• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நட பிரம்மம்- நடை -3

kkp6

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
34
18
Tamil nadu
நடை- 3

தூசி வெள்ளம் பெருக்கெடுத்த பாதையில் அந்த வண்டி ஓடி வந்தது. அநேகமாக ஓட்டப்பந்தயமாக இருக்க வேண்டும் . அவ்வளவு வேகமாக வந்தது.

குறுகலான கிராமத்து பாதையை பற்றி எல்லாம் , காட்டெருமையை போல் இருந்த அந்த வண்டிக்கோ, வண்டியை ஓட்டிய எருமைக்கோ கவலை இருந்ததாக தெரியவில்லை.

காரணம், அவன் வண்டியை அப்படி விரட்டினான். அதுவும் கீழே உள்ள கற்களையும் கரடு முரடுகளையும் முத்தமிட்டு சீறி பாய்ந்தது வண்டி.

ஆனால், பாவம் அவன். கூகுள் ஆண்டியின் சக்காளத்தியான கூகுள் மேப்ஸ் அவனை நெடுஞ்சாலையிலிருந்து இந்தப் பக்கவாட்டு பாதைக்கு அனுப்பியிருந்தது.

தெரியாமல் அனுப்பியதா இல்லை விதியை முன்கூட்டியே தெரிந்து அனுப்பியதா என இனிமேல் தான் நமக்கு தெரியும்.

பெயர் தெரியாத இரு கிராமங்களுக்கு இடையில், அவன் தனியாக இருந்தான். நகரத்தின் வேகத்திலிருந்து வெகு தொலைவில், தன்னந்தனியாக, அவன் மிரட்ட ஆள் அல்லாமல்…! இங்கே இருந்த சூழல் தான் அவனை மிரட்டி பார்த்தது.

சூரியன் மறையத் தொடங்கி இருந்தான்.வானம் ஆரஞ்சு பழத்திடம் சற்று நிறத்தை கடன் வாங்கி இருந்தது. காகங்கள் அந்நாளின் வேலைகளை முடித்துக்கொண்டு மெதுவாக பறந்தன. அவற்றின் சிறகுகள் வானத்தில் மென்மையாக அசைந்தன. அருகில் எங்கோ ஒரு கோவில் மணி ஒலித்தது, அதுவும் அமைதியான தாளத்தில்.

தமிழமுதன் (அமுதன் என இனி வைத்துக்கொள்ளலாம்) வண்டியின் ஸ்டீயரிங்கை எரிச்சலுடன் தட்டினான். போனில் சிக்னல் இல்லை. காரின் நேவிகேஷன் திரை உறைந்து போயிருந்தது.

“************” என அவன் சத்தமாகவே கத்தினான்.

எப்போதும் தனிமையை விரும்பும் அவன் அந்த இடத்தின் தனிமையை வெறுத்தான்.

அமைதி இல்லா நகரத்தில், அவன் ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்தான், எல்லாமே அவன் கட்டுப்பாட்டில் இருந்தது. அவனுடைய திமிர் இங்கே எடுபடவில்லை.


அதுவும் இப்போது , இங்கே ,அவன் ஒரு அந்நியனாய், உதவியற்றவனாய் இருப்பது அவனுக்கு ஒரு எரிச்சலை தந்தது.. மீண்டும் அந்த வார்த்தையை கத்தினான், இன்னும் சூூடாக. உண்மையில், அவனது சூட்டில் ,அது கூட பொசுங்கி போய் இருக்கும். அந்த நிலையில் எதுவும் சரியாக அமையாத நிலையில் அதீத எரிச்சலுடன் இருந்தான்.

“ என்ன ஊரு டா இது. ஒரு டீ கடைய கடைசியா க்ராஸ் பண்ணி பத்து நிமிஷம் மேல ஆச்சு!” என நினைத்தபடி காரை ஓட்டியவன், “வாழ்முடி- 4 கி.மீ” என்ற திசைப்பலகையை பார்த்தான்.
அவனுக்கு ஏனோ அந்த பெயர் தெரிந்தது போல் தோன்றியது.

