• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி _08

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
643
113
Tirupur
நதி - 08



“மாமா… அத்தை, அத்தையா இப்படி? அவங்க இப்படியெல்லாம் செய்வாங்கன்னு நினைச்சிக்கூடப் பார்க்க முடியல, நம்ம கஷ்டத்தைப் பார்த்தும் கூட எப்படி அவங்களுக்கு இதை செய்ய மனசு வந்தது..” எனக் கணவனின் மார்பில் சாய்ந்து கதறிய மனைவியை சமாதானம் செய்ய வார்த்தைகள் வராமல் தடுமாறினான் புவன்.



“கவி ப்ளீஸ்.. டென்ஷன் ஆகக்கூடாது.. நான் சொல்றேன்ல அப்படியெல்லாம் ஒன்னும் ஆகிருக்காது, அபி அந்த மாதிரி செய்ற பொண்ணே இல்லை. உனக்குத் தெரியாதா.? நீ ஸ்ட்ரெஸ் ஆகாத” என்ற கணவனின் சொற்கள் அவள் செவியை சென்று அடையவே இல்லை.



“இல்ல மாமா, எனக்கும் பிரச்சினை இல்ல. உங்களுக்கும் பிரச்சினை இல்லை. ஆனா ஏன் நமக்கு மட்டும் குழந்தை இல்லைன்னு நான் வேண்டாத கடவுள் இல்லை. அழாத நாளும் இல்ல, ஆனா இப்படி ஒரு பாவத்தை செஞ்சா நமக்கு எப்படி குழந்தை வரும்..” என்று அழுது கொண்டே வேதனையில் பேசிய மனைவியின் தலையைத் தன் மார்பில் சாய்த்த புவனனுக்கும் அதே அளவு வலியும் வேதனையும் தான்.



பார்கவி தன் அம்மாவின் அண்ணன் மகள்தான். பார்கவியைத் திருமணம் செய்ய அம்பிகா மகனிடம் கேட்ட போது, சொந்தத்தில் வேண்டவே வேண்டாம் என்று மறுத்தான் புவனன்.



ஆனால் பார்கவிக்கு புவனனின் மீது இருந்த விருப்பத்தைப் பார்த்த அம்பிகாவும், சிவனேசனும் பேசிப்பேசியே, அவனைக் கரைத்து திருமணத்தை நடத்தி வைத்தனர். முதலில் இருவரிடமும் ஒதுக்கம் தான்.



அவளாக வந்து பேசினாலும் பதில் சொல்வானே தவிர, பிடித்து வைத்து தானாக பேசியதில்லை. இப்படியே நாட்கள் செல்ல, அந்த நேரம் சிங்கப்பூரில் இருந்த கார்த்திக்கு, சரியாக சாப்பிடாமல் அல்சர் அதிகமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட, புவனன் அவனுக்காக சிங்கப்பூர் சென்றுவிட்டான்.



அதில் முழுதாக ஒரு வருடம் சென்றுவிட்டது, இடையிடையே வீட்டுக்குப் பேசும் போது மனைவியிடமும் தன் தயக்கத்தை உடைத்துப் பேச ஆரம்பிக்க, அதற்காகவே காத்திருந்தது போல் பார்கவியும் அவன் மீதான காதலை உணர்த்த ஆரம்பிக்க, பிரிவின் வலியில் தான் மனைவியின் மேல் அவனுக்கு நேசம் உண்டானது புரிய, அவளோடான வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்ற உறுதியோடு இந்தியா வந்தான்.



அதன் பிறகு இருவருக்கும் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. வருடங்கள் மூன்றைக் கடக்கவும்தான் குழந்தை ஏன் இல்லை என்ற மற்றவர்களின் கேள்வியில் சிந்தனைக்கு வந்து ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்க ஆரம்பித்தனர்.



