• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி 12

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
949
434
93
Tirupur
நதி - 12

கார்த்திக்கு மிகவும் தெரிந்த மருத்துவமனை என்பதால், கேள்வி எதுவும் கேட்காமல் அபிக்கு முதலுதவி வழங்கப்பட்டது.

உயிருக்கு ஆபத்து இல்லை என்றதும்தான் அனைவருக்கும் மூச்சே சீரானது. உறக்கமா மயக்கமா என தெரியாமல் சலைன் ஏற கட்டிலில் கிடந்தவளை பார்த்து ஆழ்ந்து மூச்சுவிட்டவன், மற்றவர்களிடம் விடைபெற்று கிளம்பிவிட்டான்.

அவனுக்கு அங்கு நிற்கவே முடியவில்லை. அபியைப் பார்க்க பார்க்க, கதிரவனை கொன்றுவிடும் அளவிற்கு கோபம் தாறுமாறாக ஏறியது.

இருந்தால் நிச்சயம் செய்துவிடுவோம் என்று தோன்ற உடனே கிளம்பிவிட்டான்.

அவன் வீடு நோக்கி நகர்ந்த சில நிமிடங்கள் கடந்தே அந்த லாட்டரி சீட் நினைவு வந்தது. அதை கொடுக்காமல் வந்ததும்.

வேகமாக அந்த சீட்டை எடுத்து பார்த்தவனுக்கு, அந்த சீட்டின் குலுக்கள் தேதிக்கு இன்னும் பத்து நாட்கள் இருப்பது தெரிய, கதிரவனை எப்படி இதில் சிக்க வைப்பது என யோசிக்க ஆரம்பித்தான்.

மேலும் முரளி வரும்வரை அபியையும் இவனிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ன செய்யலாம் என்ற யோசனையுடனே வீட்டிற்கு வர, அந்த நேரத்திலும் அவனுக்காக காத்திருந்தார் சிவநேசன். அவன் தாத்தா!

“என்ன தாத்தா இன்னும் தூங்காம இருக்கீங்க. உடம்பு சரியில்லையா? என்ன செய்து? ஹாஸ்பிடல் போகலாமா.?” என பதட்டமாக அவரிடம் வந்த கார்த்திக்கை அமைதியாக பார்த்தார்.

பெரியவரின் அமைதியும், பார்வையும் எதற்கென்று புரிய “கொஞ்சம் முக்கியமான வேலை தாத்தா, முடிச்சிட்டு வர வழியில ஒரு ஆக்சிடென்ட். அதான் ஹாஸ்பிடல் போயிட்டு வரேன்..” என அலுப்பாக அவருக்கு அருகில் அமர்ந்தபடியே கூறினான் கார்த்தி.

“வேற ஒன்னும் பிரச்சினையில்லையே கார்த்தி” என்றவரிடம், “ஒரு பிரச்சினையும் இல்ல தாத்தா, வாங்க நீங்க படுங்க. மார்னிங்க் பேசலாம்..” என அழைத்து அவரை அறையில் விட்டு வந்து, தன் படுக்கையில் விழுந்தவனுக்கு வயிறு நானும் இருக்கிறேன் என கூப்பாடு போட்டது.

‘ஊப்ஸ்’ என எழுந்தவன் நேரத்தை பார்த்தபடியே வெளியில் வர, பார்கவி அப்போதுதான் தண்ணீர் பாட்டிலுடன் மேலேறிக் கொண்டிருந்தாள்.

“என்ன கார்த்தி, எப்போ வந்த? சாப்பிட்டியா? டேபிள்ள எல்லாம் அப்படியே இருக்கு. நீ இன்னும் வரலன்னு நினைச்சிட்டேன்..”

“இப்போதான் வந்தேன் அண்ணி. சாப்பிடத்தான் வந்தேன். நீங்க போங்க. நான் போட்டுக்குவேன்.”

“அது சரி. ஆளில்லன்னா அளவா சாப்பிட்டு ஏமாத்தவா. வா நானே எடுத்து வைக்குறேன். ரெண்டு நிமிசம் பொறு, எல்லாம் சூடு செஞ்சிடுறேன்..”

“அண்ணி ஹீட் பண்ண வேண்டாம் அப்படியே வைங்க. உங்களுக்கும் டைம் ஆகுது”

“அடேயப்பா.. சும்மாதான் கொஞ்ச நேரம் உட்காரு. உன் அண்ணனும் முழிச்சிட்டுத்தான் இருக்கார். நான் வரலன்னதும் தேடியே வந்துடுவார்..” என பார்கவி சொல்லி முடிக்கும் முன்னே ருத்ரேஷ் மனைவியைத் தேடி கீழே வந்துவிட்டான்.

“என்னடா நடக்குது இங்க..”

