• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மிருதனின் முளரி.. 5

kkp7

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
8
9
8
Tamil nadu
கைகளில் வைத்திருந்த அந்த ரோஜாப்பூங்கொத்தின் வாசனையை, ஆழச் சுவாசித்தபடி நடந்து போய்க் கொண்டிருந்த பாரதி, தன்னைப் பின் தொடர்ந்து வந்த அந்த ஜீப்பைக் கவனிக்கவில்லை.

கழுத்தைச் சுற்றி அவள் போட்டிருந்த துப்பட்டாவினை, அந்த ஜீப்பில் இருந்த ஒருவன் பிடித்து இழுக்க, பூங்கொத்து கீழே விழுந்து சிதற, இரு கரங்களாலும் துப்பட்டாவை பிடித்த பாரதிக்கு ஒரு கணம் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.

ஜீப்பின் வேகத்துக்கு அவளும் தர தரவென இழுபட்டு செல்ல, கழுத்தை நெரித்த துப்பட்டாவால் அவளது கண்கள் கலங்கிப் போக, இரு பக்கமும் ஊசியால் பின் செய்திருந்த துப்பட்டா சர் சர்ரென கிழியவும் தொடங்கி விட்டிருந்தது.

அவளது சல்வார் மெல்லிய துணியினால் ஆனதால் துப்பட்டாவோடு சேர்த்து பின் செய்திருந்த சல்வாரும் அதே வேகத்தோடு கிழியத் தொடங்க, கதிகலங்கிப் போன பாரதி, துப்பட்டாவை விட்டு தன் தோள்பக்கத்தை மறைப்பது போல கைகளால் பொத்திக் கொள்ள வேண்டியதாகிப் போனது.

சட்டென்று ஜீப்பில் இருந்து குதித்த இரண்டு தடிமாடுகள், அவளுக்கு பக்கத்தில் வந்து, அவள் மேல் கை போடுவதும் அதைப் போட்டோ பிடிப்பதுமாக அவளை ஒரு வழி செய்து கொண்டிருந்தார்கள்.

வேகமாக கிழிபட்டு செல்கின்ற துப்பட்டாவை பிடிப்பதா அல்லது தன்னிடம் சேட்டை செய்து கொண்டிருக்கும் அந்த தடிமாடுகளை தடுப்பதா என்பது தெரியாமல் கிட்டதட்ட கதி கலங்கி போய் நின்றிருந்தாள் பாரதி.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த வேளையில், அவளது அதிஷ்டமோ தெரியவில்லை, அவள் நின்றிருந்த திசை நோக்கி மைக்கேலின் கறுப்பு ஜீப் வேகமாக வந்தது.

தன் ஜீப்பை விட்டு எந்தப் பக்கத்தால் அவன் குதித்து இறங்கினானோ தெரியவில்லை, ஒரே பாய்ச்சலாக வந்தவன் பாரதியின் பக்கத்தில் நின்றிருந்த இருவரையும் இழுத்து விளாசிய விளாசில் பாரதியின் துப்பட்டாவை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தவனின் கைகள் பதட்டத்தில் துப்பட்டாவை நழுவ விட்டன.

பாரதியை சுற்றி நின்றிருந்த இருவரும் அந்த நேரத்தில் அந்த இடத்தில் மைக்கேலை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்பது, அவர்களது பதற்றத்துடன் கூடிய முகபாவனையிலேயே நன்கு தெரிந்தது.

எது எப்படியோ அவனது கைகளில் சிக்காமல் தப்பி பிழைத்தால் போதும் என்கிற எண்ணத்தில், அங்கே நின்றவர்கள் ஒரே வேகமாக ஜீப்பில் ஏறி பறந்து விட, மைக்கேலின் கழுகு பார்வைக்கு அத்தனை பேரின் முகமும் தப்பவில்லை, சட்டென்று தன் காலுறைக்குள் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, ஒருவனது காலுக்கு குறி வைத்து சுட்டான்.

