• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 22

ஆக்சிடெண்டில் அடிபட்டு கிடந்தவனுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்து, ஆபத்துக் கட்டத்தைத் தாண்டியதும் வெளியே வந்தாள் மதுரவர்ஷினி.

அந்த மருத்துவமனையின் வராண்டாவில் பதட்டத்துடன் அமர்ந்திருந்த கேர் டேக்கர், வேகமாக ஓடிவந்து மதுரவர்ஷினியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “என் கணவருக்கு ஒன்றும் இல்லையே? அவர் நன்றாக இருக்கிறார் தானே? அவர் இல்லையென்றால் இந்த உலகத்தில் எனக்கு எதுவும் இல்லை.. “ என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக ஆரம்பித்தது.

“ஏய்..... ரிலாக்ஸ்... உங்கள் கணவர் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டார். எலும்பு முறிவிற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு ஆர்த்தோ டாக்டர் வந்து பார்ப்பார். மற்றபடி அவர் இப்பொழுது நலமாக, ரொம்ப ரொம்ப நலமாக இருக்கிறார் “ என்று கூறி அவளை உற்சாகப்படுத்தினாள் மதுரவர்ஷினி.

ஆனந்தத்தில் மிதந்த அந்த கேர் டேக்கர், “ நான் உள்ளே சென்று என் கணவரை பார்க்கலாமா? “ என்று மதுரவர்ஷினியிடம் அனுமதி கேட்டாள்.

தன் இமைகள் மூடி சம்மதத்தை தெரிவித்தாள் மதுரவர்ஷினி.

காற்றை விட வேகமாக தன் கணவன் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் ஓடினார் அந்த கேர் டேக்கர்.

புருவத்தின் மத்தியில் சுருக்கங்கள் விழ தன் அறைக்குள் நுழைந்தாள் மதுரவர்ஷினி.


“ இவள் சித்தார்த் வர்மனின் மனைவி இல்லை என்றால்.... அப்போது சித்தார்த் வர்மனின் மனைவி யார்?

ஆதித்ய வர்மன் இவள் குழந்தை இல்லை என்றால், அவனுடைய அன்னை யார்?

இவளைக் காட்டி மனைவி என்று கூறியபோது சித்தார்த் வர்மன் மறுப்பேதும் கூறவில்லையே.

என்னிடம் பொய் கூற வேண்டிய அவசியம் சித்தார்த் வர்மனுக்கு ஏன் வந்தது?

ஆலப்புழாவில் சித்தார்த் காதல் உரைத்த பெண் யார்?”


தன் வாழ்வில் நடந்தது அனைத்தும் மர்மமாக இருக்க அந்த மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் தவித்தாள்.

குழப்பத்தில் தன் தலையே இரண்டாக வெடித்துவிடும் போல் இருந்தது மதுரவர்ஷினிக்கு.

டாக்டர்கள் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டை எடுத்துக்கொண்டு அந்தக் கேர் டேக்கர் மருந்து வாங்க மருத்துவமனையின் கீழே உள்ள மருந்தகத்திற்கு மருந்து வாங்க லிப்டில் ஏறினார்.

அதீத தலை வலியால் அவதியுற்ற மதுரவர்ஷினி, கீழே உள்ள காபி ஷாப்புக்குச் செல்ல லிப்டில் ஏறினாள்.

லிப்டில் மதுரவர்ஷினியைக் கண்டதும் அந்த கேர் டேக்கரின் கண்கள் மீண்டும் ஒளிர்ந்தது.

“ மேடம்... ரொம்ப நன்றி மேடம். என் கணவர் என்னுடன் பேசி விட்டார். தக்க சமயத்தில் கடவுள் போல் வந்து காப்பாற்றினார்கள் “ என்று கரம் குவித்து வணங்கினார்.

அவரது கரங்களை இயல்பு போல் கீழே இறக்கிவிட்டாள் மதுரவர்ஷினி.


“ என்னுடைய கடமையை செய்ததற்கு இவ்வளவு புகழ்ச்சி தேவையில்லை...

உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? “ என்றாள் ஆராய்ச்சி பார்வையுடன்.

கேர் டேக்கரோ சற்று நாணம் கலந்த புன்னகையுடன், “இனிமேல் தான் மேடம் “ என்றார்.

