• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 15.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
ஹாய் நட்புக்களே,

கோவை மக்கள் யாராவது இருந்தீங்கன்னா, கண்டிப்பா நாளை(19/7/25) மாலை கொடிசியா மைதானத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு வாங்க. மாலை 6 to 8 நான் அங்கேதான் இருப்பேன். எனது புத்தம்புது கதையான "பயணங்கள் இனிதாக" புத்தகத்தை 20% கழிவு விலையில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

வாய்ப்பு இருந்தால் நிச்சயம் வாங்க.
WhatsApp Image 2025-07-16 at 7.44.41 PM.jpeg
WhatsApp Image 2025-07-10 at 11.08.23 AM.jpeg
WhatsApp Image 2025-07-17 at 12.24.09 PM.jpeg
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
பகுதி – 15.

வைஷாலி சென்னைக்கு வந்து சில மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் அவளால் சர்வஜித்தைப் பற்றி யோசிப்பதை கொஞ்சம் கூட நிறுத்த முடியவில்லை. அதுவும் அன்று மாலையில் அவள் மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு எக்கனாமிக் கிளாஸ் டிக்கட் தான் கொடுத்து இருந்தார்கள். அவளுக்கு ஒரு சிறிய பேக், கைப்பை மட்டும்தான் என்பதால் இரண்டையும் தன்னுடனே வைத்துக் கொண்டிருந்தாள். தன் இருக்கையைத் தேடி அமர்ந்தவளுக்கு சர்வஜித்தின் நினைவுதான்.

அவன் எஸ்கலேட்டரில் செய்த அந்த செய்கை... அவன் இடத்தில் வேறு எந்த ஒரு ஆண்மகனாக இருந்திருந்தாலும் ஒன்று, கண்டும் காணாமல் இருந்து இருப்பார்கள், இல்லையா உள்ளுக்குள் ரசித்து சிரித்து இருப்பார்கள், இல்லையா வக்கிரமமாக பார்த்து இருப்பார்கள். ஆனால் அவன் சட்டென அவள் செய்யப் போவதை உணர்ந்து அதைத் தவிர்த்த விதம்... அவளை சற்று உலுக்கியே இருந்தது.

அவளுக்கு அவளது அப்பாவைப்பற்றி நன்கு தெரியும். அவளது அப்பாவைத் தவிர அவளுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த மற்ற ஆண்மகன்கள் எல்லாம் வக்கிரம் பிடித்தவர்கள் தான். அதுவும் அவளது மாமன் மகன்களின் மன வக்கிரங்களை நேரிலேயே கண்டவள் அவள்.

முத்துப்பாண்டி அவளிடமே கூட அந்த வக்கிரங்களை காட்டி இருக்கிறான். அப்படி இருக்கையில், மனதளவில் கூட சர்வஜித் களங்கப்படாமல் விலகி நிற்பது அவளுக்கு அவன்மேல் ஒருவித ஈர்ப்பை, தனிப்பட்ட உணர்வைக் கொடுத்தது.

அந்த நொடி, அவனது கோபம் எல்லாம் அவள் கணக்கில் வரவே இல்லை. அதையெல்லாம் நினைத்தவாறே அவள் விமானத்தில் அமர்ந்திருக்க, அவளுக்கு அருகே கைக்குழந்தையோடு ஒரு பெண்மணி வந்து அமர்ந்தாள்.

அந்த குழந்தையோ விடாமல் அழுதுகொண்டே இருந்தது. அதன் தாய் குழந்தையை எவ்வளவோ விதங்களில் சமாதானம் செய்ய முயன்றாள். அவளால் அந்த குழந்தையை பெரிதாக சமாதானம் செய்ய முடியவில்லை.

விமானம் டேக்ஆஃப் ஆனா சிறிது நேரத்தில் அவளுக்கு அருகே ஒரு விமானப் பணிப்பெண் வந்தாள். “நீங்க இருக்கையை மாற்றிக் கொள்ள விருப்பமா இருக்கீங்களா?” நுனிநாக்கு ஆங்கிலத்தில் அவளிடம் கேட்க, கேள்வியாக அவளைப் பார்த்தாள்.

“இவங்க கணவர் அங்கே பிசினஸ் கிளாசில் பயணம் செய்கிறார். அவருக்கு அவரோட மனைவியோடு அமர்ந்து குழந்தையையும் பார்த்துக்கொள்ள விருப்பம். சோ...” அவள் தன்மையாக கேட்க, அருகில் இருந்த பெண்ணோ அவளிடம் “ப்ளீஸ்...” என கெஞ்சவே துவங்கி இருந்தாள்.

“அவங்களுக்கு இங்கே பயணம் செய்வது பிரச்சனை இல்லையென்றால் எனக்கு ஓகே தான். ஆனாலும்... இங்கே இருந்து அங்கே...?” கொஞ்சம் தயங்கினாள். இவள் இருப்பது எக்கனாமிக் கிளாஸ், அவன் இருப்பது பிசினஸ் கிளாஸ் என்பதால் யோசனையாகவே சொன்னாள்.

“என்னால் இவனை தனியா சமாளிக்க முடியலை, நீங்களே பார்க்கறீங்க தானே. இவன் அவங்க அப்பாகையில் கொஞ்சம் அமைதியாக இருப்பான். எங்களுக்காக...” குழந்தையின் தாய் சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே அவளது கணவன் வந்துவிட்டான்.

“மிஸ் ப்ளீஸ்...” அவனும் அவர்கள் சொன்னதையே சொல்லத் துவங்க, இருக்கையில் இருந்து எழுந்துவிட்டாள். அவள் தன் லக்கேஜை எடுக்க முயல,

“என்னோட லக்கேஜ் அங்கே இருக்கு... சோ...” அவளால் அவளது லக்கேஜை அங்கே வைத்துக்கொள்ள முடியாது எனச் சொல்ல, அங்கிருந்து விமானப் பணிப் பெண்ணோடு அங்கே சென்றாள். அங்கே சென்றவளுக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருந்தது.