பக்கவாட்டில் இருந்த கண்ணாடியைப் பார்த்தான். அது தூசியில் குளித்து இருந்தது. தூசி தான் தெரிந்ததே தவிர, பின்னால் வருவது எதுவும் தெரியவில்லை.

கண்ணாடியில் இருந்து முன்னே பார்வையை திருப்பியவன் ஒரு நொடி பயந்து தான் போனான். முன்னே சாலையில் ஒரு உருவம் வெள்ளை உடையில் சென்றது. சட்டென பார்த்ததால் அவனுக்கு எதுவும் விளங்க வில்லை. சற்று ஆசுவாச படுத்திக்கொண்டு பார்த்த பின்னர் தான் தெரிந்தது, அது ஒரு பெண் என!

அவள் காற்றில் பறப்பது போல மெதுவாக நடந்தாள். கால்கள் தரைக்கு வலிக்காமல் நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே நடப்பதாக இருந்தது.அவள் அணிந்திருந்த பருத்தி உடை, அந்த வெய்யிலுக்கு ஏற்றதாக இருந்தது.

அவளின் கூந்தல் விழுதுகள் பின்னலையும் தாண்டி அவளின் கன்னத்தில் இழைகளாய் விழுந்தன.காலணி அணியாமல் , சுட்டெரிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் அவள் சாலையில் நடந்தாள்.இல்லை கடந்தாள்.
ஒரு கையில் சிறிய மருத்துவப் பெட்டி, மற்றொரு கைப்பக்கம் அவளுடன் ஒரு சிறுவன் நடந்து வந்தான், பதினொரு வயது இருக்கலாம். அவனின் கால் காயமடைந்திருந்தது, அவன் வலியை மறைக்க முயன்று, கண்கள் கண்ணீரை மறைத்தன, உதடுகள் இறுகின.

அவள் அங்கு வந்த கட்டெருமையை கவனிக்கவில்லை. அமுதனின் எரிச்சல் இதயத்தில் தாவியது. அவன் ப்ரேக்கின் கழுத்தை நெறுக்கவும், அவள் அவனை பார்க்கவும், அங்கே விழிகளின் வானம் ஆழமானது.

சில வினாடிகள் மட்டுமே நீடித்த அந்த பார்வையின் பரிமாற்றம், பின்னாளில் நீளுமா, நீளவிடலாமா என இயற்கை யோசித்தது.அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்து, அவளை நடக்க வைத்தது.

அவனை பார்த்து இதுவரை பயந்தவர்களை தான் அவன் பார்த்து இருக்கிறான். ஆனால் இவளோ, அவனது ஆண்மைக்கே உரியதான ஆளுமையின் ஆணிவேரையே அசைத்ததாக தோன்றியது அவனுக்கு.

பின்னர், அவள் பார்வையைத் திருப்பி, சிறுவனிடம் மெதுவாக ஏதோ பேசினாள். அவனை அழைத்து, அருகில் இருந்த ஒரு குடிசைக்குள் நடந்தாள். பின் மறைந்து போனாள்.

அமுதன் மூச்சு விட்டான். அவன் மூச்சை அடக்கியிருந்ததை அப்போதுதான் உணர்ந்தான். இதயம் துடித்தது.புரியாத பரிதவிப்புடன்.

*****
அந்த இடம் வாங்மயியின் குடிலின் ஒரு அங்கமாக இருந்தது.
வாங்மயி சிறுவனை ஒரு மர பலகையில் உட்கார வைத்து, அவன் காலில் இருந்த காயத்தை மெதுவாக சுத்தம் செய்தாள்.

“யார் உன்ன மரத்துல ஏறச் சொன்னது, கார்த்தி?” என்று கேட்டாள், மென்மையான குரலில்.

