• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி - 09

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
948
434
93
Tirupur
நதி - 09

கொஞ்சம் கொஞ்சமாய் நீர் இழுத்துக்கொண்டு செல்ல, கால்களை அடித்துக்கொண்டு மூச்சுக்குத் தினறி நீருக்கு உள்ளேயும் வெளியேயும் எனத் தத்தளித்தவளை சலனமே இல்லாமல் பார்த்தான் கார்த்தி. அடுத்து நீருக்குள் சென்றவள் மேலே வாரமல் போக, நிதானமாக நீருக்குள் பாய்ந்து நீந்தி அவளைப் பிடித்திழுத்துக் கொண்டு கரைக்கு வந்தான்.

கரையில் இருந்த பாறையில் சாய்த்தவன், அதே நிதானத்துடன் அவளுக்கு முதலுதவியை செய்ய ஆரம்பித்தான். பின் அவளுக்கு ஒன்றுமில்லை என்றானபின் மீண்டும் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு குடிலை நோக்கி நடந்தான்.

இப்போது அவளைக் கொண்டு சென்றது புது விதாமான ஒரு குடில், இது ஒரு குடும்பமே வந்து தங்கி செல்லும் அளவிற்கு வசதிகளைக் கொண்டது. கார்த்திக்கின் அனேகமான தனிமையை இந்தக் காடுதான் உள்வாங்கிக் கொண்டது. தனிமையை உள்வாங்கியக் காட்டில் தன் இனிமையையும் உணர்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற எண்னத்தில் தான் இந்தக் குடிலைக் கட்டினான்.

யாரையும் பார்க்க பிடிக்காமல், யாரிடமும் பேசப் பிடிக்காமல், வாழ்க்கையை வெறுத்தக் காலங்களில் தன் கோபத்தை, இயலாமையை, வெறுப்பை அவன் தனித்துக் கொண்டது இந்தக் காட்டில் தான். கால் போன போக்கில் நடப்பான். ஏதோ ஒரு மரத்தடியில் கிடப்பான். பசியென்ற ஒரு உணர்வே இல்லாதது போல சுத்திக் கொண்டிருப்பான்.

போதும் இங்கிருந்தது என அவனுக்காகத் தோன்றினால் மட்டுமே கிளம்புவான். எப்போது அபி மீண்டும் அவனைத் தேடி வந்தாளோ அப்போதுதான் இந்தக் குடிலைக் கட்ட ஆரம்பித்தான். அதற்கு முன் வரை அந்தப் பழையக் குடிலில் தான் அவனது வாசம் இருந்தது.

அங்கிருந்த மரத்தட்டில் அவளைப் படுக்க வைத்தவன், பரபரவென அவளது ஆடைகளைக் கலைந்து, கூந்தலை தளர்த்தி டவலால் துடைத்துவிட்டு, உள்ளேத் தூக்கிச் சென்று கட்டிலில் விட்டு, போர்வையை கழுத்துவரை இழுத்துவிட்டு, ஹீட்டரை ஆன் செய்துவிட்டான்.

‘ப்ளீஸ் கார்த்தி என்னைக் காப்பாத்து, ப்ளீஸ்.. சபரிமா.. கார்த்தி… முரளிண்ணா..’ என வார்த்தைகள் துண்டு துண்டாக விழுந்து அவன் கவனத்தைக் கலைத்தது.

சுயநினைவின்றி புலம்பியவளை ஒரு பெருமூச்சோடு பார்த்தவன், மற்றொரு டவலை எடுத்துக் கொண்டு தன் தலையைத் துவட்டியபடியே வெளியில் சென்றான்.

குடிலின் வாயிலில் அம்ர்ந்து, அதுவரை ஆப் செய்து வைத்திருந்த தன் போனை ஆன் செய்ய, வரிசையாக வந்து விழுந்தன, தவறவிட்ட அழைப்புகளும், தவறவிட்ட குறுஞ்செய்திகளும். அதில் அதிகம் தன் தாய் அம்பிகாவின் அழைப்புகள் தான்.

இவர் ஏன் இத்தனை முறை அழைத்திருக்கிறார் என்று யோசித்தபடியே, முதலில் வந்திருந்த மெசேஜைப் பார்க்க, அதில் ‘ஈசன் ஃபேமிலீ குருப்பில் கார்த்திகை டேக் செய்து அத்தனை மெசெஜுகள். அதைப் பார்த்து அந்த நேரமும் சிரிப்புத்தான் வந்தது கார்த்திக்கிற்கு.

