• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நட பிரம்மம் - நடை 4

kkp6

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
34
18
Tamil nadu
நடை -4

அன்றும் வெயில் சுட்டெறித்து மண்டையை பிளந்தது. தனக்கு தேவையான மூலிகைகளையும் நாட்டு மருந்துகளையும் வெளியில் பரப்பி இருந்தாள் வாங்மயி.

காற்றில் உலர்ந்த துளசியின் மணம், வயலில் இருந்த ஈரமண்ணின் வாசனையுடன் கலந்து, சிறு முற்றத்தில் ஒரு மென்மையான வாசம் நடனமாடியது.

சூரியன் மறையத் தொடங்கியிருந்தான், வானத்தில் ஆரஞ்சு பொன்னையும், மங்கிய நீலத்தையும் தீட்டி, ஒரு கனவின் மயக்கத்தைப் பரப்பினான்.

வாங்மயி மர மேசையருகே நின்று, மருத்துவ இலைகளைப் பிரித்து, பழைய பாடல் ஏதோ ஒன்றை முணுமுணுத்தபடி காய்ந்தவளை திரட்டினாள்.

அவளின் கைகள், பழகிய மென்மையுடன், இலைகளை பறித்து, கயிற்றில் கட்டி, ஒதுக்கி வைத்தன—ஒரு தவத்தின் தாளமாக.

வெளியில் வேம்பு மரத்தின் இலைகள் காற்றில் ஆட, அவள் மனதில் ஒரு தயக்கம் மெல்ல எழுந்தது, ஆனால் அவளின் பாடல் அதை மறைத்தது.

உள்ளே, ரேடியோ மெலிதாக ஒலித்தது, அந்த பாடலின் நினைவுகளை மீட்டு, பின்னர் மனம் அதில் லயித்தது.மௌனத்தின் ஆட்சியை மீண்டும் உறுதி செய்தது.

வாங்மயி உள்ளே நுழைந்தாள், அவள் காலடி மண் தரையில் மென்மையாகப் பதிந்தது. வந்தவள் அமர்ந்தாள். சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.

ஒரு கிறுக்கல் சத்தம்—பேனாவின் கீறல், காகிதத்தில் ஒரு காயமாக.

“இன்னும் ரெண்டு வாரத்துக்கு இலை எல்லாம் உலர்த்தியாச்சு!” வாங்மயி பேசினாள். கைகளை பக்கத்தில் இருந்த துணியில் துடைத்தபடி.

“மறுபடி மழை வந்தா, எல்லாம் ஈரமாகிடும், துளசியின் மணம் கூட மறைஞ்சு போகும்.” அவள் குரலில் ஒரு மென்மையான கவலை!

அவளின் கண்கள் அந்த காகிதத்தில் நின்றன.

“வலியை கவிதையாக்கற போல!” என்று அவள் கிண்டலாகக் கூறினாள், புன்னகையுடன்.

தென்றல் பதிலளிக்கவில்லை. அவள் காகிதத்தைக் கிழித்து, பக்கத்தில் வைத்து, அடுத்த பக்கத்தில் எழுதத் தொடங்கினாள். அவள் எழுத்து, ஒரு கத்தியின் கூர்மை, ஆனால் உள்ளே ஒரு காயத்தின் வலி.

“செல்வி இன்னிக்கு வந்திருந்தா,” வாங்மயி தொடர்ந்தாள்.

“என்னவாம்?”

“அவ புருஷன் மறுபடி குடிக்கறானாம். அவளை அடிச்சிருக்கான். ஆனா அவள் இன்னும் முயற்சி செய்ய விரும்பறா. ஒருவேளை அவன் மாறுவான்னு சொல்றா.”

“அவ முட்டாள்,” என்று தென்றல் மொத்தமாக பதிலளித்தாள்.

“அப்படின்னு சொல்ல முடியாது, ஒரு வேளை, ஒரு காலத்தில் அவளை அவன் நேசிச்ச பாதிப்பை இன்னும் அவ மனசுல வச்சிருக்கலாம். அவளுக்கு அது இன்னும் பிடிச்சிருக்கலாம்.அதுனால எடுத்தோம் கவுத்தோம்னு இருக்க கூடாது இல்லயா?”

“நீ எப்பவும் மனுஷங்களுக்கு சப்பைக் கட்டு கட்டுவ,” என பதில் வந்தது, ஒரு கசப்பான புன்னகையுடன்.

மேலும் “உன்ன எல்லாரும் ஏய்க்கிறது இதுனாலதான். புரிஞ்சிக்கோ.”

“நீ எப்பவும் அவங்களை மோசமாக நினைக்கற!”

“அவங்க அதுக்கு தகுதியானவங்க,” என்ற வார்த்தைகள் கல்லென விழுந்தன.

வாங்மயி ஒரு கணம் இமைக்க மறந்தாள். தான் அப்படியா இருக்கிறோம் என யோசித்தாள்.

“அந்த கூன் முதுகு தாத்தா நினைவிருக்கா? எப்பவும் கத்துறவரே?”

