• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவோடு தென்றலும்! 14

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
அத்தியாயம் 14

அவ்வளவு கோபம். ஏனென்றே தெரியாத கோபம். ஆனாலும் அதற்கு இது தான் காரணம் என வெளிப் பூச்சு பூசிக் கொண்டாள் அனன்யா.

"என் கூட வர மாட்டாங்களா? அப்படி என்ன பண்ணிட்டேன் நான்? அதுக்கு என்னையே வேற சொல்லிருக்காங்க நான் தான் வர மாட்டேன்னு!" என மீண்டும் மீண்டும் புலம்பிக் கொண்டே இருந்தாள் கிளம்பும் வரை.

அதிக அக்கறை எடுத்தெல்லாம் கிளம்பவில்லை. எப்பொழுதும் அலுவலகம் கிளம்புபவள் போல கிளம்பிக் கொண்டு மணியைப் பார்க்க, ஒன்றை தொட இருந்தது நேரம்.

அவ்வளவு கோபம் வேறு. என்னோடு வர மறுத்து தானே அப்படி அத்தான் காரணம் சொல்லி இருப்பார் என நினைத்து நினைத்து கோபத்தை வளர்த்துக் கொண்டாள்.

வரட்டும். வர வேண்டும். ஏன் நான் என்ன செய்துவிடுவேன் என புலம்பலான புலம்பல்.

சரியாய் ஒரு மணிக்கு அரவிந்த் அழைப்பிற்கு காத்திராமல் தானே அரவிந்த்திற்கு அனன்யா அழைக்க,

'என்ன அதிகமா சர்ப்ரைஸ் குடுக்குறா!' என நினைத்துக் கொண்டு தான் அழைப்பை ஏற்றான் அரவிந்த்.

"சொல்லு அனு!" அரவிந்த் கேட்க,

"கிளம்பிட்டிங்களா அத்தான்! எத்தனை மணிக்கு போகணும்?" என ஒரு வேகத்தில் வேகமாய் கேட்டுவிட, ஒற்றை புருவத்தை ஏற்றி சிந்தனையோடு நின்றவனுக்கு அவள் பேச்சின் வேகமும் எதுவும் கோபமோ என தோன்றியதில்

"நான் கிளம்பிட்டேன் அனு. நீ கிளம்பிட்டன்னா போகலாம்" என்றான்.

"அப்போ போகலாம். நான் கிளம்பிட்டேன்!" மீண்டும் பட்பட்டென்ற பதில் அனன்யாவிடம்.

"ஹ்ம் கீழ வா டா!" என்றவன் என்ன கோபமோ என்றபடி கிளம்பி வர, மூச்சைடைத்து நின்றுவிட்டாள் அவனைக் கண்டவள்.

அப்பட்டமான அரவிந்த் மீதான அனன்யா பார்வையை விலக்க சொல்லி அவள் மூளை எடுத்து சொல்ல, கேட்பேனா என அவனிடமே தஞ்சமடைந்து விட்டது அனன்யாவின் மனம்.

ஆலிவ் பச்சை வண்ண முழுக்கை டீஷிர்ட்டின் மேல் பகுதியில் கூலர்ஸை மாட்டிக் கொண்டு, ஒற்றை கையில் கடிகாரம் இடம் பெற்றிருக்க தலை கோதி வந்த அவன் தோரணையில் கோபம் கொண்டதென்ன அவளையே அவள் மறந்து தான் நின்றிருந்தாள்.

"அனு!" என அவள் முன் அரவிந்த் கைகளை ஆட்ட,

"த்தான்!" என்றவள் இதயம் வெளிவந்து குதித்தது போலானது அனன்யாவிற்கு.

"போலாமா?" என கேட்டு தலையில் ஹெல்மட்டை அரவிந்த் மாட்டிக் கொள்ள, இப்பொழுது மனம் எங்கெங்கோ சென்று வந்தது.

'எதற்கு உனக்கு இத்தனை ஆசை?' என அவளை அவளே வசைபாடிக் கொள்ளவும் மறக்கவில்லை.