ஒவ்வொரு செய்தியாகப் பார்த்தும் கேட்டும் வந்தவனின் முகத்தில், ஒவ்வொரு செய்திக்கும் ஒவ்வொரு உணர்ச்சிகள் வெளிப்பட்டது. அதிலும் பைரவி அவனைக் கனடபடி திட்டி போட்டிருந்த மெசேஜில் அவனது உதடுகள் தாராளமாக விரிந்தது.

‘எப்படித்தான் இவளை இந்த மாதேஷ் சமாளிக்கிறானோ’ என யோசித்தவன், அனைத்தையும் கேட்டு முடித்துவிட்டு, சுயம்புவிற்கு அழைத்து கடையைப் பற்றி விசாரித்தான். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு சொல்லிவிட்டு, ருத்ரனுக்கு அழைத்தான்.

இவன் அழைப்பிற்காகவே காத்திருந்தது போல முதல் அழைப்பிலேயே எடுத்து வாயிற்கு வந்ததையெல்லாம் திட்டிவிட்டு, “எங்கடா போய் தொலைஞ்ச..” என ஆதங்கமாகக் கேட்க,

“நாளைக்கு வந்துடுவேன், அதுக்கு முன்னாடி” என்றவன், “எனக்கு ஒரு வீடு பாரு. நானும் அவளும் அங்கதான் இருக்கப் போறோம். எல்லாம் ரெடியா இருக்கட்டும்..” என இறுக்கமாகச் சொல்ல,

“கார்த்தி தப்பா எந்த முடிவும் எடுக்காதடா.. அவளுக்கு உடம்பு சரியில்ல, இந்த நேரம் நீயும் அவளைக் கொடுமை பண்ணாதடா. ஏற்கனவே நம்மனால ரொம்ப கஸ்டப்பட்டுட்டா, இன்னும் ஏண்டா..” என எப்படி பேசினால் இறங்குவான் எனத் தெரிந்து இறங்கிப் பேச,

“ருத் என் கஸ்டம் உனக்கு புரியாது. என் பக்கமும் தப்பு இருக்கலாம், அதே நேரம் எல்லாமும் என் தப்பு கிடையாது இல்லையா.? எங்கிட்ட சொல்லாம மறைக்க எப்படி அவளுக்கு மனசு வந்தது, அவ மறைச்சதை நினைச்சு நினைச்சு நான் ஒவ்வொரு நிமிசமும் செத்திட்டு இருக்கேன்டா, நீயெல்லாம் என்ன ஆம்பளைடான்னு என் மனசாட்சியே என்னை செருப்பால அடிக்குது. இதை யாருக்கும் சொல்லிப் புரியவைக்க முடியாது. அதோட கொஞ்சநாள் தனியாதான் இருந்து பார்ப்போமே.. எனக்கு அவளையும் அவளுக்கு என்னையும் புரியட்டும், பிறகு அங்க வர்ரதைப் பத்தி யோசிக்கலாம்.” என மிகவும் விரக்தியானக் குரலில் பேச,

அந்தக் குரல் ருத்ரனையும் அசைக்க “என்ன கார்த்தி நீ..” என்ற ருத்ரனுக்கும் வருத்தம் தான். அதை வெளிக்காட்டாமல், “சரி.. சீக்கிரம் வா..? நானும் கவியும் பாட்டிக்கிட்ட கேட்டு ஏற்பாடு செய்றோம்..” என வைத்துவிட்டான்.

மீண்டும் ஒரு நீண்ட யோசனை. வீட்டிற்கு அழைத்துப் போவதில் அவனுக்கு ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லைதான். ஆனால் அவள் மீது இருக்கும் கோபத்தில் அவளைப் பேசி, வார்த்தகள் தடித்து ரசபாசங்கள் ஆகிவிட்டால், அது அபிக்கும் அசிங்கம், அவனுக்கும் அசிங்கம்.

அம்மாவும், சித்தியும் மீண்டும் ஆரம்பிப்பார்கள்தான். அவரை அண்ணிகளும் பாட்டியும் பார்த்துக் கொள்வார்கள். ஆனாலும் ஏனோ அவனுக்கு அவளோடு தனிமை வேண்டும் என்றுத் தோன்றியது. அதனால்தான் தங்கள் பிரச்சினைகள் எல்லாம் தீரமட்டும் தனியாக இருக்கலாம் என்று முடிவெடுத்து, அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டான்.