“ஓ....” என்று சற்று இழுத்தவள், “ நீங்கள் இங்கே மருத்துவமனையில் இருந்தால் அங்கே ஆதித்திய வர்மனை யார் பார்த்துக் கொள்வார்கள்?

அவனுடைய அம்மா.... “ கேள்வியை முடிக்கும் முன் அவளது இதயம் பதட்டத்தில் படபடக்க ஆரம்பித்தது.

“ மேடம் ஆதித்ய வர்மன் தாயில்லாத குழந்தை. அவனுடைய அப்பா டாக்டர் சித்தார்த் வர்மன் மட்டுமே அவனை பார்த்துக் கொள்வார்.

யாரையும் அவ்வளவு எளிதாக அவர் நம்ப மாட்டார். நானே பல தேர்வுகளைக் கடந்து இந்த வேலையில் சேர்ந்தேன்.

சில சமயங்களில் ஆதித்திய வர்மனை கௌசிக் சார் வீட்டில், அவருடைய அம்மாவின் பாதுகாப்பில் விட்டுவிட்டு வருவார்.

ஆதித்தும் அவ்வளவு எளிதாக யாருடனும் ஒன்ற மாட்டான். நான் பார்த்து அவன் மகிழ்வாக இருந்த ஒரே ஆள் நீங்கள்தான் மேடம்.

அதுவும் சித்தார்த் வர்மன் சார் உங்களிடம் மட்டுமே அவனை நெருக்கமாக பழக அனுமதித்தார்.

உங்கள் இருவரின் புகைப்படங்களை அவ்வப்போது அனுப்பச் செய்தார்.

அதன் உள் நோக்கம் எனக்கு தெரியாது மேடம். ஆனால் எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை தான் சிறப்பாக செய்து முடித்தேன்.


நீங்கள் சித்தார்த் சார்க்கு என்ன உறவு மேடம்? “
என்ற கேள்வியோடு முடித்தார்.

“ஹான்.... அவருடைய மாமன். மகள்.... “ பொங்கிய கோபத்தை புன்னகை பூசி முடித்தாள்.


“ ஓ அப்படியா மேடம். ரொம்ப நல்லது மேடம். இனி என் கணவர் குணமாகும் வரை என்னால் ஆதித்தை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு செல்ல முடியாது. சித்தார்த் சாரிடம் கூறவேண்டும். உங்களைப் பார்த்ததில் மீண்டும் எனக்கு மகிழ்ச்சி மேடம் “ என்று கூறிவிட்டு மருந்தகத்தை நோக்கிச் சென்று விட்டார் அந்த கேர் டேக்கர்.

காபி ஷாப்பில் அமர்ந்து மிடறு மிடறாக காபியை ரசித்துக் குடித்தாள். சித்தார்த் வர்மன் மனைவி இல்லாமல் இருப்பது அவளுக்கு சற்று நிம்மதியைக் கொடுத்தது.

வேறு ஒருவரின் கணவனை நினைத்த பழிச் சொல்லிலிருந்து தான் நீங்கியதை நினைத்து, சற்று நிம்மதி கொண்டாள்.

“ சித்தார்த் வர்மனின் மனைவி யார்? “ இந்தக் கேள்வி அவளை விடாமல் சுற்றி வளைத்தது.


இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க முடியும் நபர்களை மனதால் பட்டியலிட ஆரம்பித்தாள்.

அவளது நினைவில் வந்த முதல் நபர் குமரகுருபரர். சிக்கலின் நுனியை பிடித்த மகிழ்ச்சியில் அவளது உள்ளம் துள்ளி எழுந்தது.

“இந்த ஆராய்ச்சி தேவையா?“ என்று அவளது மற்றொரு மனம் இடித்துரைத்தது.

“ இல்லை இல்லை... இத்தனை வருடங்கள் கழித்து, கையினில் மகன் இருக்கும்போது என்னைத் தீண்டும், சீண்டும் சித்தார்த்தின் நோக்கத்தை நான் அறிந்தே ஆகவேண்டும்.

மீண்டும் ஒரு மாயச் சுழலுக்குள் நான் சிக்காமல் இருக்க, என் முடிவில் நான் தெளிவாக இருக்க, சில உண்மைகளை தெரிந்தே ஆக வேண்டும்“ என்று கேள்வி கேட்ட தன் மனதை சமாதானப்படுத்தினாள்.

