• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடர்பியல்..... பாகம் -14

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
155
75
28
Maduravoyal
தொடர்பியல்..... பாகம் -14

கேஸ்-2 (நடேசன் தாத்தா - ரங்கசாமி)

மாதவன் சென்றதும் கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டு வந்து படுத்தாள் ராகினி.

வெகுநேரமாகியும் தூக்கம் வரவில்லை.

பிறகு கண் அயர்ந்தாள் ராகினி.

பார்க் பெஞ்சில் அமர்ந்து இருந்தார் ஒரு முதியவர்.

இவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே.... என்று கனவிலேயே நினைத்து கொண்டாள் ராகினி.
ஆம்.... இவரை தான் நாம் கீழே விழாமல் பிடித்து அவருடைய தடியை எடுத்து கொடுத்து அனுப்பி வைத்தோம் இல்ல.... என்று சொல்லி கொண்டாள்.

ஹாய் தாத்தா.... எப்படி இருக்கீங்க.... என்னை ஞாபகம் இருக்கா .... போன வாரம் நான் உங்களை ரோடு கிராஸ் பண்ணி விட்டேனே.... என்றாள்.

ஹாங்.... எனக்கு ஞாபக மறதி அதிகம் மா.... தப்பா நினைச்சிக்காத....

பரவாயில்லை தாத்தா..... உங்க வீடு எங்கே?

நடேசன் தெரு மா....

இது ஞாபகம் இருக்கா தாத்தா....

இன்னும் அந்த அளவுக்கு போகல மா....
உன் பேரு என்ன மா?

ராகினி.... உங்க பேரு என்ன தாத்தா?

நடேசன் மா.....

பார்ரா.... உங்க பேருலையே இருக்கா உங்க தெரு.....

ஹா ஹா.... ஆமாம் மா....

உண்மையை சொல்லுங்க தாத்தா.... அதனால தான உங்க தெரு பெயரை மறக்காம இருக்கீங்க?.... என்று சொல்லி சிரித்தாள் ராகினி.

இருக்கலாம் மா.... சரி.... நீ என்ன மா பண்ற?.... படிக்கிறீயா?

இல்ல தாத்தா.... காலேஜ் முடிச்சிட்டு ஃபாரன்சிக் லேப்ல ஒர்க் பண்றேன்....

ஓ.... சரிம்மா.... நான் கிளம்பறேன்....

சரிங்க தாத்தா.... பை.... டெய்லி வருவீங்களா?

ஆமாம் மா.... சாயங்காலம் கொஞ்சம் நேரம் இங்க வந்து காத்துல உட்கார்ந்துட்டு மெல்ல நடந்து போவேன்.... அப்போ தான் ராத்திரில தூக்கம் வரும்.... என்றார் நடேசன் தாத்தா.

ஓ.... சரி தாத்தா.... உங்களுக்கு எத்தனை பசங்க?.... என்ன பண்றாங்க?

எனக்கு ஒரே பையன்.... அவன் கூட ரிட்டையர் ஆயிட்டான்..... பேரன் வேலைக்கு போறான்..... உன் வயசு தான் இருக்கும் அவனுக்கும்....

ஓ.... எங்க வேலைக்கு போறாரு.....

ஏதோ கம்பியூட்டர் கம்பெனி மா.... பேரு எல்லாம் என் வாயில நுழையல....

ஹா ஹா.... ஓகே தாத்தா நான் கூட கிளம்பறேன்.... நான் இதோட அடுத்த ஞாயிறு தான் வருவேன்....

ஓ.... சரி மா.... ரொம்ப சந்தோஷம் மா உன் கிட்ட பேசினது....

எனக்கும் தான் தாத்தா..... ஆனா அடுத்த ஞாயிறு பார்க்கும் போது.... யாரு மா நீ.... ன்னு கேட்காதீங்க.... நல்லா ஞாபகம் வச்சிக்கோங்க. .... என் பேரு ராகினி.... என்றாள்.