பின்னர் சட்டென்று பின்னால் திரும்பி தன்னோடு வந்திருந்த ஒருவனைப் பார்த்து மைக்கேல் ஜாடை காட்ட, நொடியில் அவன் சொல்ல வருவதை புரிந்து கொண்டு தன் புல்லட்டில் அந்த ஜீப்பை பின் தொடர்ந்தான் மைக்கேலின் அந்த கையாள்.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல், தன் இரண்டு கைகளாலும் தன்னையே இறுக அணைத்தபடி கூனிக்குறுகிப் போய் நின்றிருந்தாள் பாரதி.

மீண்டும் அவளது பக்கம் திரும்பிய மைக்கேல், தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, சட்டென்று தான் அணிந்திருந்த கறுப்பு நிற சட்டையை கழற்றி அவளது கைகளில் திணித்தான்.

அவளோ அதற்குக் கூட எந்தவிதமான எதிர்வினையும் காட்டாமல் அப்படியே தான் நின்றிருந்தாள், அவள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் விடுபடவில்லை என்பது, அவளது முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

திரும்பி ஒரு நொடிக்கும் குறைவாக அவள் முகம் பார்த்தவன், என்ன நினைத்தானோ தெரியவில்லை அந்த சட்டையை அவளைச் சுற்றி போர்த்தி விடுவது போல தானே அணிவித்து விட்டான்.

தனது சட்டையை மைக்கேல் அணிவிக்கும் போது, மிக நெருக்கமாக வந்த அவனை அப்போது தான் சுரணை வந்தவள் போல திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் பாரதி.

அந்த நேரத்தில் இருவரது விழிகளுமே ஒருவர் விழிகளை ஆழமாக நோக்க தவறவில்லை.

அவனது சட்டையை இருகரம் கொண்டு இறுகப் பற்றியவளது கருவிழிகள் கலக்கத்தோடு, தன் பார்வையை தாழ்த்தி கொள்ள, ஒரு வித யோசனையோடு மைக்கேல் மட்டும் அவளது குனிந்திருந்த தலையை தான் பார்த்து கொண்டிருந்தான்.

அவளை அப்படியே விட்டு போக அவனுக்கு மனம் வரவில்லை போலும், எப்போதும் அழுத்தமாக வேற்று பெண்கள் யாரிடமுமே வாய் திறக்காத அவன் அவளிடம் மட்டும் தானே பேச்சுக் கொடுத்தான்.

"என்னாச்சு.. யாரு அவனுங்க.."

"தெரியேல்லை.."

"கலை.. கூட வரலியோ.."

"இல்லை வரலை.."

"இப்புடி தனியா விட்டிட்டு எங்க போனான்.."
என கோப விழிகளோடு திரும்பிய மைக்கேல், அருகே வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி, அதில் பாரதியை ஏறச் சொல்ல, மைக்கேலையே திரும்பி திரும்பிப் பார்த்தபடி ஆட்டோவில் ஏறிக் கொண்ட பாரதி, அந்த வீதியில் இருந்து ஆட்டோ மறையும் வரை அவனைத் தான் பின் கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டு வந்தாள்.

தங்கள் குடியிருப்புக்கு வந்ததும் முடுக்கி விட்ட பொம்மை போல, தன் அறையினுள் புகுந்து கொண்ட பாரதிக்கு ஓவென்று கத்தி அழ வேண்டும் போல இருக்கவே, வாயை இறுக்க பொத்திக் கொண்டு அழத் தொடங்கினாள்.

கொழும்புக்கு அவள் வந்து இத்தனை நாட்களில் அவள் சந்தித்த முதலாவது விபத்து இது, ஆனால் இதை விபத்து என்று சொல்ல முடியாதே, யாரோ திட்டம் போட்டு ஆள் விட்டு செய்த கேவலமான செயல் அல்லவா இது.

பாரதி இயல்பிலேயே தைரியமான பெண், யார் எதிரே வந்து என்ன சேட்டை செய்தாலும் கலங்காமல் எதிர் கெள்ளும் அவளுக்கே இந்த நிலைமை என்றால், மற்றப் பெண்களை பற்றி சொல்லவா வேண்டும்.

ஆனாலும் பின்னால் வந்து அவளது துப்பட்டாவை இழுத்ததால் தான் அவளால் சட்டென்று சுதாரித்துக் கொள்ள முடியவில்லை, இல்லையென்றால் அவர்களை ஒரு வழி பண்ணாமல் அவள் வந்திருக்கவே மாட்டாள்.

