• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிழை 15

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
அத்தியாயம் 15

வாஸந்தி கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்து சேர்ந்தாள். வேலூர் செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் தான் கொண்டு வந்திருந்த விளம்பரத்தை மறுபடி எடுத்துப் பார்த்தாள். பத்திரமாக மடித்து பேக்கில் வைத்தவளுக்கு இந்த வேலை கிடைத்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. பஸ் கிளம்பியதும் கண்மூடி அமர்ந்திருந்தவளின் சிந்தை முழுவதும் கௌசல்யாவும் அரவிந்தும் மட்டுமே ஆக்கிரமித்து இருந்தனர்.

தான் எழுதிய லெட்டரைப் பார்த்ததும் இரண்டுபேருமே எந்த அளவு அதிர்ந்து போயிருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கும்போதே குலை நடுங்கியது. அதுவும் தாயை விட மேலாக தன்னிடம் பாசத்தைப் பொழிந்த கௌசல்யா என்ன ஆனாரோ என்று பதறினாள். நான் தவறு செய்துவிட்டேனா. அங்கேயே இருந்திருக்க வேண்டும். கௌசல்யா அம்மா பாவம். . அவர் மனம் என்ன பாடுபடும்? அவருக்காகவாவது விட்டுக்கொடுத்துப் போயிருக்க வேண்டும்.’ என பலதையும் எண்ணிக் குழம்பியபோது பஸ் வேலூரை நெருங்கியிருந்தது.

சிவா மெமோரியல் ஹாஸ்பிடலின் பெயரைச் சொல்லி ஆட்டோவில் பயணித்தாள். மிகப் பெரிய மருத்துவமனை. வெளிபுறத் தோற்றத்தைப் பார்த்தே பிரமித்துப் போனாள். ரிசப்ஷனில் விவரம் சொன்னதும், ரிசப்ஷனிஸ்ட் இவளைப் புன்னகையோடு வரவேற்று சற்று நேரம் காத்திருக்கும்படி வேண்டினாள். சோர்ந்து போனவளாய் அங்கிருந்த மெடிக்கல் ஜர்னலைப் புரட்டியவளின் மனம் அதிலும் லயிக்கவில்லை. கௌசல்யாவை உதாசீனப்படுத்திவிட்டு வந்த எனக்கே இத்தனை வேதனையும் வலியும் இருக்கும்போது அம்மாவின் மனம் எந்த அளவு காயப்பட்டிருக்கும்.

வேண்டாம் என்று உதறிவிட்டு வந்தாலும் கண்களை நீர் திரையிட்டு மறைத்தது. அரவிந்த்கூட முன்போல் இல்லை. ரொம்ப அதிகமாக கோபம் வருகிறது. நான் மட்டும் என்ன.. அவர் கௌரவத்தைவிட்டு எத்தனை கீழிறங்கி வந்து கெஞ்சினார். அவர் பேச வந்ததை காதுகொடுத்துக் கேட்கக்கூட மறுத்ததை இப்போது நினைத்தால் கூட முட்டாள் தனமா இருக்கு. நாம பேசற வார்த்தைகள் சில சமயம் தோள்களில் மாலைகளாக விழும். ஆனால் பல சமயங்களில் எதிராளியைக் குத்தி கிழிக்கும்போது கால்களில் மலர் வளையங்களாகும். ச்சே... படிச்ச பெண் போலவா நடந்துகிட்டேன். பேசாம கிளம்பி போயிடலாமா’ என்றெல்லாம் நினைத்தபோதே ரிசப்ஷனில் இருந்த பெண் அவள் தோள்களில் கை வைத்து,

“சாரி மேடம் நான் கூப்பிட்டதுகூட காதில் விழாதபடி ஏதோ பலமா யோசிச்சுகிட்டு இருந்தீங்க... வாங்க முதல்ல டீனைப் பாத்திடலாம். கூப்பிடறார்” அவளின் தொடர்ந்த எண்ணங்கள் கலைந்து போயின.ஐம்பது வயது மதிக்கத்தக்க கண்ணியமான தோற்றத்தோடு இருந்த அவர், வாஸந்தியை வரவேற்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“ஹலோ! வாஸந்தி தானே நீங்க...? ஐ யாம் பாஸ்கர். டீன். உங்க புரொஃபைல் பார்த்தேன். எக்சலென்ட் அகாடமிக் குவாலிபிகேஷன். ரொம்ப திருப்தியா இருக்கு ... ம். அப்புறம் உங்களைப்பத்தி சொல்லுங்க. ...”

