• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி -01

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
178
201
43
Salem
புலர்ந்தும் புலராத காலை வேலையில் செங்கதிர்களை பரப்பி தன் ஆதிக்கத்தை தொடங்கி விட்டான் சூர்ய மைந்தன்.. மேலூர் கிராமத்தின் காலை வேலையில் தன் ஒளி வீச செய்து அந்த கிராமத்தின் அழகை பரப்பினான்.. அந்த காலை வேலையிலும் அந்த பெரிய வீட்டின் முன் ஆங்காங்கே மக்கள் கூட்டம் சலசலத்து கொண்டிருந்தது.. அதிலே,

"இந்த புள்ளைக்கு இந்த வயசிலே இப்படி ஒரு நிலமை வரனுமா.. ஏய் ஆத்தே என்னத்த சொல்றது.. " என்ற ஒரு வயதான கிழவியின் குரலும்

"சின்ன புள்ளையா இருக்குறாளே இதையெல்லாம் தடுத்து நிறுத்தலாம்னா பெரிய வீட்டை யாரு பகைச்சிக்கிறது.." என்ற குரலில் கிடந்த பதட்டமும்,

"அந்த கனகத்தம்மா வாயில யாருய்யா விழறது.. அதெல்லாம் ஒரு பொம்பளையா.. " என்ற கடின குரலும்,

"யோவ் எங்கய்யா வந்து என்னய்யா பேசுற கொஞ்சம் கம்முன்னு இருய்யா.. அந்த அம்மா காதுல விழுந்தா நம்ம குடும்பத்துக்கே சங்கு தான் யா.." என்ற பயம் நிறைந்த குரலும்,

"ஆமாய்யா நமக்கு ஏன் வம்பு.. ஆனாலும் இந்த வடிவு ஆத்தா அந்த புள்ளைய பொத்தி வைக்காமா இப்படி குரங்கு கைல கொடுத்துருச்சே.." என்ற ஆதங்கமான வார்த்தைகளும் அங்கு பரவி தான் கிடந்தது.

யார் வந்து என்ன சொன்னாலும்.. எத்தனை சொல்லும் தங்களை பாதிக்காது என்பதை போல பெரிய வீட்டின் ஆண்களும் பெண்களும் இன்று நடக்க வேண்டிய சடங்கிற்கான ஏற்பாட்டை செய்துக் கொண்டிருந்தனர்.

இதற்கும் தனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதை போல கால்கள் இரண்டையும் கட்டிக் கொண்டு அதிலே தலையை புதைத்து கொண்டிருந்தாள் பெண்ணொருத்தி.

அப்பொழுது தன் கனத்த சரீரத்தை தூக்க முடியாமல் தூக்கியபடி அவளருகே வந்த கனகம் தன் கட்டை குரலில், "அடியே இன்னும் என்ன நடக்கனும்னு இப்படி தலையை மண்ணுக்குள்ளே பொதைச்சி வச்சிருக்க போர.. பாவி பாவி உன்னை கட்டி எம்புள்ளை எனக்கு இல்லாமையே போயிட்டானேடி.. பாவி பையன்கிட்ட அப்பவே சொன்னேனே இவளே ஒரு ராசியில்லாதவ.. பொறந்ததுமே குடும்பத்தையே கொன்னவன்னு.. கேட்டானா சொல்றத கேட்காம இப்போ அல்ப ஆயுசுல போயிட்டானே.. எல்லாத்துக்கும் நீதான்டி காரணம்.. என் பையனை மயக்கி கல்யாணமும் பண்ணி இப்படி மூனே மாசத்திலேயே அவனை கொன்னு எங்குடும்பத்தையே நிர்மூலமாக்கிட்டியே டி.. நீ ராசி கெட்ட மூதேவி டி.. ச்சீய் சாங்கியத்துக்கு நேரமாச்சி.. எல்லாரும் வந்துட்டாங்க.. உன்னை எல்லாம் கூப்பிட நான் வரனுமா.. எல்லாம் என் தலையெழுத்து.. ச்சீய் எழுந்து வா மு****சி..." வார்த்தைகளில் விஷத்தை தடவி தன் நாவினால் சுட்டாள்.