அவளது வலப்பக்கம் இருந்த தனி இருக்கையில் சர்வஜித் அமர்ந்து இருந்தான். அவனுக்குப் பின்னிருக்கையில் ஹரீஷ் இருக்க, இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள். அவர்கள் இருவருக்கும் வைஷாலி அங்கே நிற்பது தெரிந்தாலும் கண்டுகொள்ளவே இல்லை.

“இதுதான் உங்க இருக்கை மேம்...” என்ற பணிப்பெண் அவளது இருக்கையை சுட்டிக் காட்ட, அதில் அமர்ந்து கொண்டாள். சர்வஜித் தன் மடிக்கணினியில் எதையோ உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்க, ஹரீஷ் அவனது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்துவிட்டு, கண்டுகொள்ளாமல் தன்னிருக்கையில் அமர்ந்துகொள்ள அவளால் முடியவில்லை. “குட் ஈவினிங் சார்...” அவள் சர்வஜித்திடம் தயக்கமாகச் சொல்ல, அவளைப் பார்த்தவன் மெல்லிய தலையசைப்பைக் கொடுத்தான் அவ்வளவே.

வைஷாலிக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. ‘அவர்கிட்டே இருந்து வேற என்னதான் எதிர்பார்க்கற?’ எனக் கேட்ட மனதுக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

விமானம் அப்பொழுதுதான் உயரத் துவங்கிய நேரம் என்பதால், அனைவரும் அவரவர் இருக்கையில் ஓய்ந்து இருந்தார்கள். சில நிமிடங்களில் இங்கும் அங்குமாக மக்கள் நடமாடத் துவங்கினார்கள். அந்த பரபரப்பும் அடங்க, வைஷாலி சர்வஜித்தைத்தான் அவ்வப்பொழுது பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனைப் பார்க்கப் பார்க்க மனம் அவன்பக்கம் சாயத் துவங்கி இருந்தது. என்னவோ விசைக்கு கட்டுப்பட்டதுபோல் அவள் நினைப்புகள் மொத்தமும் அவன்பால் ஈர்க்கப்பட, அதை அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

‘ஹையோ ஆண்டவா என்ன இது? என் புத்தி ஏன் இப்படிப் போகுது?’ மனதுக்குள் புலம்பினாலும் அவளால் தன் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த நேரம் அவனது பண பலம், அவனது உயரம் என எதுவும் அவள் நினைப்பில் கூட வரவில்லை.

அவனோ, அக்கம் பக்கம் பாராமல், யாரைப்பற்றிய நினைப்பும் இல்லாமல் அவன் தன் உலகில் மூழ்கி இருப்பது புரிந்தது. அந்த நேரம்தான் அது நடந்தது. அவனது இரண்டு இருக்கைக்கு முன்னர் ஒரு மிகப் பிரபலமான ஹிந்தி நடிகை அமர்ந்து இருந்தாள்.

சர்வஜித்தைப் பார்த்தவள், இருக்கையில் இருந்து எழுந்து ஒரு நளின நடையோடு அவனை நெருங்கினாள். அவன் இப்பொழுது உலக அளவில் அறியப்படும் ஒரு மல்ட்டி மில்லியனர், ஒரு பிசினஸ் மேன். அப்படி இருக்கையில் பிரபலங்கள், செலிபிரட்டிகள் அவனை வட்டமிடவில்லை என்றால்தான் ஆச்சரியம்.

“ஹாய் சர்வஜித்... ஹௌ ஆர் யூ...?” என்றவாறு விட்டால் அவன் மடியில் கூட அமர்வேன் என்பதுபோல் கொஞ்சிப் பேசினாள். தன் அங்க வனப்புகளைக் காட்டி அவனை மயக்கவும் முயன்றாளோ? அதைப் பார்த்த வைஷாலிக்கு பிபி எகிறியது.

என்னவோ தன் கைப்பொருளைக் களவாட வந்ததைப்போல மனம் கிடந்தது அடித்துக் கொண்டது. சர்வா தன் இருக்கையை நன்றாக நீட்டிப் போட்டு, கால் நீட்டி அமர்ந்து இருக்க, அவன் காலுக்கு அருகே அமர்ந்தும் விட்டாள்.

அவள் அமர்ந்த பிறகுதான், வைஷாலியால் சர்வஜித்தின் முகம் காண முடிந்தது. ஹரீஷ் அவள் வந்த உடனேயே இருக்கையில் இருந்து எழுந்துவிட, சர்வஜித் தன் இடக்கையை உயர்த்தவே அப்படியே நின்றுவிட்டான்.

“சென்னை ட்ரிப்பா?” அவள் குழைந்து பேச, சர்வஜித் இருக்கையில் நன்றாக தலையை சாய்த்துக் கொண்டு அவளையே பார்த்திருந்தான். அவன் என்ன நினைக்கிறான் என அவனது கண்களைப் பார்த்து அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் அவனது அந்த உடல்மொழி, ஒரு மாதிரி விறைப்பாக இருக்க, அவளை, அவளது பேச்சுக்களை அவன் ரசிக்கவில்லை என வைஷாலிக்குச் சொன்னது. அது என்னவோ மனதுக்கு ஒரு மாதிரி ஆறுதலைக் கொடுக்க, அதிர்ந்து போனாள்.

‘எனக்கு ஏன் இப்படியெல்லாம் ஆகுது?’ வைஷாலியால் தன் நினைப்பு போகும் விதத்தை எல்லாம் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

“நான் கரீஷ்மா... உங்களுக்கு தெரியும்தானே? சென்னையில் தாஜ்லதான் தங்கறேன். டைம் கிடைக்கும்போது வாங்களேன்... ஒரு டேட் போகலாம்...” அவள் வெளிப்படையாகவே அழைப்பு விடுக்க, வைஷாலிக்கு இதயம் தாறுமாறாக துடித்தது.