அவர்கள் பார்த்த மருத்துவர்கள் அனைவரும் இருவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை, பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற வார்த்தையை மட்டுமே அச்சுப் பிசகாமல் சொல்ல, சோர்ந்து தான் போயினர் தம்பதியினர். இனி தங்கள் கையில் ஒன்றும் இல்லை, அனைத்தும் கடவுள் பார்த்து கொடுத்தால் மட்டுமே என்ற நிலைக்கு வந்துவிட, இப்போது கோவில் கோவிலாக அலைகிறாள் பார்கவி.



ஏதேதோ புலம்பிக்கொண்டே இருந்த மனைவியை சமாதானம் செய்து, சாம்பவியை அவளிடம் விட்டுவிட்டு புவனன் வெளியில் வர, அப்போது “என்ன செஞ்சிட்டு வந்துருக்கீங்க, நம்ம பையன் மேல நீங்களே கேஸ் கொடுத்துருக்கீங்க..” என அம்பிகா கணவரைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தார்.



“நீயும் உன் மகனும் செஞ்ச வேலைக்கு சும்மா விட்டு வைக்கனுமா என்ன.? அநியாயமா ஒரு உயிர் போயிருக்கு, அதைப்பத்தி கொஞ்சமும் கவலை இல்லாம, குற்றவுணர்வும் இல்லாம இத்தனைநாள் இருந்திருக்க அப்படித்தான.?” என்ற மகேஸ்வரன்,



“இன்ஸ்பெஸ்க்டர் இவங்க கார்த்தியோட அம்மா, நான் அப்பா. இப்போ கார்த்தி இங்க இல்ல. அவன் வரும் வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் வந்து ஸ்டேஷன்ல இருக்கோம்..” என முன்னே நடக்க,



“என்னங்க.. என்ன பன்றீங்க நீங்க..” என்ற அம்பிகா, “ருத்ரா என்னனு விசாரிடா.? உன் பெரியப்பாவுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா..” என மகனை துணைக்கு அழைக்க,



“ஸார்.. ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. என்ன நடந்தது ஏன், எப்படின்னு எங்க யாருக்கும் எதுவும் தெரியாது. அப்பா ஏதோ கோபத்துல கேஸ் கொடுத்துருக்கார். சம்மந்தப்பட்டவங்க கேஸ் கொடுக்கல இல்லையா.. அப்படி கொடுத்தா ஃபர்தரா மூவ் பண்ணுங்க, இப்ப வேண்டாமே ப்ளீஸ். இது குடும்ப விஷயம்.. வெளிய தெரிஞ்சா ப்ரெஸ்டீஜ் இஸ்ஸூ.. ப்ளீஸ் கன்சிடர் பண்ணுங்க” என அப்போதுதான் மனைவியை ஓரளவுக்கு சமாதானம் செய்து வெளியில் வந்த புவனன் பதட்டமாகப் பேச,



“ஹலோ மிஸ்டர்.புவனேஷ், ஐம் ரவிச்சந்திரன். இன்ஸ்பெக்டர் ஆப் போலிஸ், தேனி.” என அறிமுகப்படுத்திக் கொள்ள,



“ஹாய் சார், ப்ளீஸ் சிடவுன்..” என்று அவரை அமரவைத்துவிட்டு, “கார்த்தி இப்போ அவுட் ஆஃப் டவுன் சார். அவன் இல்லாம எங்களால எந்த முடிவுக்கும் வர முடியல.” என்ற புவனிடம்,



“இட்ஸ் ஓக்கே புவனேஷ். உங்களுக்கே தெரியும். டொமஸ்டிக் வைலன்ஸ் யார் வேனும்னாலும் கொடுக்கலாம். நான் இப்பவே ஃபர்தரா மூவ் பண்ண முடியும். பட் உங்களுக்காக நான் கன்சிடர் பன்றேன். இன்னும் டூ டேஸ்ல உங்க தம்பியும், அவர் வைஃபும் ஸ்டேஷன் வரனும். அப்படி வரலன்னா, என்னைத் தப்பா நினைக்கக்கூடாது. உங்க அப்பாவையும் அம்மாவையும் அரெஸ்ட் பண்ண வேண்டிய சூழல் வரும்..” என்ற அந்த இன்ஸ்பெக்டர், எல்லோரிடமும் தலையை அசைத்து விடைபெற, அவருடன் வாயில் வரை சென்று வழியனுப்பி விட்டு வந்தான் புவன்.



