மாதமொரு மழைக்காலம்
- புவனேஸ்வரி கலைசெல்வி
- புவனேஸ்வரி கலைசெல்வி
உண்மை பின்னணியான இக்கதை ஆண்பெண் இரு பாலினரும் படிக்கும் இடைநிலைக்கல்வி பள்ளியில் நிகழ்கிறது.புழுவிலிருந்து பட்டாம்பூச்சியாக ஒவ்வொரு மாணவ மணிகளும் வளரும் களமது. ஜன்னல் வழியே கார்முகில்களை சோர்வாக பார்த்து கொண்டிருந்தாள் பூமி.
மழைவரும் அறிகுறி தெரிய அதை ரசிக்க முடியாமல் இருந்தாள் அவள். பூமியின் தந்தையின் போதனைப்படி மழையென்பது கடவுள்.
"அப்பா ஏன் மழையை கடவுள்னு சொல்றீங்க?"
"அது இயற்கையாக உருவாகுது பாப்பா. இயற்கையின் சொரூபம் எல்லாமே கடவுள்தான்.ஏன்னா கடவுள், உயிர்களுக்குள் பேதம் பாக்க மாட்டாரு . மழையும் அப்படித்தானே?"என்று அளித்த விளக்கம் இப்போதும் காதுக்குள் கேட்டது. ஆனால் இன்று மழைக்கடவுளை பார்க்கவே வேண்டாம் என்றவளின் சோர்வு கூறியது .
தனக்குள் ஏதோ வினோதமான அயர்வு . ஆனால் என்னவென்று புரியாமல் அவள் யோசிக்கையில் சிற்றுண்டி வேளைக்கான மணி ஒலித்தது . சோர்வாக எழுந்த தோழியை சட்டென ஓரமாய் இழுத்து அவள் காதில் கிசுகிசுத்தாள் ப்ரியா .
" ப்ரியா, ரொம்ப பெருசா தெரியுதா டீ?"என்று தன் சீருடையின் பின்பக்கம் எட்டிப்பார்க்க முனைந்த பூமிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது . அந்த பதிமூன்று வயது சிறுமிக்கு, மாதவிடாய் என்பது விளங்காத சாபம் போல இருந்தது. ஏதோ, பெரும் தவறு இழைத்தது போல அவள் விழிகளில் மழை. அவளைவிட இயல்பிலேயே துணிவான ப்ரியா, "அய்யே இதுக்கு ஏன் அழற? "என்று அதட்டி பூமியின் சீருடை சுத்தம் செய்ய உதவி, அவளை சமாதானம் ஆக்கினாள் .
"பசிக்குது பூமி .. நான் கேண்டீன்ல உனக்கும் ஏதாவது வாங்கிட்டு வரவா?"என்றவளிடம் மறுப்பாய் தலை அசைத்து "நீ போ "என்றாள் பூமி . மாதம் ஒரு முறை வரும் வயிறு வலியும்,அதீத வியர்வையும் சோர்வும் , அவளுக்கு புரியாத புதிராகி இருக்க, அவளின் நண்பன் எதிரில் நின்றான் .
" என்னாச்சு பூமி ?"
"வயிறு வலிக்குது வினோத்". அவளை பாவமாய் பார்த்தவன் சில நிமிடங்களில் கைகளில் உணவு கொண்டு வந்தான்.
"சாப்பிடு,வயிறு வலிக்காது".அவனது செய்கையோ , வலியோ அவளை கண்களை கலங்க வைக்க வினோத்," அழாத சீக்கிரமா வீட்டுக்கு போய்டலாம் ஸ்கூல் முடிஞ்சு "என்றுவிட்டு சென்றான் .
வானை பார்த்தாள் பூமி ." மழையே இன்னைக்கு மட்டும் நீ வரவே வேணாம் ப்ளீஸ்"என்றாள் .பள்ளி முடிந்து , வாசலில் நின்றவளுக்கு அடுத்த சோதனை காத்திருந்தது . "பூமி அக்கா, இன்னைக்கு பஸ் லேட்டா வருமாம் "என்று ஒரு பெண் சொல்லிட, அருகில் நின்றான் வினோத் . அதே நேரம் அவன் தாயும் வந்திருந்தார்.
"ஹாய் பூமிம்மா, வினோத் போலாமா ?"
"அம்மா பூமியையும் கூட்டிட்டு போலாம். அவளுக்கு வயிறு வலிக்கிதாம் "
" இல்லம்மா ..எனக்கு குடை மட்டும் தர முடியுமா? மழைவர மாதிரி இருக்கு .. "
" வண்டியில ஏறு பூமி "
" அம்மா வேணாம்மா"என்று சிணுங்க ,"வினோத் நீ வந்து முன்னாடி உட்க்காரு" என்றபடி பூமியிடம் நயமாய் பேசினார் சுமதி . அவள் சீருடையில் இன்னும் மிஞ்சியிருந்த கரையும் , பூமியின் தயக்கமும் அந்த தாய் மனதை இளக்கிவிட அவளை அணைத்து கொண்டு "ஒண்ணுமே இல்ல பூமி. தைரியமா இருக்கணும். இதுக்கு போயி அழலாமா? "என்று சமாதானம் செய்து வீட்டில் உடை மாற்றி அவளுக்கு உணவு எடுத்து வைத்தார் சுமதி . பூமியின் வெற்று நெற்றியை பார்த்த வினோத் ,
" பூமி சாமி கும்பிடலையா "என்று கேட்க , "அவளுக்கு உடம்பு சரியில்லை கண்ணு "என்றார் சுமதி .
வழக்கம்போல எதுவும் சொல்லாமல் வினோத் அங்கிருந்து போய்விட , மின்னல் வெட்டி கொண்டிருந்த வானை நன்றியுடன் பார்த்தாள் பூமி . தான் மட்டும் குடையில்லாமல் அடைமழையில் நனைந்திருந்தால் ? அதை யோசித்தவாறு , " கடவுள் ரொம்ப நல்லவங்க தானே அம்மா "என்று நண்பனின் அன்னையிடம் கேட்க , சரியாய் அந்த நேரம் வினோத் , பூமியின் நெற்றியில் விபூதியிட்டு , "உனக்கு தானே உடம்பு சரி இல்ல ? நான் நல்லா இருக்கேன்ல அதான் வேண்டிகிட்டேன். உனக்கு சரி ஆய்டும் பூமி "என்றான் . மகனின் அன்பு மழைக்கு எதிரொலி போல வான்மழையும் நிலம்தொட, "ஆமா பூமி , கடவுள் நல்லவரு" என்றார். வினோத்தின் அன்பும் , இயற்கை அன்னையின் மழையும் அங்கு வாஞ்சையை நிறைத்தது .
-முற்றும்-