‘அவன் என்ன சொல்வானோ?’ என நினைத்தவாறே அவன் முகம் பார்க்க, அவனிடம் அதே உடல்மொழியும், ஒருவித அழுத்தமும் நிலவியது. அந்த கரீஷ்மா அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், இன்னுமே பேசிக்கொண்டே இருக்க, அவள் சொன்னதற்கும் சரி, கேட்டதற்கும் சரி அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அவள் அவனது கால் பக்கம் இருந்து மேலே நகர்ந்து அமர்ந்தவள், அவன் தேகத்தை தொட முயல, அவன் விரலை அசைத்த விதத்தில் ஹரீஷ் செயல்பட்டு இருந்தான். “மேம் ப்ளீஸ்...” என வார்த்தைகளில் பணிவைக் காட்டியவன், குரலிலோ, செய்கையிலோ அதைக் கொஞ்சமும் காட்டவில்லை.

விட்டால் அவளை கைபிடித்து இழுத்து வெளியே தள்ளுவேன் என ஹரீஷ் நிற்க, வந்தவளின் முகம் அப்படியே அவமானத்தில் சுண்டிப் போனது. அதற்கு மேலே அங்கே நில்லாமல் சென்றுவிட்டாள். வைஷாலிக்கு அதற்குப் பிறகுதான் நிம்மதியாக இருந்தது.

வைஷாலிக்கு சர்வஜித்தின் அந்த கட்டுப்பாட்டைக் கண்டு கண்கள் அகலத் திறந்து கொண்டது. ஒரு பெண்ணே வலிய சென்றும், ‘நீ யார்?’ என்ற பார்வையும், ‘என்னை விட்டு எட்டியிரு’ என்ற உடல்மொழியும்... அவனைக் கட்டிக்கொள்ளத் தோன்றியது.

அந்த பயணம் முழுவதும் வைஷாலி அவனை கவனித்துக் கொண்டே வந்தாள். அங்கே இருந்த பல மக்கள் அவனோடு பேச, புகைப்படம் எடுக்க விரும்பிய பொழுது எல்லாம் சளைக்காமல் ஒத்துழைத்தான். ஆனால் யாரிடமும் ஒரு வரத்தை கூட அவன் பேசவில்லை. அவள் பக்கம் பார்க்கக் கூட இல்லை.

விமானம் தரையிறங்கப் போகிறது என்ற அறிவிப்பு வந்த பிறகுதான், அவன் தன் இருக்கையில் இருந்து அசைந்தான். அவள் தன் எம்ப்ளாயி என்ற ஒரு பார்வை கூட இல்லை. ‘உன்னை எனக்குத் தெரியாதே’ என்ற நடத்தை. அவளுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக கூட இருந்தது.

‘தன்னைப் பார்ப்பானா?’ என அவள் எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். விமானம் தரையிறங்க, அனைவரும் பரபரப்பாக இறங்க முயல, சர்வஜித் அசையாமல் அமர்ந்து இருந்தான். கூட்டம் நன்றாக குறைந்த பிறகே அவன் எழுந்து கொள்ள, வைஷாலி தானும் அப்படியே இருப்பதைக் கண்டு தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

அதைப் பார்த்த ஹரீஷ் இதழ் பிரியாமல் சிரித்துக் கொள்ள, அவளுக்கு ஒரு மாதிரியாகப் போயிற்று. சர்வஜித் ‘நான் இரும்பாக்கும்’ என்பதுபோல் முன்னால் நடக்க, அவனது பொருட்களை சேகரித்துக் கொண்டு பின்னால் சென்றான் ஹரீஷ்.

வைஷாலியின் மனதோ சர்வாவஜித்தைப் பார்க்க வெகுவாக ஏங்கிப் போனது. ஆனால் அங்கே இருந்ததோ சர்வா. சர்வஜித்தின் அதே உடல்மொழி, பேச்சு, குரல்... ஆனால் முகம் வேறு, அவன் பெயர் வேறு.

‘சர்வா’ அவர்களது புது முதலாளி என்ற அறிமுகத்தோடு வைஷாலி சென்னைக்கு வந்து சேர்ந்த மறு நாளே அங்கே வந்து நின்றான். அவனுடன் அதே ஹரீஷ்... அவனைப் பார்த்து ரூபிக்கு தலை சுற்றிப் போனது.

‘இவன் என்னை நிம்மதியாகவே இருக்க விட மாட்டானா?’ என உள்ளுக்குள் அத்தனை புகைச்சல். அதை அதிகரிப்பது போன்று, அவளது அறைக்கு வந்த ஹரீஷ் அவளிடம் பேச முயன்றான். அங்கே அப்பொழுது வைஷாலியும் உடன் இருக்க அதை அவன் கவனிக்கவே இல்லை.

வைஷாலியும் ‘வந்திருப்பது சர்வஜித்தானே...’ என்ற பலமான யோசனையில் இருக்க, வந்தவனை கவனிக்கவே இல்லை. ஹரீஷ் தன் பார்வை வட்டத்தில் விழுந்தாலும், அவள் கருத்தில் எல்லாம் பதியவில்லை.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
“ரூபி... ஒரு நிமிஷம்...” ஒரு தயக்கமான மனநிலையில் அவள் முன்னால் நின்றிருந்தான்.

“சொல்லுங்க...” என்றவள் தன் மொத்த தைரியத்தையும் திரட்டிக்கொண்டு அவனிடம் கேட்டாள். உள்ளுக்குள் மனம் கிடந்தது அடித்துக் கொள்ள, அவளால் எவ்வளவு நேரம் இப்படியே சமாளிக்க முடியும் என்றே தெரியவில்லை.

“எனக்கு உன்கிட்டே கொஞ்சம் பேசணும்?” என்றான்.

“முன்ன பின்ன தெரியாத பொண்ணுகிட்டே இப்படித்தான் மரியாதை இல்லாமல் பேசுவீங்களா? என்ன பேசணும்? பெர்சனலா? அஃபிசியலா?” என்றவளுக்கு தொண்டை கவ்வியது.

“அது... சாரி... பெர்சனல் தான்...” அவன் துவங்க,

“உங்ககிட்டே பெர்சனலா பேசறதுக்கு எனக்கு எதுவும் இல்லை. சோ ப்ளீஸ்...” என்றவள் வாசலை நோக்கி கை நீட்டினாள்.