“பார்த்தா எப்படி தெரியுது.? அண்ணி என்ன இவன் இவ்வளவு கேள்வி எல்லாம் கேட்குறான்.” என ருத்ரனைப் பார்த்து கார்த்தி சிரிக்க,

“அப்படி உங்களுக்கு தெரியாம என்ன நடக்குது.?” என பார்கவி ருத்ரனை முறைக்க,

“டேய் பாவி, எதார்த்தமா கேட்ட கேள்விக்கு எப்படி ஆப்பு வைக்கிற நீ.. நல்லா வருவடா..” என தம்பியை முறைத்தவன்,

“கவிமா இந்த பாவி சொல்றதையெல்லாம் நம்பி என்னை நீ கொசின் பண்ணக்கூடாது. இவனுக்கு பொறாமை. நமக்கு இடைல நாரதர் வேலை பார்க்குறான்.” என தம்பியை முறைத்தபடியே மனைவியை சமாதானம் செய்ய, அதைப் பார்த்து வெடித்து சிரித்தான் கார்த்தி.

இதுவரை இருந்த இறுக்கமெல்லாம் தொலைந்த உணர்வு, மனதும் மூளையும் அவன் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டிருந்தது.

இயல்பாகிவிட்டான் என்று அறிந்து “என்னாச்சு கார்த்தி..” தம்பியின் ஆசுவாச பெருமூச்சைப் பார்த்து ருத்ரன் கேட்க, இருவரையும் கேள்வியாக பார்த்தாள் பார்கவி.

“என்னாச்சு ஒன்னுமில்ல. வொர்க் அதிகம்..” என சமாளிக்க பார்த்தவனிடம்,

“ஒன்னும் இல்லாமையா உங்க அண்ணா கேட்பார். என்ன கார்த்தி. எங்களுக்கு சொல்ல வேண்டாம்னா வேண்டாம்..” என்று முறுக்கிக்கொண்ட பார்கவியைப் பார்த்து முறைத்தான் கார்த்திக்.

மேலும் “ம்ச் அண்ணி இது ஒன்னும் அவ்வளவு பெரிய மேட்டர் இல்லை..” என்றான் சலிப்பாக.

“ஆமா ஆமா பெரிய மேட்டர் எல்லாம் இல்ல. சின்ன மேட்டர்தான். இன்னைக்கு இவன் ஆஃபிஸ்க்கு ஒரு பொண்ணு வந்துச்சாம் கவிமா. போகும் போது அழுதுட்டே போச்சாம். ஏன் எதுக்குன்னு தெரியாமலே சார் இன்னைக்கு எல்லாரையும் வறுத்து எடுத்துட்டாராம்.. ஒருவேளை அந்த பொண்ணுதான் பிரச்சினையோ..” என தம்பியை பார்த்து கண்ணடித்தபடியே மனைவியிடம் சொல்ல,

“டேய் வெங்காயம்… உன நார வாயை மூடு..” என ருத்ரனைப் பார்த்து பல்லைக் கடித்தவன், “அண்ணி அவன் சொல்றதை நம்பாதீங்க. அதுல பாதிதான் உண்மை” என ஆரம்பித்து அனைத்தையும் சொல்லிவிட்டு பெருமூச்சுவிட்டான்.

“இப்படியும் ஒரு அப்பன் இருப்பானா.? போலிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிருக்கலாமே கார்த்தி. அந்த பொண்ணுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு..” என பார்கவி படபடவென பேச,

“அதெல்லாம் நமக்கெதுக்கு அண்ணி. அந்த இடத்துல இருந்தேன். ஹெல்ப் பண்ணேண். இனி அவங்க பார்த்துப்பாங்க. அந்த பொண்ணோட அண்ணனுக்கு சொல்லிட்டாங்க போல. அவன் வந்து அழைச்சிட்டு போயிடுவான். அப்புறம் எல்லாம் சரியாகிடும். நீங்க போய் படுங்க. நானும் போறேன்.” என சுரத்தே இல்லாமல் சொல்லி பாதி சாப்பாட்டில் எழுந்துவிட, கணவனும் மனைவியும் அவனையே பார்த்தனர்.

அதை கண்டுகொள்ளாமல் அறைக்குள் சென்றவனுக்கு, அன்று காலையில் பார்த்த அபியின் அழுத முகமும், இரவு அவனைப் பார்த்ததும் உண்டான அவமானத்தில் இயலாமையில் சிவந்த முகமும் தூங்கவிடாமல் இம்சை செய்தது.

“ச்சை என்ன கருமம் இது. அவ யாரோ ஒருத்தி, அவளுக்காக நான் ஏன் இவ்வளவு டென்சன் ஆகுறேன்..” என தலையைக் கோதியபடியே புலம்பியவனுக்கு, அபியை கையில் அள்ளிக்கொண்டு ஓடியதில் நடுங்கிய அவளது உடலின் நடுக்கம் இப்போதும் அவனால் உணர முடிந்தது.

எப்படியெல்லாம் பயந்திருந்தாளோ, அவளை நடுங்க வைத்த கதிரவனை உண்டில்லை என்ற ஆத்திரம் இப்போது வரைக்குமே குறையவில்லை.