சரிம்மா.... டாட்டா..... என்றார் நடேசன் தாத்தா.

பை தாத்தா.... என்று சொல்லி விட்டு திரும்பி நடந்தவள்.... பெரிய சப்தம் ஒன்று கேட்க திரும்பி பார்த்தாள்.

அப்போது அந்த நடேசன் தாத்தா ரோட்டின் அந்த பக்கம் தூக்கி வீசப்பட்டு இருந்தார்.... பயங்கரமான விபத்து..... அங்கிருந்த லேம்ப் போஸ்டில் தலை இடித்து ரத்தம் வழிந்தது..... நடேசன் தாத்தாவை இடித்த கார் பார்க் கேட்டில் முட்டிக்கொண்டு இருந்தது. அந்த டிரைவர் சீட்டில் இருந்தவருக்கும் பலமாக அடிப்பட்டு இருந்தது. மக்கள் அனைவரும் சூழ்ந்தனர். தாத்தா தாத்தா.... என்று நடேசன் தாத்தாவை எழுப்பினாள் ராகினி.

ரத்த கலரையுடன் மயக்கத்தில் இருந்த தாத்தா .... கண்களை திடீரென திறந்து என்னை காப்பாத்து மா.... என்று ராகினியிடம் கேட்டார். அலறி அடித்து கொண்டு எழுந்தாள் ராகினி.

அடக்கடவுளே..... இது என்ன ஒரு கனவு.... இதுவும் நடக்குமா?.... சங்கவி போல இந்த தாத்தாவையும் காப்பாற்ற முடியுமா?..... மணி என்ன?.... 3.30 ..... அடச்சே..... ஏன் நமக்கு இப்படி எல்லாம் கனவு வருது..... மாதவனுக்கு மெஸேஜ் செய்யலாமா?.... சீ சீ வேண்டாம்.... அவனே பாவம் அவ்வளவு தூரம் பைக்கில் போயிட்டு வந்ததிலேயே டயர்டுல தூங்கி இருப்பான்..... ரம்யா.... மம்தா.... யார் கிட்ட சொல்லலாம்.... நாளைக்கு மார்னிங் சொல்லிக்கலாம்..... ஹாலில் இருந்த பூஜை ஷெல்ஃபில் இருந்து திருநீறு பூசி கொண்டு வந்து படுத்தாள் ராகினி.

பிள்ளையாரப்பா.... காப்பாத்து.... என்று சொல்லி வேண்டிக் கொண்டு பின்னர் படுத்து உறங்கினாள்.

மறுநாள் சீக்கிரமாகவே எழுந்து விட்டாள். அவளால் சரியாக தூங்க முடியவில்லை. குளித்து விட்டு ரெடியாகினாள். பைக்கை எடுத்துக் கொண்டு பிள்ளையார் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி ஜங்ஷனுக்கு சென்றாள்.

பத்து நிமிடத்திற்கு பிறகு மாதவன் அங்கு வந்தான்.

என்ன இது அதிசயம்.... எப்பவுமே நான் வந்து வெயிட் பண்ணுவேன்.... நீ லேட்டா வருவ.... இன்னைக்கு எனக்கு முன்னாடி வந்திருக்க....

ராகினி முறைத்தாள்.

சரி சரி இரண்டு நாள் நீ முன்னாடி வந்த.... என்றான் மாதவன்.

அமைதியாக இருந்தாள் ராகினி.

என்னடி ஆச்சு.... ஏன் டல்லா இருக்க....

மாதவா....

ஹூம்.... சொல்லு.....

எனக்கு நேத்து ராத்திரி ஒரு கனவு வந்துச்சு டா....

என்னடி சொல்ற.... யம்மா மறுபடியும் என்னால ஊரு ஊரா சுத்த முடியாது.... உனக்காக நான் வேலையை விட்டு விட்டு சுத்தினா..... என்னை வேலையை விட்டு தூக்கிடுவாங்க.....