“இல்ல ஒரே ஒரு நிமிஷம்...” அவன் சொல்லிக் கொண்டிருக்க, ரூபி வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டாள். அங்கே இருந்து வெளியேறியவள் நேராக சென்று நின்றது ஓய்வறைதான். ஒரு மாதிரி அழுகை நெஞ்சை முட்டிக்கொண்டு வர, அவளால் முடியவே இல்லை.

‘ஏன்... ஏன் என் கண்ணில் மறுபடியும் பட்டுத் தொலைத்தார்? இவரைப் பார்க்கவே கூடாது என்றுதானே, ஏரியாவை மாற்றி, வீட்டை மாற்றிக்கொண்டு என் மனதையும் மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இப்போ இப்படி என் கண் முன்னாடி வந்து நின்று என்னை கொல்லாமல் கொல்றாறே...’ எண்ணியவள் அழுது கரைந்தாள்.

இங்கே இவள் இப்படியென்றால், வைஷாலிக்கு ‘சஸ்பென்ஸ் தாங்கலை’ என்னும் நிலைதான். அவர்களது அலுவலகத்தில் சர்வஜித்தை நேரடியாக சந்தித்துப் பேசும் அவசியமோ, வாய்ப்போ அவளுக்கு இல்லை என்ற பொழுதும் தன் சந்தேகத்தை தீர்த்துக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானாள்.

நிஜத்தில் அவன்மேல் சாயத் துவங்கிய மனது, அவனை அருகே பார்க்க ஆசை கொண்டது. இங்கே இருப்பவன் ‘சர்வா’ என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் அவளால் அவனை இருவராக கற்பனை செய்யக் கூட முடியவில்லை.

அந்த இரு முகம் அவளை கலவரப்படுத்தக் கூட இல்லை. ‘அவன் தவறானவனாக இருப்பானோ?’ என்ற சந்தேகத்தைக் கூட கொடுக்கவில்லை. மாறாக ‘அவன் நல்லவன்’ என ஆழ்மனம் நம்பத் துவங்கி இருந்தது.

சர்வாவைப் பார்க்க வேண்டும் என்றால், ஹரீஷிடம் அப்பாயின்மென்ட் வாங்கியாக வேண்டும். அன்று அவனிடம் அவள் சென்று நிற்க, “சொல்லுங்க...” என்றான்.

“எனக்கு சாரைப் பார்க்கணும், அப்பாயின்மென்ட் வேணும்” அவள் சொல்ல, அவளை சில பல நிமிடங்கள் பார்த்தான். பாம்பின்கால் பாம்பறியும் என்பதுபோல், அவள் கண்களில் அவன்மீதான ஆர்வம் தெரிய, அவனுக்கு என்ன நினைக்க என்றே தெரியவில்லை.

அங்கே இருப்பவனின் நிழல் உலகமும், நிஜ உலகமும் தெரிந்த ஒரே ஆள் ஹரீஷ் மட்டும்தான். பெண்கள் விஷயத்தில் சர்வஜித் நெருப்பு கூட இல்லை... ஒருவித காட்டுத் தீ என்றும் தெரியும். எந்த பெண்ணையும் தன்னை நெருங்க கூட அவன் அனுமதிக்க மாட்டான்.

ஆனால் வைஷாலி பஞ்சாக அல்லவா இருக்கிறாள். இந்த பெரும் நெருப்பு அவளைப் பற்றி எரித்துவிட்டால் என்பதுதான் அவனது கவலையே.

அப்படி மட்டும் ஏதாவது ஆனால், வைஷாலியின் சாம்பல் கூட மிஞ்சாதே. ஹரீஷுக்கு உள்ளுக்குள் சிறு கவலை தொற்றிக் கொண்டது. விஷயம் இன்னது என முழுதாகத் தெரியாமல், தன் யூகத்தைக் கொண்டு அவளிடம் தான் பேசுவது சரியில்லை என புத்தி இடித்தும் உரைத்தது.

எனவே தன் முடிவை மாற்றிக் கொண்டவன், “என்ன விஷயமா பார்க்கணும்?” அவன் கேட்க, தடுமாறிப் போனாள்.

“அது... அது...” அவள் திணறிப் போனாள்.

“அவர் கேட்டால் நான் பதில் சொல்லியாகணும். அப்படி இல்லாமல் அப்பாயின்மெட் கொடுக்க முடியாது” அவன் நிலையை அவன் சொன்னான்.

“கொஞ்சம் பெர்சனலா பேசணும்னு சொல்லுங்க” சொல்லிவிட்டவள், அதன் பிறகுதான் என்ன சொன்னோம் என்றே சிந்தித்தாள்.

அவள் அதை மறுக்கும் முன்பே, “ஓகே...” என அவன் சொல்லிவிட, அவள் திரும்பிவிட்டாள். ஹரீஷ் தன்னைப்பற்றி என்ன நினைத்திருப்பான் என உள்ளுக்குள் ஒரு மாதிரியாக இருக்க, வாசல் வரைக்கும் வந்தவள் நின்று அவனைப் பார்த்தாள்.

“ஹரீஷ் சார்... நான்...” அவள் எதையோ சொல்ல முயல,

“எனக்கு எதையும் தெரிஞ்சுக்க வேண்டாம் மேம்...” வேகமாகச் சொன்னான்.

“நான் உங்களை சர்வஜித் சார் கூடவும் பார்த்திருக்கேனே?” அவள் சொல்ல,

“ஆமா... நான் அவருக்கும் பெர்சனல் பாடிகார்ட்டா இருக்கேன். அவர் இந்தியாவில், மும்பையில் இருக்கும்போது அவரோடவே இருப்பேன்” அவன் பிசிறே இல்லாமல் முடித்துவிட்டான்.

“அப்போ அவர் இப்போ இந்தியாவில் இல்லைன்னு சொல்றீங்களா?” அவனிடம் கேட்டாள்.

“ஆமா...” என்றவன் வேலையைப் பார்க்கத் துவங்க, அவன் சொன்ன விதத்தில் அவளுக்குத்தான் குழப்பமாகிப் போயிற்று.