அழுதவாறே கட்டிலில் சாய்ந்திருந்த பாரதிக்கு, நடந்து முடிந்து போன சம்பவம் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து வெளி வரவே சில பல மணிநேரம் தேவைப்பட்டது.

எவ்வளவு நேரம் தான் அப்படியே அமர்ந்திருந்தாளோ தெரியவில்லை, மெல்ல எழுந்து முகம் கழுவப் போனவள், குளியலறையில் இருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்த போது தான், அவளது விழிகள் தன் மீது போர்த்தப் பட்டிருந்த கறுப்பு நிற சட்டையில் நிலை குத்தி நின்றன.

கைகள் லேசாக நடுங்க அந்த சட்டையை மெல்ல கழற்றியவளது நாசியை, அந்த சட்டையின் பிரத்யேக வாசனை கவரத்தான் செய்தது.

மெல்ல சட்டையை எடுத்து முகத்துக்கு அருகே கொண்டு சென்றவள், அந்த சட்டையின் வாசத்தை நிதானமாக ஆழமாக சுவாசித்தாள், அவளையும் அறியாமல் அவளது இதழ்கள் புன்னகையில் விரிந்தன.

ஒரு ஆடவனது ஆடையை இப்படி முகர்ந்து பார்ப்பது நாகரிகமா என்கிற கேள்வியெல்லாம் அப்போது அவளுக்குள் வரவேயில்லை, அடடா இதென்ன இவனோட சட்டை மட்டும் இப்படி வாசனையாக இருக்கிறதே என்ற எண்ணம் மட்டுமே அந்த நொடி வந்தது.

வாசனை மட்டுமா வந்தது, இத்தனை நாள் இருந்த மைக்கேலை பற்றிய தவறான எண்ணங்கள் மாறி, அவனைப் பற்றிய நல்ல எண்ணங்களும் தான் அவளுள் வந்தது.

"சே.. எப்பேர்ப்பட்ட மனுஷன் அந்தாள்.. அந்த இடத்துல எத்தினை தடிமாடுகள் எனக்கு நடந்து கொண்டிருந்ததை வேடிக்கை பாத்துக் கொண்டு நின்டிருந்ததுகள்.. ஆனா அந்த மனுஷன் வந்த வேகத்துக்கு அவனுங்களை விளாசீட்டு.. போதாக்குறைக்கு என்ரை மானத்தைக் காப்பாத்த இப்புடித் தன்ரை சட்டையை வேறை யோசிக்காமல் கழட்டி மாட்டி விட்டிருக்கிறாரே.. நான் தான் லூசு மாதிரி அந்த மனுஷனைப் பத்திச் சரியாப் புரிஞ்சு கொள்ளாமல்.. மற்றவை சொன்னதைக் கேட்டுத் தப்பா நினைச்சு இருக்கிறன்.. அந்த பிழையான நினைப்புக்கான பாவத்தை எங்க போய்க் கழுவப் போறனோ தெரியேல்லையே.. அதெல்லாம் போக இன்டைக்கு அவர் செய்ததுக்கான நன்றிக்கடனை எப்புடித் தீர்க்கப் போறனோன்டும் தெரியலியே.."
எனக் கிட்டதட்ட புலம்பவே தொடங்கி விட்டிருந்தாள் பாரதி.

எவ்வளவு நேரம் தான் தன் போக்கில் புலம்பி இருப்பாளோ அது அவளுக்கே தெரியவில்லை, மெல்ல மெல்ல அவள் சாதாரணமாகிக் கொண்டிருந்த வேளை, வேக வேகமாக மூச்சிரைக்க ஓடி வந்தான் கலைமோகன்.

