பகுதி – 14.
அடுத்து வந்த நான்கு மாதங்கள் மின்னல் வேகத்தில் கடந்து இருந்தது. வைஷாலியும், ரூபியும் வேலையில் சேர்ந்து முழுதாக மூன்று மாதங்கள் முடிந்து இருந்தது. குவாலிட்டி இஞ்சினியரிங் போஸ்ட்... அந்த பெயின்ட் கம்பெனியோடு மட்டுமல்லாது, அருகே இருந்த வேறு சில நிறுவனங்களும் அவர்கள் பொறுப்பில் விடப் பட்டு இருந்தது.
பெண்கள் இருவருமே உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால், மிகவும் சந்தோஷமாகவே அந்த வேலைகளைச் செய்தார்கள். இருவரும் ஒரே இடத்தில் இருந்தும் வேலைகளைச் செய்வார்கள், இல்லையா இருக்கும் வேலைகளைப் பிரித்துக் கொண்டும் செயல்படுவார்கள்.
இந்த நான்கு மாதங்களில் நடந்த இடைத் தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி பெற்று கோபாலின் புகழை சற்று மங்கச் செய்து இருந்தது. எப்பொழுதுமே குறிப்பிட்ட தொகுதிகளில் அவரது ஆட்சி தான் இருக்கும்.
அவரை மீறி யாராலும் எதுவும் எப்பொழுதுமே செய்ய முடிந்தது இல்லை. இந்த முறை அவருக்கு அடுத்தடுத்து பலமான அடி விழுந்து இருந்தது. இப்படியான சறுக்கல்கள் எல்லாம் அவருக்கு வந்ததே இல்லை.
அப்படியே ஒரு சின்ன சலசலப்பு இருந்தாலும், அது வெளியே தெரியும் முன்பாக அடக்கி விடுவார். அப்படி இருக்கையில், இப்பொழுது தனது தீம் பார்க்கை எப்படியாவது திறந்துவிட வேண்டும் என முயன்றார். ஆனால தேர்தல் நேரம் என்பதால் அதில் முழுதாக கவனம் செலுத்த முடியவில்லை.
ஒன்று போய் அடுத்த பிரச்சனை வந்தால் சமாளித்து இருப்பார். ஆனால்... அவர் ஒரு பிரச்னையை முடிக்கும் முன்பே அடுத்து, அதற்கு அடுத்து... அதற்கும் அடுத்தது என தொடர்ந்து அடி விழ கோபால் விழி பிதுங்கிப் போனார்.
தெளிய வைத்து, தெளியவைத்து அடித்தால் பரவாயில்லை. தெளிய விடாமலே அடித்தால் அவரும் என்னதான் செய்வார்?
சாதாரண நேரமாக இருந்திருந்தால் இரண்டே வாரங்களில் தீம் பார்க்கை திறந்திருப்பார். பணம் கொடுத்து, பத்திரிக்கைகளின் கண்ணைக் கட்டி, அவ்வளவு ஏன் எதிர்கட்சிக்கே கூட தண்டம் அழுது இருப்பார்.
ஆனால் இடைத்தேர்தல் வந்துவிட்டதால், பத்திரிகை மட்டுமல்லாது, பொதுமக்கள், எதிர்கட்சிகளின் பிரச்சாரத்துக்கு இவை எல்லாம் வலு சேர்த்துவிட்டது. அதைவிட, அந்த ‘மால்’ விஷயத்தால் தொழிற்சங்கங்கள் அனைத்தும் பணம் தராமல் கை விரித்து விட்டார்கள்.
அவர்களது ஆதரவும் இல்லாமல் போக, அவரிடம் இருந்த பணத்தை இறக்கி ஆக வேண்டிய கட்டாயம். முதலமைச்சரும் நிதி வழங்க மறுக்க, தன் கௌரவத்தை நிலைநாட்ட வேண்டி அவரே பணத்தையும் இறக்க வேண்டிய சூழல் உருவானது.