‘இல்ல... பொய் சொல்றார்...’ மனம் நினைக்க, அதை அவள் எப்படி நிரூபிக்க முடியும்? தன் தோழி ரூபியே அவளை நம்பாதபொழுது, மற்றவர்களிடம் எல்லாம் சொல்ல அவள் நினைக்க கூட இல்லை. தான் எதையாவது சொல்லி, அது அவனுக்கு பிரச்சனையைக் கொடுத்துவிடக் கூடாதே என நினைத்தாள்.

அந்த சர்வஜித் பிரச்சனைகளுக்கே பிரச்சனை கொடுப்பவன் எனத் தெரியாமல் போனாள்.

மறுநாள் மாலையில் அவளுக்கென சர்வஜித் நேரம் ஒதுக்கி இருப்பதாக ஹரீஷ் சொன்னான். அவனிடம் சென்று என்ன பேச எனத் தெரியாத குழப்பத்தில், பதட்டத்திலேயே இருந்தாள். அவள் ஒரு மாதிரி பதட்டமாக இருக்க, ரூபி அவளது கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டாள்.

“நீ என்ன செய்யக் காத்திருக்கன்னு எனக்குப் புரியலை. சர்வா சார் முதல்நாள் நம்மளைப் பார்த்த பொழுது நடந்ததை எல்லாம் மறந்துட்டு அமைதியா இருக்கார். நீ பாட்டுக்கு போய் மகுடியை எடுத்து ஊதி, அந்த பாம்பை கிளப்பி விட்டுடாதே, நான் அவ்வளவுதான் சொல்வேன்” சற்று பயத்துடனே சொன்னாள்.

சர்வாதான் அவர்களது முதலாளி எனத் தெரிந்த உடனேயே தங்களுக்கு எப்படி இந்த வேலை கிடைத்தது என இருவருக்குமே புரிந்து போனது. அவன் திட்டமிட்டே தங்களை சிக்க வைத்து இருக்கிறானா? தங்களுக்கு ஏதும் பிரச்சனையைக் கொடுப்பானா என ரூபி அவ்வளவு பயந்தாள்.

ஆனால் சர்வாவோ அவர்களைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் போகவே நிம்மதியாக மூச்சு விட்டாள். அப்படி இருக்கையில் இந்த வைஷாலி அவனிடம் பேசப் போகிறேன் என நிற்க, அவளுக்கு அடிவயிறு கலங்கியது.

“ம்... புரியுது” என்றவள் அவன் சொன்ன நேரத்துக்கு அவனது அறைக்கதவை தட்டிக்கொண்டு நின்றாள்.

“எஸ்...” அவன் குரல் கொடுக்க, தயக்கமாக உள்ளே அடியெடுத்து வைத்தாள். அவன் முன்னால் இருந்த இருக்கையை கை காட்ட, அதில் அமர்ந்து கொண்டாள்.

‘நீயே பேசு...’ என்பதுபோல் அவன் இருக்க, அவன் கண்களைக் காண முடியாத பரிதவிப்பில் அவள் இருந்தாள். அவள் என்ன பேச? எதைப் பேச? எனத் தெரியாமல் கைகளைப் பிசைந்துகொண்டு அமர்ந்து இருந்தாள்.

சர்வஜித் அவளை அளவிட்டான். அவள் அழகை கண்டுகொண்டானா? அவள் வனப்பை ரசித்தானா? அவளது பெர்ஃபியும் வாசனையை நுகர்ந்தானா? எதுவும் இல்லை. அவளை ஆராய்ந்தான்... ஆம் ஆராயத்தான் செய்தான். ரசிப்பு எல்லாம் அவருக்கு சுட்டுப் போட்டாலும் வராது.

‘பைரவனோட மகள்... முத்துப்பாண்டியின் முறைப்பொண்ணு. அவன் கட்டிக்கொள்ள வெறியாக காத்திருக்கும் பெண்’ அவன் மூளைக்குள் ஓட, தன் மேஜைமேல் இருந்த சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டான். அதை ஆழமாக இழுத்து, புகையை நிதானமாக வெளியிட்டான்.

அந்த புகையும் சிகரெட்டின் நெடியும் அந்த அறையை நிறைக்க, அவளுக்கும் அந்த வாசனை பிடித்தது. அவன் புகைக்கும் அழகை ஒரு மாதிரி கண் கொட்டாமல் ரசித்தாள். அவனது கண்கள் இடுங்கியதை அவள் கவனித்திருக்க நியாயம் இல்லை.

“நீ...நீங்க சர்வஜித் தானே?” அவனிடம் கேட்டுவிட்டாள். அவனிடம் கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் போக, அந்த சிகரெட் அதன் உயரத்தை வேகமாக குறைத்துக் கொள்ள, அவனது நுரையீரல் நிக்கோட்டின் புகையால் நிறைந்தது.

அவன் பதில் சொல்லாமல் போக, “எ...எனக்குத் தெரியும்... நீங்க சர்வஜித் தான்...” அவள் எதற்காக இதையெல்லாம் அவனிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறாள் என அவளுக்குப் புரியவே இல்லை.

“நீங்க உங்க உருவத்தை வேணா மாத்திக்கலாம்... உங்க குரல், பாடி லேங்க்வேஜ்... எல்லாம் அது நீங்கதான்னு சொல்லுது. நீங்க எதுக்காக இப்படி உங்க உருவத்தை மாத்திக்கறீங்கன்னு எனக்குத் தெரியலை.

“எனக்குத் தெரிஞ்சுக்கவும் வேண்டாம்... இதையெல்லாம் நான் ஏன் உங்ககிட்டே சொல்லிட்டு இருக்கேன்னும் தெரியலை...” அவள் சொல்லிக்கொண்டே போக, அவனது இரண்டாவது சிகரெட் காலியானதுதான் மிச்சம்.