அதற்குப்பின் ஒரு நொடி கூட தாமதிக்காமல் கிளம்பியவள் குமரகுருபரரின் முன் நின்றாள்.

“ வணக்கம் சார். நான் மதுரவர்ஷினி. உங்களிடம் சிறிது நேரம் கண்டிப்பாக நான் பேச வேண்டும். அனுமதி கிடைக்குமா? “ என்று கேட்டாள்.

முகமெங்கும் அருள் வடிய, “சொல்லுமா... “ என்றார்.

“நான்... எனக்கு... மிஸ்டர் சித்தார்த் வர்மனைப் பற்றிய சில தகவல்கள் வேண்டும்” என்றாள் தயக்கத்துடன்.

“ சித்தார்த் வர்மனா?... “ அவரது பார்வை கூர்மையாய் ஆராய்ந்தது மதுரவர்ஷினியை.

கரகரத்த தன் குரலை சரி செய்தவாறு, “ எனக்கு சித்தார்த் மனைவி பற்றிய தகவல்களை சொல்வீர்களா? “ என்று முகத்தில் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் போட்டியிட கேட்டாள்.

அன்றைய சித்தார்த்தின் கலங்கிய தோற்றம் குமரகுருபரரின் கண்ணில் இன்று நிழலாய் ஆடியது.

“மனைவியா? அப்படி யாரும் சித்தார்த்திற்கு இல்லையே... “ என்று கூறிவிட்டு அழுத்தமாக மதுரவர்ஷினியை பார்த்தார்.

“ பிறகு ஆதித்ய வர்மன் எப்படி? “ துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டைப் போல் வேகமாய் வந்தது அவளது கேள்வி.


“ உண்மைகளை அனைவரிடமும் உரைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே.....” என்றவரின் பார்வை கூர்மையாய் படிந்தது.

“இல்லை... நான்.... இம்ம்ம்... “ என்று மருகியவள் பின் முடிவெடுத்தவளாய் திடமாய் நின்றாள் குமரகுருபரர் முன்.

கண்களை இறுக்கி மூடித்திறந்தவள் , தன் உணர்வுகளை எல்லாம் அடக்கி, தீர்க்கமாய் பார்த்தாள் குமரகுருபரரை.

“சில விஷயங்கள், வாழ்வின் ரகசிய பக்கங்கள் எனக்கும் மிஸ்டர் சித்தார்த்துக்கும் மட்டுமே சொந்தமானது. அதைக் கடை பரப்பவோ, விளம்பரம் செய்யவோ, அடுத்தவர் பரிதாபத்தை சம்பாதிக்கவோ நான் விரும்பவில்லை.

நீங்கள் கூறப்போகும் தகவல்கள் என் வாழ்க்கை சிதறியதற்கான காரணங்களாகக் கூட இருக்கலாம்.

இதற்கு மேல் என்னிடம் இருந்து நீங்கள் எந்த விளக்கங்களையும் பெற முடியாது.

உங்களுக்கு விருப்பம் இருந்தால், எனக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மிசஸ் சித்தார்த் பற்றிய தகவல்களைக் கூறுங்கள்” என்றாள் முடிவான குரலில்.

மதுரவர்ஷினியின் தோற்றம் அன்றைய சித்தார்த்தின் தோற்றத்தோடு ஒத்துப் போனது.

எதையும் தன்னிடம் பகிராத அழுத்தகாரனான சித்தார்த்தின் மறு பிம்பம் போல் நிற்கும் மதுரவர்ஷினியைப் பார்த்து மென்மையாகப் புன்னகை புரிந்தார்.

“ சரிம்மா... நீ கேட்கும் தகவல்களை நான் கூறுகிறேன். அதற்கு முன் நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளிக்க வேண்டும்” என்றார்.

தன் மூச்சை இழுத்துப் பிடித்து இருந்தவள், நிம்மதியாகப் பெருமூச்செறிந்தாள்.

“ சரி கேளுங்கள் சார் “ என்றாள்.

“ உனக்கும் சித்தார்த் வர்மனுக்கும் என்ன சம்பந்தம்? “ கேள்வி கூராய் வந்தது.

பொய்மை கலக்காத கண்களுடன் குமரகுருபரரை நேருக்குநேர் சந்தித்தாள்.
“ இறந்த காலத்தில் சித்தார்த்தை என் உயிராய் சுமந்து இருந்தேன்.... “ என்ற அவளின் பதிலில் ஆயிரம் அர்த்தங்களைப் பொதித்து இருந்தாள்.

