• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தேன் -2

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
161
54
28
Tiruppur
அத்தியாயம்-2

மயூராவால் அந்த அறையில் இருக்க முடியவில்லை. அவனுடன் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருந்த அவர்களின் அறை அவளை மூச்சு முட்ட செய்தது. ஆசையாய் ஆசையாய் அவள் காதலிக்க, தங்கையின் விருப்பத்தை அறிந்த அண்ணன் சிவசேகரனை அவளுக்கு மணமுடித்து வைத்தார்.

அவர்களை விட வசதியில் குறைவென்றாலும், தங்கையின் மகிழ்ச்சியை மட்டும் பார்த்த அண்ணன், எந்த இடத்திலும் அவள் முகம் கோணாமல் இருக்க வைத்தவர். அவர் தான் மயூராவுக்கு, சிவசேகரனுக்கும் திருமணம் செய்து வைத்தார்.
விழி நீரைத் துடைத்தவள் உடனே தன் அன்பு சகோதரனுக்கு அழைத்தாள்.
ஆள் அரவமற்ற இடத்தில் அமைந்திருந்தது அந்த தொழிற்சாலை சேமிப்புக் கிடங்கு. மதிய நேரம் என்றாலும் அங்குள்ள மரங்களின் அடர்த்தியால் அதிக வெளிச்சம் ஊடுருவவில்லை. அதில் மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தான் அவன்.

“என்னை விட்டுங்க. நான் தெரியாமல் பண்ணிட்டேன்.”
அவன் எதிரே ஒருவன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
அவன் விழிகளை அசைத்ததும் ,மற்றொருவன் அவன் முகத்திலேயே குத்தினான். குத்தியதின் விளைவாக வெளிப்பட்ட குருதி லேசாக காற்றில் பறந்து எதிரில் அமர்ந்திருந்தவனின் வெண்ணிறச் சட்டையில் ஒட்டிக் கொண்டது.

“பார்த்துடா. அண்ணன் டிரஸ்ஸில் பட்ருச்சு.” என இன்னொரு அடியாள் கூறவும் அலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

அதில் ஒளிர்ந்த உருவத்தைப் பார்த்ததும், தன் ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் உயர்த்தி நிறுத்தும்படி சைகை செய்தவன், கைப்பேசியைக் கனிவுடன் பார்த்தான்.

அவன் தோளில் சாய்ந்தப்படி நின்று கொண்டிருந்தாள் மயூரா. மற்றொரு பக்கம் அவன் குட்டி மருமகள் சாய்ந்திருக்க, அத்தி பூத்தாற் போல் அவன் முகம் பெரிதாக புன்னகையில் உறைந்திருக்க, அவனுடைய மிகப் பிடித்த புகைப்படமாக அது இன்றுவரை உள்ளது.

அலைபேசியை எடுத்துக் காதில் வைத்தான் தனுர் விஜய பாண்டியன். பணபலம் எப்போதும் இருக்க, கூடவே தமிழக சட்டமன்றத்தில் இடமும் கிடைத்துவிட அவனுடைய செல்வாக்கு எங்கெல்லாம் செல்லும் என்பது யாருக்கும் தெரியாது.

“சொல்லுமா.”

“அ..ண்..ணா… அவரு.. அவரு..க்கு எ..ன்..னை பி..டி.க்கலை. என்னை விருப்பமில்லாமல் கல்யாணம் செஞ்..சுருக்காரு.. அண்ணா.. எப்படி அவரு இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சார்? நீ எதாவது எனக்காக செஞ்சியா? அதனால்தான் என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டாரா?”

“மயூக்குட்டி முதலில் அழாதம்மா. அதெல்லாம் ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி. மச்சான் உன் மேல் உயிரையே வச்சுருக்கார். நீ முதலில் அழறதை நிறுத்து.”

“ஏண்ணா? அவரு இத்தனை வருஷமாக என் கூட போலியாக வாழ்ந்துட்டு இருக்கார். அவர் இப்போதும் அந்த பொண்ணு கூட பேசிட்டு இருக்கார். நானே மொபைல் எடுத்து கொடுத்துருக்கேன். அவரு ஏன் எங்கிட்ட அதிகம் பேசறது இல்லைனு பல தடவை யோசிச்சிருக்கேன். ஆனால் காலேஜிலேயே ரொம்ப அமைதியாக இருப்பாரு. ஆனால் அந்த அமைதிக்குள்ள இப்படி ஒரு காதல் இருக்கும்னு தெரியலைனா. எனக்கு அப்படியே செத்துப் போலாம்னு இருக்கு. அவரை விட்டு பிரியறதை நினைச்சால்.. நான் டைவர்ஸ் கொடுத்தால் அவராவது நிம்மதியாக இருப்பார். என்னோட காதலுக்காக அவரோட காதலை கொன்னுட்டேன்.”