அப்படி சென்ற பணங்களும், தேர்தல் அதிகார சிறப்பு படைப்பிரிவில் சிக்கிக் கொண்டது. அதில் கோடிக்கணக்கான பணம் நஷ்டம் என்பதை விட, பத்திரிக்கைகளில் எல்லாம் முதல் பக்கத்தில் அவரது பெயர் நாறிப் போனது.
அடிமேல் அடி என்பதுபோல், பிரச்சாரத்துக்குச் சென்ற தொகுதிக்கு உள்ளேயே செல்ல முடியவில்லை. அங்கே இருந்த மக்கள் அனைவரும் அந்த வேட்பாளரை துரத்தி அடித்தார்கள். முதலமைச்சரே அழைத்து, விட்டுவிடுமாறு சொல்லிவிட்டார்.
அந்த அளவுக்கு முதலமைச்சர் வரைக்கும் பிரஷர் போக, கோபாலுக்கு அத்தனை தலையிறக்கமாகப் போயிற்று. அப்படியும் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என முயன்றார். ஆனால் டெப்பாசிட் கூட கிடைக்காமல் அவரது கட்சி ஆள் தோற்றுப் போனான்.
கோபால், அவரது மூன்று மகன்கள் என அனைவரும் கொதித்துப் போனார்கள். அந்த மால் கட்டி எழுப்பப்படாமல் இருக்க, எத்தனை குடைச்சல் கொடுக்க முடியுமோ அத்தனையும் முயன்று பார்த்தார்கள். ஆனால் அது ஒரு தனித் தீவாகவே செயல்பட்டுக் கொண்டு இருந்தது.
எந்த அரசு அதிகாரிகளும் சரி, அரசியல்வாதிகளும் சரி, யாருமே அந்த மால் விஷயத்தில் ஒரு சின்ன துரும்பைக் கூட நகர்த்த மறுத்தார்கள். எனவே இவர்களே இறங்கி வேலை செய்தார்கள். கட்டுமான பொருட்களை அங்கே செல்ல விடாமல் தடை செய்வது, பொருட்கள் கிடைக்க விடாமல் செய்வது என எத்தனையோ செய்தார்கள்.
ஆனால் அதில் எல்லாம் இவர்களுக்கே ஆட்கள் இழப்பு ஏற்பட்டது. கட்டுமான பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைத் தடுக்க முயன்றால், அவர்கள் எல்லாம் கொஞ்சம் கூட அசராமல் அவர்கள் மீதே வாகனங்களை ஏற்றிச் செல்ல முயன்றார்கள்.
அதை விட மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் அப்படி வரும் லாரிகளில் ஆயுதம் ஏந்திய படை இருப்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியமே. அவர்கள் வெறுமே ஆயுதங்களைக் காட்டி மிரட்டுவது எல்லாம் இல்லை. தயவே இல்லாமல், கை, கால், தோள்பட்டை என தடுப்பவர்கள் மீது குண்டுகளை இறக்கியும் இருந்தார்கள்.
‘இதென்ன ஆந்திராவா? இப்படியெல்லாம் இங்கே நடக்குது?’ என கோபாலின் மகன் MLA வேலவன் முதலமைச்சரிடம் சென்று முறையிட்டான்.
ஆனால் அவனுக்கு கிடைத்த பதில் ஒன்றுதான்... “அந்த மால் விஷயத்தில் இருந்து ஒதுங்கி இரு” என முதலமைச்சரே சொல்லி அனுப்பினார். அது வேறு எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றியது போன்ற எதிர்வினையை மட்டுமே கொடுத்தது.
கன்னியாகுமரி மாவட்டமே பற்றி எரியாத குறைதான். அனைத்து கண்களும் அவர்கள் மீதே இருக்க, எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் கொதித்துக் கொண்டு இருந்தார்கள். அரசியலில் மீண்டும் தங்கள் பலத்தைக் காட்டியாக வேண்டிய நிலை.
ஆனால் இன்னும் எலக்ஷனுக்கு இரண்டு வருடங்கள் இருக்க, அது வரைக்கும் அடங்கி இருப்பதை தவிர வேறு வழி இல்லை. அரசியல் என்பது அவர்களுக்கு வேட்டி போன்றது. தங்கள் மானம், கௌரவம் என அனைத்தும் அதில் இருப்பதாக அவர்கள் நினைத்திருக்க, இந்த தோல்வி அவர்களை அசைத்துப் பார்த்திருந்தது.