“ உன்னை நம்பலாமா? “ என்றார்.

இனி விளக்கிக்கூற தன்னிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்த மதுரவர்ஷினி, நம்பிக்கை இல்லாத இடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்க முடியாமல் திரும்பிச் செல்ல எத்தனித்தாள்.

“ நில்லம்மா... “ என்ற கட்டளைக் குரலில் அப்படியே நின்று திரும்பினாள்.

இருக்கையில் அவளை அமரச்செய்து, சித்தார்த்தின் கடந்தகால பக்கங்களைத் திருப்பினார்.

“ மருத்துவப் படிப்பு முடிந்ததும் மாதக்கணக்கில் யாருடனும் பேசாமல் அழுத்தமாக இருந்த சித்தார்த்திடம் யாரும் நெருங்கவே யோசித்தனர்.

போதைப் பழக்கத்தில் ஈடுபடுத்தி இருந்தவர்களை, மீட்டெடுக்கும் மீட்புக் குழுவாக கேரளாவில் உள்ள ஆலப்புழாவிற்கு தன் குழுவினரோடு சித்தார்த்தை செல்லச் சொல்லி நானே அவனிடம் விண்ணப்பமாக கேட்டுக் கொண்டேன்.

என்னுடைய வாக்கினை ஏற்று ஆலப்புழா சென்றவன் திரும்பி வரும்போது கையில் ஆதித்ய வர்மனோடு வந்தான்.


யாரிடமும் ஏன் என்னிடம் கூட எந்த விளக்கமும் கூறவில்லை சித்தார்த்.
அதன்பிறகு ஆதித்ய வர்மனை கூட்டிக்கொண்டு, ஜெர்மன் சென்றவன், தற்பொழுது தான் இந்தியா திரும்பினான் “ என்றார்.

“ ஆலப்புழா... குழந்தை....” என்ற வார்த்தைகளிலேயே துடிதுடித்தவள், நடந்ததை ஒருவாறு கணித்த போது அதிர்ச்சியில் மயக்கமுற்றாள்.

“ அம்மாடி... “ என்று பதறியபடி குமரகுருபரர் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை போக்கினார்.

கண்விழித்தவள் கண்கலங்கியபடி, “ சார் நான் கடைசியாக சித்தார்த்தை பார்த்தது அதே ஆலப்புழா மருத்துவமனையில்தான்.

ஆனால்... ஆனால்.... நான் சித்தார்த்தை வேறு ஒரு பெண்ணோடு பார்த்தேன்.

அந்தப் பெண்ணோடு சித்தார்த் மிகவும் நெருக்கமாக பேசிக்கொண்டிருந்ததை என் காதில் கேட்டேன்.

அதன் பிறகு நான் சித்தார்த்தை பார்க்கவில்லை.

அந்தப் பெண் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? “ என்றாள்.

“ பெண்ணா?.... எனக்குத் தெரிந்து சித்தார்த்திற்கு எந்த பெண்ணிடமும் நெருக்கமான பழக்கம் இருந்ததில்லை.

உன்னுடைய கண்களும் பொய் சொல்லவில்லை. உங்கள் நெருக்கத்தின், பழக்கத்தின் அளவும் எனக்குத் தெரியவில்லை” என்றார்.

மிகவும் சிரமப்பட்டு யோசித்தவர், “ ஒருவேளை நீ கூறும் அந்த பெண் மானசாவாக இருக்க வாய்ப்புள்ளது.

மானசா போதையின் பிடியில் மிகவும் சிக்கித்தவித்தவள்.

சித்தார்த் அவளை தன் உடன் பிறந்தவள் போல், மகள் போல் பார்த்து போதையின் பிடியில் இருந்து மீட்டெடுத்தான்.

சித்தார்த் இன்றும் மானசாவிற்கு ஒரு நல்ல வழிகாட்டியாக, ஆலோசகராக இருந்து வருகிறான்.

அவனுடைய ஐ லவ் யூ என்ற வார்த்தைகாக , அவனுடைய தமையன் போன்ற அன்பிற்காக, தகப்பன் போன்ற பாசத்திற்காக ஏங்கி நிற்கும் சின்ன குழந்தை அவள். கள்ளம் கபடம் இல்லாத அந்தக் குழந்தையை மீட்டெடுத்தவன் சித்தார்த் வர்மன் “ என்றார் பெருமையுடன்.