அவனை விட்டுச் சென்றதில் இருந்து அவள் மட்டும் என்ன நிம்மதியாகவா இருந்திருப்பாள். இந்த ஒரு எண்ணம்தான் , மனைவியின் மேல் இருந்த மலையளவு கோபத்தை மலையிறக்க வைத்தது. முதலில் பேசலாம். பிறகு முடிவு செய்யலாம் என்ற முடிவெடுத்த பின்னே தனி வீடு பார்க்க யோசித்தான்.

இப்போது திரும்பி மனைவியைப் பார்த்தான். அவளிடம் அசைவே இல்லை. நல்ல உறக்கத்தில் இருக்கிறாள் என்று புரிந்தது. எத்தனை நாள் அயர்வோ.. தூங்கட்டும் எனெ நினைத்தவன், பெருமூச்சோடு தூரத்தில் தெரிந்த வானை வெறிக்க ஆரம்பித்தான். நினைவுகள் அவனது கடந்த காலத்தை நோக்கி ஓடியது.

அன்று அபியையும் அவளது தந்தையையும் போடியில் இறக்கிவிட்டு வந்தவன் சுத்தமாக அவர்களை மறந்தே போனான்.

இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் ஒருநாள் அவனது ஆஃபிஸ் வாசலில் பதட்டத்துடன் நின்றிருந்தாள் அபிராமி. ஆஃபிஸ் பையன் வந்து சொல்ல, கார்த்திக்கிற்கு யாரென்றேத் தெரியவில்லை.

யோசனையோடே வரச் சொன்னவன் அவளைப் புரியாமல் பார்க்க, “ஸார் நான் அபி.. அபிராமி.. ஞாபகம் இருக்கா.?” என மெல்லியக் குரலில் தயங்கியபடியே கேட்க, அவனோ அவளை ஆராய்ந்தபடியே ‘இல்லை’ எனும் விதமாகத் தலையை ஆட்ட, அதைப் பார்த்த பெண்ணுக்கு வருத்ததிற்கு பதிலாக ஒரு நிறைவும் ஆசுவாசமும் உண்டானது.

“சாரி சார்.. சாரி உங்களைத் தொந்தரவு செய்றதுக்கு. ரெண்டு நாளைக்கு முன்னாடி பூப்பாறைல இருந்து போடில கொண்டு வந்து விட்டீங்களே..” என இழுக்க, அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி முகத்தில் எந்த ஒரு உணர்வும் இல்லை. தலை ஆமாம் எனத் தன்னால் ஆடியது.

அவன் ஒன்றும் சொல்லாமல் இருக்க, அடுத்து என்ன பேசுவது என்று அபிராமிக்கு விளங்கவில்லை. ஒருமாதிரி அசௌகர்யமாக உணர்ந்தாள். வந்ததில் இருந்து உட்கார் என்று மரியாதைக்கு கூட அவன் சொல்லவில்லை. அது வேறு உறுத்தியது.

அபிராமி அமைதியாக நிற்க, கார்த்திக்கும் அமைதியாகவே அவளைப் பார்க்க, வேறுவழியில்லாமல் அபிராமிதான் பேச வேண்டி வந்தது.

“அது சார்.. அன்னைக்கு நாங்க வந்தோம்ல, அப்போ அப்பாவோட ஒரு சீட்டு மிஸ் ஆகிடுச்சு, அது கார்ல இருந்ததான்னு கேட்கத்தான்..” என முடிக்கவில்லை, வேகமாக சேரில் இருந்து எழுந்தவன் “என்ன உதவி செஞ்சவங்களையே சந்தேகப்பட்டு கேட்க வந்திருக்கியா.. அப்படி ஒரு பொருள் இருந்தா, அதை நானோ என் வீட்டு ஆட்களோ பார்த்திருந்தா நீ எங்க இருந்தாலும் அது உன்னைத் தேடி வந்திருக்கும். எங்களையே சந்தேகப்படுறியா..?” எனக் காட்டமாகக் கேட்க,

அவன் சத்தத்தில் இரண்டடி பின்னே சென்றவள், “இல்ல.. இல்ல அப்படி எல்லாம் இல்ல.. நான் நான் சொன்னேன் அப்பாதான்.. சாரி சாரி நான் கேட்டுருக்ககூடாது, இங்க வந்துருக்கவேக் கூடாது. சாரி..” என பயத்தில் பேசியவள், நடுங்கியக்காலை இழுத்துக் கொண்டு வேகமாக வெளியில் சென்றுவிட்டாள்.