தனுர் விஜயன் ஆள்காட்டி விரலால் தன் நெற்றிப் பொட்டை தடவினான்.
அவனுடைய மச்சான் இன்னும் பழைய காதலியுடன் பேசுவது அவனுக்கே புதிதாக இருந்தது. ஆயிரம் நடந்தாலும், அவனுக்கு மயூராவின் வாழ்வே முக்கியம். அவள் முகம் வாடிவிடக் கூடாது. சாகும்வரை பேசுகிறாள்.

தன் தங்கை அழுது கொண்டிருப்பது வேறு அவன் மனதைப் பிசைந்தது. எதாவது செய் என அவனுடைய அரசியில் மூளை யோசிக்க ஆரம்பித்திருந்தது.

“மயூம்மா அவசரப் படக் கூடாது. குட்டிமா இருக்கால்ல. இப்ப உங்க வாழ்க்கையில் அவளும் இருக்காள். பொறுமையாக இருக்காது. உன்னோட வாழ்க்கைக்கு எதுவும் ஆகாது. சிவசேகர் எப்போதும் உன்னை விட்டுப் பிரியமாட்டார். அதுக்கு நான் எப்போதும் விடமாட்டேன். நீ கொஞ்சம் அவசரப்படாமல் இரு. உனக்கு அண்ணன் இருக்கேன்ல.”
மயூராவின் அழுகை ஓய்ந்தது.

“இல்லைண்ணா நீங்க எப்போதும் எனக்காக எல்லாமே செஞ்சுருக்கீங்க. அன்பை காசு கொடுத்து வாங்க முடியாதுனா. அது தானா வரனும். தப்புப் பண்ணிட்டேன்னா. நான் டைவர்ஸ்க்கு அப்ளை செய்யப் போறேன். எனக்கு கொஞ்ச நாள் எங்காவது தனியாக இருக்கனும். குட்டிமாவை ஸ்கூலில் இருந்து பிக்கப் பண்ணிக்கோங்க. உங்ககிட்டேயே இருக்கட்டும். குட்டிமா முகத்தைப் பார்த்தாவே கண்டுபிடிச்சுருவாள்.”

“மயூ நீ கொஞ்ச நாள் வெளியே போயிட்டு நல்லா யோசிச்சுட்டுவா. நான் தங்கம்மாவை அனுப்பி வைக்கிறேன். நம்ம ஆளும் உனக்குப் பாதுகாப்புக்கு வருவான். டைவர்ஸ் பத்தி நீ அவசரப்பட வேண்டாம். அண்ணன் நான் இருக்கேன். நீ எதுக்கும் கவலைப்பட வேண்டியதில்லை. சிவசேகர் எப்போதும் உன்னை விட்டுப் பிரிய மாட்டார். காதலிச்சதுக்காக பிரிஞ்சால் தமிழ்நாட்டில் முக்கால் வாசி பேர் சிங்கிலாதான் இருக்கனும். பேசி தீர்த்துக்கலாம்.”

அடுத்த ஒரு மணி நேரத்தில் தனுர் விஜயனின் தங்கை சென்னை நகரை விட்டு வெளியேறி இருந்தாள்.

தங்கையிடம் பேசிவிட்டு நிமிர்ந்தவனின் வில் விழிகளில் பகிரிச் செயலியின் குடும்பக் குழுவில் வந்தப் புகைப்படங்களில் சிக்கியது அந்த மான். உடனே ஒரு வழி கிடைத்து விட தன்னுடைய மாமனுக்கு அழைத்தான்.

“ஹலோ சொல்லுங்க மாப்பிள்ளை.” என அழைப்பை ஏற்றார் ராமச்சந்திரன்.

“மாமா என்னை நீங்க மாப்பிள்ளையாக்கினும்.”

தன் வீட்டு நீள் இருக்கையில் சொகுசாக அமர்ந்திருந்த ராமச்சந்திரன் உடனே எழுந்து நின்றார்.

“மா..ப்..”

“அதான் மாமா. இனி நான்தான் உங்க வீட்டு மாப்பிள்ளை.”

