• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 13.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
ஹாய் மக்களே,

அமேசான் கிண்டிலுக்கு அடுத்து இப்போ யூடியூப் காரன் அவனோட ஆட்டத்தை துவங்கி இருக்கிறான். அதைப்பற்றி என் சேனல்ல ஒரு விஷயம் சொல்லி இருக்கிறேன். அதைக் கேட்டுவிட்டு அங்கே உங்கள் ஆதரவைத் தாங்க.

https://www.youtube.com/watch?v=ua9K5qZ2KJM

நன்றி!
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
பகுதி – 13.

வைஷாலி, தன் கையில் இருந்த நேர்முகத் தேர்வுக்கான மெயிலை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளால் தன் கண்களை நம்பத்தான் முடியவில்லை. அந்த பெயின்ட் கம்பெனிக்கு அவள் அப்ளை செய்து பல மாதங்கள் இருக்கும்.

சொல்லப் போனால் தான் அப்ளை செய்ததையே மறந்தும் விட்டிருந்தாள். அப்படி இருக்கையில் இத்தனை மாதங்கள் கடந்து ஒரு இண்டர்வியூவுக்கான அழைப்பு. ‘இத்தனை மாதங்களாக அந்த இடத்தை ஃபில் செய்யாமலா வைத்து இருந்தார்கள்?’ என உள்ளுக்குள் யோசனையாக இருந்தது.

‘அப்பா சொன்ன மாதிரி எனக்குள்ளது எனக்கு கிடைத்தே தீரும்’ என உள்ளுக்குள் குதூகலமாக கூட இருந்தது. அதைப் பார்த்த உடனேயே தகப்பனுக்கு அழைத்துவிட்டாள்.

“பாப்பா... சொல்லு பாப்பா...” அவரது குரல் தூக்கக் கலக்கத்திலும், சோர்விலும் கலந்து ஒலித்த பிறகுதான் நேரத்தையே பார்த்தாள். நேரம் இரவு இரண்டு முப்பது எனக் காட்ட தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

“என்ன? பாப்பாவா? என்ன இந்த நேரம் கூப்பிட்டு இருக்கா?” ரதினாவின் குரலும் சேர்ந்து ஒலிக்க, நொந்து போனாள்.

“கேட்டுட்டு தானே இருக்கேன், நீ கொஞ்சம் அமைதியா இரு” என்ற பைரவன், மகளிடம் திரும்பினார்.

“பாப்பா...” அவர் மீண்டுமாக குரல் கொடுக்கவே,

“சாரிப்பா... ஒரு சந்தோஷமான விஷயத்தை இப்போதான் மெயில் வழியா பார்த்தேனா? அதைப் பார்த்த உடனே உங்ககிட்டேதான் சொல்லணும்னு தோணிச்சா, உடனே ஃபோன் பண்ணிட்டேன். டைம் என்னன்னு பார்க்கலை... சாரிப்பா...” மன்னிப்பை வேண்டினாள்.

“ஓ... நல்லது பாப்பா...” அவர் கொஞ்சம் ஆசுவாசமாக மூச்சு விட்டார்.

“என்னவாம்? என்னன்னு சொல்லுங்க” ரத்னா கத்த, அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டார்.

“ஃபோனை ஸ்பீக்கர்ல போட்டுட்டேன்... நீயும் கேட்டுக்கோ” என்றவர் மகளுக்கும் சிக்னல் கொடுத்தார்.

“அப்பா... எனக்கு இன்டர்வியூ மெயில் வந்திருக்குப்பா. நிக்சோ கம்பெனி... இன்னும் ரெண்டு நாளில் இன்டர்வியூ அதைச் சொல்லத்தான் கூப்டேன். நீங்க தூங்குங்கப்பா... சாரி...” என்றவள் அலைபேசியை வைக்கப் போனாள்.

“இத்தனை மணிக்குத் தூங்காமல் ஃபோனை நோண்டிகிட்டு உட்கார்ந்து இருக்கறியா? தனியா போன உடனே உனக்கு நல்லா குளிர் விட்டுப் போச்சு. அர்த்த ராத்திரிக்கு அவ்வளவு தைரியமா ஃபோன் வேற பண்ற...” ரத்னா அந்த இரவிலும் எனர்ஜியோடு சண்டை போட்டாள்.

“ம்மா...” என்றவளுக்கு பேச்சு வர மறுத்தது.

“ஏய்... இன்டர்வியூக்கு தானே வந்திருக்கு, என்னவோ வேலையே கிடைச்சுட்ட மாதிரி குதிக்கற? முதல்ல எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டு ஊருக்கு வந்து சேரும் வழியைப் பாரு” ரத்னா சொல்லிக் கொண்டிருக்க, பைரவன் அலைபேசியை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

“நல்ல விஷயம் பாப்பா... நீ நல்லபடியா செய்வன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இவ்வளவு நேரமா தூங்காமல் என்ன பாப்பா பண்ற? நிம்மதியா படுத்து தூங்கு” என்றவர் அலைபேசியை பட்டென வைத்து விட்டார்.

மகளது பதிலுக்காக எல்லாம் அவர் காத்திருக்கவில்லை. அப்படி காத்திருந்தால் மனைவி இன்னும் பேசுவாள் என அவருக்குத் தெரியுமே.