சிறுவன் மூக்கை உறிஞ்சினான். “அந்த ரவிப்பய இருக்கான்லக்கா, அவன் தான் என்னால ஏற முடியாதுன்னு சொன்னான். அதான் ஏறினே!”

வாங்மயி சிரித்ததில் சோழிகள் சிதறி சத்தமிட்டன.

“ரவியை விடு என் பேச்ச கேப்பியா?” என்றாள். சிறுவன் வெட்கத்துடன் பார்த்தான்.
அவள் காயத்தை வேகமாகவும், உறுதியாகவும் சுத்தம் செய்தாள். வாய் ஏதோ ஒரு இதமான பாட்டை முணுமுணுத்தது. பின்னர், அவனுக்கு ஒரு மிட்டாய் கொடுத்து,

“உன் அம்மாகிட்ட சொல்லு என்ன.. நா நாளைக்கு வந்து அவங்களுக்கு ரத்த அழுத்தத்த பாக்கறேன். அப்றம் நீயும் அம்மாவும் மறக்காம மருந்து சாப்பிடுங்க.. சரி்யா?”
சிறுவன் மண்டையை நன்றாகவே ஆட்டினான்.

“ஓடு!” என அவனை அனுப்பிவிட்டு, இடத்தை சுத்தம் செய்தாள்.சிறுவன், குறைந்த நொண்டலுடன் ஓடினான்.

“ அம்ம்மா..” என சற்று சோம்பல் முறித்து வாங்மயி முதுகை நிமிர்த்தினாள். காலையிலிருந்து அவள் சாப்பிடவில்லை.

திடீரென, வெளியில் ஒரு சத்தம்.

யாராக இருக்கக்கூடும் என்ற எண்ணத்துடன், எழுந்து வெளியே சென்றாள்.

அங்கே நின்று இருந்தான் அவன்.

அமுதன்.

“யார் வேணும்?” என்றாள் வாங்மயி.

“ பெட்ரோல் பங்க் எங்க? என்றான். அவன் கேட்ட தொனியின் ஒரு அதிகாரம் இருந்தது.

ஆனால் அதற்கெல்லாம் அவள் பயப்பட்டதாக தெரியவில்லை.

“இன்னும் ஒரு ஆறு கிலோமீட்டர் போனா இருக்கு!” என்றாள் அசட்டையாக.

“வேலை செய்யற போன் இருக்கா?” என்றான் சுற்றும் முற்றும் பார்த்தபடி.

அவளும் சளைக்காமல், “அந்த பாலத்த தாண்டி போனா தான் சிக்னல் வரும்” என்றாள்.

பயம் இல்லாத அவளது குரல் அவனின் திமிரை சுரண்டி பார்த்தது.
ஆனாலும் தன் நிலைமை இவ்வாறு இருப்பதை வெறுத்தான். தன்னை பார்த்து அனைவரும் பயப்பட, இவளோ, சிறு கண் சிமிட்டலில் கூட பயம் இல்லாதது அவனது அகங்காரத்தை சட்டி ஆட்டித்தான் பார்த்தது.


அமுதன் பார்வையை சுழல விட்டான். ஐந்தாறு வீடுகள் தான் கண்ணில் பட்டன. சில ஆடுகள், சில வண்டிகள். அவன் மாட்டியிருந்த இடத்தில் அவைகள் மட்டுமே இருந்தன.

“ எதுக்கு நா இவ்வளவு தூரம் வந்து அவஸ்த படணும் ! **********” என தன் அன்றைய விதியை நொந்து கொண்டான்.

வாங்மயியின் குடிலுக்குள் பார்வை சென்றாது. சிறியதானாலும், அங்கே ஒரு உயிர்ப்பு இருந்தது. வேலமும் , மஞ்சளும் கலந்து அவன் நாசியை ஏதோ செய்தது.

“இப்படி ஒரு இடத்துல எப்டி இருக்க?” என்று அவன் கேட்டான். அதில் ஆச்சரியமும் ஏளனமும் சேர்ந்தே நடனமாடின.