கண்கள் இருள, மனம் துவள ஆரம்பித்தது மதுரவர்ஷினிக்கு.
தான் சித்தார்த் மீது அடுக்கிய குற்றச்சாட்டுகள் எல்லாம் தூள் தூளாக உடைந்து நொறுங்க, உடலில் தெம்பு இல்லாதவளாக நாற்காலியை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“ அப்பொழுது ஆதித்திய வர்மன்... “ என்றவளின் குரல் நலிந்து ஒலித்தது.

“ ஆலப்புழாவில் இருந்து வரும்பொழுது பச்சிளம் குழந்தையை, தாயின் பாலுக்காக அழும் அந்தச் சிசுவை சுமந்து வந்தவன், இன்றுவரை சுமந்து கொண்டு இருக்கிறான் தந்தை என்ற உறவோடு.

தாயின் பெயர்..... “ என்று நிறுத்தியவரை கண்கள் பளபளக்க பார்த்தாள் மதுரவர்ஷினி.

“ கொஞ்சம் இரும்மா. சித்தார்த் ஜெர்மன் போகும்பொழுது, பாஸ்போர்ட், விசா எடுக்கும் நேரத்தில், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் நகல் ஒன்றை, சித்தார்த் வர்மனின் தகவல்கள் அடங்கிய கோப்போடு சேர்த்து வைத்திருந்தேன்.

இதுவரை அதைப் பற்றி ஆராயும் எண்ணம் எனக்கு வந்ததில்லை.

இந்தக் குழந்தையின் தந்தை நானே என்று மட்டுமே சித்தார்த் வர்மன் எங்களிடம் உரைத்தான்.

ஒருவேளை ஆதித்திய வர்மனின் தாயின் பெயர் அதில் சேர்க்கப்பட்டிருக்கலாம்” என்று கூறியவர் அந்த நகலை எடுத்து வந்து மதுரவர்ஷினியிடம் சேர்த்தார்.

கைகள் நடுங்க, விழி விரித்துப் பார்க்க, அந்த நகலை கையினில் பெற்றாள்.

தந்தையின் பெயர் சித்தார்த் வர்மன் என்று இருக்க,
தாயின் பெயர் இருக்கும் இடத்தில் மதுரவர்ஷினி என்ற தன் பெயரை பார்த்ததும் சுற்றும் உலகம் ஒரு நொடி நின்றது.

கல்லாய் மாறியிருந்த அவளது தாய்மை பூவாய் பூத்தது.

தனக்கும் ஆதித்திய வர்மனுக்கும் உள்ள உறவு புரிந்தது. தன் வாழ்வின் அர்த்தம் தெரிந்தது.

ஆனந்தத்தில் கூத்தாடியவள், அதிர்ச்சியில் திண்டாடியவள் குமரகுருபரரின் காலில் பட்டென்று விழுந்து தன் நன்றியினை தெரிவித்தாள்.

புரியாது விழித்தவர், “அம்மாடி எழுந்திரும்மா... எனக்கு ஒன்றும் புரியவில்லையே.... “ என்றார் சட்டென மூண்ட கலக்கத்துடன் .

எழுந்து நின்றவள், அதிர்ச்சியில் மூச்சோடு பேச்சும் வராமல், தனது வலது கையின் விரல்களை மார்பிலும் வயிற்றிலும் வைத்து காட்டினாள்.

குழந்தையை தாலாட்டுவது போல் சைகை செய்தாள்.
குழப்பத்தோடு பார்த்தவரை பார்த்து, “நான் தான் ஆதித்திய வர்மனின் அம்மா. அம்மா.... “ என்று உச்சகட்ட ஆனந்த அதிர்ச்சியில் சத்தமிட்டு அழுதாள்.

குமரகுருபரருக்கு மனது நிறைந்தது. சித்தார்த் வர்மனின் வாழ்வு சிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டார்.

“ அம்மாடி, அழுகாதேம்மா. உங்கள் துன்பத்திற்கான முடிவு வந்துவிட்டது. குடும்பமாக இணைந்து வாழும் நாளும் வந்துவிட்டது.

இனி நீ சிரிக்க வேண்டும் தாயே “ என்றார் இன்று முதல் தன் வளர்ப்பு மகனின் வாழ்வு சீராகும் நோக்குடன்.