சுத்தமாய் அவள் வசம் இல்லை அவள் மனது. அதிகத்திற்கும் தடுமாறி நின்றது. கொஞ்சமும் கட்டுப்பாட்டில் இல்லையே என அத்தனை கோபமும் அவள் மீதே தான்.

அனன்யா இவனைப் பார்க்கும் முன்பே அவளை பார்த்து, அவளை தனக்குள் அள்ளும் பார்வையை அழகாய் மறைத்து தான் அவள் பார்வைக்கு வந்து நின்றிருந்தான் அரவிந்த்.

அவளின் இந்த அதிகப் பார்வை எல்லாம் அவனுக்கு சந்தோஷ பூத்தூறல் தான் என்றாலும் காட்டிக் கொண்டால் பார்க்க மாட்டாளே என கவனமாய் அவன் மறைக்க, வழி முழுதும் இருவருக்குள்ளும் அமைதி தான்.

ரெஸ்டாரண்ட்டில் இவர்களுக்கான டேபிள் கூட புக் செய்யப்பட்டிருக்க, அரவிந்த் பெயரில் இருந்த டேபிளில் இருவருமாய் அமர்ந்தனர்.

அதிக தூரமில்லை. இவர்கள் இருக்கும் இடம் கேட்டு அதனருகில் இருக்கும் ஹோட்டல்களை தேடி எடுத்து மகிழினியுடன் சேர்ந்து வசந்த் தேர்வு செய்திருந்தான் இந்த இடத்தை.

அவ்வளவு கோபத்தில் கிளம்பியவளுக்கு இப்பொழுது வந்து சேர்ந்த பின் என்ன செய்வதேன்றே தெரியவில்லை.

"என்ன வேணும் பாரு!" என சொல்லி மெனுவை அவளிடம் அரவிந்த் தள்ளிவிட, முதல் பக்கத்தில் இருந்து முழுதாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"நீங்களே சொல்லுங்களேன்!" என முழுதாய் பார்த்துவிட்டு அவனிடம் அனன்யா சொல்ல,

"ஏன் எதை ட்ரை பண்ணனு தெரியலையா?" என்றான்.

"ம்ம்ஹும் எதை விடனு தெரியல!" என்று அனன்யா சொல்ல, சிரித்தவன்

"ஓகே! மகி இன்னைக்கு காலி!" என்று சொல்லி முதலில் தேவையானதை எல்லாம் ஒவ்வொன்று அவன் ஆர்டர் செய்ய,

"ஏன் ஒண்ணு ஒண்ணா சொல்றிங்க?" என்றாள் ஆர்டர் கொடுத்து முடித்த பின்.

"எது ரொம்ப நல்லாருக்கோ அதை திரும்ப சொல்லிக்கலாம். எல்லாத்தையும் வேஸ்ட் பண்ண வேண்டாம்ல?" என்றவன் சொல்லில் தலையாட்டிக் கொண்டாள்.

"இங்க பிரண்ட்ஸ் கூட ஒரு டைம் வந்திருக்கேன். பட் சரியா நியாபகல் இல்ல. ரெண்டு வருஷம் இருக்கும்" அரவிந்த் கூறினான்.

"நான் மகி கூட எப்பவாச்சும் ஊர்ல போறது தான்" என்று அனு சொல்லி அந்த நிகழ்வுகளில் சிறு புன்னகையையும் சிந்த,

"ரொம்ப மிஸ் பண்ற இல்ல?" என்றான் அவளை பார்த்திருந்தவன்.

ஆமாம் என்றும் இல்லை என்றும் கூறவில்லை. அத்தனையையும் தான் மிஸ் செய்கிறாள். தேடுகிறாள். எதையுமே மீட்க முடியாதே!

இதோ தன் முன் இருப்பவன். ஒரு மாதம் முன்பு வரை இவனை பார்க்கவே கூடாது என நினைத்ததன் மாறாய் இன்றைய நாள் கண்கள் அவனை விட்டு அகல மறுக்க, எது தான் யார் கைகளில் என தான் மருகியது.

