நட பிரம்மம்
நடை -1
அவள்.
அவள் அப்போது தான் தன் வீட்டிற்குள் நுழைந்து இருந்தாள்.
வெளியில் மழை அடித்து ஓய்ந்து இருந்தது.
இரவா பகலா என விவரிக்க முடியாதபடி இருந்தது பொழுது.
மாலை மங்கும் நேரம் என வைத்துக்கொள்ளலாம்.
கருமையையும் சாம்பல் நிறத்தையும் குழைத்து அடித்தது போல இருந்தது வானம். அவள் மனமும் அப்படி தான் இருந்தது.
மழையில் தொப்பலாக நனைந்து இருந்தாள். கட்டி இருந்த புடவை அவளை விட மனம் இல்லாமல் சிக்கென பிடித்து இருந்தது.
அதற்காவது தன்னை பிரிய மனம் இல்லையே என ஒரு நொடி மகிழ்ந்தாள்.
ஒரு நொடி தான்.
ஒரே ஒரு நொடி தான்.
வந்தவள் நேரே கண்ணாடியின் முன் போய் நின்றாள். வாயில் இருந்து வந்த மூச்சுக்காற்றில் கண்ணாடி பனிமூட்டமானது. சட்டென அது காற்றில் காணாமல் போனது.
கண்ணாடியில் கண்களை சுழல் விட்டவளின் கண்கள் ஓரத்தில் இருந்த விரிசலில் நின்றது. விரிசல் அவளை பார்த்து சிரித்தது.
மொத்தமாக கண்ணாடி இன்னும் உடையவில்லை. விரிந்து தான் போய் இருந்தது. இன்னும் கொஞ்சம் மூலையில் நொறுங்கி இருந்தது. அவளைப் போலவே!
கண்ணாடியில் பார்த்துக்கொண்டே இருக்க தன்னிடம் என்ன இருக்கிறது என அவளுக்கு தோன்றி இருக்க வேண்டும். கண்கள் பக்கத்தில் இருந்த சுவர் மீது விழுந்தன.
சிலருக்கும் ஒரு பேனாவை பார்த்தால் முதலில் அதை எடுத்து எதன் மீதாவது கிறுக்கி பார்க்க தோன்றும். அதை போல், சுத்தமாக கிறுக்கல் இல்லாத சுவரை பார்த்ததும் அவளுக்கு எப்போதும் போல் எழுத தோன்றியது.
நேரே நடந்தவளின் கால்களில் இருந்த ஈரம், அன்று கிருட்டிணனின் பிறந்தாள் இல்லை என்றாலும், தரையில் கால்களை அச்சிட்டன.
அடுப்பிடம் சென்றவள், அங்கே இருந்த கரித்துண்டை எடுத்து வந்தாள்.
எழுதினாள்.
“என் மார்பில் ஒரு துளையை ஒட்ட
எழுத்துக்களால் சிமிட்டி போட்டேன்
இப்போது அந்த வழியே தான் காற்று ஊதி செல்கிறது.
தொட்டு செல்வது தென்றலா சூறையா என-
அந்த துளைக்கே வெளிச்சம்.”
யார் இவள்?
நயம் இல்லாத ஒரு கவிதையோ, குரல் இல்லாத ஓசையோ , அல்லது மொழி இல்லாத மெல்லிய ராகமோ, இறைவனின் படைப்பில் இப்படியும் ஒரு ஜீவனா என்றெல்லாம் நமக்கு தோன்றினாலும், அதற்கு பதில் இல்லை.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.
கவிதைக்கும் அடியில் அவள் கிறுக்கிய “தென்றல்” என்ற பெயரில் இருக்கும் மென்மை கூட அவளின் வாழ்க்கையில் வைக்க மறந்துவிட்டான் மேலே இருப்பவன்.
அவளது உடல் மௌனமாகவும், மனசாட்சி எழுத்துக்களாகவும் மாறி பல வருடங்கள் உருண்டோடி இருந்தன.