அவர்கள் தங்கள் போராட்டத்தில் இருக்க, பெர்சனல் வாழ்க்கையைப் பற்றிய நினைப்பே அவர்களுக்கு இருக்கவில்லை.
“அந்த ஷாப்பிங் ‘மால்’லைக் கட்டுவது எவன்டா? அது எனக்குத் தெரிஞ்சாகணும். எப்படியாவது அதை நாம கையகப்படுத்தியே ஆகணும்” வேலவன் தன் தம்பியிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
“அதைக் கேட்டால் யாருமே சொல்ல மாட்டேங்கறாங்க. நானும் யார் யாருக்கோ பணம் கொடுத்துப் பார்த்துட்டேன். வடக்கே இருந்து வந்த யாரோதான் கட்றதா பேசிக்கறாங்க. ஆனால் யாருக்கும் தெளிவான விவரம் தெரியலை” முத்துப்பாண்டி சொல்லிக் கொண்டிருந்தான்.
“மூணு வருஷ ப்ராஜெக்ட்... வேலை இருபத்திநான்கு மணி நேரமும் நிற்காமல் நடக்குது. மூணு ஷிப்ட் போட்டிருக்காங்க... வேலை நடக்கும் வேகத்தைப் பார்த்தால், ஒன்றரை வருஷத்துக்கு உள்ளேயே வேலை முடிஞ்சுடும்.
“ஏன்னா அத்தனை பேர் வேலை பார்க்கறாங்க... சைட் இஞ்சினியரே நாலு பேருக்கு மேலே இருக்காங்க. பார்க்கிங் பிரச்சனை வரக் கூடாதுன்னு, கட்டிடத்துக்கு கூடவே பார்க்கிங் ப்ளான் பண்றாங்க.
“நான் நம்ம ஆட்கள் ரெண்டு மூணுபேரை அனுப்பி பார்த்துட்டுதான் சொல்றேன். உளவு பார்க்க போறவங்களை எல்லாம் அவங்க தடுக்கறதே இல்லையாம். பிரச்சனை பண்ணப் போறவங்க யாரா இருந்தாலும், அது பக்கமே போக முடியலை.
“போலீஸ் முதற்கொண்டு, தனியார் செக்யூரிட்டி ஃபோர்ஸ் எல்லாம் யூஸ் பண்றாங்க. அவங்களுக்கு துப்பாக்கி வச்சுக்கவும் பெர்மிஷன் கொடுத்து இருக்காங்க. பிரதமர் வரைக்கும் செல்வாக்கு இல்லாமல் இது நடக்க வாய்ப்பே இல்லை” முத்துப்பாண்டி சொல்ல, அவர்களுக்கு முழி பிதுங்கியது.
இவர்கள் இங்கே இந்த ஆராய்ச்சியில் இருக்க, அதனாலோ என்னவோ வைஷாலி நிம்மதியாக இருந்தாள். அவளைப்பற்றிய பேச்சே அங்கே இருக்கவில்லை. பைரவனுக்கு அந்த ‘மால்’ யாருடையதாக இருக்கும் என்ற சந்தேகம் இருந்த பொழுதும் அவர் அதை கோபாலிடம் சொல்லவில்லை.
தங்களது தீம் பார்க் சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் ‘சர்வா’ என்றவன் இருக்கிறான் எனத் தெரிய வந்த பிறகும், அவர்களால் மேற்கொண்டு அவனை நெருங்க முடியவில்லை. கடந்த நான்கு மாதங்களாக அவனைப்பற்றியும் ஏதாவது தெரிய வருமா? என முத்துப்பாண்டி தேடவே செய்தான்.
தேடலின் முடிவிலும் அவனைப்பற்றிய எந்த விவரமும் கிடைக்காமல் போக, ‘ஒரு வேளை குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாக இருக்குமோ?’ என எண்ணிக் கொண்டான். திரை மறைவில் இருந்து கொண்டு அவர்களை ஆட்டி வைப்பது அவன்தான் என அவர்களுக்குத் தெரியாமலே போனது.