போலிஸ் வந்து சென்றதிலேயே அம்பிகாவும், பவானியும் பயந்து போயிருந்தனர். அதற்கு தகுந்தார் போல அவர் கொடுத்துவிட்டுச் சென்ற காலக்கெடு வேறு உள்ளுக்குள் புளியைக் கரைத்தது.



அப்போதுதான் போலிஸ் ஜீப்பை யோசனையுடன் பார்த்தவாறே உள்ளே வந்த சிவனேசன் எல்லோரும் ஹாலில் இருப்பதைப் பார்த்து யோசனையாகி, “என்ன பார்வதி..” என மனைவியிடம் கேட்க,



“என்ன ஏன் சாமி கேட்குறீங்க, இந்த வீட்டுல நான் யாரு, எனக்கு என்ன மரியாதை இருக்கு. வயசாகிடுச்சு, வெந்ததை தின்னுட்டு மூளையில கிடக்கிறதை விட்டுட்டு எதுக்கு தேவையில்லாம எல்லாத்துலயும் மூக்கை நுழைச்சு அசிங்கப்படனும், எனக்கு எதுவும் தெரியாது. இதோ உங்க கண்ணான மருமகளுங்க ரெண்டு பேரும் இருக்காங்க. இந்த குடும்பத்துக்கு யார் தேவை, தேவையில்லன்னு அவங்கதான் முடிவு பண்ணுவாங்க, அவங்ககிட்டயே கேளுங்க..” என்றவர், யார் பேசியதையும் கேட்காமல், அதிர்ந்து நின்ற கணவரையும் கண்டுகொள்ளாமல் தளர்ந்த நடையுடன் தங்கள் அறைக்குச் சென்றுவிட்டார்.



மனைவியின் இந்த தளர்ந்த பேச்சில் மருமகள்கள் இருவரையும் கூர்மையாகப் பார்க்க, “மாமா நாங்க எதுவும் செய்யல மாமா, உங்க மகன்தான்..” என ஆரம்பித்த அம்பிகா, மகேஸ்வரனைக் கைகாட்டி, “மாமா உங்க மகன் என்ன செஞ்சி வச்சிருக்கார் பாருங்க மாமா, எங்க மேலையும், கார்த்தி மேலையும் வரதட்சனை கொடுமைன்னு போலீஸ் கேஸ் கொடுத்துட்டு வந்துருக்கார். அதுக்காகத்தான் அத்தை அப்படி..” என முடிக்கும் முன்னே, “போதும்..” என்றவர், “எல்லாம் போதும், இதுவரைக்கும் நீங்க செஞ்ச எல்லாம் போதும், இனிமே கார்த்தி விஷயத்துல உங்க தலையீடு இருக்கக்கூடாது. அந்த பொண்ணு கூட அவன் வாழ்ந்தலும் சரி, இல்ல பிரிஞ்சி போனாலும் சரி, நீங்க யாரும் தலையிடக்கூடாது..” என அனைவரையும் பார்த்து சொன்னவர், மகன்களை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மனைவியை காண சென்றார்.



அதுவே சொன்னது, இப்போது அடக்கி ஒரு பிரயோஜனமும் இல்லையென்று. தந்தையின் பார்வையில் மீண்டும் மனைவியை முறைத்தவர்கள் வெளியில் சென்றுவிட, ருத்ரேஷும் மனைவியை அழைத்துக் கொண்டு வாக்கிங்க் செல்ல, மற்ற இருவரும் கடைகளுக்கு கிளம்பினர்.



இப்படி அனைவரும் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு மற்ற இருவரையும் கவனிக்காமல் செல்ல, அதுவும் சேர்த்து அம்பிகாவிற்கும் பவானிக்கும் எரிச்சல் வந்தது.