“குட் ஈவினிங் சார். நான் இங்கு கோயம்புத்தூர்ல தான் படிச்சேன். குடும்ப சூழ்நிலை காரணமா டெல்லியில் மீதம் உள்ள படிப்பை முடிக்க வேண்டிய கட்டாயம். பேப்பர்ல ஆட் பாத்து இங்க அப்ளை பண்ணினேன்.எனக்கு அம்மா அப்பா இல்லை. இப்ப கணவர் வேற இடத்தில் இருக்கார்.என் கூட இருக்க முடியாத சூழ்நிலை. அதனால இங்க நான் தனியாத்தான் இருக்கணும். கண்டிப்பா வேலை கிடைக்கும்.னு நம்பிக்கையோட கிளம்பி வந்துட்டேன். உங்களைப் பாத்து பேசினதும் என்னோட கான்ஃபிடென்ட் லெவல் கூடிப்போச்சு” பாஸ்கரன் முகத்தில் புன்னகை.

“யு ஆர் வெரி ஸ்மார்ட். இதே ஸ்மார்ட்னஸ் வேலையிலயும் இருக்கணும். கண்டிப்பா வேலை கிடைக்கும். நாம் அதுல எந்த காம்ப்ரமைஸும் பண்றது இல்லை. கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்தான். ஆறு மாதத்துக்கு டெம்ப்ரவரி போஸ்டிங்ஸ் தான் உங்களுக்கு. யூ ஹேவ் டு ப்ரூவ் யுவர் செல்ஃப். இது பிரைவேட் ஹாஸ்பிடல். ஒரு பெண் தொழிலதிபர் தன் கணவரோட ஆசையை நிறைவேற்ற இதை நிறுவியிருக்காங்க.

ஏழை எளியவங்களுக்கு இலவசமா சர்வதேச தரத்தில் மருத்துவ உதவி கிடைக்கணும்னு தான் இந்த ஹாஸ்பிடலையே நிறுவியிருக்காங்க. ஆபரேஷன் தியேட்டர், ஸ்கேன் சென்டர், எக்ஸ்ரேன்னு எல்லாமே அதி நவீன எக்யூப்மெண்ட்ஸ் ஸோட சிறப்பா செயல்பட்டு வருது.. அதுக்காக இங்க வேலை செய்யற ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக இருக்கும்னு நெனைக்க வேண்டாம். அவங்க நினைக்கறதை விட அதிகமாகவே கொடுக்கறாங்க.

இங்க இருக்கற டாக்டர்ஸ் யாருக்குமே வேலை நேரம்னு எதுவுமே கிடையாது. கால நேரம் பார்க்காம உண்மையா உழைப்பாங்க. லஞ்சம், டிப்ஸ் இது மாதிரி பேச்சுக்கே இங்கு இடமில்லை. பெரிய பெரிய ஸ்டார் அந்தஸ்து உள்ள ஹாஸ்பிடல்ஸ்ல இருக்கற அத்தனை வசதியும் உண்டு. எல்லாமே ஹை- டெக்கா இருக்கும்.

ஊழியர்கள் எல்லோருக்குமே உள்ளேயே அடிப்படை வசதிகளோட குவார்ட்டர்ஸ் இருக்கு. கான்டீன், மெடிக்கல் ஷாப், சின்னதா ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் கூட இருக்கு. அதில எல்லா பொருள்களும் நியாயமான விலையில் கிடைக்கும்.

அதனால இங்க வொர்க் பண்றவங்க மனசாட்சிக்கு விரோதமில்லாம நடந்துக்கணும். உண்மையா நேர்மையா வேலை செய்யணும். இது உயிர் காக்கிற புனிதமான தொழில். மதிச்சு நடந்துக்கங்க. உங்க வயது குறைவா இருந்தாலும் உங்க திறமையை இந்த ஃபைல் சொல்லுது.

