• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மழை - ஷாலினி

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
அந்நாளின் இறுதி வகுப்பில் தன்னுடைய தோழிகளுடன் சிரித்து, மகிழ்ந்து பேசிக் கொண்டு இருந்தாள் ஷக்தி.


பள்ளி முடியும் வேளை ஆதலால், மாணவர்கள் மணியடிக்கும் ஓசைக்காக, எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.


அந்த சமயம் பார்த்து, சட சடவென்று, வேகமெடுத்து, வானத்திலிருந்து வருகை தந்தது மழை !


அந்த சத்தம் திடீரென்று எழுந்ததால், ஒரு நிமிடம் திடுக்கிட்டாலும், அடுத்த நிமிடம் பிள்ளைகளுக்குக் குதூகலம் உண்டானது.


ஷக்திக்குச் சொல்லவே வேண்டாம் ! மழை அவளுக்கு அத்தனை இஷ்டம் ! தாமரை விழிகள் மலர்ந்து, விரிந்து , மழையை ரசிக்க ஆரம்பித்து விட்டாள்.


வகுப்பாசிரியை,

" ஸ்கூல் முடியுற நேரம் பார்த்துக் கரெக்டா பெய்யுது. நீங்க எல்லாரும் அவங்கவங்க இடத்துலயே உக்காருங்க. க்ளாஸை விட்டு, யாரும் வெளியே போகக் கூடாது. லாஸ்ட் பெல் அடிச்சாலும் கிளம்பிடாதீங்க. கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மழை விடலேன்னா போகலாம் " என்று அறிவுறுத்த,


ஷக்தி அருகில் இருந்த தோழியைப் பாவமாகப் பார்த்தாள்.


" ச்ச ! பெல் அடிச்சதும் வீட்டுக்கு விட்டா நல்லா இருக்கும்ல" ஏக்கம் நிறைந்த குரலில் கூறி, பெய்து கொண்டிருந்த மழையை ஜன்னலின் வழியே பார்த்தாள்.


அவளுக்கு மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும், மருத்துவரிடம் சென்று ஊசி போட வேண்டும் என்றெல்லாம் அப்போதைக்கு யோசனை இல்லை. ஆனால், ஷக்திக்கு ஊசி என்றால் அவ்வளவு பயம்,


மருத்துவமனைக்குள் நுழைய வேண்டும் என்று கூட அவசியமில்லை ! செல்லும் வழியிலேயே பயம் பிடித்துக் கொள்ளும். அங்கிருந்து அழுகையை ஆரம்பித்தாளானால், அங்கு சென்று ஊசி போட்டு முடிக்கும் வரை அழுகை நிற்காது என்பது எல்லாம் அவளது சிந்தைக்கு எட்டாது ! குட்டி குட்டியாய் விழும் துளிகளை ஆசையாகப் பார்த்தவாறே இருந்தாள்.


அருகில் இருக்கும் நண்பி கூட,

" மழையில் நனைஞ்சா ஃபீவர் வரும் ஷக்தி.எங்க அக்காவுக்கு அப்படித்தான் ஆச்சு.பாவம் அவங்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் ஊசிக் குத்திட்டாங்க "


தமக்கைக்கு ஏதோ பெரிதாக தண்டனைக் கிடைத்ததைப் போல, அவள் ஷக்தியிடம் விளக்க,

' ஊசி ' என்றதும், ஷக்திக்குக் கிலி உண்டாகியது.


இருந்தாலும், " ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் தான் ஃபீவர் வரும். உங்க அக்காவும் அதைத் தான் செஞ்சுருப்பாங்க. அதான் ஊசி போட்டுட்டாங்க. நான் மழையில் நனைஞ்சதும் வீட்டுக்குப் போய் ஆவி பிடிச்சுடுவேனே ! "


தோழியிடம் கூறுகிறேன் என்ற பேரில் தனக்கு ஆதரவாக ஒரு பதிலைச் சொல்லிக் கொண்டாள்.


அதற்குள் இறுதி மணி அடித்து விடவும், வகுப்பில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர்.


" அமைதியா இருங்க " ஆசிரியை அவர்களை அமைதிப்படுத்தினார்.


அதிகப்படியான நேரத்தைக் கடந்திருந்த போதிலும் மழை விட்டபாடில்லை.


ஷக்திக்கும் எவ்வளவு நேரம் தான் உள்ளிருந்து கொண்டே, மழையை ரசிப்பது ! வீட்டிற்குச் செல்லும் அந்த கால் மணி நேரத்திலும் கூட எந்தளவுக்கு நனைய முடியுமோ அவ்வளவுக்கு நனைந்து விடத் தோன்றியது.


அதற்குள் அவர்கள் வீட்டிற்குச் செல்லலாம் என்று சொல்லி விட, அதற்கு முன்பாகவே, மற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் வந்து அவர்களை அழைத்துச் சென்றனர்.


வழக்கம் போல, ஷக்தி தன் தோழிகள் இருவருடன் வீடு நோக்கி நடந்தாள்.


" ஹைய்யா...! " தன் மேல் விழுந்த மழைத்துளியை ரசித்து, அனுபவித்துக் கொண்டும், அந்த இதம் தந்த குளிரில் நடுங்கிக் கொண்டும் ஆரவாரமாக நடந்தாள்.


" ஷக்தி ! மழையில் நனையுற குஷியில் நம்ம ஸ்கூல் பேக் நனையுறதை மறந்துடாத. புக்ஸ், நோட்ஸ் லாம் போச்சு "


தோழி வருத்தத்துடன் கூற,


" ஆமா லட்சுமி. அதை மறுந்துட்டோமே ! இப்போ என்ன பண்றது ? "

தலையில் கை வைத்துக் கொண்டாள்.


உடன் நடந்த இன்னொரு தோழி,

" நம்ம பேக்கை மூடி மறைக்கிறா மாதிரி ஷாலை போட்டுக்கலாம்.புக்ஸ் நனையாது "

பலமான யோசனை ஒன்றைக் கூறினாள்.


" சூப்பர். இதையே பண்ணிடலாம் "


மூவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர்.


"இனி எந்தப் பிரச்சனையும் இல்லையே !"


துள்ளிக் குதித்து, துளிகளைக் கைகளில் அள்ளிக் கொண்டு, முகத்தில் தெளித்து தெளித்து விளையாடினாள் ஷக்தி.


தொப்பலாக முழுவதும் நனைந்து வந்த மகளைத் திட்டியபடியே உடை மாற்ற அனுப்பினார் தாய்.


' அந்த ஆவி பிடிக்கும் விஷயத்தை மறந்தே போனாள் '.


விளைவு !


" ஊசி லாம் வேணாம்மா ! " இருமலைக் கூட பொருட்படுத்தாமல், அழுது கொண்டிருந்தாள் ஷக்தி.


அந்த அழுகையிலும் மருத்துவமனைக்கு வெளியே பெய்து கொண்டிருந்த மழையை ரசிக்க மறக்கவில்லை அவள் !