“என்ன அக்கா இப்படி ஆகிடுச்சு, அவ மறுபடியும் இந்த வீட்டுக்குள்ள வந்துடுவா போலையே..” என்ற பவானியை கிண்டலாகப் பார்த்த அம்பிகா, “அதுக்கு வாய்ப்பில்ல பவா, கார்த்தியை நீ சாதாரனமா எடை போட்டுடக்கூடாது. அவனுக்கு வேண்டாம்னா வேண்டாம்தான். யார் கட்டாயப்படுத்தியும் திணிக்க முடியாது. அவன் கண்டிப்பா அவளைக் கூப்பிட்டு வரமாட்டான். அப்படியே வந்தாலும் அவளை மறுபடியும் ஓட விட நம்மலாள முடியாதா என்ன.?” என்று குரோதமாகச் சிரித்த அம்பிகாவைப் பார்த்து பவானிக்கும் சிரிப்பு வந்தது.



இப்போது வாழ்க்கை ‘நான் ஒரு வட்டம்டா’ என்று இவர்களைப் பார்த்து சிரித்து வைத்தது.

-

முடிந்தது.. நம் வாழ்க்கை இன்றோடு முடிந்தது என்ற பயத்திலேயே மயக்கம் வந்து கீழே விழ ஆரம்பித்தவளின் மெல்லிய கரத்தை, ஒரு வலியக் கரம் பிடித்து மேலே இழுக்க ஆரம்பித்தது.



சரியாக அதே நேரம் கஜேந்திரரும் அந்த மரத்தின் கீழ் நின்று இவர்களைப் பார்த்து பிளிறிக் கொண்டே அந்த மரத்தை இடிக்க, மரமும், அதன் மீதிருந்த வீடும் ஆட்டம் காண, மயக்கத்திலும் உடலெல்லாம் தடதடக்க ஆரம்பித்தது அபிராமிக்கு. ஆனால் அதெல்லாம் எனக்கொன்றுமில்லை என்பது போல அவளை அப்படியேத் தூக்கியவன் தன் தோளில் போட்டுக்கொண்டு அறைக்குள் வந்தான்.



அங்கிருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் பளிச்சென்றுத் தெரிக்க, அதில் அரண்டு நிமிர்ந்தவளின் வாயில் குளுக்கோஸ் கலந்த தண்ணீரை திணிக்க, “ம்ம்… ம்ஹ்ஹ்ம்ம் வேண்டாம், வேண்டாம்.." என்று அதைத் தட்டி விட்டவள், தன் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு "ம்மா. ம்ம்ம்" என வலி‌யி‌ல் சுருள ஆரம்பித்தாள்.



நொடிகள் கடந்து நிமிடங்களும் கரைய, அவளையே விழி எடுக்காமல் பார்த்து கொண்டே நின்றவனின் எண்ணங்கள் எங்கெங்கோ சுழன்று வர,



"ம்மா… மமம்ம்" என்றவளின் முனங்கலில் மீண்டவன், "ம்ச்" என தன்னையே சலித்துக்கொண்டு அவளை அப்படியே விட்டு கீழேப் பார்க்க, இப்போது யானையார் அவர்களை விட்டு சற்று தொலைவில் சென்று கொண்டிருந்தார்.



அதைப் பார்த்து பெருமூச்சு விட்டவன், ‘மீண்டும் மனைவியை அள்ளி லாவகமாகத் தன் தோளில் போட்டுக்கொண்டு, அனாயசாமாக அந்தப் படிகளில் இறங்கி, யானை சென்ற திசைக்கு எதிர்புறமாக நடந்தான்.



அங்கிருந்த சிறுதொலைவில் தெரிந்த அருவிக்கரையில் அவளை இறக்கிவிட்டவன், “ப்போ” என்ற பார்வையோடு ஒரு பாறையில் ஏறி அமர்ந்து கொள்ள, தட்டித் தடுமாறி ஒருவழியாகத் தன் வேலையை முடித்தவளுக்கு காலில் சுள்ளென்று வலி பெரிதாக எடுக்க ஆரம்பித்தது.