அபிராமியின் அரண்டத் தோற்றத்தை பார்த்தவனுக்கு என்னத் தோன்றியதோ, ஆஃபிஸ் பையனை அழைத்து, “டேய் இப்போ ஒரு பொண்ணு அழுதுட்டே போனா பாரு. அவளைக் கூப்பிட்டு வா.. சீக்கிரம் போயிடப்போறா.?” என விரட்ட, என்ன என்று கேட்காமல் அவனும் ஓட, ‘ச்சே ரொம்ப மிரட்டிட்டோமோ, பார்த்ததுக்கே இப்படின்னா, பேசினா.. இப்படி பயந்த பொண்ணை அனுப்பிட்டு அவங்க அப்பன் என்ன செய்றான்’ என யோசித்துக் கொண்டே அவள் வருவதற்காக காத்திருந்தான்.

கார்த்திக்கிற்கு ஏனோ அபிராமியின் தந்தை மேல் ஒரு நல்ல அபிப்ராயம் வர மறுத்தது. வயது பிள்ளையை வைத்துக்கொண்டு குடித்து ரோட்டில் கிடந்து உருளும் ஆளை யார்தான் மதிப்பார்கள்.

இங்கு முகத்தைத் துடைத்தப்படியே, வாய்க்குள் முனங்கியபடியே வேகமாக நடந்த அபிராமியிடம் வந்த பையன், “அக்கா.. அக்கா உங்களை எவ்வளவு தூரம் கூப்பிட்டேன். ஏன் க்கா திரும்பியே பார்க்கல..” என மூச்சு வாங்க நிற்க,

“கூப்பிட்டியா.. ஏன்.. எதுக்கு..” என பதட்டமாகக் கேட்க,

“கார்த்தி சாரு உங்கள கூப்பிட்டாருக்கா, வாங்க.” என அவன் முன்னே நடக்க,

‘எதே அவன் கூப்பிட்டானா.? ஆத்தாடி..’ என ஜெர்க்கானவள். “இருக்கட்டும்ப்பா.. நான் கிளம்பறேன், அவங்க போயிட்டாங்கன்னு போய் சொல்லிடு..” என நிற்காமல் நடக்க ஆரம்பித்தாள்.

“எக்கா எக்கா நில்லுக்கா.. பொய் சொல்ல சொல்றியா.. அதெல்லாம் எங்க கார்த்தி சாருக்குப் பிடிக்காது. அங்க பாரு ஜன்னல் வழியா நம்மளப் பார்த்துட்டு இருக்கார், நான் போய் நீ சொன்னதை சொன்னா, உன்னால என் வேலை போயிடும்..” என்ற சிறுவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் பெண்.

பின் “எனக்கு அவரைப் பார்த்தா பயமா இருக்கு தம்பி. இப்படித்தான் வந்தவங்களை ட்ரீட் பண்ணுவாங்களா.? நான் ஹெல்ப் கேட்டுத்தான் வந்தேன். சொல்ல வந்ததை சொல்லவே விடாம கத்தினா.. அம்மாடியோவ். எனக்கு உங்க உதவியே வேணாம் நான் போறேன்..” என மீண்டும் நடக்க ஆரம்பிக்க,

“அக்கா வாக்கா.. சார் அப்படித்தான். ஆனா ரொம்ப நல்ல சார்க்கா..” என அபிராமியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தான் கடைப்பையன்.

இதை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கு, அதுவரை இருந்த இறுக்கம் தொலைந்து இதழில் மெல்லிய புன்னகை உண்டானது.

‘இவ்வளவு பயந்து ஓடுற அளவுக்கு ஒன்னும் நாம மிரட்டலையே, சரியான பயந்தாங்கொள்ளி போல, என யோசித்தபடியே அமர்ந்திருந்தவனின் முன்னே வந்து மீண்டும் பதட்டமாக நின்றாள் பெண்.