“அவருக்கு என்ன?” தென்றல் மெதுவாகக் கேட்டாள், பேனாவை நிறுத்தி.

“அவர் இன்னிக்கு காலையில் வந்திருந்தார். ஒரு வாழை இலைப் பொட்டலம் விட்டுட்டு போனார். ஒண்ணும் சொல்லலை. வெறுமனே வைச்சுட்டு போய்ட்டார்.”

தென்றல் சிரித்தாள், ஒரு கேலியான சிரிப்பு. “ஒரு வாழை இலையில உன் மனசு விலை போயிடுச்சா?”

“வாழை இலை இல்ல,அவர் மௌனமா வெச்ச விதம் தான். அந்த மௌனத்துல ஒரு உண்மை இருக்கு.”

“நீ எப்டி எடுத்துகிட்டாலும் சரி. எனக்கு இந்த நடத்தை பிடிக்கல!” அவளே தொடர்ந்தாள்: “ஒரு குற்றத்தையோ, குற்ற உணர்ச்சியை மறைக்கவோ தான் மனுஷங்க கருணை காட்டுறாங்க. இது எல்லாமே நடிப்பு. முதல்ல சாணிய மூஞ்சில அடிச்சிட்டு, அப்புறம் பட்டு குஞ்சலத்தால தொடச்சு விட்டா, சாணி மணக்குமா?”

வாங்மயி புன்னகைத்தாள், தென்றலின் எண்ணங்களின் ஆழத்தை எண்ணி வியந்தாள்.

“அப்படியும் இருக்கலாம்,ஆனா, சில சமயம், அந்த தொடச்சு விடுறது ஒரு உண்மையான முயற்சியாகவும் இருக்கலாம் இல்லயா. அதுக்கு வாய்ப்பு இல்லன்னு சொல்ல முடியாதே.”

தென்றல் மறுபடியும் எழுதத் தொடங்கினாள், அவள் பேனா ஒரு புயலாக நகர்ந்தது:

கத்தியால் கீறிய கைகள்,
முத்தமாய் மறைக்குது!
ஆனால் உடைந்த இதயத்தின் கூச்சல்,
பொய்யின் நரகத்தில் எரியுது
!”

இவளின் கண்கள் அதை தழுவின. ஆனால் வாய் விட்டு எதுவும் கூறவில்லை.

அவள் மனம் அவளின் வலியை உணர்ந்தது. அவள் இதயம் ஒரு மென்மையான வேதனையில் தவித்தது.

“நீ டாக்டராக வேண்டியவள்,” என்று தென்றல் திடீரென பழைய நினைவை மீட்டாள்.

வாங்மயி ஆச்சரியமாக கண்களை விரித்தாள், அவள் முகம் ஒரு கேள்வியாக மாறியது. “உனக்கு இன்னுமா நினைவு இருக்கு?”

“ஆனா, எனக்கு இன்னும் நல்லாவே நினைவு இருக்கு,” என்று தென்றல் கண்களைச் சுருக்கி சொன்னாள். “வெள்ளை கோட்டு, உன் பெயர் பொறிக்கப்பட்ட ஸ்டெதஸ்கோப் வேணும்னு சொன்னே.”

வாங்மயி மெலிதாக சிரித்தாள், அவள் கண்களில் ஒரு பழைய கனவின் ஒளி மின்னியது.

“சில கனவுகள் புதிய கனவுகளுக்கு கருவிகளாக மாறும்.”

தென்றல் சிரிக்கவில்லை. அவள் விரல்கள் தன் கவிதை வரிகளை மெதுவாக தடவின, ஒரு காயத்தை தொடுவது போல. “நீ தோல்வியை ஏத்துக்கிட்ட,” என்று அவள் கூறினாள். “உன் வலியை வேறயா மாத்திட்டே.”

“நீ உன் வலியை கவிதையாக்கற. ஒரு விஷயம் தான், நாம அதை பாக்குற, எதிர்கொள்ளுற, அணுகுற முறை தான் வேற!” அவள் குரல் ஒரு மென்மையான உறுதியுடன் ஒலித்தது.

அங்கே, ஒரு கணமான மௌனம் நிலவியது, குடிசையின் மண் சுவர்களில் ஒரு நினைவின் எதிரொலி.

பின்னர், வாங்மயி, யோசிப்பது போல, மெதுவாகப் பேசினாள். “நான் கொஞ்ச நாள் நகரத்துக்கு போகலாம்னு யோசிக்கிறேன். அங்க இருக்கற ஹாஸ்பிட்டல்ஸ் எதாவதுல வேலை செய்யலாம்னு நினைக்கறேன். அங்க இன்னும் நிறைய வாய்ப்பு இருக்கும்னு தோணுது.”

தென்றல் ஒரு கசப்பான பாதி சிரிப்புடன் வெடித்தாள், அது மகிழ்ச்சியானதாக இல்லை.
“நகரமா?” என்று அவள் கேட்டாள், குரலில் ஒரு கேலி.
“உடம்பு சரி செய்யப் போய், உன் மனசு உடைஞ்சு திரும்புவே.”