நீங்க நினைச்ச மாதிரி உங்களை அப்பாயிண்ட் பண்ணி, உங்க நம்பிக்கையை காப்பாத்திட்டேன். நீங்க அதை ப்ரூவ் பண்ணுங்க. ஆல் த பெஸ்ட். எங்க ஏ.ஓ.வை மீட் பண்ணி ஜாயினிங் ரிப்போர்ட் கொடுங்க. மீதியை அவர் சொல்லுவார்.

அட்மின் ஆபிஸர் பிரகாஷ் கனிவோடு, அவளின் வேலை பற்றி எடுத்துக் கூறினார்.

“மிஸஸ்.வாஸந்தி வாழ்த்துக்கள். இங்க எல்லோருமே குடும்பமாகத் தான் பழகுவாங்க. இன்னிக்கு அதில ஒருவரா நீங்க சேர்ந்தாச்சு. மருத்துவத்தை வியாபாரமாக பார்க்காம, மனித நேயத்தோட, சேவையா, உங்களோட திறமையை அர்ப்பணியுங்க.. இங்க இருக்கற அன்னம்மா உங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்வார். நாளையிலிருந்து வேலைக்கு வந்திடுங்க. குட் டே.”

அன்னம்மாவின் வெள்ளந்தியான தோற்றமே அவளின் இயல்பை வெளிப்படுத்தியது.. வாஸந்தியைப் பார்த்ததுமே,

“வா கண்ணு.. நீ தானே புது டாக்டரம்மா.? ஐயா சொன்னாரு. உனக்கு கொடுத்திருக்க வீடு இங்க பக்கத்தில நடக்கற தூரம் தான். பையை குடு நான் தூக்கியாரேன். நீ அழகா அந்த சினேகா பொண்ணு மாதிரியே லட்சணமா இருக்க.” வளவளவென்று பேசிக்கொண்டே குடியிருப்புகள் நிறைந்த பகுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றாள்.

சின்ன அழகான தோட்டத்துடன் கூடிய தனித்தனி வீடுகள் ஒரே மாதிரி வரிசையாக வீற்றிருந்தன. அதில் ஒன்றின் கதவைத் திறந்து வாஸந்தியை உள்ளே அழைத்தாள். வீடு தூய்மையாக, காற்றோட்டமாகவும் வெளிச்சமாகவும் இருந்தது.

சிறிய ஹால், சிங்கிள் பெட்ரூம், பாத்ரூம் வசதியோடு இருந்தது. காஸ் கனெக்ஷனுடன் கூடிய அழகான சமையலறை. சோபா செட், கட்டில், வார்ட்ரோப், குட்டி ஃபிரிஜ் என்று அத்தியாவசிய பொருட்களோடு தயாராக இருந்தது. கொஞ்சம் சமையல் பாத்திரங்கள் மட்டுமே வாங்கினால் போதும் என்ற நிலை.

வீட்டைச் சுற்றிப் பார்த்து திருப்தியடைந்த வாஸந்தி, அன்னம்மாவின் கையில் பணத்தைக் கொடுத்து இருவருக்கும் டிபன் வாங்கி வரச் சொன்னாள்.அவள் கிளம்பிச் சென்றதும், கீஸரைப் போட்டு குளித்து விட்டு, சூட்கேசில் இருந்த விநாயகர் படத்தை சமையலறை ஷெல்ஃபில் வைத்து விளக்கேற்றினாள். மனதில் ஒரு வித அமைதி சூழ்ந்தது.தான் கொண்டு வந்த உடைகளை அடுக்கி முடிப்பதற்குள் டிபன் வந்து சேர்ந்தது.. இருவரும் உண்டு முடித்ததும்,

“அலுப்பா இருக்கும். கதவை நல்லா தாள் போட்டுட்டு தூங்கு. நான் விடிஞ்சதும் ஓடியாரேன்.”அன்னம்மா கிளம்பிச்சென்றாள்.

கதவை தாளிட்டு வந்து படுத்ததும், கௌசல்யாவின் நினைவே சுழன்று வதைத்தது. ‘அவருக்கு உடல் நலம் குன்றியிருக்குமோ. எப்படி விபரம் தெரிந்து கொள்வது’ என்று தவித்துப் போனாள்.