மன குழப்பங்களுக்கும், குருட்டு கனவுகளுக்கும் நடுவே அவளின் எழுத்துக்கள் ஒரு தீபமாய் மாறி உருண்டோடி இருந்தன. அவளது ஓசை அற்ற கவலையும், இதயம் உகுக்கும் கண்ணீரும் கவிதைகளாய் மாறி சுவர்களையும், காதிகங்களையும் மரச்சில்லுகளையும் அலங்கரித்து இருந்தன.
இல்லை இல்லை !
பதம் பார்த்து இருந்தன என்பதே சரியாக இருக்கும்.
எழுதி முடித்த அவள், மீண்டும் கண்ணாடியின் முன் வந்தாள். நனைந்த தலைமுடி இடை வரை நீண்டு இருந்தது. அதை பிரித்த போது, அதை பிரித்து துவட்டும் விதத்தில் கூட கவிநயம் சொட்டியது, மழைத்துளியோடு!
“தென்றல்.. என்ன பண்ணிட்டு இருக்க ?” என பின்னால் கேட்ட குரலில் இருந்தே பேசுவது யார் என அவளுக்கு தெரிந்து போனது. எப்போதும் போல் புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.
சுவர்களின் இடங்களை கவிதை வரிகளாலும் மனதின் எண்ணங்களாலும் நிறைப்பவளுக்கு வார்த்தை முத்துக்களை வாயின் வழியே வெளியேற்ற எப்பொழுதுமே விருப்பம் இருந்ததில்லை!
கேட்ட கேள்விக்கான விடை மட்டும் மனதிற்குள் ஓடியது!
“நான் என்ன பண்றேன்? பழைய ட்ரெயின் டிக்கெட், நியூஸ் பேப்பர் ஓரம் ,கோவில் சுவர்னு எல்லா இடத்திலும் எழுதி தேய்கிறேன்!” என அவள் கூறிய பதில் கேள்வி கேட்ட குரலுக்கு சொந்தமான மனதிடம் போய் சேரவில்லை .
“சரி வா காபி குடிக்கலாம்!” என்றது அந்த இன்னொரு குரல் .
அமைதியாக அந்த சில்லென்ற மாலையில் தனது கோப்பையில் இருந்த குளம்பியை குடிக்க தொடங்கினாள் அவள்.
தன்னை பற்றி நினைத்துப் பார்த்தாள்.
தான் யாரையும் நேருக்கு நேர் பார்த்து பேசியது இல்லை.
கூட்டத்தில் முதலில் போவதே இல்லை. அப்படியே வேறு வழி இல்லாமல் போனாலும், ஏதோ அந்த கூட்டம் தன்னை விழுங்கி விடுவது போல ஒரு பிரம்மை தன்னை ஆட்கொண்டு விடுகிறது.
எப்போதாவது ஒரு நாள் வெளியே நடக்கும் பொழுது கூட செருப்பு அணிவதில்லை. ஏனோ அவளுக்கு கற்களின் மேல் செருப்புகள் செய்யும் ஓசை பிடிக்காமல் போனது. அது அதிக சத்தமாக இருப்பதாக கூட அவளுக்கு தோன்றும்.
முகச்சாயங்களையும், உதட்டு பசைகளையும் அவள் விரும்புவதில்லை.
கருப்பு வளையங்களுக்கு நடவில் பொதிந்திருக்கும் கண்கள் எப்போதும் ஒரு வெறுமையை பறைசாற்றின.
சற்று முன் கேட்ட குரலை தவிர ,யாருடனும் அவள் பழகுவது இல்லை.
பழக தேவை இருப்பதாகவும் அவளுக்கு தோன்றியதும் இல்லை.
அவள் இருக்கும் இடம் கூட வேறு வழி இல்லாமல் அவள் அங்கு இருப்பதாகவே அவளுக்கு தோன்றியது.
காற்றில் கலந்திருக்கும் வேப்ப மர வாசம், அவளுக்கு மீண்டும் கசப்பை உணர்த்தியது.
மஞ்சள் நிறம் கூட அவளுக்கு இதம் அளிக்கவில்லை.
காற்றில் கரைந்த தைலத்தின் வாசனை தன் கண்ணீரை மரைக்க பயன் படுவதாகவே அவள் நினைத்து இருந்தாள்.
ஆனால்..
அவள் யாரிடமும் அனுதாபத்தை தேடியதில்லை.