“உங்க மனசுல நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? அவ என் பொண்ணு, அவ என் பேச்சை கேட்டாகணும்” ரத்னா அத்தனை அதிகாரமாகச் சொன்னார்.

“அவ உன் பொண்ணுதான்... உன் அடிமை இல்லை. இந்த நேரம் உன்கிட்டே விவாதம் பண்ற நிலையில் நான் இல்லை. எனக்கு காலையில் எழுந்து ஆயிரம் வேலை இருக்கு” என்றவர் படுத்துவிட்டார்.

“இங்கே பாருங்க... அவளுக்கும் முத்துப்பாண்டிக்கும் கல்யாணம் நடந்தாகணும். இடையில் ஏதாவது கோல்மால் பண்ணலாம்னு நினைச்சீங்க, நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” அந்த நேரத்திலும் ரத்னா விடுவதாக இல்லை.

‘இப்போ மட்டும் மனிஷியா இருக்கறதா நினைப்பு...’ மனதுக்குள் சொல்லிக் கொண்டவர் வெளியே ஒரு வார்த்தையும் பேசவில்லை. அப்படிப் பேசினால், தன்னை தோற்கடிக்க வேண்டும் என்ற வேகத்தில், ஆத்திரத்தில் மனைவி எதையாவது செய்து வைப்பாள் என அவருக்கு நன்கு தெரியும். எனவே வாயை இறுக மூடிக்கொண்டு, கண்களையும் மூடிக் கொண்டார்.

“நாளைக்கே நான் என் அண்ணா கிட்டே பேசறேன். இதை நான் இப்படியே விடப் போறதில்லை, என்கிட்டேயே ஆட்டம் காட்டறீங்களா?” ரத்னா கொதிக்க, பைரவனுக்கு உள்ளுக்குள் கிலி பிடித்தது.

இந்த ரத்னா என்ன கேட்டாலும் அந்த கோபால் கண்ணை மூடிக்கொண்டு செய்து கொடுத்துவிடுவான் என அவருக்கு நன்கு தெரியும். தன் வாழ்க்கையே அதற்கு ஒரு உதாரணம் என்கையில், அவருக்கு வேறு சான்று வேண்டுமா என்ன?

‘ஆண்டவா, என் பொண்ணு மேலே கொஞ்சம் கருணை காட்டு’ பைரவன் மனதுக்குள் வேண்டுதலை வைத்தார். மனைவியிடம் பேசுவதும், பாறாங்கல்லில் மோதிக் கொள்வதும் ஒன்று என அவரது அனுபவ அறிவு சொன்னது.

அப்படியும் மனைவியிடம் ஒரு முறை பேசிப் பார்த்தார். அதற்கு மனைவியின் எதிர்வினைதான் அவரது கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. ‘நாம ஒன்று கேட்டால், நம்மளையே அசர வைக்கிற மாதிரி ஒரு பதில் சொல்லுவா பாருங்க...’ அப்படித்தான் இருந்தது அவரது நிலை.

கோபால் வந்து பேசிவிட்டுச் சென்ற பிறகு, “அந்த முத்துப்பாண்டி பற்றியும், உன் அண்ணன் குடும்பத்தைப் பற்றியும் தெரிந்துமா நீ இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கணும்னு நினைக்கற? அதுவும் அவங்க குடும்பமே ஒழுக்கம்ன்னா கிலோ என்ன விலைன்னு கேட்கற ஆட்கள்.

“கட்டிய மனைவியை கால் தூசிக்கு கூட மதிக்காதவர்கள். ஊருக்குள் ஒரு பெண்ணை விட்டு வைக்காமல் வேட்டையாடத் துடிக்கும் மிருகங்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் நம்ம பொண்ணை அனுப்ப நினைக்கிறாயே. நீயும் ஒரு அம்மாவா?” நிஜமாகவே தாங்கிக் கொள்ள முடியாமல்தான் மனைவியிடம் கேட்டு வைத்தார்.

“நீங்க பேசறது என் குடும்பத்தைப்பற்றி என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அந்த குடும்பத்தில்தான் நான் பிறந்தேன், வளர்ந்தேன். என்னை எப்படி பார்த்துகிட்டாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? அவளையும் அப்படி ராணி மாதிரி பார்த்துப்பாங்க” மனைவி சொல்ல, பைரவனுக்குப் புரியவில்லை.

“நான் ஒழுக்கத்தைப் பற்றி பேசறேன். இப்போ நானும் நாளுக்கு ஒரு பொண்ணோடு, விபச்சாரியோடு போனால் உனக்குப் பரவாயில்லையா? இங்கே நானும் உன்னை ராணிபோல் தானே பார்த்துக்கறேன்?” மனைவிக்கு புரிய வைத்துவிடும் முனைப்பு அவரிடம்.

“மனசுக்குள்ளே எவளையோ வச்சுட்டு என்னோட படுக்கறதுக்கும், அவங்க செய்யறதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நீங்க என்னதான் சொன்னாலும் என் பொண்ணு அங்கேதான் வாழ்க்கைப்பட்டுப் போவா. என் செல்வாக்கு எந்த காலத்திலும் என் பிறந்த வீட்டில் குறையக் கூடாது” ரத்னா சொல்ல, பைரவன் வாயடைத்துப் போனார்.

