• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசத் தூறல்கள் 6

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 6

"பிளாக்மேன் இப்டி லுக்கு விட்டு அண்ணாகிட்ட என்னை மாட்டி விட்ராதிங்க. திரும்பி படத்தை பாருங்க" ஹேமா சொல்ல, அவள் சொன்னதை செய்தவன் தன் கண்களை மூடி கைகளால் முகத்தை துடைத்து தன்னை சமன் செய்தான்.

"ஏன் ஹேமா இப்படி பண்ணின? நான் என்னல்லாம் நினச்சு பயந்தேன்னு தெரியுமா? அத்தை எதுவும் சொல்லியிருப்பாங்களா! நம்ம ரொம்ப பேசிட்டோமானு எனக்கு வேலையே ஓடல. நீ என்னன்னா விளையாடிட்டு இருக்க?"

"பாஸ்! பாஸ் ஒரு நிமிஷம். ஆமா நீங்க ஏன் நான் பேசலனு இவ்ளோ பீல் பண்றீங்க? கான்செப்ட் படி நான் உங்ககிட்ட இருந்து தள்ளி போகணும்னு தானே நினைக்குறிங்க? அப்புறம் என்ன! போனா போறானு விட வேண்டியது தானே?" சரியான கேள்விதான்.

"ப்ச்! உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்குறதுனு எனக்கு தெரியல. ஆனா தயவுசெய்து இது மாதிரி இனி என்கிட்ட விளையாடாதே" சீரியஸான முகத்துடன் அவன் சொல்ல,

"ஆமா பாஸ்! எனக்கும் இந்த விளையாட்டு புடிக்கல. பேசாம இருக்குறது எல்லாம் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ப்பா எப்படி தான் அமைதியா எல்லாம் இருப்பாங்களோ! ஒரு நாளுக்கே எப்போடா கத்துவோம்னு இருந்துச்சி" கொஞ்சமும் அவனை மதிக்காமல் அவள் விளையாட, அவள் சொன்ன பொய் தலைவலி இப்போது சிவாவிற்கு நிஜமாகவே வந்துவிட்டது.

"பிளாக்கி!" அவன் காதுக்கு மிக அருகில் அவள் குரல் கேட்க, திடுக்கிட்டு முழித்தான் சிவா.

"எனக்கு தெரியும் கண்டிப்பா உங்களுக்கு தலைவலி வரும்னு. அதான் மார்னிங் அண்ணா தந்த டேப்லெட்டை கொண்டு வந்தேன்" என்றவள், அதை எடுத்து அவனுக்கு கொடுத்தாள்.

சிவாவிற்கு இப்போது மனதில் ஒன்று தான் தோன்றியது. 'அய்யோ பாவம்' என்று. முதலில் அவளுக்கு இது பொருத்தமாக இருக்க, அது இப்போது அவனுக்கே திரும்பியது.

"நைட்டு இதை போட்டுட்டு தூங்குங்க மார்னிங் சரி ஆகிடும்" ஹேமா சொல்ல,

"அது சரியாக வாய்ப்பே இல்ல" என்றவன் அந்த மாத்திரையை மறக்காமல் பத்திரப்படுத்தினான்.

"இன்னொரு விஷயம் சொல்லட்டுமா?" ஹேமா கேட்க,

சிவா "வேணாம்னா விடவா போற?" என்றதும்,

"இப்ப தான் என் ரூட்டுக்கு வர்ற பாஸ் குட்" என்றவள் தொடர்ந்து, "இல்ல, நான் கேட்டப்போ டிரஸ் கலர் சொல்லமாட்டேன்னு சொன்னிங்க. இப்ப நீங்களே என் டிரஸ்க்கு மேட்ச்சா வந்துருக்கீங்க! எப்படி?" என கேட்க, இப்போது தான் இருவரின் பச்சை வண்ண உடையையும் பார்த்தான் சிவா

"நான் ஒன்னும் உன் துணிய பார்த்து போடல. ஏதோ தற்செயலா ஒரே மாதிரி அமஞ்சிருக்கு"

"ஹான்! எல்லா விஷயமும் தற்செயலா அமையாது பாஸ். சிலது நாம தான் ஏற்படுத்திக்கனும்" என்றாள் ஹேமா.