அதில் அவளால் அடுத்த அடிக்கூட எடுத்து வைக்க முடியாமல் போக, “கார்த்தி, கார்த்தி” என்றழைக்க, அவனோ யாரோ யாரையோ அழைக்கிறார்கள் என்ற எண்ணத்தில் தூரத்தில் தெரிந்த தொடுவானை வெறித்துக் கொண்டிருந்தான்.



“கார்த்திக் வலிக்குது, ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்.” அவனிடமே மண்டியிட வைக்கும் இந்த விதியை நொந்து கொண்டே அழைக்க,



“ம்ம்… வலிக்குதா.. வலிக்குது.. ம்ம்ம் வலிக்கட்டும். நல்லாவே வலிக்கட்டும். இது ஜஸ்ட் உடல்வலி தான், மருந்து எடுத்தா சரியா போகும். ஆனா நீ கொடுத்துட்டு போன இந்த வலி" எனத் தன் இதயத்தை ஓங்கி குத்த, அதில் அபிராமி பயந்து நீருக்குள்ளே ஓரடி பின்னே நகர, "இதுக்கு என்ன மருந்து இருக்கு சொல்லுடி இந்த வலியை நான் எப்படி போக்க.. சொல்லு, வலிக்குது வலிக்குதுன்னு சொல்றியே, என்னோட வலிக்கு என்ன தீர்வு" என ஆங்காரமாகக் கத்தியவன் அவள் கூந்தலைப் பிடித்து தன் முகத்தருகே இழுத்து, வலிக்கப் பிடித்து "எங்கிட்ட சொல்ல உனக்கு எதுவும் இருக்கா.” என்றான் இறுகியக் குரலில்.



அந்தக் குரலில் இருந்த இறுக்கமும், அவன் கைகளில் கொடுத்த அழுத்தமும் அவளை விதிர்விதிர்க்கச் செய்ய, தலையை அவனிடமிருந்து பிரிக்க போராடியபடியே “என்ன என்ன சொல்லனும், ஒன்னும் இல்ல ஒன்னுமே இல்ல..” என பதட்டத்திலும், பயத்திலும் படப்படப்பாக சொல்ல, எப்படி எவ்வளவு வேகத்தில் அவளை அருகே இழுத்தானோ, அடுத்த நிமிடம் அதே வேகத்தில் அவளை அந்த ஆற்றுக்குள் தள்ளி விட்டிருந்தான்.



“ப்போடி, ப்போ.. நீ சொல்லாம மறைக்க மறைக்க உன்மேல எனக்கு இருக்குற கோபம் வெறியா மாறிக்கிட்டே வருது. இப்போ இந்த நிமிசம் உன்னைக் கொன்னுடனும் போல ஒரு ஆத்திரம், சொல்லு சொல்லுடி என்ன மறைச்ச எங்கிட்ட..” என ஆக்ரோசமாகக் கத்த, அந்தக் கத்தலிலும், குளிர் நீரில் விழுந்ததிலும் அவள் உடல் நடுங்க ஆரம்பிக்க, அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை அவன்.



“நீ சொல்லாமல் இங்கிருந்து நகரக்கூட முடியாது..” என்று நக்கலாகச் சொன்னவன், அபியின் அழுகையையும் பயத்தையும், அவளது உடல் நடுங்குவதையும் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அவளுக்கு எதிரில் இருந்த பாறையில் சாய்ந்து கையைக்கட்டிக் கொண்டு இறுகிய முகத்துடன் அழுத்தமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.
 
Last edited:

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
Akka ipo unga mela kovam varudhu..olz solirungaka enna nadanchuuu.... eagerly waiting for your next episode 🫠🫠🫠🫠🫠
 
  • Love
Reactions: Sampavi

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
545
164
43
Dindugal
Very nice ud kka,
karthi kopapadura alavukku appadi ennathan nadanthathu..
aen intha maamiyar ellaam ippadiye irukkanka
Omg..
paavam parkaviyum ruthranum