தீயினால் சுட்டப்புண் உள்ளாரும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

என்ற வள்ளுவனின் வாக்குக்கேற்ப கனகம் அவளை வார்த்தையால் சுட்டாள்.. அதன் வடு ஆறாமல் மீண்டும் அவளை தாக்கும் என்பதை அவள் அறியவில்லை.. நெருப்பில் வெந்த காயம் கூட ஒரு அளவிற்கு மேல் அதன் வடுவை மறைத்து விடும்.. ஆனால் வார்த்தைகள் நெருப்பாய் சுட்டு தகித்தால் அதன் வடு என்றும் மாறாது மறையாதது.

அத்தனை சுடுவார்த்தைகளை கேட்ட பின்னும் அமைதியாய் தலைநிமிர்ந்து பார்த்தாள்.. அவள் முகத்தில் எந்த ஒரு உணர்வும் இல்லை.. அவர்கள் ஆட்டுவிக்கிற பொம்மையாய் அமர்ந்திருந்தாள்.. அவள் முகத்தில் குழந்தை தனம் இன்னம் மிச்சமிருந்தது.. பிறைநிலவான முகத்தில் குழந்தையாகத் தான் தெரிந்தாள்.. அந்த குழந்தைக்கு அவள் என்னவென்று அறியாத வயதிலே அவளின் வாழ்வு முடிந்து விட்டதாக இப்பொழுது சடங்கு செய்யப்படுகிறது.

திருமணம் மணவாழ்வு தாம்பத்யம் என்று அறியாத மழலை அவள்.. ஆனால் இந்த சிறு வயதிலே அத்தனையும் அறிந்து கொண்டாள்.. அவள் வெண்மதி.. தாய் தந்தை இல்லாதவள்.. தூரத்து உறவு முறையில் பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தவளை எங்கே பார்த்து பிடித்திருப்பதாக கூறி கனகத்தின் மூத்த மகனான குமரேசன் தாயிடம் சொல்லி விடாப்பிடியாக ஒரே மாதத்தில் திருமணம் செய்து கொண்டான்.. அவள் மறுத்த போதும் அவளின் பாட்டியை பணயம் வைத்து அவளை கட்டிக் கொண்டு அவளின் வாழ்வை முடித்து வைத்த பெருமை அவனையே சாரும்.

கனகத்திற்கு இரு மகன்கள்.. மூத்தவன் குமரேசன் இளையவன் வளவன்.. அவளுடைய கணவன் சதானந்தன்.. அவளின் கைப்பொம்மையாய் அவளால் ஆட்டுவிக்கபடுகிறான்.. அவனுக்கு அவளின் சொல்லே வேதம்.. அவள் என்ன கூறினாலும் அதை தட்டிக் கழிக்காமல் அது நல்லதோ கெட்டதோ அப்படியே சிரமேற்கொண்டு செய்பவன்.

கனகத்திற்கு சுத்தமாய் வெண்மதியை பிடிக்காது.. காரணம் ஒன்றும் பெரிதாயில்லை.. அந்த ஊரிலேயே கனகத்தின் குடும்பம் தான் அந்தஸ்திலும் பணத்திலும் பெரிய குடும்பம்.. வெண்மதியின் ஏழ்மை நிலை அவளை பரிகசிக்க வைத்தது.. வெண்மதிக்கு தாய் தந்தை இல்லை.. அவளே ஒட்டுப் புல் போல வயதானவளின் பாதுகாப்பில் வளர்பவள்.. தங்களின் வசதிக்கு நிகரானவள் இல்லை என்ற எண்ணம்.. ஏதோ தன் மகனின் ஆசைக்காக அவளை மகனுக்கு கட்டி வைத்தாள்.. ஆனால் அதுவும் மூன்றே மாதத்தில் தன் மகனின் உயிரை குடிக்கும் என்று அவள் அறியவில்லை.

பழைய நினைவிலிருந்து வெளி வந்தவள் தன் மகனுக்கு எமனாய் வந்தவளை அப்படியே விட்டு விட விருப்பமில்லை.. அவளின் வஞ்சத்தின் முதல் படி தான் இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாம்.