“உன் செல்வாக்கா? புரியலை...” பைரவனுக்கு ரத்னாவின் பேச்சே என்னவோ போலானது.

தன்னை அசர வைத்த அந்த பதில்... வாயடைத்துப் போனார். ‘இவளோட செல்வாக்கா? அப்படின்னா இவளோட சுயநலத்துக்காக என் பொண்ணோட வாழ்க்கையை பணையம் வைக்கத் துணிந்துவிட்டாளா?’ எண்ணியவருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது.

பைரவன் அதோடு தன் வாயை இறுக மூடிக் கொண்டார். ‘இது திருந்தாத ஜென்மம் என்பதை விட, திருத்தவே முடியாத ஜென்மம்’ என்கையில் அவரும் என்ன செய்ய? ‘இதை வேறு விதமாகத்தான் டீல் செய்ய வேண்டும்’ என முடிவெடுத்துக் கொண்டார்.

பைரவன் இமைகளை மூடி தூங்க முயல, “நாளைக்குக் காலையில் அண்ணா வீட்டுக்குப் போகணும், ரெடியா இருங்க” ரத்னா சொல்ல, மனதுக்குள் பூகம்பம். அவள் சொல்லிவிட்டால் மறுத்துப் பேச முடியாது என அவருக்குத் தெரியும்.

‘மறுநாள் விடியல் எப்படி இருக்கப் போகிறதோ?’ என்ற நினைப்பிலேயே பைரவனுக்கு சுத்தமாக தூக்கம் வரவே இல்லை.

தவிக்கும் இதயத்தோடு பைரவன் மனைவியோடு கோபாலின் வீட்டுக்கு கிளம்பிச் சென்றார். இவர்களைப் பார்த்த உடனேயே கோபாலின் மனைவி ருக்மணி வேகமாக அவர்களை வரவேற்றார்.

“வாங்கண்ணா... வாங்க...” ருக்மணிக்கு பைரவன் என்றால் கொஞ்சம் அலாதி பிரியம்தான். அதைவிட மிகுந்த மரியாதையும் கூட. கூழாங்கற்களுக்கு இடையே மாணிக்கம் போல், பைரவன் அங்கே இருக்க, கோபாலின் வீட்டில் அனைத்து பெண்களுக்கும் அவரைக் கண்டால் பிடிக்கும்.

“வாங்க சித்தப்பா...” என்ற பெரியவன், சின்னவனின் மனைவிமார்கள் கூட, ரத்னாவை வேண்டா வெறுப்பாக அழைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்கள். அவளை வரவேற்கவில்லை என்றால், அதற்கும் ஒரு பஞ்சாயத்தை அவள் இழுப்பாள் என்பதாலேயே அவ்வாறு செய்தார்கள்.

பைரவன் பொதுவாகவே அவர்கள் வீட்டுக்கு செல்வது இல்லை. கோபாலோடான அலுவல்கள் எல்லாத்தையும், அவரது கட்சி அலுவலகம், இல்லையா தன் அலுவலகத்தோடு நிறுத்திக் கொள்வார். சொல்லப்போனால் கோபாலின் வீட்டுக்கு பைரவன் வந்து பல மாதங்கள் கடந்து இருந்தது.

“அண்ணே... சாப்பிடுங்க... நீங்களும் வாங்க அண்ணி” ருக்மணி அழைக்க, ரத்னா அவளைக் கண்டுகொள்ளவே இல்லை.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
“இல்ல தங்கச்சி... இப்போதான் சாப்ட்டேன். ஒரு காபி மட்டும் கொடும்மா” பைரவன் சொல்ல, ருக்மணி பெரிய மருமகள் ஜெயந்தியைப் பார்க்க, அவள் வேகமாக கிச்சனுக்குச் சென்றாள். இரண்டு மகன்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டாலும், இன்னும் அவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாகத்தான் இருந்தார்கள்.

இவர்கள் வீட்டில் ஆண்கள் எல்லாம் ஒரு கட்சி என்றால், பெண்கள் அனைவரும் ஒரு கட்சி. அதில் இந்த ரத்னாவும், பைரவனும் மட்டும் விதிவிலக்கானவர்கள்.

ருக்மணி பைரவனை ‘என்ன விஷயம்?’ என்பதுபோல் பார்த்து வைக்க, அவர் ரத்னாவை ஒரு பார்வை பார்த்தார்.

“சொல்லு ரத்னா, என்ன காலையிலேயே வந்திருக்க?” கோபால் தங்கையிடம் கேட்டார்.

“அண்ணே... நம்ம முத்துவுக்கும், வைஷாலிக்கும் உடனே கல்யாணத்தை முடிச்சுடலாம்னு நினைக்கறேன், அதைப்பத்தி பேசத்தான் வந்தேன்” எந்தவிதமான ஒளிவு மறைவும் இன்றி பளிச்சென பேசினாள்.

அதைக் கேட்ட, ருக்மணி, பெரிய மருமகள் ஜெயந்தி, சின்னவள் கோதை என அனைவருமே அதிர்ந்துபோய் பைரவனைப் பார்த்தார்கள். “என்ன அத்த இது?” ஜெயந்தி ருக்மணியிடம் சன்னமாக கேட்டு வைத்தாள்.