"சரி பண்ணிடலாம்!" என்றவன் அவள் பார்வை அவனிடம் வரவும் இதழ் திறக்காமல் விரித்து புன்னகைக்க,

"என்ன சரி பண்ணுவீங்க? என் கூட வெளில வர கூடாதுன்னு நான் தான் வர மாட்டேன்னு மகிகிட்ட சொன்ன ஆள் தானே நீங்க?" என முகத்தை உம்மென வைத்துக் கொண்டு அனன்யா சொல்லிவிட, இப்பொழுது தான் கிளம்பும் பொழுது அவளிடம் இருந்த கோபத்திற்கான காரணம் புரிந்தது அரவிந்த்திற்கு.

"மகி சொன்னாளா?" என்றவன்,

"ஏன் அனு நீயா அசம்ஷன் பண்ணி டென்ஷனாகிக்குற?" என்றான்.

"அதான் உண்மை. உங்களுக்கு தான் என் கூட வர பிடிக்காதே!" அனன்யா சொல்ல,

'உன் கூட வர தான் பிடிக்கும். உன் கூட வர மட்டும் தான் பிடிக்கும்!' சொல்லி விடலாமா என கூட நினைத்தான்.

'வீம்புக்குன்னே பதில் சொல்லாம விட்டுடுவா!' தானே நினைத்துக் கொண்ட அரவிந்த்,

"நான் சொன்னேனா? இங்க சென்னை வந்ததுல இருந்தே நீ அரவிந்த்னா இப்படி தான்னு ஒரு மைண்ட் செட் பண்ணிட்ட" என்றவன்,

"சரி இப்ப சொல்லு. மகி சொல்லவும் நான் போக மாட்டேன்னு நீ சொன்னியா இல்லையா?" என்று கேட்க, அதன் உண்மையில் அமைதியாகினாள்.

"நீ என் கூட வர விரும்ப மாட்ட. உனக்கு கஷ்டமா இருக்கும். அதனால தான் வேண்டாம்னு மகிகிட்ட சொல்லிப் பார்த்தேன் அவ கேட்கல!" என்றான்.

"அனுவை எப்பவுமே எனக்கு பிடிக்கும். பாரமா எல்லாம் நினைக்கவே மாட்டேன்!" அரவிந்த் சொல்ல, மனம் உருகி கண்களை கலங்க செல்ல, தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டாள் அனன்யா.

ஆமாம் அவளுக்கு தான் தெரியுமே! அரவிந்த் என்பவனுக்கு அன்பரசனின் மகளாய் அனன்யாவை எத்தனை பிடிக்கும் என்று. அத்தனை அன்புக்கும் அக்கறைக்கும் என்றும் குறைவிருக்காது தான்.

ஆனாலும் அனன்யா என்ற தனி ஒரு பெண்ணாய் அவனுக்கு பிடிக்கவில்லை தானே? அதை பற்றி மட்டும் பேசிட முடியவில்லை தானே அவனால் என அனன்யா அவள் நினைவில் இருக்கும் பொழுதே மகிழினி அழைத்துவிட்டாள் அவள் எண்ணிற்கு.

"அனு வீடியோ கால் வா!" என சொல்லி வைக்கவும் இவளும் இணைய, அங்கே திகழ்மதி குடும்பம், மகிழினி, வசந்த், வசந்த் குடும்பம் என மொத்தமாய் ஹோட்டலில் அமர்ந்திருந்தனர்.

பார்த்ததுமே அத்தனை ஆசை அனன்யாவிற்கு.

"அர்வி த்தான் இங்க பாருங்களேன்!" என ஆச்சர்யமும் சந்தோஷமுமாய் அவர்களைக் கண்டவள் அரவிந்த்துடனான பேச்சை மறந்துவிட்டாள்.

"போச்சு! அப்படியே மொத்தமா பேசிடலாம் நினைச்சேன். இந்த மகி இருக்காளே! கரடி கரடி!" என அரவிந்த் நொந்து கொண்ட நேரம் அது.

வீடியோ காலில் பேசி முடித்து அத்தனையையும் அத்தனை பேரையும் என புகைப்படமும் எடுத்து அனன்யா அரவிந்த்திற்கு மகிழினி அனுப்பி ஒரு பாடு படுத்திவிட்டாள் அனைவரையும்.