நேரம் சென்றுகொண்டே இருக்க, அவன் அவளுக்கு கொடுத்த அந்த பத்து நிமிடங்களை அமைதியிலேயே கடத்தினான். அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் உள்ளமோ, ‘என் ரகசியத்தை தெரிந்துகொண்டாள்...’ என அவனுக்குச் சொல்ல, உள்ளுக்குள் எதையோ தீவிரமாக சிந்தித்தான்.

ஆனால் பாவம்... அது அவளுக்குத் தெரிய வேண்டுமே. தன் ரகசியங்களைத் தெரிந்துகொள்ளும் யாரையும் சர்வஜித் உயிரோடு விட்டு வைப்பதே இல்லை. அது அவனுக்கு வழக்கமும் கிடையாது.

வேட்டை மிருகம் அவன்... நினைத்தால் வேட்டையாடி விடுவான். அது தெரியாத புள்ளிமான் அவனைச் சீண்டிக் கொண்டு அமர்ந்து இருந்தது. ஐயோ பாவம்... “ஏதாவது சொல்லுங்க...” அவன் இரும்பாக இருக்க, அவனிடம் கேட்டாள்.

“ஸ்டே அவே ப்ரம் ஆல் திஸ்... அண்ட் கெட் அவுட். நான் கெட்டவன், ரொம்ப கெட்டவன்... கிட்டே வராதே” அவன் இரும்புக் குரலில் சொல்ல, அவளது தேகத்தில் இருந்த மொத்த ரோமங்களும் சிலிர்த்துக் கொண்டது.

“ஒரு நாள் உனக்கு வலிக்க வலிக்க சொல்லிக் கொடுத்த பாடம் போதவில்லையா?” என்றவன் இருக்கையைத் தள்ளிவிட்டு எழுந்துகொள்ள, அவளும் எழுந்துவிட்டாள். அவளைக் கொல்ல விடாமல் தடுத்தது எது? இல்லை யார்? பைரவனா? இருக்குமோ?

“என்னை ப்ளேக்மெயில் பண்றியா என்ன? கேன் யூ?” என்றவன் மூன்றாவது சிகரெட்டுக்கு உயிர் கொடுத்தான். அவனது பேச்சில் முதுகுத்தண்டு சில்லிட்டாலும், அவன் தான் சொன்ன எதையும் மறுக்காததை அவளது மனம் குறித்துக் கொண்டது.

“இல்ல... இல்ல...” என்றவள் தடுமாற, “தென் வாட்...? உன் மாமன் என்னை வேவு பார்க்கச் சொன்னானா என்ன?” என அடுத்த கேள்வியைக் கேட்டானே பார்க்கலாம். அவளது கண்கள் இரண்டும் தெறிந்து விடுவதுபோல் அகலத் திறந்து கொண்டது.

“இந்த டீட்டெயில் எல்லாம் அவனுக்கு சொல்லிட்டியா? சொல்லலைன்னா சொல்லிடு... நான் இறங்கிச் செய்ய தயாராத்தான் இருக்கேன். இன்னொரு முறை நீ என் கண்ணில் பட்ட...” என்றவன் புகையை அவள் முகத்தில் ஊதினான்.

அவள் இதை வெளியே சொல்லி இருந்தால் நிலைமை இப்படி இருந்து இருக்காது என அவனுக்குத் தெரிந்தே இருந்தது. ‘என் ரகசியம் தெரிந்தவள்...’ மனம் அதிலேயே நின்றது, நிலைத்தது.

‘ச்சே... இவன் மனுஷனே இல்லை, அரக்கன்...’ மனதுக்குள் நொந்து போனாள்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
“இல்ல நான் எதையும் யார்கிட்டேயும் சொல்லலை. சொல்லப் போறதும் இல்லை” பலவீனமாகச் சொன்னாள். அவளை கண்கள் இடுங்க பார்த்தான்... அந்த நேரம் அவனது விழிகளை நேருக்கு நேராக சந்தித்து இருந்தால் என்ன ஆகி இருப்பாளோ? நல்லவேளை அவனது குளிர்கண்ணாடி அவளைக் காப்பாற்றியது.

“ஓ... ரியலி?” என்றவன், “ஹரீஷ்...” என உரக்க குரல் கொடுக்க, அவன் வேகமாக உள்ளே வந்தான். அவன் கரத்தில் ஒரு ஃபயில் இருக்க, அவன் கண் காட்ட, அதை அவளது கரத்தில் கொடுத்தான் ஹரீஷ்.

‘இதெல்லாம் என்ன?’ என்பதுபோல் அவள் பார்த்து நிற்க, “ப்ரூவ் இட்...” என்றவன் விஷயத்தைச் சொல்ல, அவளுக்கு மயக்கமே வராத குறை தான். கன்னியாகுமரியில் நடந்து கொண்டிருக்கும் ப்ராஜெக்ட் ஃபயில் தான் அது.

‘புள்ளிமான் தானா வந்து வலைக்குள்ளே சிக்கி இருக்கே... இப்போ இவர் வேட்டையாடாமல் விடுவாரா?’ ஹரீஷால் அனுதாபப்பட மட்டுமே முடிந்தது. சர்வஜித்தின் உண்மைகள் கடுகளவு வெளியே கசிந்தாலும், ‘மரணம்’ மட்டுமே அவர்களுக்கு பரிசாக கிடைக்கும்.

வைஷாலியை கொன்று புதைப்பானோ என ஹரீஷ் பயப்படவே செய்தான். ஏனென்றால் அவள் தன்னிடம் கேட்டதை, அவளது சந்தேகத்தை ஹரீஷ் அப்பொழுதே அவனிடம் சொல்லிவிட்டான். ஹரீஷால் அதைச் சொல்லாமல் இருக்க முடியாது. அவனது மெய்க்காப்பாளன் அவன், அப்படி இருக்கையில் அவனது பாதுகாப்பை ஹரீஷ் தானே பார்த்துக் கொள்ள வேண்டும்.

சர்வஜித்தின் நடவடிக்கை என்னவாக இருக்கும்? என அறிய ஹரீஷ் காத்திருக்க, அவன் தன்னிடம் செய்யச் சொன்னதை எல்லாம் கேட்டு அவன் ஒரு நொடி குழம்பிப் போனான். கூடவே, ‘அப்போ வைஷாலிக்கு ஆயுசு கெட்டிதான். ஆனாலும் இது எப்படி சரி வரும்?’ என எண்ணியவனுக்கு எதுவும் புரியவில்லை.