“ஷ்... நீ காபியைக் கொண்டு போய் அண்ணாவுக்கு கொடு” ருக்மணி சொல்ல, அவர் சொன்னதைச் செய்தாள்.

அந்த நேரம், “தாத்தா...” என்றவாறு கோதையின் இரண்டாவது மகள் மிதுனா ஓடிவந்து பைரவனின் மடியில் அமர்ந்து கொண்டாள். அதில் அந்த பேச்சு சட்டென இடையில் நிறுத்தப்பட்டது.

“மிது குட்டி... பாப்பும்மா ஸ்கூலுக்குப் போகலையா?” என்றவர் அவளை மடியில் அமர்த்திக் கொண்டார்.

“ம்கும்... பாப்பும்மாவுக்கு ஜுரம்” அவள் சொல்ல,

“ஐயோடா... இப்போ பரவாயில்லையா?” என்றவாறு குழந்தையின் ஜுரத்தை பரிசோதித்தார்.

“இப்போ பரவாயில்லைண்ணா...” ருக்மணி சொல்ல, குழந்தையின் தலையை பாசமாக வருடினார். ஆறு வயது குழந்தை அவள். இவளுக்கு பன்னிரண்டு வயதில் ஒரு அண்ணன் இருந்தான். அவனது பெயர் குமரன். மூத்தவன் விநாயகத்துக்கு திருமணம் ஆகும் முன்பே, இரண்டாமவன் தன் வேலையைக் காட்டி இருந்தான்.

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த கோதையை மயக்கி, அவளை கர்ப்பம் ஆக்கி விட்டிருந்தான். மற்ற பெண்களைப்போல் கோதையை வேலவனால் கழட்டி விட முடியவில்லை. ஏனென்றால் கோதையின் தகப்பனும் அங்கே ஒரு பெரும் புள்ளி.

அவரிடம் தன் வேலையைக் காட்டினால், தங்கள் ஓட்டு வங்கியில் மிகப்பெரிய பின்னடைவை, சறுக்கலை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால், காதும் காதும் வைத்தாற்போல் திருமணத்தை முடித்து விட்டார்கள்.

காதல் மயக்கத்தில் பத்தாவது முடித்த உடனேயே பிள்ளை பெற்றுவிட்ட கோதைக்கு, இங்கே வந்த பிறகுதான் நிதர்சனம் புரிந்தது. தான் கைபிடித்த கணவன், தனக்கு மட்டும் கணவன் இல்லை, அவன் ஊர் மேயும் பிள்ளை என அவளுக்குத் தெரிய வந்தது.

தகப்பனின் செல்வாக்கை வைத்து அவளால் பிரிந்து சென்று இருக்க முடியும். ஆனால் அதற்கு கோபால் விட வேண்டுமே. “ஒழுங்கு மரியாதையா இந்த வீட்டு மருமகளா இங்கேயே இரு. இல்லையென்றால் உன் பிணம்தான் வெளியே போகும்” என அவர் மிரட்ட, தான் பெற்ற பிள்ளைக்காக அடங்கிப் போனாள்.

அப்படியும் கோதை தன் தகப்பனிடம் வேலவனைப் பற்றி சொல்லிவிட்டாள். ஆனால் அவரோ, “தாலி கட்டி பொண்டாட்டியா உன்னை மட்டும்தானே வச்சிருக்கான். அவனைப்பற்றி தெரியாமலா அவனோடு பழகினாய்?

“அவன் இப்போ ஒரு கட்சியின் MLA ஒரு MLAவோட மனைவியா இருக்கறது பெரிய கெளரவம். உன்னை அவன் வெட்டிவிடப் பார்க்கலை தானே... அப்போ அவனோடவே குடும்பம் நடத்து” எனச் சொல்லிவிட, கோதை இங்கே இருக்க பழகிக் கொண்டாள்.

அதே நேரம் ஜெயந்தியின் திருமணக் கதையைக் கேட்டால் ரத்தக் கண்ணீரே வந்துவிடும். அவளுக்கும் பெரியவன் விநாயகத்துக்கும் திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்டது. ஆனாலும் இன்னும் பிள்ளைச் செல்வம் என்பது இல்லை.

இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், இருவருக்கும் ஒரு குறையும் இல்லை. நிச்சயம் குழந்தை பிறக்கும் எனச் சொல்லி விட்டார்கள். பல மருத்துவர்களைப் பார்த்தும் இதுதான் பதிலாக இருக்க, குழந்தைச் செல்வத்துக்காக அவள் தவம் இருக்கிறாள்.

பைரவனிடம் காபியைக் கொடுத்த ஜெயந்தி, “மிதும்மா தாத்தா காபி குடிக்கட்டும், நீ வா...” என அழைக்க, குழந்தை அவளிடம் சென்றுவிட்டாள்.

“அம்மா... எனக்கு ஜுரம் அடிக்குது...” ஜெயந்தியை அம்மா என அழைத்து சொன்னாள்.

“மருந்து குடிக்கறியா? இட்லி சாப்ட்டுட்டு மருந்து குடிக்கலாம்” அவளை தன் இடுப்பில் வைத்துக் கொண்டாள்.