அதன் பிறகு, ‘வேண்டாம். ’நாம் போன் செய்து பேசினால், விபரம் தெரிந்து கொண்டு அம்மாவே கூட்டிட்டு போக வந்திடுவாங்க. என்னாலும் மறுக்க முடியாது. கொஞ்ச நாள் கஷ்டமா இருந்தாலும் மெல்ல மெல்ல தேறிக்குவாங்க.

அரவிந்த்துக்கு அவருக்கு பிடிச்ச பொண்ணா பார்த்து கல்யாணம் செய்து வைக்கட்டும். இனியாவது அவங்க லைஃப் சந்தோஷமா இருக்கட்டும். பேரன், பேத்தி என்று வந்தால் என் ஞாபகம் இருக்காது.’ தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டு, கண் அயர்ந்தாள்.

மறு நாள் காலை ஆறு மணிக்கு அன்னம்மா வந்து கதவைத் தட்டும் போதே குளித்து விட்டிருந்தாள். நீல வண்ண கைத்தறி சேலையில் கூந்தலை துவட்டிக் கொண்டிருந்தவளைப் பார்த்து,

“அதுக்குள்ள எழுந்திரிச்சிட்டியா? எத்தனை நீளமான முடி கண்ணு. வா நான் பின்னி விடறேன். டிபன் நானே வாங்கியாந்துட்டேன். சாப்பிட்டுட்டு கிளம்பு. நான் பத்து மணிக்கு வந்தா போதும். வீட்டைக் கூட்டி ஒரு துடை துடைச்சிட்டு வந்திடறேன். இன்னிக்கு டியூட்டி முடிஞ்சு வந்ததும் நாம கடைக்கு போய், தேவையான சாமானை வாங்கிக்கலாம். பக்கத்தில தான் கடை.”

“அன்னம்மா உன் வீடு எங்கயிருக்கு. உன் குடும்பம்?”

“என்ன கண்ணு குடும்பம். பத்து வருஷமா குழந்தை இல்லைன்னு எம்புருஷன் என் சின்னம்மா பொண்ணையே இரண்டாங் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான். எனக்கு பிடிக்கலை. அதான் அவங்க நல்லாயிருக்கட்டுன்னு நான் வெளியே வந்திட்டேன். இங்க எனக்கு வீடு கொடுத்தாங்க. இருக்கு. ஆனா ஒப்புக்கு தான். எப்பவும் இங்க தான் சுத்திகிட்டு இருப்பேன். யார் கூப்பிட்டாலும் ஒத்தாசையா இருப்பேன். ராத்திரி நர்சுங்க ரூமில போய் படுத்துக்குவேன். தோணுச்சுன்னா சமைப்பேன். இல்லேன்னா எதையோ வாங்கித் தின்னுட்டு, எப்படியோ வண்டி ஓடுது.”

“இனிமே எங்கேயும் சுத்த வேண்டாம். எப்பவும் என் கூடவே தங்கிக்கலாம். நானும் தனிதான். ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருப்போம்.”

“உம் புருஷன்...?”

“அவர் படிக்க வெளிநாடு போயிருக்கார். அம்மா அப்பா இல்லை... அவரும் வர இரண்டு வருஷமாகும்.”

“அப்ப சரி தாயி. உன்னை என் பொண்ணாட்டம் நான் பார்த்துக்கறேன். வயித்தில பொறந்தா தான் புள்ளையா.? என் மேல பிரியம் வைக்கற எல்லாரும் என் குழந்தைங்க தான். ஐயா வர்ற வரை உனக்கு காவலா நான் இருக்கேன். அவரும் டாக்டரா கண்ணு.?”

அரவிந்தின் நினைப்பில் முகம் செம்மையுற, “இல்ல. என்ஜினியர். பிசினஸ் பண்றார். அது சம்பந்தமா படிக்க தான் வெளிநாடு போயிருக்கார்... டைம் ஆச்சு. கிளம்பட்டுமா?” என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.