அவளிடம் இருப்பதெல்லாம் வார்த்தைகள்.
வார்த்தைகளை கோர்த்து மாலை ஆக்குகிறாள்.
அவள் வார்த்தைகளுக்கு சக்தி உண்டு.
தாயைப்போல் அரவணைக்க
காதலை போல் பரிதவிக்க
ஆவியை போல் காணாமல் போக….
அவள்….. தென்றல்
******
சில பெண்கள் தங்களது எலும்புகளில் நெருப்புடன் பிறப்பதாக கூறுவர்.
இவள் அப்படி ஒரு மங்கையே !
ஆனால் இந்த நெருப்பு யாரையும் சுட்டரிக்கவில்லை. மாறாக குணப்படுத்துகிறது.
சின்னஞ்சிறு கனவுகள் காணும் வயதில் ,யாரோ ஒருவர் விதைத்த எண்ணமானது விஸ்வரூபம் எடுத்து பெரியதாய் வளர்ந்த காலத்தில் தன்னை மருத்துவராக கனவு கண்டாள்.
வெள்ளை அங்கியை மாட்டியபடி, துடிநோக்கியை கழுத்தில் மாலையாக போட்டபடி, கைகள் இரண்டும் தனக்கு வேண்டியதை தேடியப்படியும், தேடி உணர்ந்ததை சரியான இடங்களில் குறிப்பதையும் வழக்கமாய் கொள்ள ஆசைப்பட்டாள்.
உடற்கூறு புத்தகங்களையும் ,அறுவை சிகிச்சைகளையும், உயிரை காக்கும் ஒளியை கொண்ட அறைகளையும் ஆள நினைத்தாள்.
ஆனால் வாழ்க்கை என்பது எப்பொழுதும் நாம் எதிர்பார்ப்பது போல அமைந்து விடுவது அல்லவே !
வாழ்க்கை அவளுக்கான பாதையை வேறாக வகுத்து வைத்திருந்தது.
இதோ இன்று இருபதுகளின் முடிவில் அந்த சிறிய கிராமமும் ,வானத்தோடு ஒட்டி உறவாடும் வயல் வெளிகளும் சந்திக்கும் இடத்தில் இருந்தாள்.
யாருடைய அனுமதியையும் கேட்டிலாமல் நுழையும் காற்றுக்கு நடுவே , ரகசியங்கள் பல பேசும் காலங்களுக்கு மத்தியில் , சிறியதாய் தனக்கென்று ஒரு குடிலை அமைத்து வாழ்ந்து கொண்டிருந்தாள்.
ஆம் !
வாழ்ந்து கொண்டிருந்தாள் என்று கூறுவதே மிகச் சரியாக இருக்கும்!
ஆடம்பர மாளிகையும், கூட கோபுரமும், பஞ்சு மெத்தையும், பட்டுப் புடவையும் கொடுக்க முடியாத நிம்மதியையும் சந்தோஷத்தையும் அங்கு இருந்த வேப்பமர வாசனையும், மஞ்சளின் நிறமும் ,தைல மரத்தின் நெடியும் அவளுக்கு கொடுத்தன!
அவளது குடிலுக்கு தனியாக பெயர் வைக்கும் அளவு, அது பெரியதாக இல்லை என்றாலும் ,அந்த கிராமத்து மக்கள் அக்குடிலுக்கென தனி பெயர் வைத்திருந்தனர்.
அங்கு வந்து சென்று கொண்டிருந்தனர்.
எதற்காக வருகிறார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா ?
அங்கே வருபவர்கள் பலர் நோண்டியபடியும், அழுதபடியும், ரத்தம் சொட்டும்படியும் , கால் உடைந்தபடியும் ஏதேதோ துன்பத்தோடு வந்தனர்.
வெளியே தெரியும் காயங்கள் ஒரு புறம் என்றால், கண்கள் நிலை கொள்ளாமல் அல்லல் பட்டு, தத்தளிக்கும் மனதை எதிரொளிக்கும் பார்வையோடும், கனத்த மனதோடும் ஏதோ ஒரு அமைதியை நாடி அங்கு வருபவர்களும் உண்டு.