“அக்கா, அவளைக் கீழே விடுங்க... அவ என்ன இன்னும் குழந்தையா?” கோதை ஜெயந்தியிடம் சொல்ல,

“நீ போம்மா...” என்ற குழந்தை ஜெயந்தியின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

“மிது... அம்மாகிட்டே அப்படி பேசக் கூடாது. சாரி சொல்லு...” ஜெயந்தி கொஞ்சம் கண்டிப்பாகச் சொல்ல, “சாரி...” என உடனே மன்னிப்பை கேட்டாள்.

“சமத்து...” ஜெயந்தி குழந்தையைக் கொஞ்சினாள்.

“என்ன சொன்ன ரத்னா?” கோபால் தங்கையிடம் கேட்டார். அவள் மீண்டும் தான் வந்த விஷயத்தைச் சொல்ல, தன் தாடையைத் தட்டி யோசித்தார்.

“ரத்னா, இந்த இடைத்தேர்தல் முடிஞ்ச பிறகு நாம இதைப்பத்தி முடிவு பண்ணலாம். இப்போ கொஞ்சம் சூழ்நிலை சரியில்லை... நானே இதைப்பத்தி பேசறேன்” கோபால் சொல்ல, ரத்னாவுக்கு கொஞ்சம் சப்பென ஆகிவிட்டது.

அன்று வீட்டுக்கு வந்த பொழுது உடனடியாக திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் எனப் பேசியவர் அவர்தான். பைரவன்தான் ஒரு வருடம் ஆகட்டும் எனச் சொல்லி தள்ளிப் போட்டிருந்தார். அதற்கு கோபாலுக்கு சிறிதும் விருப்பமில்லை என்ற பொழுதும், பைரவன் சொல்லிவிட்டார் என்பதற்காக அமைதியாக வந்துவிட்டார்.

இன்று தான் வந்து பேசினால், தன் அண்ணன் உடனடியாக அந்த திருமணத்தை நடத்திவிடுவார் என எதிர்பார்த்தாள். ஆனால் கோபாலின் இந்த பதிலை அங்கே இருந்த யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவர்களது முகங்களே எடுத்துக் காட்டியது.

“சரிண்ணே... நீ சொல்லிட்ட, அதுக்கு மேலே நான் என்ன சொல்ல?” என்றவாறு ரத்னா எழுந்து கொண்டாள்.

“சாப்ட்டு போ ரத்னா” என்றவர், “ஏய்... தங்கச்சிக்கு டிபன் கொடு” என்றார் அதிகாரமாக.

“இல்லண்ணே... எனக்கு எதுவும் வேண்டாம்” என்றவாறு ரத்னா கிளம்பியே விட்டாள். பைரவனும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட, அடுத்த அரைமணி நேரத்தில் ருக்மணியிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.

“அண்ணே வேலையா இருக்கீங்களா? பேச முடியுமா?” என்றார்.

“என் ஆபீஸ்லதான் இருக்கேன் தங்கச்சி... சொல்லும்மா...?” என்றவருக்கு ருக்மணி எதற்காக அழைத்திருப்பார் எனத் தெரிந்தே இருந்தது.

“என்னண்ணா நடக்குது? வைஷாலியை முத்துவுக்கு கொடுக்க உங்களுக்கு சம்மதமா? அவ என்வீட்டு மருமகளா வந்தால் அவளை நான் கண்ணுக்குள்ளே வச்சு பார்த்துப்பேன். ஆனா... முத்துப்பாண்டிக்கு எப்படிண்ணா நீங்க கொடுக்க ஒத்துகிட்டீங்க?

“அவன் என் மகன் என்பதற்காக அவன் செய்யற எல்லாத்துக்கும் நான் துணை போக முடியாதுண்ணா. இது நியாயமே கிடையாது. வைஷாலி நான் பார்க்க வளர்ந்த பொண்ணு, அவளுக்கு முத்துப்பாண்டி மாதிரி ஒருத்தன் புருஷனா வர்றதுன்னா... இதை நான் சொல்லக் கூடாதுதான்... ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியலை. இது நடக்க வேண்டாம்ண்ணா.

“எந்த ஜென்மத்தில் நான் என்ன பாவம் செய்தேன்னு தெரியலை. நான் கட்டினதும் சரியில்லை, பெத்ததுங்களும் சரியில்லை. மத்த ரெண்டு பசங்களோட கல்யாணம் கூட என் கையை மீறித்தான் நடந்தது. அதையே என்னால் தாங்கிக்க முடியலை.

“இது... எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுகிட்டே இதைச் செய்யறது பாவம்ண்ணா. என்னால் அந்த பாவத்தை சுமக்க முடியாது” சொல்லிக் கொண்டே வந்த ருக்மணி இறுதில் கலங்கிவிட்டார்.

“எங்கே என் பொண்ணு உன் வீட்டுக்கு மருமகளா வந்தால் நல்லா இருக்கும்னு யோசிச்சு நீயும் இதுக்கு துணை போவியோன்னு நான் பயந்துட்டே இருந்தேன் தங்கச்சி. இதோ... இப்போ சொல்லிட்டியே... இந்த வார்த்தை எனக்குப் போதும். இது எல்லாம் அந்த ரத்னா பண்றது.