சர்வஜித்தின் கணக்குகள் எப்பொழுதும் கச்சிதமாகவும், சரியாகவும் இருக்கும் என்பதால் அவனை கண்ணை மூடிக்கொண்டு நம்பினான்.

வைஷாலியோ அதைப் பார்த்துவிட்டு, “இதை நான் எப்படி? எனக்கு எதுவும் தெரியாது” கையில் இருப்பது அணுகுண்டாக கனக்கும் உணர்வு. இது மட்டும் அவளது மாமன் கரத்தில் கிடைத்தால் அவ்வளவுதான்... ‘கட்டிடத்தை பிரித்து மேய்ந்துவிடுவான்’ என அவளது மனம் சொன்னது.

“பிரபு...” அடுத்த குரலுக்கு அங்கே வேறு ஒருவன் வந்து சேர்ந்தான். “மேடம் என்ன செய்யணும்ன்னு எல்லாம் சொல்லிக் கொடு. ஆனால் செய்ய வேண்டியதை அவங்கதான் செய்யணும் புரியுதா?” சர்வஜித் கேட்க, அவன் வேகமாக தலை அசைத்தான்.

“நவ், யூ ஆர் அண்டர் மை சர்வைலன்ஸ்... காட் இட்?” சர்வஜித் அவளிடம் கேட்க, அவன் இதற்காக திட்டமிட்டு இருந்தது அவளுக்குப் புரிந்தது. ‘இது எப்போ இருந்து துவங்கியது?’ அவளுக்கு புரியவில்லை. மூளை மொத்தமும் கலங்கிப் போன உணர்வு.

“நீ கண்டு பிடித்த என்னோட விஷயத்தை, நீ உனக்குள்ளேயே வச்சிருந்து இருக்கணும். என்கிட்டே சொல்லி பெரிய தப்பு பண்ணிட்ட. இதை என்கிட்டே சொன்னதற்குத்தான் உனக்கு இந்த தண்டனை. இதையே நீ வெளியே சொன்னால்...” என்றவன், “சொல்லிப் பார்... ‘அதுக்கும் மேலே’” என வில்லத்தனமாகச் சொன்னான்.

அவன் சொன்ன விதமே இதயத்தைக் கவ்வியது. ‘ஆண்டவா... நான் இப்படி வந்து சிக்கி இருக்க வேண்டாம்’ நொந்தே போனாள். அந்த மால் விஷயத்தை முடித்துவிட எந்த லூப்ஹோல் கிடைக்கும் என அவளது மாமனும், மாமன் மகன்களும் சுற்றித் திரிய, அதை இவன் அவளது கரத்திலேயே கொடுத்துவிட்டால் எப்படி இருக்கும்?

“என் வேலை...? இது வேண்டாமே...” கெஞ்சினாள். வைஷாலியின் கண்களில் இருந்து பயத்திலும் நடுக்கத்திலும் கண்ணீர் கடகடவென இறங்கியது. ஹரீஷுக்கு அதைப் பார்க்கவே அத்தனை பாவமாக இருந்தது.

சர்வஜித்தோ, “இனிமேல் இதுதான் உன் வேலை. என்ன செய்யணும், என்ன செய்யக் கூடாது எல்லாத்தையும் பிரபு சொல்லித் தருவான். இப்போ நீ போகலாம். வீக்லி ரிப்போர்ட் நேரடியா நீ எனக்கு கொடுக்கணும்” அவன் சொல்ல, அவளுக்கு மூச்சடைத்தது.

“வாரம் வாரம் ஊருக்கா? இல்ல... இல்ல... இது வேண்டாம்” அங்கே சென்று தாயிடம் சிக்கிக்கொள்ள அவள் விரும்பவில்லை.

“நீதான் செய்யற... ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது” என்றவன் என் பேச்சு முடிந்தது என்பதுபோல் தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.

“இதை நான் செய்ய முடியாதுன்னு சொன்னா?” அவளுக்குத் தெரிந்தாக வேண்டி இருந்தது.

“ஹரீஷ்... இவ அப்பா...” அவ்வளவுதான் சொன்னான். சர்வஜித் சொன்ன வேகத்தில் அரண்டு போனாள்.

“இல்ல... வேண்டாம்... வேண்டாம்... நானே... நானே செய்யறேன்” என்றவள் வாய்விட்டே அழுதுவிட்டாள். அவன் முன்னால் அழுவது ஒரு மாதிரி அவமானமாக இருக்க, வேகமாக கண்ணீரை சுண்டி எறிந்தாள்.

“நான் இப்போ வராமல் போயிருந்தால்?” அவள் கேட்க, அவன் ஒரு மார்கமாக சிரித்து வைக்க, அந்த சிரிப்பு சொன்னது... உனக்கான கணக்குகள் எல்லாம் என் வரையில் தனிப்பட்டவை என அப்பட்டமாகச் சொன்னது.

“ஹரீஷ்... அவங்க கேட்கறது எல்லாம் செய்து கொடு” என்றவன், விரல் அசைத்து அவளைப் போகலாம் எனச் சொல்ல, பித்து பிடித்த மனநிலையில் வெளியே வந்தாள்.

அறைக்கு வெளியே வந்தவுடன், “நீங்க நாளைக்கே கிளம்ப வேண்டி இருக்கும்” ஹரீஷ் சொல்ல, தொண்டையைக் கவ்வியது. ‘சரி’ என்பதுபோல் தலை அசைத்தவள், தன் அறைக்குச் சென்றாள்.

‘இவங்க இவ்வளவு உன்னிப்பா அவரை கவனிச்சிருக்க வேண்டாம்’ ஹரீஷ் அவளுக்காக அனுதாபப்பட்டான். அது மட்டும்தான் அவனால் பட முடிந்தது.

