இது உங்க மேல சத்தியம்." என்றதும் தான் அவரின் முகத்தில் சற்று நிம்மதி பரவியது.

உடனே போனை எடுத்தவர்.

"அண்ணா! குறிச்ச மாதிரி அடுத்த முகூர்த்தத்துலயே ஏற்பாடு பண்ணிடலாம்." என்று வைத்தார்.


***********

"அந்த நேரத்துல எனக்கு உன் மேல ரொம்ப கோபம். நீ என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு அடம் பிடிக்கலைன்னா இவ்வளோ தூரம் நடந்திருக்காதுன்னு தோணுச்சு." என்றவன்.

"முதல்ல உன்னை ஒதுக்கணும்னு முடிவு பண்ணினேன். ஆனா, அதுக்கும் அம்மா தடை போட்டாங்க." என்றதும் அவனை நோக்கினாள்.

"ஆமா, எந்த காரணத்தை கொண்டும் நான் வேறு ஒரு பொண்ணை காதலிச்சதும் கட்டாயபடுத்தி தான் என்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்தாங்கன்னும், உன் மேல கோபத்தை காட்டாம உன்கூட சந்தோஷமா வாழணும்னும் என்கிட்ட கல்யாணத்துக்கு முந்தின நாள் சத்தியம் வாங்கிட்டாங்க." என்றான்.

"எங்கம்மாவுக்காக என் ஆசை, காதல் எல்லாத்தையும் உதறிட்டு உன் கழுத்துல தாலி கட்டினேன். முதலில் மிகவும் வெறுப்பாக இருக்கும் உன்னை பார்க்க." என்று அவளை பார்க்க எதுவும் பேசாமல் எங்கோ பார்த்தாள்.

"என் மனக் கசப்புகளை ஒதுக்கி வைத்து கடமைக்கேன்னு உன் கூட வாழ ஆரம்பித்தேன். கொஞ்சம் நாள் செல்ல, உன் துடுக்கு தனம் என்னை கொஞ்சம் கொஞ்சமா கவர்ந்துச்சு. நீ செய்ற ஒரு ஒரு விஷயமும் ரசிக்க ஆரம்பிச்சேன். எனக்கும் தெரியாமல் உன் மேல ஒரு அன்பு உருவாச்சி. என் மனம் உவந்து உன் கூட வாழ்க்கையை பகிர ஆரம்பிச்சேன்.

நீ இல்லாமல் வாழுற வாழ்க்கை முழுமை ஆகாதுனு புரிய ஆரம்பிச்சது. அங்க வேலையை விட்டுட்டு இங்க வந்தோம். வந்த கொஞ்ச நாள்ல எனக்கு ஒரு போன் வந்துச்சு. அதாவது சோபியா .." என்று முடிக்க முடியாமல் தடுமாறினான்.

மிருதியின் கரம் அவனின் கரத்தின் மேல் லேசாய் அழுத்துவதை உணர்ந்து மெல்ல புன்னகைத்தான்.

" கல்யாணத்துக்கு அப்புறம் அவள் எத்தனை தடவை போன் செய்தும் அவளுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம நான் எடுக்கவும் இல்லை பதில் அளிக்கவும் இல்லை. சோபியா வை கொஞ்ச நாளா காணலைன்னு என் ஃப்ரெண்ட் போன் பண்ணி சொன்னான். நான் அங்க இருந்திருந்தா அவளுக்கு இப்படி ஏற்பட்டிருக்காதுன்னு என் மேல கோபம் வந்துச்சு. என்னோட சுயநலத்துக்காக அவளை ஏமாத்திட்டத்தா தோணுச்சு. என்னால தான் அவளுக்கு இந்த நிலமைன்னு என்னை குற்ற உணர்ச்சி கொல்ல ஆரம்பிச்சுது. அதனால உன்கிட்ட இருந்து விலகி என்னை தனிமை படுத்திக்கிட்டேன். நிறைய நேரம் என் குற்ற உணர்ச்சியை மறக்க தொடர்ந்து குடிக்க ஆரம்பிச்சேன்." என்று நிறுத்தினான் தீரன்.
 
Top