“அதோட... முத்துப்பாண்டி வேற வைஷாலியை விரும்பறேன்னு சொல்லி இவளை மூளைச் சலவை பண்ணி வச்சிருக்கான். இப்போதைக்கு ஒரு வருஷம் வரைக்கும் நமக்கு நேரம் இருக்கு... என் பொண்ணை நான் அப்படியெல்லாம் விட்டுட மாட்டேன்ம்மா” அவர் சொல்ல, ருக்மணிக்கு அப்பொழுதுதான் உயிரே வந்தது.

“சித்தப்பா என்ன சொல்றாங்க அத்த?” ஜெயந்தி அத்தனை கவலையாகக் கேட்டாள்.

“எல்லாம் இதுங்க பண்றதுதான்... கண்டிப்பா இதையெல்லாம் நடக்க விடப் போறதில்லை. நடக்கும் நேரம் வர்றப்போ பார்த்துக்கலாம், நீ போய் ரெஸ்ட் எடு போ... நான் இவளைப் பார்த்துக்கறேன்” மிதுனாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ஜெயந்தியுடன் தான் அவள் இருந்தாள்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
கடந்த மூன்று நாட்களாக, இரவு பகல் பாராமல் ஜெயந்தியைத்தான் அவள் பாடாய் படுத்திக்கொண்டு இருந்தாள். இன்றைக்குத்தான் ஜுரம் கொஞ்சம் குறையவே அவள் விளையாடத் துவங்கவே சொன்னார்.

“நானும் அம்மா கூட தூங்கப் போறேன்” என்ற மிதுனாவோ ஜெயந்தியின் கழுத்தை கரங்களாலும், இடுப்பை கால்களாலும் கட்டிக்கொண்டு விட மறுத்தாள்.

“ஏய்... சொல்ற பேச்சு கேட்கவே மாட்டியாடி? எல்லாம் அப்படியே அப்பனாட்டமே பொறந்துத் தொலைச்சிருக்குதுக. அடி வெளுக்கப்போறேன் பாரு... வாடி...” என்ற கோதையின் குரலில் அத்தனை கோபமும், ஆற்றாமையும் ஒருங்கே இருந்தது.

“கோதை...” என ஜெயந்தியும், “நீ இவளை அழைச்சுட்டு போ... நான் பேசிக்கறேன்” என ருக்மணியும் சொல்ல, ஜெயந்தி தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

அவள் செல்லவே, “என்ன கோதை இது?” மருமகளை மென்மையாக கடிந்து கொண்டார்.

“என்னை என்ன அத்த பண்ணச் சொல்றீங்க? குமரனைப் பார்க்கறீங்க தானே? என்னால் முடியலை அத்த... அவன் அப்படி இருக்கான்னா, இவ...” என்றவள் குலுங்கி அழத் துவங்கி விட்டாள். ருக்மணிக்கு அவளது கண்ணீரைக் காண முடியவில்லை.

இந்த வீட்டில் இருக்கும் எந்தப் பெண்களும் நிம்மதியாக இல்லை என அவருக்குத் தெரியும். ஆனாலும் எதுவும் செய்ய இயலாத ஒரு கையறு நிலை... அடுத்த தலைமுறையையாவது நல்லபடியாக வளர வேண்டும் என இவர்கள் நினைத்தார்கள்.

ஆனால் கோதையின் மகன் குமரன், அப்படியே தாத்தாவின் வார்ப்பாக இருந்தான். அதே திமிர், அதே அடாவடிப் பேச்சு, அதே அடக்குமுறை, அதே அடங்காத தன்மை. அவனை வளர்த்தது கோபால் ஆயிற்றே, அப்படி இருக்கையில் அவன் வேறு எப்படி இருப்பான்?

வயது பன்னிரண்டுதான்... கோதையின் பதினெட்டாவது வயதில் அவன் அவளது மடியில் தவழ்ந்தான். ஒன்றுமே அறியாத வயது... அவளே குழந்தை, அப்படி இருக்கையில் அவள் எப்படி இன்னொரு குழந்தையை வளர்ப்பாள்?

அவளுக்கு ருக்மணி முழு ஆதரவாக துணையாக இருந்தார் தான். ஆனாலும் குமரனின் உடம்பில் ஓடும் ரத்தம் கோபாலின் மகனுடையது ஆயிற்றே. இந்த வயதுக்கே தாயை மதிப்பது இல்லை. தங்கைமேல் பாசம் இல்லை, எல்லாம் அதிகாரம் தான்.

அவனை அடித்து வளர்க்கலாம் என்றால் கோபால் அதற்கு விட்டதே கிடையாது. “ஆம்பளைப்பிள்ளை அப்படித்தான் இருப்பான்” அவன் காதுபட சொல்லி வளர்த்தால், அவன் எப்படி உருப்படுவான்? தான் செய்வது, பேசுவது எல்லாம் சரிதான் என்ற ஆணவம், செருக்கு அவனுக்கு அப்பொழுதே இருந்தது.