வைஷாலியும் சர்வா என்ற ஒருவனை கிட்டத்தட்ட மறந்து போய்விட்டாள். அந்த நேரம்தான் அவளது மேலதிகாரி அவளை அழைத்து, அவசர வேலையாக மும்பை போகச் சொன்னார். அவள் தனியாகப் போக அவ்வளவு தயங்கினாள்.
அவர்களது அந்த மும்பை ப்ராஞ்சில் இருந்தவனுக்கு ஆக்சிடென்ட் ஆகிப் போக, அந்த இடத்துக்கு உடனடியாக யாராவது சென்றாக வேண்டிய நிலை. ரூபியை அனுப்பலாம் என முயன்றால், அவளுக்கு ஹிந்தி சுத்தமாகத் தெரியாது என அலறிவிட்டாள்.
வைஷாலிக்கு ஹிந்தி நன்றாகவே தெரியும். எழுத படிக்க கூட அவளுக்குத் தெரியும் என்பதால் அவள்தான் சென்றாக வேண்டிய கட்டாயம். அதுவும் இரண்டே நாட்களில் கிளம்ப வேண்டும் எனச் சொல்லிவிட, அவளால் மறுக்கவும் முடியவில்லை.
பைரவனிடம் சொன்னவள், விஷயத்தை பெற்றவளிடம் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டாள். ரத்னாவுக்குத் தெரிந்தால் தன்னை உடனடியாக வேலையை விட்டு கிளம்பி வரச் சொல்வார் என்பதால் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டாள்.
நிம்மதியாக சென்றுகொண்டிருக்கும் தன் வாழ்க்கையில் எந்தவிதமான குழப்பத்தையும் அவள் ஏற்படுத்திக் கொள்ள தயாராக இருக்கவில்லை.
“அங்கே தனியா சமாளிச்சிடுவியா ஷாலு?” ரூபி சற்று கவலையாகவே கேட்டாள்.
“ஒரு மாசம்தானே ரூபி... அங்கே தங்கறது, திங்கறது... ட்ரான்ஸ்போர்ட் எல்லாத்தையும் அவங்களே பார்த்துக்கறாங்க. பிறகு நமக்கு என்ன கவலை... விடு... இதுவும் ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்” என்றாள்.
தனியாகச் செல்வதில் உள்ளுக்குள் ஒரு சின்ன உதறல் இருந்தாலும், எதையும் எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கையும் அதிகம் இருந்தது. கொஞ்சம் ஆர்வமாகக் கூட இருந்தது எனலாம். அவளது வேலை அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றால், தன்னை அவர்கள் தேர்வு செய்திருக்கவே மாட்டார்களே.
அதுவும் ஒரு மிகப்பெரும் வெளிநாட்டு கம்பெனி, ஒரு பெண்ணான அவளது திறமையை இனம் காண்பது எல்லாம் மிகப்பெரிய விஷயம் ஆயிற்றே. எனவே அந்த வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என நினைத்தாள்.
சென்னையில் இருந்து மும்பைக்குச் செல்ல அவளுக்கு விமான டிக்கெட் வழங்கப் பட்டது. வைஷாலி அங்கே சென்று இறங்குகையில், அவளை அழைத்துச் செல்ல வாகனமும் தயாராகவே இருந்தது.
அன்றைக்கே அவள் அலுவலகம் செல்ல வேண்டி இருக்க, அவன் காட்டிய கெஸ்ட்ஹவுசுக்குச் சென்று கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு மதியமே அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டாள். அங்கே சென்று தான் வந்திருக்கும் காரணத்தைச் சொல்ல, சிலர் அவளை வித்தியாசமாக பார்ப்பதுபோல் தோன்றியது.
‘ஒரு வேளை நான் பேசும் ஹிந்தி அப்படி இருக்கு போல?’ என தன்னையே சமாதானம் செய்து கொண்டாள். திடுமென ஒரு பெண் வந்து தங்களை அதிகாரம் செய்வதை எந்த ஆண்கள்தான் விரும்புவார்கள்.