அந்த இடத்தில் என்னை எதிர்பார்க்கவில்லை. என்னை பார்த்ததும் தான் அவளால் அங்கு நிற்க முடியாமல் ஓடிவிட்டாள்.

ஆனால் அதற்காக தற்கொலை வரை சென்றதை தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இப்போ இருக்கும் பொண்ணுங்க எவ்வளவோ சாதிச்சு, புறம் பேசுறவங்களை ஒதுக்கி தள்ளிட்டு முன்னேறி போறாங்க, இவ என்னடான்னா ஒரு வார்த்தைக்கே சூசைட் பண்ண போறா.. ஷப்பா.. என மனதுக்குள் புலம்பியபடியே அன்றைய தூக்கத்தை தொலைத்தான்.

கார்த்தி அறைக்கு வந்ததுமே கணவனை கேள்வியாக பார்த்தாள் பார்கவி.

“எனக்கும் என்ன பிரச்சினைன்னு சரியா தெரியலை கவிமா. ஆனா பையன் பெருசா எதுலையோ சிக்க போறான். நம்மக்கிட்ட அவ்ளோதான், ஒன்னுமில்லன்னு சொன்னாலும், இதை அப்படியே விடுவான்னு எனக்கு தோனல. அவன் முகமே சொல்லுது ஏதோ ப்ளான் பண்ணிட்டான்னு.” என ருத்ரனும் யோசனையாக சொல்ல,

“ம்ம் அந்த பொண்ணுக்கு எந்த பிரச்சினையும் வராம இருந்தா போதும். பாவம் அவ. பெத்த அப்பன்கிட்டையே பாதுகாப்பு இல்லை, ம்ச் மாமா நாளைக்கு நாம போய் அந்த பொண்ணை பார்த்துட்டு வரலாம். எனக்கு மனசே சரியில்ல.” என்ற பார்கவியின் பேச்சில் ருத்ரனுக்கு உடன்பாடு இல்லைதான். ஆனாலும் மனைவிக்காக சரியென்று தலையசைத்தான்.

இங்கு மருத்துவமனையில் “என்ன அபிமா இப்படி பண்ணிட்ட, எவ்வளவு பெரிய முடிவு. நீ போயிட்டா உன் அண்ணனுக்கு யார் பதில் சொல்றது, ம்ம்ம் உனக்காக அவ்வளவு தூரம் கிடந்து கஷ்டப்படுறான். அவனைப்பத்தி யோசிச்சு பார்த்தியா? நாங்க இருக்கும் போது நீ ஏன் கவலைப்படுற.”

“இனி உன் அப்பன் இந்த வீட்டுப்பக்கமே வராத மாதிரி பண்ணிடலாம், அப்படியும் அலுச்சாட்டியம் பண்ணா போலிஸ்ல சொல்லிடலாம். எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான், முரளி வந்து உன்னை அங்க அழைச்சிட்டு போறேன்னு சொல்லிருக்கான். அதுவரைக்கும் இந்தமாதிரி எந்த கிறுக்குத்தனமும் செய்யாம இரு போதும்.” என மனோகரியின் தந்தை அபிராமியிடன் கண்டிப்பாக சொல்ல,

அவளோ தலையை நிமிர்த்தவே இல்லை. ஒன்றுமில்லை என்று கடந்து செல்ல யாரோ ஒருவரின் வார்த்தை இல்லையே. பெற்ற தந்தையின் வாயில் இருந்து வரக்கூடாத, ஒரு மகள் கேட்கக்கூடாத வார்த்தையாயிற்றே..

“அபிமா..” என மனோவின் தாய் அவளை அழைக்க,

“அம்மா என்னையும் கூடவே கூட்டிட்டு போயிருக்கலாம், இவர் இப்படின்னு அம்மாவுக்கு தெரியாம இருக்காது. தெரிஞ்சும் என்னை இவர்கிட்ட..” என அந்த வார்த்தையை சொல்லக்கூட முடியாமல் தேம்பி தேம்பி அழுதாள்.

“இல்ல இல்ல அபிமா.. அது அப்படியில்லை. உனக்கு முரளி இருக்கான். முரளிக்கு நீ இருக்க. அவனை நம்பி உன்னையும், உன்னை நம்பி அவனையும் விட்டுட்டு போயிருக்காங்க சந்திரா.”

“தேவையில்லாததை யோசிச்சு மனசை குழப்பிக்காத, எல்லாம் முரளி வர வரைக்கும்தான். அதுவரை நான் உன்னை பார்த்துக்குவேன்.” என்றவர் மனைவியிடம் கண்னைக்காட்டிவிட்டு வெளியில் சென்றுவிட, மனோகரி ஒரு புறமும், அவள் தாய் ஒருபுறமும் அமர்ந்து அபியை அனைத்து சமாதானம் செய்ய ஆரம்பித்தனர்.