ஏய் சொல்றதை கேளு டா....

சொல்லு....

நடேசன் தாத்தாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகுற மாதிரி கனவு கண்டேன்.

யாரது நடேசன் தாத்தா?

தெரியல....

என்ன தெரியலையா?

ஆமாம் டா.... நான் நேத்து ஈவினிங் கடைக்கு போகும் போது ஒரு தாத்தா தள்ளாடி விழப்போனார்.... அவரை பிடித்து தூக்கி விட்டு வழி அனுப்பினேன்....

சரி.... அவரு பேரு நடேசனா?

அப்படித்தான் தோணுது....

என்னடி சொல்ற..... ஒண்ணுமே புரியல.....

இல்லடா.... கனவுல தான் நான் அவரோட பெயரை கேட்டேன்.... நிஜத்தில் கேட்கல.....

கடவுளே.... என்னை ஏன் இந்த லூசு கூட கோர்த்து விட்ட.... என்று வானத்தை பார்த்து சொன்னான் மாதவன்.

கோபம் கொண்ட ராகினி பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு கிளம்பினாள்.

ஏய் சாரி டி..... சாரி டி..... சும்மா கிண்டல் பண்ணேன்.... அதுக்கு போய் கோச்சிக்கிற....

மாதவா.... நீ கிண்டல் பண்ணதுக்கு எனக்கு கோபம் வரல.....

பின்ன?

என்னை நீ புரிஞ்சிக்கலியே ன்னு தான் எனக்கு கோபம் வருது.....

அவள் கையை பிடித்து நிறுத்தினான்.
எக்ஸ்டிரீம்லி சாரி டி செல்லம்....

தயவு செஞ்சு என்னை ஒரு சைக்கியாடிரிஸ்ட் கிட்ட கூட்டிக்கிட்டு போறீயா டா....

ஏய் என்னடி பேசுற?

உண்மையிலேயே தான் சொல்றேன்.... என்னால முடியல.... ரொம்ப டென்ஷனா இருக்கு.... இப்போ வர சன்டே வரைக்கும் என்னால சரியா சாப்பிட முடியாது தூங்க முடியாது..... என்னால இந்த டென்ஷனை தாங்க முடியல.... பிளீஸ்.

எனக்கு புரியுது டி.... என்று அவளுடைய கரங்களை பற்றி கொண்டு பேசினான் மாதவன்.

ஓகே டா.... நான் கிளம்பறேன்..... டைம் ஆகுது.... என்று சொல்லி அவள் கிளம்பினாள்.

பை டி.... என்று சொல்லி விட்டு மாதவனும் ஸ்டேஷனுக்கு கிளம்பினான்.

************

லேபிற்கு சென்ற பிறகும் ராகினி டென்ஷனா இருந்தாள்.

லஞ்ச் பிரேக்கில் மம்தாவிடம் விஷயத்தை சொல்லி கண்கள் கலங்கினாள் ராகினி.

ராகினி.... இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.... நான் மாதவன் பிரோ கிட்ட பேசறேன்.... என்னோட ஃபிரெண்ட் ஏவி ஹாஸ்பிடலில் டாக்டரா இருக்கான்.... உன்னோட டென்ஷனை குறைக்க என்ன பண்ணனும் கேட்டு சொல்றேன்.....என்றாள் மம்தா .

தேங்க்ஸ் மம்தா.

வெல்கம் டியர்.... சரி வா.... இப்போ போய் நம்ம வேலையை பார்க்கலாம்.... என்று சொல்லி விட்டு லேபிற்கு சென்றனர்.

அப்போது ஒரு போஸ்ட் மார்டம் சேம்பில்ஸ் வந்தது. அதை அனைவருக்கும் பிரித்து கொடுத்து நாளைக்குள் ரிப்போர்ட் சப்மிட் பண்ணனும்.... என்று சொல்லிவிட்டு.... பத்து நிமிடத்திற்கு பிறகு கான்பரன்ஸ் மீட்டிங். இந்த சேம்பில்ஸ் பத்தி பிரீஃப் டிஸ்கிரிப்ஷன் சொல்றேன் என்றார் டேவிஸ் சார்.