"சுஜி படம் எப்படி இருந்துச்சு?" வெளியே வந்ததும் அர்ஜுன் கேட்க,

"நல்லா இருந்துச்சுங்க.. சத்தம் தான் ரொம்ப அதிகமா இருந்துச்சி"

"ஹாஹா! ஹேய் சுஜி! தியேட்டர்ல சவுண்ட் எபெக்ட் அப்படி தான் இருக்கும். போக போக உனக்கும் பழகிடும் பாரு. மாம்ஸ் நீங்க ஒன்னும் சொல்லல? நல்லா தானே இருந்துச்சு?"

"ஆங், நல்லா தான் இருந்துச்சு மாப்ள" என்ற சிவாவிற்கு படத்தில் ஹீரோ யார் என்று கேட்டால் கூட சொல்ல தெரியாது.

பாதி படம் முழுக்க ஹேமா ஏன் பேசவில்லை என்ற கவலையில் படத்தை கவனிக்கவில்லை. மீதி படம் முழுக்க "அய்யோ இவளோட பேசி முடியலையே!" என்ற எண்ணத்தில் படம் கவனத்தில் இல்லை.

அர்ஜுன் கார் எடுத்து வரவும் வேகமாக சென்ற ஹேமா பின்பக்க கதவை திறக்க, சிவாவை பார்த்த சுஜி எதுவும் சொல்லாமல் முன்னால் ஏறிக்கொண்டாள். அர்ஜுன் இதை கவனித்தவனும் கண்டு கொள்ளவில்லை.

"பக்கத்துல ஹோட்டல்ல சாப்பிட்டு போய்டலாம் மாமா" அர்ஜுன் சொல்ல, சிவாவும் சரி என்றான். ஹோட்டலிலும் ஹேமாவின் அலம்பல்கள் தொடர்ந்தது.

"எனக்கு சப்பாத்தியும் சென்னாவும் வேணும்" என ஹேமா கேட்டதும், அவரவருக்கு பிடித்த உணவையே சொல்லிவிட, சிவாவும் எளிதான வெங்காய தோசையை கூறினான்.

ஹேமா "அண்ணா சென்னா நல்லாவே இல்ல. எனக்கு தோசை சொல்லேன்" என கேட்க, கடையை அடைக்கும் நேரம் எனக் கூறி மாவு இல்லை என்றார் கடைக்காரர்.

வெங்காய தோசையை ஒரு ஓரமாக பிய்த்து இருந்த சிவா அவளின் சோக முகத்தை பார்க்க பிடிக்காமல், அந்த நேரத்தில் யாரை பற்றியும் நினைக்காமல் தன்னுடைய தட்டை மாற்றிக் கொண்டான் ஹேமாவுடன்.

அவன் சாப்பிடுவதை சாப்பிட நினைத்த ஹேமாவிற்கு அவன் சாப்பிட்டதே கிடைத்தபின் சொல்லவும் வேண்டுமா அவள் சந்தோசத்தை.

அர்ஜுனும் சரி சுஜியும் சரி கவனித்த எதையுமே கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் இதை பற்றி சுஜியிடம் பேச வேண்டும் என அர்ஜுனும், அர்ஜுனிடம் பேச வேண்டும் என சுஜியும் நினைத்துக் கொண்டனர்.

சிவாவின் வீடு இரண்டு படுக்கை அறையை கொண்டது. வீட்டிற்கு வந்ததும் நேரம் பத்தை தாண்டிவிட, அர்ஜுன் சுஜியை அவர்கள் அறைக்கு அனுப்பிய சிவா, ஹேமாவை அவனுடைய அறையில் தங்க வைத்தான். அர்ஜுனும் அதை உறுதி செய்த பின்பே சுஜி அறைக்கு சென்றான்.

சின்ன சின்ன சந்தோசங்கள் போதும் என நினைப்பவர்களுக்கு என்றுமே துன்பம் நெருங்காது. ஹேமாவும் கூட அப்படித்தான்.

சிவாவின் அறை என்ற சந்தோசம் ஒன்றே அவள் அன்று இரவு நிம்மதியான உறக்கத்திற்கு போதுமானதாக இருந்தது.

அனைவரும் உறங்கிவிட சிவாவிற்கு மட்டும் உறக்கம் வருவேனா என்றது.

ஹேமாவை பிடிக்கும் என்ற நிலை தாண்டி அடுத்த கட்டத்திற்கு எப்போதோ அவன் மனம் சென்றுவிட்டது. ஆனால் மனசாட்சி என்ற ஒன்று அதைக் காட்டிக் கொள்ள விடவில்லை.