அவள் ஒரு செவிலி மட்டும் இல்லை !
அவள் அங்கு இருக்கிறாள் என்பதே பலருக்கு தெம்பு.
அவள் தன் குரலை என்றுமே உயர்த்தியது இல்லை, இருந்தாலும் மக்கள் அவளுக்கு செவி சாய்த்தனர்.
தான் அபூர்வங்களை நிகழ்த்துவதாக அவள் என்றுமே கூறியது இல்லை ,இருப்பினும் அவள் அதையே செய்தாள்.
திடமான கைகள், வருடங்களின் பழக்கத்தினால் நோயாளிகளுக்கு செய்ய வேண்டியதை ,யாருடைய அறிவுறுத்தல்களும் இல்லாமல் செவ்வனே செய்து கொண்டிருந்தன.
அதீத ஆடம்பரம் இல்லாமல், அழகோவியமாய் அவள் உடுத்தும் அந்த பருத்தி புடவை கூட அவளை ஓர் அரசியாய் காட்டியது.
நெடுநடுவென வளர்ந்திருந்த சிகை ஒரு சிஷ்யனை போல் அவளது வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டது!
பெரிய ஆழமான அவளது கண்கள் அவளின் வயதை விட அதிக பக்குவத்துடன் காணப்பட்டன.பிரச்சனை என்னவென்று சொல்வதற்கு முன்னரே அதை அனுமானிக்கும் திறனை கொண்டு இருந்தன! இத்தனைக்கும் மேல் அவளை வித்தியாசமாய் மறக்க முடியாதவளாய் காட்டியது என்ன தெரியுமா?
ஒருவரின் மனதை இலகுவாக்கும் அவளது மென்மையே!
ஒரு இறக்கவிருக்கும் நபருக்கு பக்கத்தில் அவரின் மகளைப் போல் அமர்ந்திருப்பாள் !
சீழ் பிடித்து இருக்கும் ஒரு குழந்தையின் காயத்தை தூய்மைப்படுத்தும் பொழுது அதன் தாயாகவே மாறி இருப்பாள் !
புதிதாய் கைம்பெண்ணெய் மாறி இருக்கும் ஒரு பெண்ணிற்கு உறுதுணையாய் இருப்பாள் ! பேசாமல் கூட ஒருவருக்கு தைரியம் கொடுக்க முடியும் எனில் ,அது அவளால் தான் முடியும் !
ஆளுமை என்பது அதிகாரத்தில் இல்லை என்பதற்கு அவள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு !
இங்கே இத்தனையையும் அமைதியாய் கடந்து போகும் அவள் , ஆண் ஆதிக்கம் நிறைந்த இடங்களில் தன் மனதில் தோன்றுவதை எவருக்கும் பயப்படாமல் சொல்லும் தைரியத்தை வைத்து இருந்தாள்.
அப்பொழுது கூட அவரது குறலின் தொனி உயர்ந்ததில்லை !
இரண்டு வயல்கள் தாண்டி பிள்ளையை பிரசவிக்க போராடும் யாரோ ஒரு பெண்ணின் பிரசவத்தை பார்க்க அந்த கொட்டும் மழையில் தன் மிதிவண்டியை மிதித்து செல்லும் பொழுதாகட்டும், இல்லை தன்னிடம் வரும் பலரின் துயரத்தை தன் சக்திக்கு மீறி போக்கிவிட எண்ணும்போதாகட்டும் , ஒருவர் கூட அவளிடம் அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்க மறந்து இருந்த பொழுதாகட்டும்.. அவள் கவலை கொண்டது இல்லை.
அவள் இவ்வுலகத்திற்கு தன்னை எவ்வாறு காட்டுவது என்பது என்னவோ அவளது முடிவு தான்.
இவ்வுலகம் தன்னை எந்த சூழ்நிலையில் எவ்வாறாக பார்க்க வேண்டும் என்பதை அவளே முடிவு செய்கிறாள் !
அவளது வார்த்தைகள் அவளது எண்ணங்களை பிரதிபலிக்கின்றன !
அதனால் தானோ என்னவோ அவளது பெயர் ‘வாங்மயி’
தொடரும்.