வாங்மயி பதறவில்லை. “ நீங்க நீ வா போன்னு என்னை கூப்பிடறதுக்கும் ஒருமையில பேசறதுக்கும் உங்களுக்கு உரிமை இல்ல. அது போக, இது ஒன்னும் வாழ முடியாத இடம் இல்ல.” என்றாள் தைரியமாய்.

அமுதன் கடுப்பாக திரும்பி நடந்தான். அவள் கண்ணில் சற்றும் பயமில்லை என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் முன் அவளின் விழி, அவனது ஆற்றல், ஆற்றாமையாக உருக நிழலாய் நின்றது.

சில மணி நேரம் கழித்து அங்கு வந்த ஒருவரின் உதவியுடன் காட்டெருமை பெட்ரோல் அமிர்தத்தை குடித்து உயிர்த்தெழுந்தது.

ஏனோ அவனது கால்கள் மீண்டும் வாங்மயியின் குடிலுக்கு நடந்தன. செய்த உதவிக்காக அப்படி ஒன்றும் நன்றி சொல்பவன் இல்லையே! எதற்காக அங்கு செல்கிறான் என அவனுக்கே தெரிவது சந்தேகம் தான்!

அவள் அங்கு நின்று இருந்தாள். கண்களில் அதே தைரியம். அவனை மீண்டும் சீண்டிப்பார்த்தது.

எதற்காக வந்தான் என மறந்து போனது போலும் ! வாசல் வரை சென்றவன், எதுவும் பேசாமல் திரும்பி நடந்தான். அவ்வளவும் அழுத்தம். நடந்தவனின் கண்ணில் பட்டது அந்த கவிதை.

அமுதன் கவிதையை வாசித்தான். அது கவித்தது:

என் குரல் மௌனமானாலும்,

காகிதத்திற்கு கேட்கும்.
நான் பேசவில்லை,

மையில் உதிர்கிறேன்.”

அவன் மனம் ஏனோ இறுகியது.அந்த வார்த்தைகள் அவனைத் தொட்டன,ஆனால் ஏன் என்று புரியவில்லை.
கடைசியாக கிறுக்கி இருந்த தென்றல் என்னும் பெயரையும் வாசித்தான்.
வாங்மயி தான் தென்றல் என நினைத்து வெளியேறினான்.

****
அன்று வீட்டிற்கு வந்தும் அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.வாழ்முடியின் தூசி பாதைகள் பின்னால் மறைந்திருந்தாலும், வாங்மயியின் முகம் அவன் மனதில் ஒளிர்ந்தது. அவள் விழிகள்—பயமற்றவை, ஆனால் ஆழமானவை—அவனைப் பார்த்தபடி நின்றன. அவளின் மௌனம், அவளின் வீட்டு சுவரில் இருந்த "என் குரல் மௌனமானாலும், காகிதத்திற்கு கேட்கும்” என்ற வார்த்தைகள் அவனைத் துரத்தின.அவன் மனம் இரண்டாகப் பிளவுபட்டது. அவள் அவனைப் பொருட்படுத்தாதது அவனது ஆணவத்தை எரிச்சலூட்டியது.

நகரத்தில், அவன் ஒரு முக்கியமானவன்; அங்கு, அவள் முன், அவன் ஒரு நிழல் மட்டுமே.

ஆனால், அவளின் உண்மையான இருப்பு, அந்த மஞ்சள் மணம், அந்தக் கவிதை—அவை அவனுள் ஏதோ ஒரு உணர்வைத் தட்டியெழுப்பியது. அது என்னவென்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அறையில் இங்கும் அங்கும் நடந்தான்.

விளக்குகள் ஒளிர்ந்தபடி இருந்தன.

அவனின் மனம் மட்டும் வாங்மயியின் நடத்தையில் தங்கியிருந்தது,

கோப ரேகையுடன்!


தொடரும்

நட பிரம்மம் (1).png