"போட்டோ பார்த்தியா?" என அனன்யாவிற்கு அழைத்து வேறு மகிழினி சொல்ல,

"நீ மட்டும் தான் எடுப்பியா?" என்ற அனன்யா,

"த்தான் இதையும் போட்டோ எடுத்து அனுப்புவோம்!" என அங்கிருந்த ஓடும், தாவும், நடக்கும், மிதக்கும் என அனைத்தும் தட்டில் இருப்பதை புகைப்படம் எடுக்க சொல்லவும்,

"அவ அதை மட்டும் அனுப்பலையே அனு!" என்ற அரவிந்த்,

"இங்க பாரு!" என கேமராவை இவர்கள் இருவர் தெரியும்படிக்கு அவன் வைத்துப் பிடித்திருக்க, மகிழினியிடம் காட்டப் போகும் உற்சாகத்தில் இருந்தவளுக்கு வேறெந்த நினைவும் இல்லை.

அந்த மகிழ்ந்த புன்னகையுடனான முகத்தை மனதோடு அலைபேசியிலும் சேமித்துக் கொண்டான் அரவிந்த்.

"போதும் உங்க அரட்டை எல்லாம். சாப்பிடு அனு!" அரவிந்த் சொல்லவும் தான் சாப்பிட ஆரம்பித்தாள்.

"நல்லாருக்குல்ல அனு?" அரவிந்த் கேட்க,

"ஹ்ம் ஆமா த்தான்" என்றவளுமே நிறைவாய் தான் உண்டிருந்தாள்.

சாப்பிட்டு முடித்து பணம் செலுத்தும் நேரம் அனன்யா அழைத்துவிட்டாள் மகிழினிக்கு.

"ஹே வாலுங்களா!" என அரவிந்த் சொல்வதை எல்லாம் காதில் வாங்கவில்லை அனன்யாவும்.

வசந்திடம் சொல்லி பணத்தையும் மகிழினி உடனே அனுப்பி வைத்தவள்,

"உன் கல்யாணத்துக்கு இப்படி தனித்தனியா எல்லாம் ட்ரீட் தர கூடாது அனு. நாம எல்லாரும் ஒண்ணாவே இருக்கனும்!" என்றும் சொல்லி வைத்துவிட, அனன்யாவிடம் அவ்வளவு நேரம் இருந்த அந்த ஒரு விளையாட்டும் புத்துணர்ச்சியும் சென்று வெற்றிடம் வந்து சேர்ந்துவிட்டது அங்கே.

ஒன்றரை மணி நேரம் அத்தனைக்கு அத்தனை மகிழ்ச்சியாய் ஒரே குடும்பமாய் இருந்த நேரங்கள் முடிந்து மீண்டும் அவளை தரையில் தனியே விட்டதை போல நொடியில் மனமெல்லாம் வாடிவிட்டது அனன்யாவிற்கு.

"அதுக்குள்ள என்னவாம் அனு? படபடனு பேசிட்டு இருந்திங்க மகியும் நீயும். இப்ப என்ன சைலன்ட் ஆகிட்ட?" என கூலர்ஸை மாட்டிக் கொண்டு வந்து அரவிந்த் கேட்க,

"ஹ்ம்! ஒண்ணுமில்ல த்தான். மகி வச்சுட்டா!" என போனை காண்பித்தாள்.

"நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தா நேரம் போறதே தெரியாதே!" என சிரித்தவன்,

"ஓகே போலாமா? வேறெதாச்சும் வேணுமா அனு?" என கேட்க, வேண்டாம் என்றாள்.

இப்பொழுது கூட தெளிவாய் அவள் முகத்தை படிக்க முடிந்தது அரவிந்த்திற்கு. பதில் தான் சொல்ல முடியவில்லை.

அவளுக்காகவே அவன் காதலை சொல்ல பொறுமை காத்து நிற்க, அவனின் இந்த அதிக பொறுமையை சோதித்து அடுத்த நாளே அவன் காதலை சொல்லவும் வைத்திருந்தாள் அனன்யா.

தொடரும்..
 
  • Love
Reactions: Vathani

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
492
113
Tirupur
அவன் பொறுமையை எருமைல போக வச்சிட்டாளா?
 
  • Haha
Reactions: Rithi