ஹேமா கொடுத்த மாத்திரையை போட்டவன் அடுத்த சில மணி நேரங்களுக்கு பின்பே உறங்கினான்.

காலை எளிதான உணவை முடித்த பின்பே சிவா மூவரையும் அனுப்பி வைக்க, அர்ஜுன் சுஜி சந்தோஷத்துடனும் ஹேமா கவலையுடனும் அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.

அப்போதும் அர்ஜுனிடம் சிவா இன்று மதிய உணவு தான் பார்த்துக் கொள்வதாக சொல்லியே அனுப்பி வைத்தான். அதாவது நாளையிலிருந்து அங்கிருந்து உணவு வருவதற்கு சம்மதம் தெரிவித்து அனுப்பி வைத்தான்.

ஹேமா இன்னும் நான்கு நாட்களில் சென்னைக்கு கிளம்ப வேண்டும். அவள் தன்னை பார்க்காமல் இருந்தாலே அவள் மனம் மாறி விடும். அதனால் இந்த ஒரு வாரமும் மதியம் அவள் வருவதில் எந்த தடையும் சிவா கூறவில்லை.

அதேபோல ஹேமாவும் யார் பேச்சையும் கேட்கவில்லை, ஏன் சிவா பேச்சையும் கூட தான்.

"நீ ஒன்னும் அந்தப் பிள்ளைக்கு சாப்பாடு கொண்டு போக வேண்டாம். நிம்மதியா நாலுவாய் சாப்பிட விடு. நீ பேசுற பேச்சுல தான் அந்தப் புள்ள இங்க வரவே மாட்டேங்குது" ரேகாவின் வார்த்தைகள் ஹேமாவின் காதுக்கு கேட்டதா என்றால் சந்தேகம்தான்.

"ம்மா! விடுங்க அவளே கொண்டு போகட்டும் அடுத்த வாரம் அவ சென்னை போயிடுவாள்ள?" அர்ஜுன் சொல்ல அவனை ஒரு பார்வை பார்த்தாள் ஹேமா.

ஆனால் எதுவும் சொல்லவில்லை. அதாவது நீ என்ன நினைத்தாலும் நினைத்துக்கொள் என்ற பாவனை மட்டுமே அவளிடம்.

அதன்பின் யாரும் அவளைக் கேட்க முடியுமா என்ன! கிளம்பிவிட்டாள் சாப்பாட்டுடன்.

"சுஜி நான் ஒன்னு கேட்பேன்.. தப்பா நினைச்சுக்க மாட்டியா?" அர்ஜுன் கேட்க சுஜியும் யோசனையுடன் தலையாட்டினாள்.

"இல்ல.. ஹேமா, நேத்து நான் கூட்டிட்டு வரும்போது ஒரு விஷயம் என்கிட்ட சொன்னா.. சிவா மாமாவை அவ.." அர்ஜுன் எப்படி சொல்வது என தெரியாமல் தடுமாற,

முதலில் சுஜி அதிர்ந்தாலும் இப்போது ஹேமாவின் மேல் நல்ல மரியாதை வந்தது சுஜிக்கு. அவள் யாரிடமும் மறைக்க நினைக்கவில்லை என்ற எண்ணமே ஹேமாவின் மேல் நல்ல மதிப்பை கொண்டு வந்தது.

"ஹேமா அண்ணாவை விரும்புறத உங்ககிட்ட சொல்லிட்டாளா?" சுஜி கேட்க இப்போது அர்ஜுன் அதிர்ந்தான்.

"சுஜி அப்போ உனக்கு தெரியுமா?" அதே அதிர்ச்சியுடன்அர்ஜுன் கேட்க,


"இல்லங்க, நீங்க நேத்து ஹேமாவை கூப்பிட போகும்போது தான் அண்ணா என்கிட்டசொல்லிச்சு. அப்பவும் அண்ணா எப்படியாவது ஹேமாவுக்கு புரிய வைக்கணும்னு தான் நினைக்கிறாங்க. ஆனால் ஹேமா.." ஹேமா புரிந்து கொள்ளாமல் இருப்பதை எப்படி அவள் அண்ணனிடம் சொல்வது என தயங்கினாள் சுஜி.