‘அவன் மனுஷனே கிடையாது’ மனம் சொல்ல, கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்க்காரம் செய்து என்ன பயன்? கையில் இருந்ததை அத்தனை வேகமாக தன் ட்ராவில் வைத்துப் பூட்டி, சாவியை எடுத்துக் கொண்டாள். அதை அவளிடம் கொடுத்துவிட்டு, அவனுக்கு அதைப்பற்றிய எந்த கவலையும் இருந்ததாகத் தெரியவில்லை.

‘என்னை நம்பி எப்படி கொடுத்தார்? நான் இதை என் மாமாவிடம் கொடுக்க மாட்டேன் என என்ன நம்பிக்கை?’ அவள் குழம்பித் தவிக்க,

தன் விரலை வைத்தே, தன் கண்ணை குத்தும் வித்தை அது என அவளுக்குப் புரியவே இல்லை. சர்வஜித்தின் ஆட்டங்கள் எப்பொழுதும் வேறானவை. எதிரி ‘இப்படி’ அடிப்பானோ என அவன் நினைத்தால், ‘எப்படி’ வேண்டுமானாலும் அடிப்பேன் எனச் சொல்லி அடிக்கும் வித்தை.

பயம் இருப்பவனுக்குத்தானே யோசனைகளும், தயக்கங்களும் இருக்கும். கருவறுக்க வேண்டும் என முடிவெடுத்து களம் இறங்கி இருப்பவனிடம், இரக்கத்தை எதிர்பார்ப்பது எல்லாம் பெரும் முட்டாள்த்தனம்.

சர்வஜித்தைக் காண வேண்டும் எனச் சென்றவள், பேயடித்ததுபோல் வந்து அமர்ந்திருக்க, ரூபி அவளைப் பிடித்து உலுக்கினாள்.

“ஷாலு... ஏய் ஷாலு... என்னடி ஆச்சு? பேசணும்னு போயிட்டு வந்து, இப்படி பேயடிச்ச மாதிரி உட்கார்ந்து இருக்க? என்னன்னு சொல்லுடி” அவளைப் பிடித்து உலுக்கினாள்.

அப்பொழுதுதான் வைஷாலிக்கு அந்த யோசனை மூளைக்குள் மின்னி மறைந்தது. ‘அவனைப்பற்றிய உண்மை ரூபிக்குத் தெரியும் என அவனுக்குத் தெரிந்தால் என்னவாகும்?’ எனத் தோன்ற மொத்த தேகமும் பதறியது.

“ரூபி... ரூபி... நான் சர்வஜித் பற்றியோ, சர்வா பற்றியோ உன்கிட்டே எதுவுமே சொல்லலை... சொல்லவே இல்லை... உனக்கு எதுவும் தெரியாது... நீ மறந்துட்ட... என் தலைமேலே சத்தியம் பண்ணு... பண்ணு...” என்றவள் தோழியின் கரத்தை எடுத்து தன் தலையில் வைத்தாள்.

“என்னடி உளறிகிட்டு இருக்க? சத்தியமா?” ரூபி விஷயத்தை கிரகிக்க முயன்றாள்.

“ரூபி... நான் உன்கிட்டே எதுவுமே சொல்லலை... அது அப்படித்தான் இருக்கணும். உனக்குப் புரியுதா? ப்ளீஸ் டி... சத்தியம் பண்ணு” வைஷாலி சொன்ன விதத்தில் ரூபிக்கு அடிவயிற்றில் பிரளயம் மூண்டது.

‘எதையோ செய்து வச்சுட்டா’ உள்மனம் கதற, “சத்தியம்டி... நான் வாயே திறக்கலை... நான் மறந்துட்டேன்... எனக்கு அம்னீஷியா போதுமா?” என்றவள்,

“என்னன்னு சொல்லு...” வைஷாலியிடம் கேட்டாள்.

“அது... அது... என் வேலையை மாத்திட்டார்...” என்றவள் விஷயத்தை ஒரு மாதிரி மறைத்துச் சொல்லி முடித்தாள்.

அவள் மறைத்தது ரூபிக்குமே புரிய, தன்னை நினைத்தும் வைஷாலி பயப்படுவது அப்பட்டமாக தெரிய, அதை தோண்டித் துருவவில்லை.

“உனக்கு அதெல்லாம் தெரியாதுன்னு சொல்லி இருக்க வேண்டியது தானே? என்னடி இது திடீர்ன்னு?” ரூபி கேட்க, வைஷாலியின் தேகம் மொத்தமும் நடுங்கிக் கொண்டு இருந்தது.

“வேணா நானும் உன்னோட வரவா?” தோழியின் நடுக்கம் கண்டு கேட்டாள்.

“என்ன? நீயா? வேண்டாம்... அங்கே எல்லாம் நீ வரக் கூடாது” என்றவள், ‘மத்தவங்க கண்ணில் பட்டால் அவ்வளவுதான்’ என எண்ணிக் கொண்டதை வெளியே சொல்லவில்லை.

“உனக்குத்தான் எல்லாம் செஞ்சுதரச் சொல்லி இருக்காரே. நீ உங்க ஊருக்குப் போகாமல், வேற எங்கேயாவது தங்கி இருந்து வேலையைப் பாரேன்” தோழி ஐடியா கொடுக்க அதையே செய்வது என முடிவெடுத்தாள்.

ஆனால் அது அத்தனை சுலபமாக இருக்கப் போவதில்லை என அவளுக்கே நன்றாகவே தெரியும். அவளுக்கான நாட்கள், துன்பங்கள் ஆரம்பமாகியது.

பகை முடிப்பான்......
 

kumarsaranya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 14, 2025
25
29
13
Vellkovil
வைசாலி மால் கட்டும இடத்துக்கு சூப்பர்வைசரா போகப்போறாளா?
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
வைசாலி மால் கட்டும இடத்துக்கு சூப்பர்வைசரா போகப்போறாளா?

அவளை அதோட விட்டா பரவாயில்லையே. வச்சு செய்யப் போறான்.

நன்றி!
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
122
34
28
Deutschland
அச்சோ..! அவளா போய் தலையை கொடுத்து விட்டாளே.
இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.