கோதைக்கு மனதே விட்டுப் போனது. அதை எண்ணி அவள் அழ, “நீ உன் மகனைக் கொண்டு மகளையும் அளக்கறது சரி கிடையாது கோதை. கொஞ்சம் பிடிவாதக்காரிதான். ஆனால் எல்லாத்தையும் கூர்ந்து கவனிக்கறவ அவ.

“சொல்லிக் கொடுத்தால் புரிஞ்சுப்பா. பாசத்தால் அவளை அடக்கு, இப்படி அதட்டிகிட்டே இருந்தால் அவளும் உன்கிட்டே ஒட்டாமலே போய்டுவா” ருக்மணி சொல்ல, கோதை இன்னும் அழுதாள்.

அவளது முப்பது வயதுக்கு பன்னிரண்டு வயது பையனின் தாய் என அவள் இருக்க, வாழ்க்கை அதிக பயத்தைக் கொடுத்தது. “அத்த, குமரன் அவங்க அப்பா மாதிரி வளர வேண்டாம்...” அவரிடம் கெஞ்சினாள்.

“நாம என்ன செய்ய முடியும் கோதை? போர்டிங் ஸ்கூல் போடலாம், டீச்சர்ஸை வைத்து கண்டிச்சும் பார்த்தாச்சு. அவன் எதுக்குமே அடங்காமல் இருக்கான். எனக்கும் பயமாத்தான் இருக்கு... நம்ம கையை மீறிப் போகும் விஷயத்துக்காக நாம எவ்வளவுதான் கவலைப்படுவது?

“நீ இப்படி அழுதால் எல்லாம் சரியாப் போய்டுமா? வேலவன் என்ன சொல்றான்? அவன்கிட்டே சொல்லிப் பார்த்தியா?” மகன்கள் எல்லாம் அவர் கையை மீறிப் போய் பல வருடங்கள் ஆகி இருக்க, ருக்மணி அனைத்தையும் வேடிக்கை பார்க்கத் துவங்கி இருந்தார்.

“என்மகன் என்னைப்போல்தான் இருப்பான்... நீ உன் வேலையை மட்டும் பாருன்னு சொல்றார் அத்த. அவரோட அரசியல் வாரிசாம், இந்த நெருப்பும், வேகமும் அவனுக்கு வேணும்னு சொல்றார்” என்றவளுக்கு தன் கண் முன்பே, தன் மகன் கெட்டு சீரழிவதைக் காண்பது மிகக் கொடுமையாக இருந்தது.

“என்னால முடியலை அத்த...” என்றவள் இன்னும் அழுதாள்.

‘ஆண்டவா, இந்த கண்ணீரும் கவலையும்தான் எங்களுக்கு விதித்ததா? நாங்க எல்லாம் சந்தோஷமா, நிம்மதியாக வாழத் தகுதி இல்லாதவர்களா? இது மாறவே செய்யாதா? ஏதாவது அதிசயம் நிகழாதா?’ என உள்ளுக்குள் வெதும்பிப் போனார்.

“எல்லாம் சரியாப் போய்டும் கோதை... எந்திரி, அழாதே...” என்றவருக்குத் தெரியாது... எல்லாவற்றையும் சரி செய்யக் கூடியவன் தன் ஆட்டத்தை துவங்கி விட்டான் என. ஆனால் அப்படி சரியாகும் விதம் இதைவிடக் கடினமான கட்டத்தை கடந்தால் மட்டுமே நிகழும் என அவருக்கு யார் சொல்வது?

இங்கே தன் வாழ்வில் நடக்கக் காத்திருக்கும் மாற்றங்கள் எதுவும் தெரியாமல் தோழிக்கு அழைத்துக் கொண்டிருந்தாள் வைஷாலி. அவளது அழைப்பை ஏற்றவளோ, “உனக்கு நூறு ஆயுசு ஷாலு. நானே உனக்குக் கூப்பிடணும்னு நினைச்சேன்” அவள் சொல்ல, ஆர்வமானாள்.

“என்னன்னு சொல்லு ரூபி” என்றாள்.

“இல்ல, நீதான் கால் பண்ண, நீ முதல்ல சொல்லு”.

“நிக்சோ கம்பெனியில் இருந்து எனக்கு இண்டர்வியூவுக்கு வந்திருக்கு” அவள் சொல்ல,

“என்ன? உனக்குமா?” என்றால் ரூபி.

“உனக்குமான்னா... அப்படின்னா... ரூபி நிஜமாவா? உனக்கும் வந்திருக்கா?” உற்சாக கூச்சலிட்டாள்.

“ஆமா... நாளைக்கு வரச் சொல்லி இருக்காங்க. உனக்கு...?” என்றாள் ரூபி.

“எனக்கு அதுக்கு அடுத்த நாள் வரச் சொல்லி இருக்காங்க”.

“ஓ... ஆனா நாம ஒரே போஸ்ட்க்கு தானே அப்ளை பண்ணி இருந்தோம்?” ரூபி சந்தேகமும், குழப்பமும் கலந்த குரலில் கேட்டாள்.

“அட... ஆமா... என்னன்னு தெரியலையே...?” வைஷாலியும் குழம்பினாள்.

“எது எப்படியோ... யாருக்கு வேலை கிடைத்தாலும் சந்தோசம் தான் ஷாலு. ஆனா என்ன... நாம ரெண்டு பேரும் பிரிய வேண்டி இருக்குமேன்னு நினைச்சால்தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு” என்றாள்.