“மாப்பிள்ளை என்ன தீடீர்னு? ஏன்?”

“நம்ம குடும்பம் எப்போதும் பிரியாமல் இருக்கனும்னா இதுதான் எனக்கு இப்பத் தோணுன ஒரே வழி. மகா ஜஸ்ரா என்னோட மனைவி ஆகனும். மச்சான் இன்னும் தியா கூட டச்சில் இருக்காரு போல. என்னோட தங்கச்சிக்கு உண்மை தெரிஞ்சுருச்சு.”

ராமசந்திரன் தலையில் கை வைத்துக் கொண்டார்.
“சிவா அந்த வருஷமே தியாவை மறந்துட்டான்.”

“இருக்கலாம் மாமா. ஆனால் தங்கச்சிக்கு உண்மை தெரிஞ்சுருச்சு. நம்ம குடும்பம் மொத்தமாக உடைஞ்சு போகறதுக்கு முன்னாடி அதை சரி செய்யனும். அதுக்கு ஜஸ்ரா என் வீட்டுக்கு வரனும்.”

“இன்னிக்கு சாயங்காலம் ரிஜிஸ்டர் மேரேஜ். கிராண்ட் வெட்டிங்க் எல்லாம் பின்னாடி பார்த்துக்கலாம்.”

***


சூரியன் நடு வானில் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டும் நேரம். கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வெண்ணிறத்தில் ஓடுவதற்கு ஏற்பக் கோடுகள் பதினாறு கோடுகள் நிளவாக்கில் வரையப்பட்டு, அதன் தொடக்கத்திலும், முடிவிலும் படுகிடையாக கோடுகள் வரைந்து பெட்டி போன்று உருவாக்கப்பட்டு அதில் எண்கள் வரிசையாக எழுதப்பட்டிருந்தது. அதில் பெண்கள் வரிசையாக பல நிற டீசர்ட்களில் அவர்களின் பெயர்கள் மற்றும் எண்கள் தெரியும்படி நின்று கொண்டிருந்தனர். அதில் ஐந்தாவது எண்ணில், காலை மடக்கி ஆயத்த நிலையில் அமர்ந்திருந்தாள் அவள். பின் பக்கம் இருந்து பார்த்தால், மகா என்ற பெயர் சிவப்பு நிற டீசர்ட்டில் வெண்ணிறத்தில் அச்சிடப்பட்டு அதன் கீழே ஏழு என்ற எண்ணும் இருந்தது. சிவப்பு நிற ஷார்ட்ஸ்ம், அதே சிவப்பு நிறத்தில் ஓட்டப்பந்தயக் காலணியுடன் நெற்றியில் வியர்வை பெருக்கெடுக்க அமர்ந்திருந்தாள். பால் நிற தேகத்தில், பழுப்பு நிற கூந்தல், புருவங்கள் என அவளைப் பார்த்தால் வெளி நாட்டுப் பெண் போல் தான் தோன்றும். தன் கால்கள் தொட வேண்டிய இலக்கை லேசாக மஞ்சள் நிறம் போன்று தோற்றமளிக்கும் விழிகளால் நிலைத்துப் பார்த்தப்படி இருந்தாள். 200 மீட்டர் மாநில தொடர் ஓட்டப்பந்தயம் தொடங்குவதற்கு ஏற்ப துப்பாக்கி சுடப்பட அனைத்துப் பெண் போட்டியாளர்களும் ஓட ஆரம்பித்தனர். சுற்றி இருந்த கல்லூரி பெண்களும் கத்தி ஊக்குவிக்க, “மகா.. மகா.. மகா..” என பெண்கள் கரகோஷம் அதிகமாக எழுந்தது.


அவர்கள் கல்லூரியில் நடக்கும் போட்டி என்பதால் ஊக்குவிப்பு அவளுக்குச் சற்றே அதிகமாகத்தான் இருந்தது.
சில நொடிகளில் கடக்க தன்னுடைய இரு நூறு மீட்டர் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தைச் சூடி இருந்தாள் அந்த தாரகை.
கல்லூரிப் பெண்கள் அவளைத் தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அனைத்தும் வீடியோவாகப் பதிவாகி இருந்தது. ஓடுவதும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டிருக்க, அவள் பரிசு வாங்குவதும் புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இவை அனைத்தையும் குடும்ப பகிரிச் செயலியில் அவள் பகிர தனுர் விஜயன் சரியான நேரத்தில் அதைப் பார்த்து அவளைத் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தான்.