"ஹ்ம்ம் ஹேமா என்கிட்டயும் அதையே தான் சொன்னா. எனக்கு அப்போ என்ன பண்றதுன்னு தெரியல. ஆனால் ஹேமா அவ முடிவிலிருந்து மாறப் போறதில்லைனு மட்டும் தெளிவா தெரியுது"

"நீங்க பேசிப் பாருங்க"

"இல்ல சுஜி, அவ என்கிட்ட என்ன சொன்னா தெரியுமா? நான் அடம் பிடிக்க மாட்டேன், ஆனால் சிவாவை தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு என்கிட்டயே சொல்றா. அண்ட் ஆப்கோர்ஸ் என்னோட தங்கச்சி பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அவளும் கிட்டத்தட்ட என்ன மாதிரி தான். ஒரு முடிவு எடுத்துட்டா அதுல இருந்து மாற மாட்டா. மாத்துறது ரொம்பவே கஷ்டம். அதுவும் மாமா விஷயத்துல அவ ரொம்பவே உறுதியாய் இருக்கிறா"

"இதுல நீங்க என்ன பண்றதா இருக்கீங்க?" பேசாமல் அண்ணன் விரும்புவதை சொல்லி விடலாமா என நினைத்த சுஜி பிறகு முதலில் அர்ஜுனின் விருப்பம் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதன் பிறகு அதைப் பற்றி பேசலாம் என முடிவுக்கு வந்தாள்.

"எனக்கும் மாமா மேல எந்த கோபமோ வருத்தமோ இல்லை சுஜி. இது முழுக்க முழுக்க ஹேமாவோடமுடிவுன்றது எனக்கு நல்லாவே புரியுது. நீ தப்பா எடுத்துக்காத, நான் பொதுவாக சொல்றேன். ஒரு வேகத்தில் காதலிச்சுட்டு அப்புறம் ஹேமா எதுவும் ஃபீல் பண்ணக்கூடாது. ஒரு அண்ணனா நான் சொல்றது என்னன்னு உனக்கு புரியும்னு நினைக்கிறேன். சிவா மாமா ரொம்ப நல்லவர் தான் அவரால ஹேமாவ நல்லாப் பாத்துக்க முடியும் அதுவும் எனக்கு தெரியும். ஆனாலும் ஹேமா சில விஷயத்துல ரொம்ப அடமென்டா இருப்பா. மாமா ரொம்பவே பொறுமை ஆனவர் தான் ஆனாலும் ஹேமாவோட படிப்பு, சிவா மாமாவோட வேலை எல்லாத்தையும் வச்சு பார்க்கும் போது எனக்கு இது செட்டாகுமான்னு தெரியல" அர்ஜுன் நினைத்ததை தெளிவாய் சொல்லிவிட்டான்.

சுஜியும் இதற்க்குமேல் மறைக்கக் கூடாது என உண்மையை கூற முன்வந்தாள்.

"உங்ககிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் நான் சொல்லணும். அண்ணாக்கும்.. ஹேமாவை பிடிச்சிருக்கு. ஆனா அதுவும் ஹேமாவை வேண்டாம்னு தான் சொல்லுது. நீங்க சொல்ற காரணமும் சரிதான்! அண்ணா நினைக்கிறதும் சரிதான்! நாம ஹேமாகிட்ட தாங்க எடுத்துச் சொல்லணும்"

"என்ன சுஜிசொல்ற சிவா மாமா ஹேமாவை விரும்புறாங்களா?"

"ம்ம் ஆமாங்க! அவருக்கும் பிடிச்சிருக்கு. ஆனா நீங்க சொல்ற மாதிரி இது செட்டாகாது. ஹேமா தான் அடுத்த வாரம் சென்னை போகுதே இன்னும் ஆறு மாசம் டைம் இருக்கு அப்புறமா நாம பேசலாம்"

சுஜி சொல்வது தான் அர்ஜுனுக்கும் சரி என்று பட இதைப் பற்றி ஆறு மாதத்திற்கு பேச வேண்டாம் என முடிவுக்கு வந்தான்.

அதே ஆறு மாதத்திற்கு 'நீ என்னிடம் பேசாமல், என்னைப் பார்க்காமல் இருந்தால் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்' என வாக்களித்தான் சிவா ஹேமாவிடம்.

ஹேமாவின் பதில்???

நேசம் தொடரும்...