அவள் கைகள் எழுதின:

நகர சிரிப்பில்
நட்சத்திரங்களும்
சூடு வாங்கும்
…”

வாங்மயி தலை சாய்த்து, சிரித்தாள், அவள் கண்கள் ஒரு மென்மையான சவாலுடன் ஒளிர்ந்தன. “அங்கேயும் எல்லாரும் கொடூரம்னு நினைக்கிறியா?”

தென்றல் பதிலளிக்கவில்லை. அவள் காகிதத்தை எடுத்து, மெதுவாக மடித்தாள், ஒரு ரகசியத்தை மறைப்பது போல. “நீயே பாப்ப, அப்ப உனக்கே புரியும்,” என்று அவள் மெல்ல முணுமுணுத்தாள்.

“நகரங்கள்ல, மனுஷங்க கண்ணீர் சத்தமில்லாம விடுவாங்க. காயமில்லாம ரத்தம் வடிப்பாங்க. சிரிப்பாங்க, ஆனா கண்ணுல ஒளி இருக்காது. அது ஒரு போலியான சிரிப்பா இருக்கும்.”

வாங்மயி மறையும் சூரியனைப் பார்த்து, மென்மையாகக் கூறினாள்: “அப்படின்னா, அவங்களுக்கு நான் இன்னும் தேவைப்படலாம், இல்லையா?”

“நீ சொன்னா கேக்க மாட்ட!”. அதில் ஒரு கோபமான உறுதி இருந்தது.

“முயற்சி செய்யாம ஒரு விஷயத்தை முடிவு பண்ணலாமா?” வாங்மயி பதிலளித்தாள், அவள் குரல் ஒரு மென்மையான பிடிவாதத்துடன்.

“என் அனுபவத்துல நான் சொல்றேன்,” என்று முடித்தாள், அவள் கண்கள் ஒரு பழைய காயத்தை மறைத்தன.

“சரி, அத விடு. நீயும் வா,” வார்த்தைகள் வெளி வந்தன, ஒரு நம்பிக்கையுடன்.

“நானா? ம்ம் ஹ்ம்ம்ம்,” என்று மறுத்து, சற்று யோசித்தாள். பின்னர், அவள் பேனா மீண்டும் காகிதத்தில் பயணித்தது:

நகரத்தின் விளக்குகள் சிரிக்குது,
ஆனால் மனங்கள் மறைவில் அழுது!
அழைப்பு வேண்டாம், வாங்மயி,
அந்தப் பொய்யின் புழுதியில் நான் வீழேன்!”


வாங்மயியின் மனம் ஒரு கணம் கவலையில் மூழ்கியது.

தென்றலின் மறுப்பு ஒரு கனமான கல்லாக உணர்ந்தது.

ஆனால், இவளின் இதயம் சென்னையை நோக்கி பயணித்தது!

ஒரு ஒளிரும் பாதையில்.

நகரத்தின் மருத்துவமனைகள், மனிதத்தை இழந்து, ஆனால் உயிர்ப்புக்காக ஏங்கும் இடங்கள், அவளை அழைத்தன.

அங்கு, அவள் மக்களுக்கு உதவலாம், காயங்களை ஆற்றலாம், ஒரு மாற்றத்தை உருவாக்கலாம்.

இந்த வாய்ப்பு, வாழ்முடியின் மண் சுவர்களுக்கு அப்பால், அவளது கனவின் அடுத்த படியாக, ஒரு விண்மீனாக ஒளிர்ந்தது.

ஆனால், தென்றலின் வார்த்தைகள்—நகரத்தின் கொடூரம், பொய்யின் சிரிப்பு—அவள் மனதில் ஒரு நிழலாக கனமாகத் தங்கின.

தென்றல் நகரத்தை வெறுத்தாள், அவளின் மறுப்பு அவளது வலியில் பிறந்தது, ஒரு காயத்தின் கூச்சலாக.

வாங்மயிக்கு அவளை கட்டாயப்படுத்துவது அநியாயமாகத் தோன்றியது.

தென்றலின் இதயம் அவளுடையது, அவளது பயணம் வேறு.

ஆனால், நகரத்தின் அழைப்பை தவறவிட முடியவில்லை—அது அவளது நோக்கத்தின் ஒளி, ஒரு தீபமாக எரிந்தது.

தென்றலைப் பிரிந்து செல்லும் வேதனை, ஒரு மென்மையான கனவின் உடைவாக இருந்தாலும், வாங்மயி முன்னேற முடிவு செய்தாள், மனதில் ஒரு மென்மையான தயக்கத்துடன், ஒரு மழைத்துளியின் நடுக்கத்துடன்…!

வாழ்க்கையின் நிழல் பாதைகளில் வாங்மயிக்கு விதி தீட்டிய கோலங்கள் மங்கலாகி, வடிவெடுத்தன.

ஆனால், அவை யாரை முத்தமிடும்?

அவளையா, வேறொருவரையா, என்று காலம் மட்டுமே அறியும்!

தொடரும்
நட பிரம்மம் (1).png