"பாரு பாரு.. என்னடி ஆச்சு ஏதும் பிரச்சினையா.. பாஸ் என்னைய உடன வீட்டுக்கு போனு துரத்தி விட்டாரு.. கூடவே இனிமேல் உன்னைய எங்கயும் தனியா விடக் கூடாதுனு திட்டு வேறை.. நீ சொல்லாமல் கொள்ளாமல் கள்ளத்தனம் செஞ்சு வெளியால ஓடுற கதை எல்லாம் பாஸுக்கு தெரியாது தானே.. நானும் அதைப் பத்தி வாயைத் திறக்கவே இல்லை.. நீ சொல்லு எங்க போனி.. பாஸ் ஏன் என்னை வீட்டை கலைச்சு விட்டவர்.. அன்டைக்கு ஒரு நாள் நர்சரில வந்து என்னைக் கண்டதும் ஓடினவங்கள் யாரு.."
என கலைமேகன் மூச்சு விடாமல் கேட்க, பாரதிக்கு லேசாக மூச்சு வாங்கியது.

"இந்தா பாரு.. உன்னோட உந்த கழண்டு போன கேள்வியளுக்கு எல்லாம் என்னட்டை பதில் சொல்ல தென்பு இல்லை.. உதெல்லாத்தையும் உன்ரை பாஸுட்டையே கேட்டு இருக்கலாம் தானே.."

"அவரு தான் நிற்க கூட விடாமல் துரத்தி விட்டிட்டாரேடி.. அப்புறம் எங்கேருந்து கேள்வி கேட்க.. நீயே சொல்லு.."

"ஒரு பிரச்சினையும் இல்லை.. நான் தனியா இருப்பேனு நினைச்சு உன்னை அனுப்பி விட்டிருப்பாரு அவ்வளவு தான்.."

"அவ்வளவு தானா.."

"அவ்வளவே தான்.."

"இதுக்கு முதலுமே நீ தனியா இருந்திருக்கியேடி.."

"அடேய் கேள்விக்கு பிறந்தவனே.. கொஞ்சம் களைப்பா இருக்கு ஒரு கிளாஸ் யூஸ் போட்டு குடுக்கிறியா.. அதை குடிச்சிட்டு தென்பா பதில் சொல்லுவன்.."
என பாரதி பாவமாகச் சொல்ல, அவளது முகத்தில் தெரிந்த களைப்பில் உண்மையில் உருகிப் போன அவளது தோழன், அவளுக்கு யூஸ் தயாரிக்க வேகமாக சமையலறைக்குள் ஓடினான்.

அவன் அந்த பக்கம் போனதும் 'அக்கடா' என்பது போல சோபாவில் விழுந்தவளுக்கு, அதிர்ச்சியான ஒரு சம்பவத்தில் இருந்து மீண்டு போய் வந்து, வீட்டில் தனியாக இருக்கும் தனக்கு அந்த நேரம் துணையாக இருக்கவே தன் தோழனை மைக்கேல் அனுப்பி இருக்கிறான் என்பது புரிந்து போனது.

அதிலும் என்ன நடந்தது என்பதை அவன் விபரமாகச் சொல்லாமல், கலைமோகனை அனுப்பி வைத்தது கூட, பாரதிக்கு லேசாக ஆறுதலாகத் தான் இருந்தது.

ஏனென்றால் நடந்து போன சம்பவம் பற்றி அவளுக்குமே பேசப் பிடிக்கவில்லை, ஒரு வேளை கலைமோகனுக்கு விஷயம் தெரிந்தால் அவனுமே என்ன நடந்தது எனத் தோண்டாமல் விட மாட்டான்.

அவனுக்கு பதில் சொல்லி முடிப்பதற்குள், பாரதிக்கு பாதி உயிர் போய் வந்து விடும், அதனால் அவளுமே தான் அமைதி காத்தாள், அதனால் மைக்கேலுமே எதுவுமே கலைமோகனிடம் சொல்லாமல் விட்டதே அவளுக்கு திருப்தியாக இருந்தது.

நேரம் ஆக ஆக மைக்கேல் தன் மனதில் உயர உயர உயர்ந்து கொண்டு போவதை அவளாலேயே அணு அணுவாக உணர முடிந்திருந்தது.

அவளையும் அறியாமல் அவளது பார்வை, மடித்து வைக்கப்பட்டிருந்த அந்த கறுப்பு நிறச் சட்டையில் போய் ஒட்டிக் கொண்டது.
 

Attachments

  • eiRQEAM82000.jpg
    eiRQEAM82000.jpg
    80.8 KB · Views: 2
  • Like
Reactions: shasri