ஹாஸ்பிடலில் குழந்தைகளின் ஸ்பெஷல் வார்டில் பணி ஒதுக்கப்பட்டிருந்தால், ஏ.ஓ வின் உதவியாளரோடு அங்கு சென்றாள். புற நோயாளிகள் பிரிவில் கூட்டம் குவிந்திருக்க, டாக்டர்கள் சிகிச்சையளிக்க துவங்கியிருந்தனர்.. அந்தப் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர்.சங்கரிடம் அறிமுகப் படுத்தி வைக்கப்பட்டாள்.

டாக்டர். சங்கரும் இளம் வயதினராகத் தான் இருந்தார். இந்த மருத்துவமனை செயல் படத் துவங்கியதிலிருந்து மூன்று வருடங்களாக இங்கே தான் பணிபுரிவதாகக் கூறினார். திருமணம் முடிந்ததும் இங்கே வந்ததாகவும். மனைவி நிவேதாவும் இங்கேயே ‘கைனோ’ பிரிவில் இருப்பதாகவும் சொன்னார்.

மதிய உணவு இடைவேளையின் போது நிவேதாவை சந்தித்தாள்.

“ஹாய் வாஸந்தி… சங்கர் எனக்கு காலையிலேயே போன் பண்ணி சொல்லிட்டார். கிளாட்டு மீட் யூ. எனக்கு என் வயசில் இங்க ஃப்ரண்டே இல்லை. இன்னிக்கு அந்தக் கவலை தீர்ந்தது. இனிமே நீதான் என் குளோஸ் ஃப்ரண்ட். மனசு விட்டு எதை வேணா பேசலாம். என்னிடம் என்ன உதவின்னாலும் தயங்காம கேளு. எங்க பேரண்ட்ஸ் கூட பேச்சு வார்த்தை இல்லை.வழக்கமான அதே லவ் மேரேஜ் பிராப்ளம் தான்.! ஆனா சங்கர் ஒரு ஜெம். இவருக்காக யாரை வேணா பகைச்சுக்கலாம். நான் ரொம்ப லக்கி. இவர் கூட பழகப் பழக உனக்கே அது புரியும். நான் ஏதோ கொஞ்சம் சுமாரா சமைப்பேன். இன்னிக்கு என் கிட்ட சிக்கிட்ட. என் சாப்பாட்டை நீயும் ஷேர் பண்ணித் தான் ஆகணும். நோ. வே.” முதன் முறையாக பார்க்கிறோம் என்ற எண்ணமே இல்லாதவளாக வெகு நாள் பழகியது போல கலகலப்பாகப் பேசியவளை பார்த்ததுமே வாஸந்திக்கு பிடித்துப் போனது.

“தேங்க்ஸ் நிவி. அப்படிக் கூப்பிடலாம் தானே. உன்னை மாதிரியே காயத்ரின்னு எனக்கொரு ஃப்ரண்ட். காலேஜ்ல எங்களை ட்வின்ஸ் ன்னு தான் சொல்வாங்க. நான் காலேஜ் மாறின பிறகு தொடர்பே விட்டுப் போச்சு. சுனில் அண்ணாவுக்கும் அவளுக்கும் மேரேஜ் முடிந்திருக்கும்.ம்ம்.. நீயும் அதே மாதிரி தான் எனக்கு... உன்னைப் போலவே காயூவும் பார்த்ததுமே ஒண்ணு விடாம என் கிட்ட எல்லாமே ஒப்பிச்சா தான் அவளுக்கு நிம்மதி.! ஷி இஸ் வெரி க்ளோஸ் டு மி. ஐ மிஸ் ஹெர் எ லாட். உன் கிட்ட பேசினதும் எனக்கு அவ ஞாபகம் வந்திடுச்சு.” உணர்ந்து ஆத்மார்த்தமாக நிவியின் நட்பை ஏற்றுக் கொண்டாள்.

தனக்கு ஆதரவு என்று யாருமேயில்லாத நிலையில் சங்கர், நிவேதா ஏன் அன்னம்மாவின் அறிமுகமும் நட்பும் கூட மிகுந்த ஆறுதலைத் தந்தது. ஹாஸ்பிடல் வேலைக்கு இலகுவாக தன்னை பழக்கப்படுத்திக் கொண்டாள். அன்னம்மா சமையலோடு வீட்டு வேலைகள் அனைத்தையும் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டாள். வாஸந்தியின் வேலூர் வாழ்க்கை மெல்ல மெல்ல சீரானது..