வெறுமையான முகத்துடன் இருந்த வெண்மதியை சில வயதான கைம்பெண்கள் அழைத்துக் கொண்டு போய் பட்டு சேலை கட்டி தழைய தழைய மல்லிகைப்பூவும் கைகள் நிறைய கண்ணாடி வளையல் அடுக்கி நெற்றி நிறைய குங்குமத்தை வைத்து அழைத்து வந்தனர்.. அவர்களுக்கு இதில் விருப்பமில்லை.. ஆனால் அந்த ஊரில் கனகத்தை பகைத்து இதை தடுக்க முடியாது.. அப்படி செய்தால் அவளின் பணச் செருக்கு கொண்டு அந்த குடும்பத்தையே அழித்து விடுவாள்.. ஆதலால் அவள் சொல்படி வெண்மதியை அழைத்து வந்தனர்.

அதை பார்க்க பார்க்க அங்கிருந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவளின் மேல் பரிதாபம் வந்தது.. அவர்களின் பரிதாப பார்வையை பெண்ணவள் உணரவில்லை. ஏதோ ஜடம் போல அமர்ந்திருந்தாள்.

கனகம் ஒரு வயதானவளுக்கு கண்ணை காட்ட அந்த வயதானவளும் புரிந்து கொண்டு வெண்மதியின் சங்கு கழுத்தில் தொங்கி கொண்டிருந்த தாலியை கையில் வைத்திருந்த அரிவாளால் அறுத்தார்.. அவளின் தாமரை மலர் முகத்திலிருந்த பொட்டை அழித்தார்.. அவளின் இரு கைகளிலும் அழகழகாய் அடுக்கியிருந்த வளையலை இரு கையிலும் தட்டி உடைத்தார்.. பின்பு அவளின் மயில் தோகையாய் தொங்கிய முடியிலிருந்த பூவை அவளின் முடி வலிக்க தலையிலிருந்து எடுத்தார்.. கடைசியாக அவளின் தலையில் அந்த காலை வேலையிலும் சில்லென்று இருந்த தண்ணீரை அவளின் மேல் ஊற்றி அவளின் மேல் அங்கே தட்டில் இருந்த வெள்ளை புடவையை எடுத்து போர்த்தி பொம்மையாய் அமர்ந்திருந்த அவளை அழைத்து சென்றார்.

அவளின் நிலை அங்கேயிருந்தவர்களுக்கு கண்ணீரை வர வழைத்தது.. ஆனால் அங்கிருந்தவர்களை அவள் சுத்தமாய் கவனிக்கவில்லை.. வெற்று ஜடமாய் மற்றவர்களின் கை பெம்மையாய் மாறியிருந்தாள் மதியவள்.


அதே நேரம் மேலூர் கிராமத்தின் நுழைவாயிலில் தனது காலடியை பதித்தான் ஒருவன்.. அவன் காலடி வைத்ததும் அங்கிருந்த அத்தனை மரங்களும் காற்றில் சூறாவளியாய் சுழன்றது.. அவ்வளவு நேரமும் வெம்மை சூழ்ந்திருந்த வெண்மேகம் நொடியில் கருமை சூழ்ந்து கார்கால மேகங்களை தூவி சாரலாய் ஆரம்பித்த மழைத்துளி நேரம் ஆக ஆக இடி மின்னலுடன் பொங்கிய அணையைத் தாண்டி இன்றே மேகத்திலிருந்து கருமேகம் முடிந்து விடும் போல பொங்கி ஊற்றியது.. அங்கிருந்த மக்கள் ஏனோ நெடுநாளாக மழையையே பார்க்காதவர்கள் போல அகம் மகிழ்ந்து போயினர்.

அது என்னவோ இதோ போல மழை பொழிந்து வருடம் பல கடந்து விட்டனவே.. அந்த இடி மழையிலும் நனையாத இடம் தேடி ஒளியாமல் அந்த மழையிலே தன் காலடி தடத்தை பதித்தான் அந்த ஆறடி ஆண்மகன்.

கோயிலின் மணியோசை அந்த மழையிலும் விடாமல் ஒளித்துக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில் அந்த மலை குகையில் கிழிந்த நாராய் படுத்திருந்த அந்த உருவத்தின் உள்ளுணர்வு என்ன தோன்றியதோ வெளி வராத குரலில்,

"வந்துட்டியா ஆதவா.. சொன்ன வாக்கு தவறாதவன்னு செயல்ல காட்டிட்ட ஆதவா.. உனக்கான நேரம் வந்துடுச்சி ஆதவா.." வார்த்தையை உள்ளுக்குள்ளே முனகி கொண்டது அந்த உருவம்.


மதி ஒளிரும்..✍️