• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி 14

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 14

கலங்கிய கண்களுடன் திக்ஷிதா கிளம்பி இருக்க, வேலையில் கவனம் பதியாமல் திணறிய வாசுவிற்கு வரிசையாய் வேலைகள் அதிகமாய் இருக்க மாலை வரை அவனால் எழுந்து கொள்ள முடியவில்லை.

வீடு வந்து சேர இரவு ஏழு மணி ஆகி இருந்தது.

வாசல் கதவு திறந்தே இருக்க சமையலறை சத்தத்தில் அங்கே சென்றபோது சிவகாமி இருந்தார்.

"நீங்க எப்பம்மா வந்திங்க? சொல்லவே இல்லை?" என்று அன்னை அருகே செல்ல,

"காலையிலே கிளம்பிட்டோம் டா.. உனக்கு கால் பண்ணா பிஸி.. அதான் திக்ஷிக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு சொல்லாமலே கிளம்பிட்டோம்" என்று டீயைத் தயாரிக்க,

"விஷ்வா எங்கே?" என்றான் மனைவியை தேடியபடி.

"ரெண்டு பேரும் ஹால்ல தான் டா பேசிட்டு இருந்தாங்க.. இல்ல?" என்று கேட்டு டீயை கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.

"நான் வரும் போது கண்ணெல்லாம் கலங்கி போய் இருந்தா.. வீட்டு நியாபகம் போல.. மூணு நாள் தான்னாலும் நல்லா கலகலன்னு அவளைப் பார்த்துட்டு கலங்குன கண்ணைப் பார்த்ததும் என்னவோன்னு மனசுக்கு கஷ்டமா போச்சு.." என்று அன்னை கூற, வாசு அமைதியாய் இருந்தான்.

"கொஞ்சம் அவளையும் கவனிச்சுக்கோ டா.. வேலை எப்பவும் இருக்க தான் செய்யும்.. ஹாஸ்டல்ல இருந்து பழகின பொண்ணு தான்னாலும் வீட்டுல தனியா அடைஞ்சு கிடந்தா மனசு கண்டதை யோசிக்க தான் செய்யும்" என்று கூற, அன்னையிடம் எதுவும் வாசு கூறவில்லை.

அது அவன் சுபாவமும் இல்லையே! இவ்வளவுக்கு நின்று கேட்பதே பெரிது என்று தான் அன்னையும் நினைத்தார்.

மொட்டை மாடியில் திக்ஷிதா இருக்க விஷ்வாவும் நின்றிருந்தான் கூட.

"நான் சாதாரணமா தான் அண்ணி கேட்டேன் நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க?" என்று விஷ்வா கேட்க,

"நான் வேணும்னு பண்ணல.. அந்த நேரம் அக்கா அப்படி சாக போறேன்னு நிற்கவும் எனக்கு என்ன பண்ணணு தெரியல.. அதான் நீ போனு அனுப்பினேன்.. வேணும்னு எதுவும் பண்ணலை!" என்றாள் திக்ஷிதா பயந்து.

"அண்ணி! நீங்க இவ்வளவு விளக்கம் சொல்ல தேவை இல்லை.. அன்னைக்கு நீங்க பொண்ணு ரூம்ல இருந்து உங்க அக்காவுக்கு கையசைச்சதை பார்த்தேன்.. நான் போய் சொல்லி அது பெரிய பிரச்சனை எதுவும் ஆகிடக் கூடாதே! அண்ட் எனக்கு அந்த சிட்டுவேஷன் ஹண்ட்ல் பண்ண எல்லாம் தெரியல.. அதான் வீட்டுக்கு போய்ட்டேன்.. எதுவா இருந்தாலும் மார்னிங் தெரிய தானே போகுதுன்னு நினச்சேன்.. ஆனால் நான் திரும்பி வரும் போது நீங்க கல்யாணப் பொண்ணா மாறி இருந்திங்க.. அப்பவும் ப்ரோப்லேம் இல்லைனா ஓகேனு தான் நான் எதுவும் உங்ககிட்ட கேட்டுக்கலை" என்றான் விஷ்வா.