நியூ கேஸ்.... ஒரே எக்ஸைட்டிங்கா இருக்கு.... என்றாள் தேவி.

தேவி.... உன்னை மாதிரி நான் யாரையுமே பார்த்ததில்லை டி .... என்றாள் மம்தா.

ஏன் மம்தா.... என்று அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு கேட்டாள் தேவி.

ஏய்.... இங்கே வர சேம்பில்ஸ் எல்லாம் அன்நேச்சுரல் டெத்ஸ் தான....

ஆமாம்....

அப்புறம் அதை நீ ஆர்வமா எதிர்பார்க்கிறீயே.....

ஏய்....என்ன நீ.... என்னை ஒரு சேடிஸ்ட் மாதிரி போட்ரெயிட் பண்ற.... நான் என்ன எல்லாருக்கும் அன் நேட்சுரல் டெத்ஸ் வரணும் ன்னா ஆசைப்படறேன்?

ஏய்.... நான் அப்படி சொல்லல தேவி....

பின்ன நீ சொன்னதுக்கு அதுதான மீனிங்.....
நான் என்னோட ஜாபை லவ் பண்ணி இன்வால்வ் ஆகி இருக்கிறேன்....அது கூட உன்னால புரிஞ்சிக்க முடியலையா மம்தா..... என்றாள் ராகினி.

அம்மாடி.... உன் பேச்சுக்கே நான் வரல.... பை.... என்று சொல்லி விட்டு எழுந்து கான்பரன்ஸ் மீட்டிங் ரூமிற்கு நடந்து சென்றாள் மம்தா.... பாவம் அன்பரசன் என்று சொல்லி கொண்டே.

மம்தா.... தேவையில்லாம ஏன் அன்பரசனை இதுல இழுக்குற.... என்றாள் தேவி.

பாம்பு காது போல இவளுக்கு.... முணுமுணுத்தா கூட கேட்குது.... என்றாள் மம்தா.

பாம்புக்கு காது இல்ல.... அது கூட தெரியாத உன்னை வேலைக்கு சேர்த்தாரே டேவிஸ் சார் அவரை சொல்லனும்....

பாதி தூரம் நடந்து சென்ற மம்தா.... திரும்ப வந்து.... ஜஸ்ட் ஸ்டாப் இட்.... என்று எச்சரிக்கும் தோணியில் சொல்லி விட்டு சென்றாள்.

பின்னர் அமைதியாகி விட்டாள் தேவி.

அனைவரும் கான்பரன்ஸ் மீட்டிங் ரூமிற்கு வந்ததும். ஜார்ஜ் டேவிஸ் வந்த சேம்பில்களை பிரித்து பிரொஜக்டரில் போட்டார். அவர் யாருக்கு எந்த எந்த சேம்பில் கொடுத்திருக்கிறார் என்ற அட்டவணை இருந்தது.

இந்த விக்டிம் பேரு அஹமதுல்லா....... என்று சொல்லி விட்டு ஏதோ பேப்பரை பார்த்து எடுத்து கொண்டு இருந்தார்.

மம்தா ராகினியிடம் அங்க பாரு ராகினி..... சந்திரமுகி திரைப்படத்தில் வரும் கங்கா பூசாரி கதை சொல்லும் போது எப்படி பார்ப்பாங்களோ அதே போல டேவிஸ் சாரை பார்த்து கொண்டு இருக்கா இந்த தேவி.... என்று சொல்லி சிரித்தாள்.

ராகினி தேவியை பார்த்தாள். அவளுக்கும் சிரிப்பு வந்தது. மம்தா சொன்னது போல தான் அவளும் டேவிஸ் சாரை பார்த்து கொண்டு இருந்தாள்.

***************

தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.