நாட்கள் நகர்ந்தன. ஒரு மழை நாளில், வாஸந்தி முழுவதுமாக நனைந்து போய் வீடு வந்து சேர்ந்தாள். மறுநாள் காலையில் எழும் போதே மிகவும் சோர்வாக, தலைபாரமாக இருந்தது. உள்ளுர காய்ச்சல் அடிப்பது நன்றாகவே தெரிந்தது. உட்காரக் கூட முடியாமல் மீண்டும் படுக்கையில் சாய்ந்தாள்.

எட்டு மணி வாக்கில் எழுந்து பாத்ரூம் செல்வதற்குள் மயக்கம் வரும் போல் இருந்தது. எப்படியோ பிரஷ் பண்ணி விட்டு மீண்டும் வந்து படுத்துக் கொண்டாள். சமையலறையில் பிசியாக இருந்த அன்னம்மா, மணி எட்டுக்கு மேல் ஆனபிறகும் வாஸந்தி வெளியே வராததால், எட்டிப் பார்த்தாள்.

“ஏன் கண்ணு. மணி எட்டரையாச்சு. எழுந்துக்காம படுத்தே கிடக்க. மூஞ்சி ரொம்ப வாடிப் போயிருக்கு... மழையில் நனைஞ்சது சேரல. நெத்தி சுடுது. காய்ச்ச வேற இருக்கு. என்னா கண்ணு பண்ணுது. நான் காப்பி கலந்து எடுத்துட்டு வரேன். சித்த இரு.பல்லு விளக்கியாச்சா?”

“அன்னம்மா. எனக்கு முடியலை. உடம்பு வலிக்குது. காபி குடுத்துட்டு நிவி கிட்ட போய் இன்னிக்கு அவ கிட்ட நான் வரலைன்னு சொல்லிடு. கண் எரியுது. நான் ஒரு டேப்லட் போட்டு படுக்கறேன். சங்கர் அண்ணா ஏழு மணிக்கே போயிருப்பார். அவர் கிட்ட எனக்கு நிவியை லீவ் சொல்லச் சொல்லிடு.நேத்து மழையில நனைஞ்சது தான் சேரலை.”

“சரி கண்ணு. இந்தக் காப்பியை குடிச்சிட்டு தூங்கு. இட்லி, தக்காளிக் குழம்பு செஞ்சு ஹாட்பேக்கில எடுத்து வச்சிருக்கேன். தூங்கி எந்திரிச்சு சாப்பிட்டுக்க. நான் போய் அதுக்கும் கொஞ்சம் குழம்பு ஊத்தி குடுத்திட்டு வரேன். பாவம் அந்தப் புள்ளைக்கு சரியா சமைக்க வராது. இந்நேரம் என்ற பண்றதுன்னு முழிச்சுகிட்டு இருக்கும். ஆனா பாரு, டாக்டர் குணம் தங்கம்.. எதைப் பண்ணிப் போட்டாலும் முகம் சுளிக்காம சாப்பிடுவார். அந்த நிவி புள்ள மேல கொள்ள பிரியம். இந்த ரெண்டு பேர் குணத்துக்கும் அந்த ஆண்டவன் ஒரு குழந்தையைக் குடுக்காம விளையாடறான். சரி காப்பியை குடி... வந்திடறேன்”

வாஸந்தி காபியை வாயில் வைத்ததுமே, கசந்து போய் குமட்டியது. வாமிட் வருவது போல் இருக்க, பாத்ரூமுக்குள் ஓடினாள். அன்னம்மா அவளை கைத்தாங்கலாக பிடித்து வந்து படுக்க வைத்து விட்டு, நிவியிடம் சொல்ல விரைந்தாள்.
தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,105
679
113
Ariyalur
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️
அந்த ஆஸ்பத்திரி கௌஸல்யா அம்மாவோடதா இருக்குமோ, இருக்கலாம் 😀😀😀😀😀