"நானுமே எதிர்பார்க்கல அன்னைக்கு எதையும்.. அம்மா அப்பாவை பார்க்க பார்க்க கஷ்டமா போச்சு.. சங்கு மேல கோபம் கூட அப்புறம் தான் வந்துச்சு.. உங்க அம்மாவும் என் அம்மாவும் சேர்ந்து பேசி என்னை கேட்டாப்போ ஒரு தீர்வு அதுவும் யாரையும் பாதிக்காமல் கிடைச்சா சரி தானேனு சம்மதம் சொல்லிட்டேன்" என்றவளுக்கு விஷ்வா தன்னை தவறாய் நினைக்கவில்லை என்றதே நிம்மதியாய் இருந்தது.

மாடியில் நின்று அன்னையுடன் திக்ஷிதா சகோதரி வீட்டிற்கு வந்ததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள்.

அதை எதிர்பாராமல் விஷ்வா கேட்டுவிட, திக்ஷிதா பயமும் பதட்டமுமாய் அவனை எதிர்கொள்ள, விஷ்வா தனக்கு அன்றே தெரியும் என்று கூறிவிட்டான்.

"நீங்க செஞ்சது தப்புன்னு சொல்ல முடியாதே! என்ன ஒன்னு உங்க சிஸ்டர் முன்னாடியே சொல்லி இருக்கலாம்.. "

"எனக்குமே மண்டபத்துல தான் தெரியும்.. முன்னயே தெரிஞ்சிருந்தாலும் அதோட சீரியஸ்நெஸ் புரிஞ்சிருக்குமான்னு தெரியல" என்று திக்ஷிதா கூற,

"லவ் மேரேஜ் எல்லாம் இப்ப ரொம்ப நார்மல் அண்ணி! அதனால் அத்தை மாமாவை உங்க அக்காவை ஏத்துக்க சொல்லுங்க" என்றான் விஷ்வாவும்.

"எனக்கும் அப்படி தான் தோணுச்சு.. ஆனாலும் பெரியவங்களால அதை சகஜமா ஏத்துக்க முடியாது இல்ல? அதுவும் நாங்க ரெண்டு பேரும் பொண்ணுங்க.. அப்பாக்கு ரொம்ப செல்லமும் கூட.. அக்கா அப்பாகிட்ட பேசி அவங்க முடியாதுன்னு சொல்லி இருந்தா அது வேற.. ஆனால் மண்டபம் வரை வந்து உங்க அண்ணனை அப்படி நிற்க வச்சது தப்பு தானே?" திக்ஷிதா உணர்ந்தே கூற,

"ஹ்ம் சரி தான் அண்ணி! அதுக்காக அவங்களை அப்படியே விட்டுட முடியுமா? அவங்களும் பாவம் இல்ல? அம்மாவை தேடி இப்ப வந்திருக்காங்கன்னா அவங்களுக்கு என்ன கஷ்டமோ?" என்று கூற,

'அப்படியும் இருக்குமோ?' என்று கொஞ்சம் பயமாய் இருந்தாலும் கணவனுக்கு தெரியாமல் இனி சகோதரியிடம் பேசுவதில்லை என்ற முடிவில் மட்டும் உறுதியாய் இருந்தாள்.

"சரி உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்ங்க.." அவளின் பல விதமான முக பாவனைகளில் விஷ்வா கூறிவிட்டு சிரிக்க, மெலிதாய் புன்னகைத்து தலையசைத்தவள் கீழே இறங்கிவிட்டாள்.

இவர்கள் இருவரும் பேச ஆரம்பித்த பொழுது வந்த வாசு பேச்சின் பாதியிலேயே இறங்கி சென்றிருக்க இருவருமே அதை உணரவில்லை.

"எங்க டி போன? அவன் வந்ததும் உன்னை தான் கேட்டான்" சிவகாமி கூற,

"வந்துட்டாங்களா?" என்று கேட்டவள் எங்கே என்று பார்க்க,

"என்னவோ நீ சரியே இல்லை இன்னைக்கு.. ஏன் இவ்வளவு டல்லா இருக்க? உங்க அம்மாகிட்ட பேசினேன்.. நாளைக்கு வர்றதா சொன்னாங்க.." என்று கேட்கவும்,

"இதை என்கிட்ட கேட்டிருந்தால் நானே சொல்லி இருப்பேன்.. அவங்க வர்றது தான் எனக்கு தெரியுமே" என்று கிண்டல் பேச,

"இந்த பேச்சு தான்!" என்று இடித்தவர்,

"அவனைப் போய் பாரு.. நான் டிபன் பண்ணிடுறேன்" என்று கூற,

"மாமி! இப்ப பண்ணிட்டு மருமகள் சரி இல்லனு ஊருக்குள்ள போய் சொல்ல மாட்டிங்களே!" என்று கூற,

"பேச்சைப் பாரு!" என்றவர் உள்ளே நகர்ந்துவிட, வாசுவை தேடி அறைக்குள் வந்தாள் திக்ஷிதா.

அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தவன் முகத்தில் அத்தனை அழுத்தம். அதனோடே கூடிய சிவந்த விழிகள்.

எதையும் பேசி முழுதாய் தெரிந்து கொள் என மூளை எடுத்துரைக்க மனைவி வரவே காத்திருந்தான் வாசு.

"இன்னும் கோபமா தான் இருக்காங்களோ!" நினைத்தபடி உள்ளே வந்தாள் அவன் முகத்தையே பார்த்தபடி.

அவனும் அவளை தான் பார்த்தான் என்றாலும் அவன் நினைப்பதை இவளால் அறிய முடியவில்லை.

"வாயை திறந்து பேசிடலாம்.. இதெல்லாம் ஒரு பிரச்சனைனு இழுத்துட்டே போக வேண்டாம்!" என நினைத்து ப்ரீத்தா விஷயத்திலேயே தான் இருந்தாள் திக்ஷிதா.

சங்கமித்ரா அழைத்தது அன்னையிடம் பேசியது விஷ்வா கூறியது என எல்லாம் பின்னுக்கு சென்றது வாசுவின் கோபத்திற்கு முன்.

"நிஜமா அந்த விச்சு இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கல.. அவன் சொன்னதும் எனக்கு வேற எதுவும் தோணல.. ஜஸ்ட் அந்த பொண்ணை பார்த்துடனும்நஹ் தான் இருந்துச்சு.. அதான் என்ன எதுக்குன்னு யோசிக்காமலே உங்களோட கிளம்பிட்டேன்.. தப்பு தான் சாரி.. இதை இப்படியே விட்டுடுவோமே! இனி அவன் என்ன சொன்னாலும் நான் நம்பமாட்டேன்" திக்ஷி கூற, இன்னும் பார்வை மாறாமல் அவளைப் பார்திருந்தவன் பேசாமல் இருந்தான்.

"சரி ஓகே! கத்தவும் வேணாம் அமைதியா இருக்கவும் வேணாம்.. கோபம்னா அடிச்சிடுங்க.. தப்பு நான் தானே பண்ணினேன்.. வாங்கிக்குறேன்" என்றவள் அப்படியே நிற்க, இப்பொழுதும் அமைதியாய் அவளை பார்த்து நின்றான்.

"இது சத்தியமா எனக்கு பிடிக்கல.. இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?" திக்ஷிதா அவன் கோபம் எதற்கு என்று புரியாமலே பேசிக் கொண்டிருக்க,

"ப்ரீத்தா எனக்கு ப்ரொபோஸ் பண்ணினது உண்மை தான்!" என்றான் நீண்ட நேரத்திற்கு பிறகு.

"என்ன?" என்றவள் அவனைப் பார்க்க, மீண்டும் அமைதியாகிவிட்டான்.

சில நொடிகள் விழிகளை சுழற்றியவளுக்கு என்ன கூறுவது என்று தெரியாமல் போக, பின் ஏதோ நினைத்தவளாய்,

"அவங்க தானே ப்ரொபோஸ் பண்ணினாங்க? பரவால்ல.. இனி எதுவும் தெரிய வேண்டாம்.."

இனி அதைப் பேச என்ன இருக்கிறது? ப்ரீத்தா திருமணம் ஆன பெண் என்பதை மனது எடுத்து கூறவும் திக்ஷிதா யோசித்து இப்படி கூற,

"ம்ம்!" என்றவன் அமந்துவிட்டான் எதுவும் பேசாமல்.

"எதுக்காக இப்படி கோபத்தை இழுத்து வச்சுட்டு இருக்கீங்க? இனிமேல் பண்ண மாட்டேன் சொல்றேன் தானே?" கொஞ்சம் சத்தமாய் கூறவும் அவன் அவள் புறம் திரும்ப,

"ப்ளீஸ்!" என்றாள் கெஞ்சலாய்.