அதைக் கேட்ட வைஷாலிக்கு ஒரு மாதிரியாகிப் போயிற்று. “நாம அப்படி பிரிய வேண்டாம் ரூபி... எனக்கு இருக்கறது இன்னும் ஒரு வருஷம் தான்... அதுக்குள்ளே இப்படி...?” வைஷாலி சட்டென யாரிடமும் பழகிவிட மாட்டாள்.

பழகத் தெரியாமல் இல்லை... தன்னால் அவர்களுக்கு எந்தவிதமான தொல்லையும் வந்துவிடக் கூடாதே என ஒதுங்கியே இருப்பாள். ஆனால் ரூபியோடான அவளது நட்பு சின்னதாகத் துவங்கி, பெரிதாக வளர்ந்துவிட்டது. ரூபி பெரிதாக எதையும் தோண்டி, துருவி கேட்க மாட்டாள் என்பதாலேயே அவளோடு தாராளமாகப் பழகினாள்.

அப்படி இருக்கையில்... இந்தப் பிரிவு அவளை வேதனைப்படுத்தியது. “என்ன ஷாலு இது? மிஞ்சிப்போனால் கால்மணி நேரத்தில் பார்க்கற தூரத்தில் இருக்கறோம். வீக் என்ட் ஆனால் பார்த்துக்கலாம், பேசிக்கலாம்... இப்படி அப்சட் ஆகாதே” தனக்கும் வருத்தம்தான் என்றாலும் அவளை ஆறுதல் படுத்தினாள்.

“சரி... ரூபி வீட்டுக்கு வர்றியா? இன்டர்வியூவுக்கு கொஞ்சம் ப்ரிப்பேர் பண்ணிக்கலாம்?” அவள் அழைக்க, ரூபியும் அவள் வீட்டுக்கு வந்தாள். அன்று முழுவதும் தோழியர் இருவரும் அந்த கம்பெனியைப் பற்றி ஆய்ந்து, எந்த பொசிஷன் எனத் தெரிந்து அதற்கு ஏற்றவாறு தயார் ஆனார்கள்.

அது ஒரு அமெரிக்கன் பேஸ் கம்பெனி, அவர்கள் பல விதமான தொழில்களில் எல்லாம் ஈடுபடுவது தெரிந்தது. மூன்றாவது தலைமுறை ஆட்கள் அதை நடத்திக் கொண்டிருக்க, அனைத்தையும் ஆய்ந்து தயார் செய்து கொண்டார்கள்.

‘குவாலிட்டி இஞ்சினியர்’ போஸ்டிங் என்பதால், ஏற்கனவே அந்த வேலையைப் பார்த்துக் கொண்டும் இருந்ததால் இரு பெண்களுக்கும் பெரும் நம்பிக்கை இருந்தது.

இருவரும் நேர்முகத்தேர்வை குறித்த நாட்களில் சந்தித்து, இருவருமே நல்லபடியாக, திருப்திகரமாக செய்திருப்பதாகச் சொன்னார்கள்.

‘யாருக்கு அந்த வேலை கிடைக்கும்?’ என இருவரும் குழம்பித் தவிக்க, அடுத்த ஒரு வாரத்தில் இருவரும் தேர்வு செய்யப் பட்டிருப்பதாக மெயில் வந்தது. வேலையில் சேர்வதற்கு முன்பாக, இருவரும் வந்து கான்ட்ராக்டில் சைன் செய்யச் சொல்லி அழைத்து இருந்தார்கள்.

அவர்கள் இருவருக்கும் ஒன்றாகவே அந்த அழைப்பும் வந்திருக்க, இருவரையும் கரத்தில் பிடிக்க முடியவில்லை. அந்த நாளைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

இரண்டு வருட கான்ட்ராக்ட், அதை முறிக்க முயன்றால் பல லட்சங்கள் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி இருக்கும் என ஒரு தொகை குறிப்பிடப்பட்டு இருந்தது. அதைப் பார்த்து இரு பெண்களுக்கும் கொஞ்சம் அதிர்ச்சி தான்.

வைஷாலிக்கு ‘இரண்டு வருடங்கள் முடியுமா?’ என்ற சந்தேகம் இருந்தாலும், பணம் கட்ட வேண்டி வந்தால், அப்பொழுது அப்பாவிடம் பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்தாள்.

ரூபிக்கு இப்பொழுது உடனே திருமணம் செய்துகொள்ளும் ஐடியா இல்லை என்பதால் அவள் முழு மனதோடு சம்மதம் சொன்னாள். இரு பெண்களும் சந்தோஷமாக கையொப்பம் இட்டுவிட்டு வெளியே வர, தங்கள் வாழ்க்கையே அந்த கையெழுத்தில் இருப்பது அப்பொழுது அவர்களுக்குத் தெரியவே இல்லை.

பகை முடிப்பான்.........
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
122
34
28
Deutschland
ஹீரோ சார் இவங்க இருவரையும் ஏன் வேலைக்கு எடுத்துகிட்டாராம் ..?
இவங்க போய் அவனிடம் மாட்டிக்கிட்டாங்களா..?