இவை எதுவும் அறியாமல் தன் தோழிகளுடன் கல்லூரி கேண்டீனில் மதிய உணவை உண்டு கொண்டிருந்தாள் ஜஸ்ரா.
இராம சந்திரன் அலைபேசியில் அழைக்க உடனே மகிழ்வுடன் எடுத்தாள்.

“மகாக் குட்டி வாழ்த்துகள்.”

“தேங்க்ஸ்ப்பா.”

“மகா உடனே கிளம்பி வீட்டுக்கு வாமா. நான் கலேஜில் சொல்லிட்டேன்.”

“ஏன்பா எதாவது பிராபளமா?”

“நீ வாமா பேசிக்கலாம்.”

“அ..ப்..பா..”

“சீக்கிரம் வாம்மா.”

“சரிப்பா வரேன்.”
உடனே உணவை அவசரமாக உண்டு முடித்தவள் தோழிகளிடம் விஷயத்தைக் கூறிவிட்டு தன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.

வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தியதும், தன்னுடைய வெற்றிக் கோப்பையை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு ஆடியபடி தன் தந்தையிடம் சென்று காட்ட வீட்டிற்குள் நுழைந்தவளுக்கு தந்தையின் கவலை படிந்த முகம் பட்டது.

“அப்பா என்னாச்சுப்பா?”

“மகா அப்பாவை மன்னிச்சுரும்மா.”

அப்போது மேசையில் வைக்கப்பட்டிருந்த பட்டும், நகைகளும் அவள் கண்ணில் பட்டது.

“என்னப்பா சேரி.. நகை எல்லாம் புதுசா இருக்கு?”

“மகா அப்பாவுக்காக நீ ஒன்னு செய்யனும்.”

“என்னப்பா உங்களுக்கு செய்யாமல் நான் யாருக்குச் செய்யப் போறேன். சொல்லுங்க. செஞ்சிடலாம்.”

அவரசப்பட்டு அப்பாவின் மீதுள்ள பாசத்தில் வார்த்தைகளைக் கூறிவிட்டாள் மகா.

“மகா உடனே குளிச்சிட்டு இந்த டிரஸ், நகை எல்லாம் போட்டுட்டு வா. நான் உனக்குப் போகற வழியில் சொல்றேன். அம்மாவை கும்பிட்டுப் போமா.”

ஹாலில் இரு பெண்களின் புகைப்படங்களுக்கு சந்தன மாலையும், கீழே மின்சார விளக்கும் எரிந்து கொண்டிருந்தது. ஒரு பெண் புடவையில் சிரித்துக் கொண்டிருக்க, மற்றொரு பெண் பர்தாவில் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

இராமசந்திரன் முதல் மனைவி சிவ சேகரனைப் பெற்றவுடன் இறந்து விட, குழந்தையை ஒற்றையாளாக வளர்த்தார்.

நான்கு வருடங்கள் கழித்து சூழ்நிலை காரணமாக ரசிதாவை மணக்க நேரிட அவர்களுக்குப் பிறந்த குழந்தை மகா ஜஸ்ரா.
காரணம் தெரியாவிட்டாலும் தந்தையுடன் புறப்பட்டு சென்றாள் மகா ஜஸ்ரா.

***

நவீன உள்கட்டமைப்பு வசதிகளால் சீராக இருந்த அந்த அறையின் பஞ்சணையில் உறக்கத்தில் இருந்தாள் மித்ரா. அலைபேசி அடித்ததும், முகத்தைச் சுருக்கியபடி எடுத்துக் காதில் வைத்தாள்.

“ஹலோ மித்ரா ஹியர்.”

“ஹலோ மேடம். சூப்பர் மார்க்கெட் பக்கத்தில் இருந்து பேசறேன். இங்க ஒரு பொண்ணுக்கு ஆக்ஸிடெண்ட். அதில் கடைசியாக டயல் பண்ண நம்பர் உங்க நம்பர். அதான் கூப்பிட்டேன்.”

உடனே கைப்பேசி எண்ணைப் பார்த்தாள்.
ஹேமா எனப் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்க, “ஹேமா ஓகே தானே?”

“மயக்கத்தில் இருக்காங்க. நானும் ஆம்புலன்சில் இருக்கேன். நீங்க வர்ரீங்களா?”

“வரேன்.”


உடனே ராகவனுக்கு அழைத்துக் கூறிவிட்டு தன்னுடைய பைக்கில் மருத்துவமனைக்கு விரைந்தாள் மித்ரா.