ஒரு நொடி அவளை ஊன்றிக் கவனித்தவன், எதிரில் இருந்த சேரைக் காட்டி ‘உட்கார்’ என கண்ணைக் காட்டி, “அப்புறம் சொல்லு..” என அடங்கியக் குரலில் கேட்க,

அந்தக் குரலில் இறுந்த அதட்டலும் இறுக்கமும், என்னை விட்டால் போதும் ஓடிவிடுவேன் என்ற பாவத்தைக் காட்ட, அப்படியே எதிரில் இருந்தவனைப் பார்த்தவள், “நான் சொன்னா நீங்க திட்டுறீங்க தானே” எனப் பெருங்குரலெடுத்து அழ, இதைச் சற்றும் எதிர்பார்க்காத கார்த்தி, “ஏய்.. ஏய்.. வாயை மூடு.. மூடுன்னு சொல்றேன்ல.. வாயை மூடுடி பைத்தியம்..” எனக் கத்த, தன் இரு கைகளாலும் வாயை மூடிவிட்டாலும், கண்கள் பயத்தைக் காட்ட, நீர் விடாமல் வலிந்து கொண்டேதான் இருந்தது.

“ம்ச்.. இப்போ என்ன பிரச்சினை.. அழறதை நிறுத்திட்டு சொல்லித் தொலை..” என மீண்டும் கத்த, அவள் அப்போதும் வாயைத் திறக்காமல் அழுதுகொண்டே இருக்க,

“ம்ச்ச். சரியான இம்சை..” என நெற்றியை நீவியவன், “உங்கப்பன் எங்க.. உன்னை தனியா அனுப்பிட்டு என்ன பன்றார். நீ எதுக்கு வந்த..” எனக் கோபத்தை அடக்கி, இல்லாத பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்க,

“அது அதுவந்து அந்த சீட்டு அது வேனும். அப்பா உங்க கார்லதான் மிஸ் ஆகிடுச்சு சொன்னார்.” எனத் திக்க,

“ஓ.. குடிச்சிட்டு நிதானமே இல்லாம இருந்த மனுசனுக்கு அந்த முக்கியமான சீட்டு என் கார்லதான் தொலைஞ்சதுனு சரியா தெரியுமா.? என்ன விளையாடுறீங்களா.? முதல்ல அது என்ன சீட்டு. உன் அப்பனை இங்க வரச்சொல்லு, அவர் வந்தா தான் நீ போக முடியும்..” என கோபத்தில் கத்த,

“அப்பா இங்க இல்லை. கம்பம் போயிருக்கார். இப்போ வரமுடியாது” என்றவளின் பேச்சில் உண்மைத் தன்மையை உணர்ந்தவன், “ஸரி அப்படி என்ன அது முக்கியமான சீட்டு. எதுவும் ஹாஸ்பிடல் பில், இல்ல பத்திரம் அந்த மாதிரியா..” என பொறுமையாகக் கேட்க,

“இல்ல.. இல்ல அது அது வந்து..” என எச்சில் கூட்டி விழுங்கியவள், அவனை ஒருமுறை நிமிர்ந்துப் பார்த்துவிட்டு குனிந்து கொள்ள,

“ம்ம்.. சொல்லு.. என்ன நிஜமாவே சீட்டைத் தேடிதான் வந்தியா..” என அவன் சந்தேகமாகக் கேட்க, அதில் பட்டென்று அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தவள், “நிஜமாவே சீட்டைத் தேடிதான் வந்தேன் தப்பா எல்லாம் இல்ல..” என அழுகை முட்டியக் குரலில் கூறியவளைக் கூர்ந்து பார்த்தவன், “அப்போ அது என்ன சீட்டுன்னு சொல்லுங்க மேடம். தப்பு செய்யலன்னா ஏன் தயக்கம்” என நக்கலாகக் கேட்க,

“அதுவந்து..” என இழுத்தவள், இனியும் இழுத்தால் இவன் நம்ப மாட்டான் என்று புரிந்தவள், “அப்பாவோட லாட்டரி சீட்டு” என பட்டென்று சொல்லிவிட்டு, தலையைக் குனிந்து கொண்டாள்.

“வாட்.. லாட்டரி சீட்டா" என அதிர்ந்து எழுந்தவனைப் பார்த்தவளுக்கு அவமானத்தில் முகம் கருத்துப் போனது.
 

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
183
5
28
Hosur
Nice update