"இன்னும் கேட்க நிறைய இருக்கு" என்றவன் பேச்சு புரியவில்லை.

"அதான்! உன் சிஸ்டர் இன்னைக்கு வீட்டுக்கு போனது.." என்றதும் விழி விரித்து அவள் பார்க்க,

"நீ கல்யாணத்தன்னைக்கு டாட்டா காட்டி அனுப்பிவிட்டது" என்ற சொல்லில் ஒரு நொடி அதிர்ந்து அடங்கியது உடல்.

"நான்... நான்...!" என்றவளுக்கு பேச்சே வரவில்லை. அவன் குரலை விட சிவந்த விழிகளும் இறுகிய முகமும் பார்க்க பார்க்க வார்த்தை திணற, பேச முடியாமல் தன் பக்கத்தை கூறவும் முடியாமல் நிற்க,

"மெதுவா சொல்லு.. ஒன்னும் பிரச்சனை இல்லை" என்றவன் வெளியில் சென்றுவிட, தொண்டைக் குழி ஏறி இறங்கியது அவன் கோபத்தின் அளவு புரிந்ததில்.

**************

"லீவ்னு சொன்னதனால தான் டா உன்னை கூட்டிட்டு வந்திதேன்.. இப்படி பண்றியே!" என சிவகாமி விஷ்வாவிடம் கூற,

"போய்ட்டு நாளைக்கு ஈவ்னிங் இங்கேயே வந்துடுறேன் ம்மா.. நாளன்னைக்கு ஊருக்கு போய்டலாம்" என்றான் விஷ்வா.

"அதுவும் சரி தான்.. அம்முவோட அம்மா வர்றாங்கன்னு தெரிஞ்ச பின்னாடியும் நான் பார்க்காமல் போனா நல்லா இருக்காது" என்றவர்,

"முடிஞ்சா நாளைக்கு வீட்டுல இரேன் வாசு!" என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த மகனிடம் கூற,

"நாளைக்கு மீட்டிங் இருக்கு ம்மா.. இம்போர்ட்டண்ட் மீட்டிங்!" என்று முடித்துக் கொண்டான்.

திக்ஷிதாவிற்கு அதிர்ச்சியை கொடுத்தவன் வந்து சாப்பிட அமரவும் அன்னை அவளைப் பற்றி கேட்க, தலைவலி என்று கூறிவிட்டான்.

"உனக்கு இம்போர்ட்டண்ட் இல்லைனா தான் அதிசயம்!" என்றவரை அவன் கண்டு கொள்ளாமல் இருக்க,

"திக்ஷியை சாப்பிட வர சொல்லு டா.. சாப்பிட்டு தூங்கினா தான் தலைவலி சரி ஆகும்" என்றார் சிவகாமி.

மகன் பதில் சொல்லவில்லை என்றதுமே அவளுக்கான உணவை எடுத்து வைத்து மகன் செல்லும் பொழுது கொடுக்க, எதுவும் பேசாமல் பார்த்தவன் தட்டை வாங்கிக் கொண்டு வந்துவிட்டான்.

"அவகிட்ட சண்டை எதுவும் போட்டிருப்பானோ?" என்று இளைய மகனிடம் சிவகாமி கேட்க,

"இருக்குமோ?" என்றான் விஷ்வாவும்.

"இருந்தாலும் இவன் இப்படி இருக்க கூடாது டா.. எதையாவது மூஞ்சைப் பார்த்து கண்டுபிடிக்க முடியுதா? எனக்கும் என் புருஷனுக்கும்னு வந்து பொறந்திருக்கான் பாரேன்!" என்று சிவகாமி குறைபட,

"அதான் அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு நான் ஒருத்தன் இருக்கேனே! எங்க என் முகத்தை பார்த்து என்ன நினைக்குறேன்னு சொல்லுங்க பார்ப்போம்!" என்று விஷ்வா வம்பளக்க,

"சாப்பிட்டு எழுந்து போ டா.. அவனுக்கும் சேர்த்து பேசிட்டு இருக்குற நீ!" என்றார் அன்னை.

தொடரும்..