பரவசத்தில் வேக மூச்சுக்களை எடுத்தவள், குமரகுருபரரை பார்த்து தன் இரு கரங்களைக் கூப்பி விழி நீர் பெருக தன் நன்றியை சமர்ப்பித்தாள்.

“ சார்... உங்களிடம் ஒரு சிறிய விண்ணப்பம். இல்லையில்லை வேண்டுகோள். நான்தான் ஆதித்திய வர்மனின் அம்மா என்ற உண்மை எனக்குத் தெரியும் என்பதை நீங்கள் சித்தார்த்திடம் கூறக்கூடாது.

இத்தனை நாள் பிள்ளையை இழந்து பைத்தியக்காரியாக, நடைபிணமாக, வாழ்வின் அர்த்தம் தெரியாதவளாக இருந்துவிட்டேன்.

அதற்குக் காரணம் ஒன்று என் தந்தை. மற்றொன்று சித்தார்த் வர்மன்.

இருவருக்குமான தண்டனையை நானே கொடுப்பேன். ப்ளீஸ் சார் அதுவரை நீங்கள்.. “ என்று கெஞ்சும் குரலில் மன்றாடினாள்.

“ என் மகனும் மிகவும் பாவப்பட்ட ஜீவன் தான். சூழ்நிலை என்னவென்று தெரியாமல் தண்டனை கொடுத்து விடாதேம்மா .

உனக்கு உண்மை தெரிந்த கதையை நீயாக கூறும் வரை நான் யாரிடமும் கூற மாட்டேன் என்று உனக்கு உறுதி கூறுகிறேன் “ என்றார் பாசத்துடன்.

தான்தான் ஆதித்ய வர்மனின் தாயென்ற பரவசத்தில் குமரகுருபரருக்கு தனது நன்றிகளை ஆயிரம் முறை தெரிவித்துவிட்டு, ஆசிரமத்தை விட்டு வெளியேறியவளின் இதழ்கள், சித்தார்த்திற்கு தான் கொடுக்கப்போகும் தண்டனையை நினைத்து மலர்ந்தது.

மின்னல் வெட்டும்...



 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
அன்பார்ந்த வாசகர்களே,
வைகை தளத்தின் மல்லிகைத் தோட்டத்தில் பூத்த, இந்த மின்னலுக்கு உங்கள் கருத்துக்களால்,தொடர் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

-அதியா ❤️
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,989
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️சூப்பர் சூப்பர் secret தெரிஞ்சுடுச்சு, இனி சித்தார்த்க்கு மறைமுக இன்ப இன்னல்கள் ஆரம்பமாக போகுது 😍😍😍😍😍😍😍
 

Kavi priya

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 6, 2022
Messages
25
வெகு அருமை. சித்தார்த் வர்மனுக்கான தண்டனைகளை இனிமையாக எதிர்பார்க்கிறோம்.
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️சூப்பர் சூப்பர் secret தெரிஞ்சுடுச்சு, இனி சித்தார்த்க்கு மறைமுக இன்ப இன்னல்கள் ஆரம்பமாக போகுது 😍😍😍😍😍😍😍
தாய்மையும் காதலும் கலந்த மோதல் காட்சிகளைக் காணலாம் 🤣🤣🤣🤣
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
வெகு அருமை. சித்தார்த் வர்மனுக்கான தண்டனைகளை இனிமையாக எதிர்பார்க்கிறோம்.
தங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சி செய்வேன் 😍😍😍👍
 

Priyakutty

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 28, 2022
Messages
112
உண்மை தெரிஞ்சிடுச்சா... 🥰🥰🥺

எமோஷனல்.... 🥺

என்ன தண்டனை... உங்கள மாறி அவரும் தப்பா புரிஞ்சிட்டு இருந்தாரு...

அவர மன்னிச்சுடுங்க ப்பா... 😔

நைஸ் எபி dr... ❤
 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
கண்கள் வேர்த்து விட்டது ஆத்தரே 🥲🥲🥲

தன்னவன் குற்றமற்றவன் என்று தெரிந்து கொண்டாள், ஆனால் தண்டனை வர்மனுக்கா :oops::oops::oops:

முழுத்தவறும் சிவானந்தன் மீது தானே உள்ளது :mad::mad::mad:
 
Top